![](pmdr0.gif)
மலையருவி (நாடோடிப் பாடல்கள்)
பர்ஸி மாக்வீன் (சேகரிப்பு),
கி.வா.ஜகந்நாதன் (தொகுப்பு)
பாகம் 1 - ஆராய்ச்சி உரை
malaiaruvi (collection of folk songs)
compiled by Percy Macqueen and edited by ki.vA. jekannAtan
part 1 - research review
In tamil script, unicode/utf-8 format
-
Acknowledgements:
We thank the Tamil Virtual Academy for providing a scanned image PDF version of this work.
This work has been prepared using the Google Online OCR tool to generate
the machine-readable text and subsequent proof-reading.
Preparation of HTML and PDF versions: Dr. K. Kalyanasundaram, Lausanne, Switzerland.
© Project Madurai, 1998-2016.
to preparation
of electronic texts of tamil literary works and to distribute them free on the Internet.
are
http://www.projectmadurai.org/
மலையருவி
(நாடோடிப் பாடல்கள்)
பர்ஸி மாக்வீன் என்பவரால் சேகரிக்கப்பட்டவை
கலைமகள் ஆசிரியர் கி.வா.ஜகந்நாதன் தொகுப்பு
பாகம் -1 (ஆராய்ச்சி உரை)
Source:
Malai Aruvi (Folksongs in Tamil)
collected by Mr. Percy MacQueen
1958, Saraswathi Mahal Series No. 77
Madras Government Oriental Series
Published Under the authority of
The Govt. Of Madras
General Editor: T. Chandrasekaran, Curator, Govt. Oriental Manuscript Library, Madras
மலையருவி (நாடோடிப் பாடல்கள்)
Mr.பர்ஸி மாக்வீன்,I,C,S., என்பவரால் சேகரிக்கப்பட்டவை
கலைமகள் ஆசிரியர்: கி.வா.ஜகந்நாதன், அவர்களால் தொகுக்கப்பட்டு,
நாடோடிப் பாடல்களைப் பற்றிய விரிவான முகவுரையுடன் பதிப்பிக்கப்பட்டது
தஞ்சை சரஸ்வதி மகால் நிர்வாகக் குழுவினருக்காகக்
கவுரவ காரியதரிசி ஸ்ரீ எஸ். கோபாலன் அவர்களால் பிரசுரிக்கப்பட்டது.
1958, இதன் விலை ரூ. 5.50
----------------------
PREFACE
This publication contains a selection of Tamil folk-songs collected by the late Mr. Percy Macqueen, I.C.S., and presented by him to the University Library Madras. This Manuscript therefore does not belong to the Saraswathi Mahal Library. Its publication was taken up because it was selected for publication by the Selection Committee appointed by the Government. They represent the product of the exuberant fancy of untutored and unfettered imagination of labourers. The struggle for expression of poetic fancy among the uncultured and unbridled youth often ends in ribaldry.
A good number of songs had thus to be eschewed from the collection when making the selection. The collection has however a special value for students of Sociology. Fine strokes of fancy are however not wanting in the collection.
Sri K.V. Jagannathan, the Editor of Kalaimagal, well-known for his Tamil scholarship has bestowed his time and labour in selecting the pieces for the collection and contributing an introduction on "Folk Songs in Tamil". Our thanks are due to him for his valuable services.
We are grateful to the Government of Madras for their generous grants that have helped us to publish this and other valuable manuscripts of this Library.
Saraswathi Mahal }
S. GOPALAN
Tanjore Honorary Secretary
18-03-58 T.M.S.S.M. Library Committee
----------------
மலையருவி : முகவுரை
இந்த வெளியீட்டில் திரு. பர்ஸி மக்வீன் I.C.S. என்பவரால் சேகரிக்கப்பட்ட நாடோடிப் பாடல்களில் ஒரு பகுதி அடங்கியுள்ளது. அன்னாரால் சேகரிக்கப்பட்ட பாடல்கள் சென்னைச் சர்வகலாசாலைக்கு நன்கொடையாகக் கொடுக்கப்பட்டு அவர்கள் வசம் இருந்து வருகின்றன. ஆகையால் இந்நூல் நமது சரஸ்வதிமஹால் நூல் நிலையத்தைச் சேர்ந்ததல்ல. எனினும் சுவடிகளை வெளியீட்டிற்குத் தெரிந்தெடுப்பதற்காக சென்னை சர்க்கார் அவர்களால் நியமிக்கப்பட்ட குழுவினரால் இந்நூலும் தெரிந்தெடுக்கப்பட்டு நமது நூல் நிலையத்தாரால் வெளியிடப்பட்டிருக்கிறது.
இதில் அடங்கியுள்ள பாடல்கள் தெம்மாங்கு வகையைச் சேர்ந்தவை. சென்னைச் சர்வகலாசாலையில் உள்ள தொகுதியில் சில பாடல்கள் சபைக்கு அருகமில்லாமல் இருந்தன. அவற்றை விலக்கி இந்த வெளியீட்டிற்கான பாடல்கள் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கின்றன. "கலைமகள்" ஆசிரியரும் தமிழில் சிறந்த புலமைவாய்ந்தவருமான ஸ்ரீ கி. வா. ஜகந்நாதன் அவர்கள் பாடல்களைத் தேர்ந்தெடுத்துப் பதிப்பித்துக் கொடுக்கும் பணியை மகிழ்ச்சியுடன் ஏற்றுக்கொண்டதோடு நமது நாடோடிப் பாடல்களின் வரலாற்றைப்பற்றி ஓர் முகவுரையையும் எழுதியளித்துள்ளார். அன்னார் செய்திருக்கும் அரிய சேவைக்கு எமது நன்றி உரித்தாகும்.
இந்த நூலையும், இன்னும் பல அரிய நூல்களையும் வெளியிடுவதற்கு உதவியாக நமது சென்னை அரசாங்கத்தார் செய்திருக்கும் நிதி உதவிக்காக அவர்களுக்கு நாங்கள் என்றும் கடமைப்பட்டிருக்கிறோம்.
ஸ்ரஸ்வதி மஹால் எஸ். கோபாலன்
18-3-58 } கௌரவக் காரியதரிசி
-------------
மலையருவி :பதிப்புரை
சில காலமாகத் தமிழ் நாடோடிப் பாடல்களைப் பற்றிய ஆராய்ச்சி தமிழ்நாட்டில் ஓங்கி வருகிறது. வானொலியில் அடுத்தடுத்து நாடோடிப் பாடல்களைப் பாடிவருகிறார்கள். நான் பலகாலமாக நாடோடிப் பாடல்களைத் தொகுத்து வருகிறேன். அவற்றின் சம்பந்தமாக நான்கு புத்தகங்களும் எழுதியிருக்கிறேன்.
பல ஆண்டுகளுக்குமுன் சென்னை மாகாணத்தில் கலெக்டராக இருந்த ஸ்ரீ பர்ஸி மாக்வீன் என்னும் ஆங்கிலேயர் தமிழ் நாடோடிப் பாடல்களைத் தொகுக்கத் தொடங்கினார். ஒரு வரிக்கு இத்தனை அணா என்று பணம் கொடுத்துப் பலரிடம் பெற்றார். பெரும்பாலும் மலைப்பகுதிகளில் உள்ள தோட்டத் தொழிலாளிகளிடத்தும், கிறிஸ்தவர்களிடத்தும் இந்தப் பாடல்களைச் சேகரித்திருக்கவேண்டுமென்று தோன்றுகிறது.
இவற்றிற் சிலவற்றை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்துச் சில பத்திரிகைகளில் அவர் வெளியிட்டிருக்கிறார். பின்பு இவற்றைச் சென்னைப் பல்கலைக் கழக நூல்நிலையத்துக்கு வழங்கினர். அவை நூல் நிலையத் தலைவரின் பாதுகாப்பில் இருந்தன. தஞ்சைச் சரஸ்வதிமகால் நிர்வாகிகள் அவற்றைப் புத்தக உருவத்தில் வெளியிட எண்ணி, பதிப்பிக்கும் வேலையை என்னிடம் விட்டார்கள். இத்துறையில் பலகாலம் ஈடுபட்டவனாதலின் இப்பணியை மகிழ்ச்சியுடன் ஏற்றுக்கொண்டேன்.
பலவாறாக இருந்த பாடல்களை ஒருவாறு வகைப்படுத்தி இந்த உருவத்தில் அவற்றைப் பதிப்பித்தேன். இடக்கராக இருந்த பல பாடல்களை விட்டுவிட்டேன்.
இயற்கைச் சூழ்நிலையில் கட்டுப்பாடின்றி உணர்ச்சிவசப்பட்ட மக்கள் பாடும் பாடல்கள் ஆதலின் இவற்றைக் காட்டுமலருக்கும், மலையருவிக்கும் ஒப்பிடலாம். மலையருவி என்ற பெயர் உருவக வகையால் இந்தத் தொகுதிக்குப் பொருத்தமாக இருக்குமென்று எண்ணி அதனை அமைத்தேன்.
இப்பணியில் என்னை ஈடுபடச்செய்த தஞ்சைச் சரசுவதிமகால் நூல் நிலைய நிர்வாகிகளுக்கு என் நன்றி உரியது.
16-4-58 கி. வா. ஜகந்நாதன
-------------
1. நாடோடிப் பாடல்களின் தோற்றமும் இயல்பும்
பேசத் தெரிந்த மனிதன்
மனிதன் பேசத் தெரிந்தவன்; தன்னுடைய உணர்ச்சியையும் கருத்தையும் பிறருக்கு வெளிப்படுத்தத் தெரிந்தவன். விலங்கினங்கள் ஏதோ ஒரு வகையில் வெளிப்படுத்தினாலும் மனிதனைப் போல வெளியிடும் அறிவும் ஆற்றலும் அவற்றுக்கு இல்லை. மனிதனோ தக்கது, தகாதது என்று உணரும் அறிவு பெற்றிருக்கிறான்; சிந்திக்கும் திறமை பெற்றிருக்கிறான்; பல குணங்களின் வெளியீடான உணர்ச்சியைப் பெற்றிருக்கிறான்; அவற்றை வெளியிடும் மொழியாற்றலையும் அதற்கு ஏற்பப் பண்பட்ட கருவிகளையும் பெற்றிருக்கிறான். அதனால், சில விலங்குகளிடம் சில சமயங்களில் ஒலி உண்டானாலும் மனிதனைப்போலத் தம் கருத்தை ஒலி மயமாக்கி வெளியிடும் ஆற்றலை அவை பெறவில்லை.
காக்கை, குருவி முதலியன ஒருவாறு தம்முடைய குரிலினால் தம் கருத்தை வெளியிடுகின்றன என்றும், அவற்றிற்கும் மொழி உண்டு என்றும் ஆராய்ச்சி வல்லுநர்கள் சொல்லுகிறார்கள். நம் நாட்டுப் பழங் கதைகளிலும் விலங்கின் மொழிகளை உணர்ந்தவர்கள் இருந்தார்கள் என்ற செய்தி வருகிறது. அறுபத்துமூன்று நாயன்மார்களில் ஒருவராகிய சேரமான் பெருமாள் நாயனாருக்கு விலங்கு, பறவை முதலியவற்றின் மொழி தெரியுமென்றும், அவை பேசுவனவற்றை அவர் கூர்ந்தறிந்தாரென்றும், அதனால் அவருக்குக் கழறிற்றறிவார் என்ற பெயர் உண்டாயிற்றென்றும் பெரியபுராணம் கூறும்.[1] ஆயினும் அந்த ஒலிகள் மிகச் சிலவே; மனிதனுடைய மொழியைப் போல நுட்பமும் விரிவும் உடையன அல்ல.
-----------
[1]. சேரமான் பெருமாள் நாயனார் புராணம், 14, 16.
இவ்வாறு உயிர்க் குலங்களுக்குள் பிற உயிர்களுக்கில்லாத பெரும் பேறாகிய மொழியைப் பெற்ற மனிதன் வரவர அதனை வளப்படுத்திக் கொண்டான். முதலில் பண்டங்களின் பெயர்களையும் பிறகு செயல்களையும் குறிப்பிட்டுப் பேசக் கற்றுக்கொண்ட ஆதி மனிதன் நாளடைவில் பழைய நினைவுகளையும், கருத்துக்களையும் வெளிப்படுத்தவும் தெரிந்துகொண்டான். தன் கருத்தை அப்போதைக்கு வேண்டுமளவுக்கு வெளிப்படுத்துவதோடு நில்லாமல், தான் கூறுவதைப் பிறரும் நினைவுபடுத்திக் கொள்ளும் வகையில் தன் மொழியை அமைத்தான். வரவர அதில் அழகும் உணர்ச்சியும் மலிந்தன. மனித சமுதாயத்தில் சிலர் நன்றாகப் பேசினார்கள்; அழகாகப் பேசினார்கள்; உணர்ச்சியை ஊட்டும்படி பேசினார்கள். அவர்களுடைய பேச்சை அப்படியே பிறர் வாங்கிச் சொன்னார்கள்.
பாடல்கள்
சில சொற்களால் ஆன பாடலை ஏதோ ஒரு வகையில் அவர்கள் இசையோடு பாடினார்கள். அந்தப் பாடல்களின் ஓசை பிறர் உள்ளத்தை இழுத்தது. அதோடு அந்தப் பாட்டின் தாளம் கேட்டவர்களிடம் இயக்கத்தை உண்டாக்கியது. பாட்டும் ஆட்டமும் கலந்தன. அவர்கள் உவகை மிகுதியாகியது.
வாயால் பாட வேண்டியிருந்தமையின் இசையும் தாளமும் அமைந்த அந்தப் பாட்டுக்கு ஓர் உருவம் வேண்டியிருந்தது. வெறும் ஒலியுருவோடு நில்லாமல் சொற்களும் கலந்த உருவம் அமைந்தது; சொற்கள் கோவையாய், கருத்தைத் தெளிவாய்ச் சொல்லுவனவாய், சிறந்த கற்பனைக்கு இடமாய் இருக்கவில்லை. ஆனாலும் அவற்றினூடே உள்ளமும் உள்ளமும் உணர்ந்து கொள்ளும் ஏதோ ஒருவகை உணர்ச்சி இருந்தது. இசையமைதிக்கும் தாளத்திற்கும் ஏற்ற ஓசை ஒவ்வொரு பாட்டிலும் இருந்தது.
இப்படி உண்டான மனித குலத்தின் பழம் பாடல்கள் மெல்ல மெல்ல எங்கும் பரவின; வாய் மொழியாகவே பரவின. புலவர்களும் புத்தகங்களும் தோன்றாததற்கு முன்பே இந்தப் பாடல்கள் மனித இனத்தின் களியாட்டத்துக்குத் துணையாக எங்கும் பரவின. ஒரு குறிப்பிட்ட மொழியைப் பேசும் இனத்தாரிடம் அந்த மொழியில் அமைந்த பாடல்கள் பரவி வந்தன.
மனிதன் நாளடைவில் நாகரிகத்தைக் கற்றுக்கொண்டான். ஆழமாகச் சிந்திக்கத் தெரிந்துகொண்டான். மொழியை வளப்படுத்தினான். அதற்கு வரையறைகளை அமைத்துக்கொண்டான். புலவர்கள் தோன்றினார்கள். நாடோடியாக வழங்கும் பாடலின் இசையையும் தாளத்தையும் எடுத்துக்கொண்டார்கள். சொற்களில் தம்முடைய ஆற்றலைப் புகுத்தினார்கள். வளம் பெற்ற மொழியின் கலையழகு கவிகளில் மலர்ந்தன, இலக்கியம் பிறந்தது.
கட்டில்லாக் கவிதை
நாகரிகம் வளர வளர மனிதன் தான் வாழ மாளிகையும், செல்ல வாகனமும், பூணப் பூணும், உடுக்க நுண்ணிய துகிலும், பயன்படுத்தப் பல அரிய பண்டங்களும் படைத்துக் கொண்டான். அப்படிப் படைத்துக்கொண்ட காலத்திலும் மாளிகையில் வாழாதவர்களே மிகுதியாக இருந்தார்கள்; அணிகளைப் பூணாதவர்களே பலராக இருந்தார்கள், இலக்கியத்தை நுகரத் தெரியாதவர்களே பெரும்பாலோராக இருந்தனர். அவர்களைப் பாமரர் என்று மற்றவர்கள் சொன்னார்கள். எழுதப் படிக்கத் தெரியாத அவர்களுக்குப் புலவர்களின் பாடல்களும் காவியமும், பண்களும் தாளபேதங்களும் விளங்காதவை. ஆனால் அவர்களுக்கு இன்பத்தைத் தரும் வகையில் அமைந்த பாடல்கள் இல்லாமற் போகவில்லை. பழங்கால முதற்கொண்டு மனித குலம் வாய்மொழியாகப் பாடிவந்த கட்டில்லாக் கவிதையும், காலில்லாக் கதைகளும் அவர்களிடம் உலாவின. பழையவை பரவின; அவற்றிற்குப் புதிய உருவங்கள் அமைந்தன. புதியவை தோன்றின. அவர்களிடையே வழங்கிய அந்தப் பாடல்களை எழுதிவைப்பார் இல்லை; பாடம் சொல்வார் இல்லை. அவற்றுக்கு இலக்கணம் வகுப்பார் இல்லை; உரை கூறுவாரும் தேவை இல்லை.
இருப்பினும் பெரும்பாலான மக்களிடையே அவை பரவின; வளர்ந்தன; வேரூன்றின. புலமையும் கற்பனையும் உணர்ச்சியும் கலை நலமும் இணைந்த இலக்கியம் ஒருபால் வளர்ந்துகொண்டு வந்தது. கரையும் போக்கும் வரையறுத்த ஆறுகளாகக் கால்வாய்களாக, உரமும், பந்தலும் இட்டுப் படர்ந்த மல்லிகையாக அவ்விலக்கியங்கள் பரவின. அதே சமயத்தில் மலையிலிருந்து தானே வீழும் அருவியாக, காட்டிலே தானே மலர்ந்து மணக்கும் முல்லையாக, சோலையிலே தானே பாடும் குயிலின் இன்னிசையாக நாடோடிப் பாடல்களும் வளர்ந்து வந்தன. இருவகைப் பாடல்களிலும் இசையும் தாளமும் உணர்ச்சியும் இருந்தன.
இலக்கியத்தில் உள்ள சொல்லமைதி நாடோடிப் பாடல்களில் இல்லாமல் இருக்கலாம்; ஆனால் நாடோடிப் பாடல்களில் ஒருவகை மழலைத் தன்மை இருக்கிறது. இலக்கியத்தில் நுட்பம் இருக்கிறது; நாடோடிப் பாடல்களில் குழந்தை உள்ளம் பேசுகிறது. இலக்கியத்தில் அபூத கற்பனைகள் இருக்கின்றன; கட்டில்லாக் கவிதையில் பாமரனுக்கு இன்பம் ஊட்டும் எளிய கற்பனை இருக்கிறது. மனித இனத்தின் உன்னத லட்சியத்தை இலக்கியக் கவிதை சொல்கிறது; அன்றன்று மனிதன் படும் இன்ப துன்பத்தை உள்ளபடியே நாடோடிக் கவிதை காட்டுகிறது. மனித குலத்தின் அழகை மாத்திரம் புலவர்கள் தம் கவிகளில் காட்டுகிறார்கள்; நாடோடிப் பாவலனோ அழகையும் காட்டுகிறான்; அழுக்கையும் காட்டுகிறான்.
இப்படி வழி வழி வருகிற நாடோடிப் பாடல்களைப் பாமரர் போற்றினர். புலவர்களும் கவனித்தனர்; அவற்றைப் புறக்கணிக்கவில்லை. தமிழ் மொழி மிகப் பழையது; தமிழ்ச் சாதியின் வரலாறு மிகப் மிகப் பழையது. ஆதலின் தமிழ்ச் சாதியின் படைப்புகளும் பழையன. தமிழன் உலகில் முதலில் தோன்றிய மனித இனத்தைச் சேர்ந்தவன். ஆதலின் அவன் முதலில் பேசப் பழகிக்கொண்டக் கூட்டத்தைச் சேர்ந்தவன். அந்தக் கால முதலே அறிவுதோன்றி வளரப் பெறுபவன் அவன். தமிழர் தம்முள்ளே இலக்கியத்தை வளர்ப்பதற்கு முன்பே கட்டில்லா இலக்கியமாகிய நாடோடிப் பாடல்கள் வளர்ந்து வந்தன. பல காலமாக வாழ்ந்து வரும் சாதி ஆதலின் அதற்குக் கிடைத்த பழைய சொத்து மிகுதியாக இருத்தல் வியப்பன்று. தமிழ சாதிக்குப் பழம் பாடல்கள் அதிகம்; பழமொழிகள் பல பல; பழைய கருத்துக்கள் ஏராளம்; பழைய வழக்கங்கள் வேண்டாமென்றாலும் போகாமல் ஒட்டிக்கொண்டு உள்ளன. ஆகவே, நாடோடிப் பாடல்களும் பல பல உண்டு; பழையனவும் புதியனவுமாக அவை வளர்ந்து வருகின்றன.
-----------------
தொல்காப்பியம்
இன்று கிடைக்கும் பழந் தமிழ் நூல்களில் மிகப் பழையது தொல்காப்பியம். அது இன்ன காலத்தில் தோன்றியது என்று திட்டமாக வரையறுக்க முடியாவிட்டாலும் இரண்டாயிரம் ஆண்டுகளுக்குமுன் தோன்றிய சங்க நூல்களிற் காணாத பல பழைய மரபுகளை அது சொல்வதால் அந்த நூல்களுக்கும் முந்தியது அது என்று கொள்ளக்கிடக்கிறது. குறைந்தது இரண்டாயிரத்து ஐந்நூறு ஆண்டுகளுக்கு முந்தியது என்று கொள்வதில் தவறு இல்லை. அந்த இலக்கண நூலில் பொருளதிகாரத்தில் செய்யுளியல் என்னும் பகுதியில், தனிச் செய்யுட்களைப் பற்றியும் இலக்கிய வகைகளைப் பற்றியும் பல இலக்கணங்களைத் தொல்காப்பியர் கூறுகிறார்.
பல காலமாக வழங்கும் இலக்கியங்களில் கண்ட பொதுவான அமைப்பையெல்லாம் தொகுத்து இலக்கணமாக வகுத்தல் மரபு. அப்படி அமைந்த இலக்கணமும் நாளடைவில் திருத்தம் பெற்றும் விரிந்தும் பின்னும் நல்ல வரையறை பெற்றும் விளங்கும். மிகத் திருத்தமாக ஓர் இலக்கணம் அமைந்தால் அதற்குப் பிறகு அடிக்கடி இலக்கண நூல் எழுவதற்கு அவசியம் இராது. தொல்காப்பியத்துக்குப் பின் பல நூற்றாண்டுகள் கழிந்து 13-ஆம் நூற்றாண்டில் நன்னூல் எழுந்தது. இடையிடையே எழுந்த இலக்கண நூல்கள் தமிழுலகத்துக்குப் பயன்படாமல் ஒழிந்தன. தொல்காப்பியமே தமிழுக்கு இலக்கணமாக வழங்கியது. நன்னூலும் யாப்பருங்கலக் காரிகை முதலியனவும் வந்த பிறகும் தொல்காப்பியம் வழக்கொழிந்து போகவில்லை. பல உரையாசிரியர்கள் அதற்கு உரை எழுதி அதன் பயனை மிகுதிப்படுத்தினார்கள். இன்றளவும் தொல்காப்பியத்தின் மதிப்புக் குறையவே இல்லை. இதற்குக் காரணம் அதில் உள்ள திட்பமும் நுட்பமும் ஒழுங்குமாகும்.
எடுத்தவுடன் இப்படி ஒரு நூல் தோன்றுவது எளிதன்று. அதற்குமுன் பல இலக்கண நூல்கள் தோன்றித் தோன்றி வழக்கொழிந்து போயிருக்க வேண்டும். அகத்தியர் இயற்றிய இலக்கணம் ஒன்று முன்பு இருந்தது என்று கேள்விப்படுகிறோம். சில காலம் இருந்து, பின்பு வந்த இலக்கண நூல்களின் சிறப்புக் காரணமாக, மங்கி வழக்கொழிந்த இலக்கணங்கள் பல இருக்கலாம். முன் நூல்களில் இருந்த குறைபாடுகளை நீக்கித் திருத்தமாகச் செய்யப் பெற்றமையினால் தொல்காப்பியம் தனக்குமுன் இருந்தவற்றை மறையச்செய்து இன்றளவும் ஒளிவிட்டு நிலவுகிறது.
இங்கே ஓர் உண்மையை நினைவில் வைக்கவேண்டும். இப்படி அமைந்த தொல்காப்பியம் பல காலமாகத் தமிழில் வழங்கிய மரபுகளைத் தொகுத்து முறைப்படுத்திச் சொல்லும் நூல் என்பதை நாம் மறக்கக்கூடாது. தொல்காப்பியத்தில் கண்ட இலக்கணங்கள் யாவும் தொல்காப்பியரால் புதியனவாகக் கூறப்பட்டவை அல்ல. பெரும்பாலும் புலவர் பெருமக்கள் இயற்றிய முன்நூல்களில் கண்டவை. அவற்றோடு, அக்காலத்து வழங்கிய இலக்கியங்களிலும் வாய்மொழியிலும் கண்ட பல அமைதிகளை நுனித்துணர்ந்து அவற்றைப் பற்றிய வரையறைகளையும் தொல்காப்பியர் தம் நூலில் இணைத்துக் கொண்டார். சூத்திரங்களில் 'என்ப' என்றும், 'என்மனார் புலவர்' என்றும் அடிக்கடி வருவதனால் தொல்காப்பியர் பலகாலமாக வழங்கிவந்த இலக்கண மரபுகளை ஏற்று ஒழுங்குபடுத்தியிருக்கிறார் என்பது தெரியவரும்.
அடிவரையறை இல்லாத செய்யுட்கள்
இலக்கியத்தைப் பற்றியும் செய்யுட்களைப் பற்றியும் சொல்லி வரும் செய்யுளியலில் ஓரிடத்தில் அடிவரையறையில்லாத செய்யுட்கள் இன்னவை என்று கூறி, அவற்றிற்கு இலக்கணம் அமைக்கிறார்.
என்பது ஒரு சூத்திரம். 'அகமும் புறமுமாகிய எழுநிலத்தும் தோன்றிய செய்யுளை ஆராயின் அடிவரையின்றி வரும் இலக்கணத்தன ஆறாம் என்றவாறு' என்பது பேராசிரியர் உரை. முன்னால் அடிவரையறையுள்ள செய்யுட்களுக்குரிய இலக்கணத்தைக் கூறியிருக்கிறார் தொல்காப்பியர். இப்போது அடிவரையறை இல்லாதன இன்னவை என்று சொல்ல வருகிறவர், முதலில் அவை ஆறு என்று தொகுத்துக் கூறினார். கூறும்போது: "ஆறென மொழிப" என்றார். 'இந்த ஆறு என்ற பகுப்பு நெடுங்காலமாகப் புலவர் உலகத்தில் வழங்கி வருவன' என்ற கருத்தை 'மொழிப' என்பது காட்டும்; மொழிப-புலவர்கள் சொல்வார்கள். இவ்வாறு தோற்றுவாய் செய்துவிட்டு அந்த ஆறு வகைகளையும் ஒரு சூத்திரத்தில் சொல்கிறார்.
--------------
[1]. செய்யுளியல், 164. [2]. செய்யுளியல், 165.
--------
இந்தச் சூத்திரத்தில் நூல், உரை, பிசி, முதுமொழி, மந்திரம், குறிப்பு மொழி என்னும் ஆறு சொல்லப்படுகின்றன. நூல் என்பது இலக்கணம்; அது புலவர் இயற்றுவது. உரை என்பது உரைநடை அல்லது வசனம். பிசி என்பது விடுகதை அல்லது புதிர். முதுமொழி என்பது பழமொழி. மந்திரம் என்பது காமாலை மந்திரம் முதலியன போலத் தமிழிலே வழங்கிய மந்திரம். குறிப்பு மொழி என்பது இத்தனையிலும் சேராமல் குறிப்பால் பொருளை உணர்த்தும் வகை.
இவை அனைத்தும் பலரிடம் பலகால் வழங்கியமையின் இலக்கண நூலில் சொல்லப் பெறும் இலக்கியங்களாயின. இவற்றில் நூல், எழுதப்பெற்ற புலவர் படைப்பு. உரை, புலவர் படைப்பிலும் வாய் மொழியிலும் வழங்குவது. ஏனைய அனைத்தும், எழுதப்பெறாமல் ஒருவர்பால் மற்றொருவர் கேட்டுணர்ந்து செவி வழியாகவே வருவன. 'நொடியொடு புணர்ந்த பிசியும்' ஏது நுதலிய முதுமொழியும், மறைமொழி கிளந்த மந்திரமும் கூற்றிடைனவத்தை குறிப்புமென நான்கும் வழக்கு மொழியாகியும் செய்யுளாகியும் வருதலின் அவற்றுட் செய்யுளையே கோடற்கு . . . . . . . . ." என்று கூறுவார் பேராசிரியர். செய்யுளில் வந்தவற்றிற்கே இங்கே இலக்கணம் அமைக்கிறார் தொல்காப்பியர் என்பது அவர் கருத்து. இலக்கியங்களில் இந்த நான்கு வகையும் மிகுதியாகக் காணப்பெறவில்லை. வழக்கு மொழியில் இருந்தாலும் மக்கள் அவ்வப்போது பேசி மறக்கும் பேச்சைப் போலன்றி அடிப்பட்ட வழக்காக இடந்தோறும் காலந்தோறும் பரவி நிற்பதால் அவற்றையும் ஒரு வகையில் இலக்கிய மதிப்புடையனவாகக் கருதியே தொல்காப்பியர் அவற்றைச் சொன்னார். அவர் காலத்துக்கு முன்பே இந்த ஆறையும் தனியாகப் பார்த்து வகை பண்ணினார்கள் புலவர்கள் என்பதை 'மொழிப' என்ற குறிப்பு உணர்த்துவதை முன்பு பார்த்தோம். பேராசிரியர், இவை எழுதப்பெறும் இலக்கியத்துக்குரிய இலக்கணம் என்று சொன்னாலும், வழக்கு மொழியிலும் வழங்கும் என்பதையும் சொல்கிறார். அந்த அளவேனும் அவர் நாடோடி இலக்கியத்தை நினைவில் வைத்திருக்கிறார் என்பதை நாம் உளங்கொள்ள வேண்டும்.
பாமரர்களிடையே வாய் மொழியாக வழங்கும் இத்தகைய இலக்கிய வகைகளை மேல்நாட்டினர் 'பாமரர் இலக்கியம்' ( Folklore ) என்று கூறுவார்கள். நாடோடிப் பாடல்கள், நாடோடிக் கதைகள், பழமொழிகள் முதலியவை அந்தப் பரப்பில் அடங்கும். இங்கே தொல்காப்பியர் ஆறாகப் பகுத்துக் கூறியவற்றில் வழக்கு மொழியில் வழங்கும் நான்கில் மூன்று நாடோடி இலக்கிய வகையையே சார்ந்தன. பிசி, முதுமொழி, குறிப்பு மொழி என்பன அவை. உரை என்ற பகுதியின் இலக்கணத்தைச் சொல்லுமிடத்தில், அதை நான்காக்குவார். அவற்றில்,
என்று வரும் இருவகையும் நாடோடிக் கதைகளைப் பற்றியனவே.
பண்ணத்தி
இப்படிப் பண்டையோர் வகுத்த வகைகளைக் கூறிய பிறகு தொல்காப்பியர் புதிதாகப் பண்ணத்தி என்ற ஒன்றின் இலக்கணத்தைக் கூறுகிறார். அடிவரையறையில்லாத செய்யுட்களைக் கூறிவிட்டு இதைக் கூறுவதனால், இதுவும் அடிவரையறையில்லாதது என்று கொள்ளவேண்டும். அன்றியும், வழக்கு மொழியாக நிலவும் நான்குக்குப் பின் சொல்வதனால், இதையும் வாய் மொழியிலக்கிய வகையில் சேர்ப்பதுவே பொருத்தமாக இருக்கும்.
தொல்காப்பியர் கூறுவதைப் பார்க்கலாம்.
என்பது சூத்திரம். இதற்கு, 'பழம்பாட்டினூடு கலந்த பொருளே தனக்குப் பொருளாகப் பாட்டும் உரையும் போலச் செய்யப்படுவன பண்ணத்தி என்றவாறு' என்று பேராசிரியர் உரை எழுதியிருக்கிறார். பின்பு,
-----------
[1]. செய்யுளியல், 173. [2]. செய்யுளியல், 180.
-------
'மெய் வழக்கல்லாத புற வழக்கினைப் பண்ணத்தி என்ப, இஃது எழுதும் பயிற்சியில்லாத புறவுறுப்புப் பொருள்களைப் பண்ணத்தி யென்ப வென்பது. அவையாவன: நாடகச் செய்யளாகிய பாட்டு மடையும் வஞ்சிப் பாட்டும், மோதிரப் பாட்டும் கடகண்டும் முதலாயின. அவற்றை மேலதே போலப் பாட்டென்னாராயினர், நோக்கு முதலாயின உறுப்பு இன்மையின் என்பது. அவை வல்லார் வாய்க் கேட்டுணர்க'
என்று பண்ணத்தியைப் பற்றிய சில இயல்புகளைக் கூறியுள்ளார். அவ்வுரையிலிருந்து பண்ணத்தி என்பது முன்பே சிலவற்றிற்கு வழங்கிய பெயரென்றும், அந்தப் பெயர் ஒப்புமை பற்றி இங்கே சுட்டப் பெறும் இலக்கிய வகைக்கு வந்ததென்றும் தெரிய வருகிறது. 'மெய் வழக்கல்லாத புற வழக்கினைப் பண்ணத்தி என்ப' என்று தமிழ்நாட்டில் இருந்த ஒரு வழக்கைப் பேராசிரியர் குறிக்கிறார். அது இன்னது என்று திட்டமாகத் தெரியவில்லை. மெய் வழக்கு என்பது உண்மை வரலாற்றையும், புற வழக்கு என்பது கற்பனையையும் குறித்தல் கூடும். கட்டுக் கதைகளைச் சொல்லும்போது, "பொருள் மரபில்லாப் பொய்ம்மொழி" என்று குறித்தார் தொல்காப்பியர். அது உரை நடையில் வருவது. அது போன்ற கற்பனையைப் பண்ணத்தியென்று அக்காலத்தில் சொல்லியிருத்தல் கூடும்.
அடுத்தபடி, 'இஃது எழுதும் பயிற்சியில்லாத புறவுறுப்புப் பொருள்களைப் பண்ணத்தி என்ப' என்று கூறுகிறார் உரைகாரர். வாய் மொழியாக வருவது, எழுதப் பெறாதது என்பதைக் குறிக்கவே இவ்வாறு எழுதினர் போலும்.
பிறகு பண்ணத்திக்கு உதாரணம் கூறும்போது, நாடகச் செய்யுளாகிய பாட்டுமடை, வஞ்சிப் பாட்டு, மோதிரப் பாட்டு, கடகண்டு என்பவற்றைச் சொல்கிறார். கூத்தில் இடையிடையே பாடும் பாட்டையே நாடகச் செய்யுளாகிய பாட்டுமடை என்று குறிக்கிறார். வஞ்சிப் பாட்டு என்பது ஓடப் பாட்டு; இன்றும் மலையாளத்தில் ஓடப் பாட்டை வஞ்சிப் பாட்டு என்று வழங்குகிறார்கள். மோதிரப் பாட்டு, கடகண்டு என்பவை அக்காலத்தில் வாய் மொழியாக வழங்கியவை போலும்.
கவிஞர்களின் பாட்டிலே வரும் பொருள் இந்தப் பண்ணத்தியிலும் வரும்; ஆனால் அதில் வருவது போலத் தெளிவும் தொடர்பும் இரா. அதனால், "பாட்டிடைக் கலந்த பொருளவாகி" என்று இலக்கணம் கூறினார். இதுவும் ஓசையாலும் தாளத்தாலும் பாட்டென்றே சொல்லத்தக்கது; ஆனால் பாட்டைப்போல வரையறை செய்ய முடியாதது. அதனால், "பாட்டின் இயல" என்றார். இந்த இரண்டு இலக்கணங்களும் நாடோடிப் பாடல்களுக்கு உரியன. ஆதலின், பண்ணத்தி என்ற பெயரால் தொல்காப்பியர் குறிக்கும் இலக்கிய வகை நாடோடிப் பாடல்களே என்று கொள்வது பொருத்தமென்று தோன்றுகிறது. பண்ணத்தி ( பண் நத்தி ) என்ற சொல்லுக்கு, 'பண்ணை விரும்புவது' என்று பொருள். இசைப்பாட்டில் வரையறையான பண் அமைந்திருக்கும்; இப் பாட்டிலும் இன்னோசை இருப்பினும் இசைப் பாட்டுக்குரிய வரையறையில்லை. ஆதலின் பண்ணமைந்த பாடல் என்னாமல் பண்ணத்தி என்றார்.
இசைப் பாட்டைப் போன்றது; ஆனால் அதுவேயன்று; இரண்டிலும் இன்னிசை உண்டு. கவியைப் போன்ற பொருளை உடையது; ஆனால் அது அன்று; அந்தப் பொருள் தொடர் பின்றி இடையிடையே விட்டு விட்டு வரும். பாட்டைப் போன்ற ஓசை உடையது; ஆனால் வரையறையில்லை. இந்த மூன்று தன்மைகளையும் பண்ணத்தி என்ற பெயரும், பாட்டிடைக் கலந்த பொருள என்ற இலக்கணமும், பாட்டின் இயல என்பதும் புலப்படுத்துகின்றன.
இந்த இலக்கணங்களாலும், வாய் மொழியாக வழங்குவனவற்றோடு சார்த்திச் சொன்னமையாலும் பண்ணத்தியென்பது நாடோடிப் பாடல்களையே குறிப்பது என்று கொள்ளலாம்.
மேலே, பண்ணத்தியைப் பற்றித் தொல்காப்பியர் மூன்று சூத்திரங்களைக் கூறுகிறார்.
என்பன அவை.
'அந்தப் பண்ணத்தியென்பது பிசியோடு ஒத்து வரும்; அடிகள் மிகுதியாகி வரும் பாட்டுப் பன்னிரண்டடியாக வரும்; அந்த அடிக்கணக்கில் மிக்கு வந்தாலும் நீக்குதற்குரிய தன்று' என்பது இவற்றின் பொருள். பெரும்பாலும் பன்னிரண்டடிகளுக்குள்ளே இப்பாடல்கள் அமையும் என்றும், சிறுபான்மை அந்த அளவுக்கு மேலும் வருமென்றும் தெரிகிறது.
'பிசியொடு மானும்' என்பதனை, 'அதனை ஒத்தலாவது அதுவும் செவிலிக்குரித் தென்றவாறு. பிசியொடும் என்ற உம்மையால், "பொருளொடு புணராப் பொய்ம்மொழி யோடும், பொருளொடு புணர்ந்த நகைமொழியோடும்" ஒக்குமென்று உணர்க' என்று பேராசிரியர் விளக்குகிறார்.
வாய் மொழிப் பாடல்களையும், புதிர்களையும், கதைகளையும் செவிலித் தாய்மார் தலைவனைப் பிரிந்த தலைவிக்குச் சொல்லிப் பொழுது போக்குவது வழக்கம். அதையே இவ்வுரைகாரர் குறிக்கிறார். பாட்டிமார்கள் இவற்றைச் சொல்வது எல்லா நாடுகளுக்கும் உரிய வழக்கமே யாகும்.
பிசியின் இலக்கணத்தை,
என்று தொல்காப்பியர் கூறுகிறார். உவமையாகிய பொருளைக் கூறி மறைமுகமாகச் சொல்வது, வெளிப்படையாகத் தெளிவுபெறச் சொல்வது என்ற பிசிகள் இரண்டு வகையாகும். பண்ணத்தி பிசியோடொக்கும் என்று தொல்காப்பியர் சொல்வதைக் கொண்டு நாடோடிப் பாடல்களிலும் குறிப்பாகப் பொருளை உணர்த்துவன ஒருவகை யென்றும், வெளிப்படையாகப் பொருளை உணர்த்துவன ஒருவகை யென்றும் கொள்ளலாம்.
--------
[1]. செய்யுளியல், 181, 182, 183. 2. செய்யுளியல், 176
---------
இவ்வளவும் கூறியவற்றிலிருந்து தொல்காப்பியர் காலத்தில் வாய் மொழியாக வழங்கும் இலக்கியங்கள் புலவர்களின் கவனத்துக்குரியனவாக இருந்தனவென்றும், நாடோடிப் பாடல்களைப் பண்ணத்தியென்று வழங்கினரென்றும் தெரியவரும்.
---------------
எழுவகைப் பாடல்கள்
நாடோடிப் பாடல்களில் பல வகைகள் உண்டு. ஏற்றம் இறைத்தல், மீன் பிடித்தல், சுண்ணாம்பு குத்துதல் முதலிய தொழில்களைச் செய்பவர்கள் அத்தொழில்களால் உண்டாகும் அலுப்புத் தெரியாமல் பாடிக்கொண்டே அவற்றைச் செய்வார்கள். நெடுநேரம் தொழில் செய்வதனால் அவர்கள் பாடும் பாடல்கள் நீண்டனவாக இருக்கும். அவை ஒரு வகை. வண்டிக்காரன், இடையன், வீட்டில் இருக்கும் மகளிர் முதலியோர் பாடும் பாடல்கள் இன்பமாகப் பொழுது போக்குவதற்கு உதவுவன. அவை ஒரு வகை. கல்யாணத்தில் பாடும் பாடல்கள், யாரேனும் இறந்தால் பாடும் ஒப்பாரி, தெய்வத்தை வழிபடும்போது பாடுபவை முதலியன உணர்ச்சி மிக்கனவாக உள்ளவை. இவை ஒரு வகை. குழந்தைகளுக்கு விளையாட்டுக் காட்டும்போதும், சோறு ஊட்டும்போதும், தாலாட்டும் போதும் தாய்மார் முதலியோர் பாடுபவை ஒரு வகை. குழந்தைகளும் மகளிரும் விளையாடும்போது தாமே பாடும் அம்மானை, பலிஞ்சடுகுடு, கண்ணாமூச்சி முதலிய விளையாட்டுப் பாடல்கள் ஒருவகை. அரிய கருத்துக்களை உடையன வாய்ப் பாமரர்களல்லாதவர்களிடத்தில் வாய்மொழியாகவே வழங்கும் பாடல்கள் பல உண்டு; இவற்றில் சிறந்த தத்துவக் கருத்துக்கள் இருக்கும். இவை ஒரு வகை. கதை பொதிந்த பாடல்கள் ஒரு வகை.
இன்னும் பலவற்றைச் சொல்லலாம். ஆயினும் ஒருவாறு மிகுதியாக வழங்குபவற்றை எண்ணி மேலே கூறியபடி' (1) தொழில் செய்வார் பாடல், (2) இன்பப்பாடல் (3) உணர்ச்சிப் பாடல், (4) குழந்தைப் பாடல், (5) விளையாட்டுப் பாடல் (6) கருத்துப் பாடல், (7) கதைப்பாடல், என்று ஏழு பகுப்பாகப் பிரித்துக்கொள்ளலாம்.
வரிப் பாடல்கள்
சிலப்பதிகாரத்தில் வரிப் பாடல்கள் என்று சில பாடல்கள் வருகின்றன. அவை இளங்கோவடிகளால் இயற்றப் பெற்றவை. இயல்பாக இந்நாட்டில் வழங்கிய, பல வரிப் பாடல்களை அடியொற்றி அவர் அமைத்துக்கொண்டவை அவை என்றே சொல்ல வேண்டும். கானல்வரி, ஆற்றுவரி, சார்த்துவரி, முகமில் வரி, நிலைவரி, முரிவரி, திணைநிலைவரி, மயங்குதிணைநிலைவரி, சாயல்வரி, வேட்டுவவரி, ஆய்ச்சியர் குரவை, ஊர்சூழ்வரி, குன்றக்குரவை, அம்மானைவரி, கந்துகவரி, ஊசல்வரி, வள்ளைப்பாட்டு என்ற பாடல்கள் அதில் வருகின்றன. இவை பண்ணத்தியாகிய நாடோடிப் பாடல்களை நினைத்துப் பாடியவையே ஆகும். சில எடுத்துக் காட்டுக்களைக் கொண்டு இதை உணரலாம்.
அம்மானைவரி என்ற பாட்டு இளங்கோவடிகள் பாடி அமைத்தது. மாணிக்கவாசகர் பாடிய திருவாசகத்தில் திரு அம்மானை என்றே ஒரு பகுதியிருக்கிறது. மூவர் அம்மானை என்று ஒரு தனி நூல் உண்டு. கலம்பகம் என்ற பிரபந்தத்தில் அம்மானை என்பது ஓர் உறுப்பு. இவை யாவும் புலவர் பாடியவை; ஆயினும் மகளிர் பாடுவனவாக அமைந்தவை. தமிழ்நாட்டுப் பெண்கள் அம்மானைக் காய்களை வைத்துக்கொண்டு ஆடும்போது பல பாடல்களைப் பாடுவார்கள். அந்தப் பாடல்களைக் கேட்டு அந்த மெட்டில் அமைத்தவையே இப்பாடல்கள். அப்படியே மற்ற வரிப்பாடல்களுக்கும் நாடோடி இலக்கிய உலகத்தில் மூலம் இருப்பதை உணரலாம்.
நாடோடிப் பாடல்களின் உருவத்தை இலக்கியம் படைத்த புலவர்களும் எடுத்தாண்டார்கள் என்பதற்கு இப்போது கிடைப்பவற்றுக்குள் பழைய எடுத்துக்காட்டு இளங்கோவடிகள் சிலப்பதிகாரத்தில் பாடியுள்ள வரிப்பாடல்கள்.
வரிப்பாட்டின் இலக்கணம்
வரி என்பது ஒருவகைக் கூத்துக்கும், ஒருவகைப் பாடலுக்கும் பொதுவாக வழங்கும் பெயர். இரண்டிடத்தும் பாடல் உண்டு. வரிப் பாடலின் இயல்பை, 'வரிப் பாடலாவது பண்ணும் திறமும் செயலும் பாணியும் ஒரு நெறியின்றி மயங்கிச் சொல்லப்பட்ட எட்டன் இயல்பும் ஆறன் இயல்பும் பெற்றுத் தன் முதலும் இறுதியும் கெட்டு இயல்பும் முடமுமாக முடிந்து கருதப்பட்ட சந்தியும் சார்த்தும் பெற்றும் பெறாதும் வரும். அதுதான் தெய்வஞ் சுட்டியும் மக்களைப் பழிச்சியும் வரும்' [1] என்று சிலப்பதிகார அரும்பதவுரையாசிரியர் விளக்குவார். ஆற்று வரிக்கு உரை எழுதுவதற்குமுன் இவ்வாறு அவர் எழுதினார். சிலப்பதிகாரத்தில்,
என்னும் இடங்களில் வரும் வரி என்னும் சொல் வரிப் பாடலையே குறித்து நிற்கின்றது.
வரிக்கூத்து
இனி வரிக் கூத்து என்பது ஒன்று உண்டு. அது வரிப் பாட்டோடு ஆடுவதாதலின் அந்தப் பெயர் பெற்றதென்று தோன்றுகிறது. அதன் இலக்கணத்தைப் பழைய சூத்திரம் ஒன்று தெரிவிக்கிறது.
என்ற அச்சூத்திரத்தை அடியார்க்கு நல்லார் மேற்கோளாகக் காட்டியிருக்கிறார். பிறிதோரிடத்தில், 'வரியாவது அவரவர் பிறந்த நிலத் தன்மையும் பிறப்பிற்கேற்ற தொழில் தன்மையும் தோன்ற நடித்தல்' [7] என்று உரைநடையில் இவ்விலக்கணத்தை அமைக்கிறார். சூத்திரத்தில், "அறியக் கூறி" என்றமையினால் பிறந்த நிலத்தின் தன்மையும் தொழில் தன்மையும் புனைந்த கோலத்தில் மட்டுமன்றிப் பாடும் பாட்டிலும் தோன்ற வேண்டும் என்பது பெறப்படும். குறி சொல்லும் குறத்தி மலைவளத்தையும் குறிகூறும் தன் தொழிலையும் புலப்படுத்திப் பாடுகிறாள். ஏற்றம் இறைப்பவன் தன் வயலின் இயல்பையும் தண்ணீர் இறைக்கும் தொழிலின் இயல்பையும் ஏற்றப் பாட்டில் பாடுகிறான். ஆதலின் அவை வரிப் பாட்டுகளாக அமைகின்றன.
---------
[1]. சிலப்பதிகாரம், 7 : ஆற்றுவரி, உரை. [2], சிலப். 10, கட்டுரை, 10.
[3]. சிலப் 14 : 150. [4]. சிலப், 23: கட்டுரை, 11. [5]. சிலப். நூற் கட்டுரை, 13.
[6]. சிலப். 3 : 24, அடியார் மேற், [7]. சிலப் 8 : 74-7, மேற்.
--------
இவ்வரிக் கூத்தில் விநோதக் கூத்து என்று ஒருவகை உண்டென்று தெரிகிறது. மேலே காட்டிய சூத்திரம் அந்த விநோதக் கூத்தையே குறிப்பது. 'இவ்வரி யென்பதனை நிலனும் தொழிலும் தோன்ற நடிக்கும் விநோதக் கூத்து என்பாரும் உளர்' [1] என்று அடியார்க்கு நல்லார் எழுதுவதிலிருந்து இது புலனாகிறது.
பல்வரிக் கூத்து
வேறு ஒரிடத்தில், 'இவ்வரி யென்பதனைப் பல்வரிக் கூத்தென்பாரும் உளர்' [2] என்று கூறி ஒரு பழைய பாடலை மேற்கோள் காட்டுகிறார்.
--------
[1]. சிலப். 14 : 150, உரை. [2]. சிலப். 3 : 13, உரை.
----------
அப்பாடல் வருமாறு:
இந்தப் பாடலில் பலவகை விளையாடல்கள் கூறப் பெறுகின்றன; அவை யாவும் பாட்டுப் பாடி ஆடுபவை. இப்பாட்டில் உள்ளவற்றில் இப்போது இலக்கியத்திலும் வழக்கிலும் சில வழங்குகின்றன. கொந்தி ( காய் கொந்தும் விளையாட்டு ), ஆண்டி ( ஆண்டிபாட்டு ), பாண்டி, பாம்பாட்டி, குரவை, கட்களி, கிள்ளுப் பிறாண்டி ( கில்லாப்பரண்டி ), அம்மனை, பந்து, கழங்கு, வண்டு, பல்லாங்குழி, தோள்வீச்சு, சாழல், அவலிடி, படுபள்ளி என்பவற்றை இன்றும் நினைப்பூட்டிக்கொள்ள இலக்கியமும் வழக்கும் உதவுகின்றன.
திருவாசகம், திவ்யப் பிரபந்தம், தத்துவராயர் பாடுதுறை முதலியவற்றில் நாட்டில் வழங்கிய வாய் மொழிப் பாடல்களை அடியொற்றிப் பெரியோர்கள் இயற்றிய பலவகைப் பாடல்களைக் காணலாம். டாக்டர் ஐயரவர்கள் ஒரு சொற்பொழிவில் இவற்றைத் தொகுத்துத் தந்திருக்கிறார்கள். [1]
--------
[1]. சங்கத் தமிழும் பிற்காலத் தமிழும், ப. 45.
----------
அவை வருமாறு.
அக்கைச்சி, அச்சோ, அப்பூச்சி, அம்மானை, ஆற்றுவரி, இம்பில், உந்தியார், ஊசல், எம்பாவை, கப்பற் பாட்டு, கழல், கந்துகவரி, காக்கை, காளம், கானல்வரி, கிளிப்பாட்டு, குணலை, குதம்பை, குயில், குரவை, குறத்தி, கூடல், கொச்சகச் சார்த்து, கோத்தும்பி, கோழிப் பாட்டு, சங்கு, சாயல் வரி, சார்த்து வரி, சாழல், செம்போத்து, தச்சராண்டு, தச்சாண்டி, தாலாட்டு, திணைநிலைவரி, திருவங்கமாலை, திருவந்திக் காப்பு, தெள்ளேணம், தோணோக்கம், நிலைவரி, நையாண்டி, பகவதி, படைப்பு வரி, பந்து, பல்லாண்டு, பல்லி, பள்ளியெழுச்சி, பாம்பாட்டி, பிடாரன், பொற்சுண்ணம், மயங்குதிணை நிலைவரி, முகச்சார்த்து, முகமில் வரி, முகவரி, மூரிச் சார்த்து, வள்ளைப்பாட்டு முதலியன. இவையன்றிச் சித்தர் பாடல்களில் வழங்கும் பலவகை இசைப் பாட்டுக்களும் நொண்டிச் சிந்து, சிந்து முதலியவைகளும் கும்மி கோலாட்டம் முதலியவைகளும் பல வகையான கண்ணிகளும் ஆனந்தக்களிப்பு, கீர்த்தனங்கள் முதலிய பலவும் இசைப்பாட்டுக்களைச் சேர்ந்தனவே.
ஐயரவர்கள் காட்டிய உருப்படிகளில் கீர்த்தனம் முதலிய சிலவற்றையன்றி மற்றவை யாவும் நாடோடி உலகத்திலிருந்து இலக்கியப் புலவர்கள் ஏற்றுத் தழுவி அமைத்தனவே யாகும்.
-------------
சங்க இலக்கியங்களில் குறிஞ்சி, பாலை, முல்லை, மருதம், நெய்தல் என்னும் ஐவகை நிலங்களிலும் வாழும் மக்கள் அந்த அந்த நிலங்களுக்கு ஏற்ற வகையில் பாடியும் ஆடியும் இன்புறும் காட்சிகளைக் காண்கிறோம்.
குறிஞ்சி
குறிஞ்சி நிலத்தில் இறைவனை வழிபடும் பூசாரியாகிய வேலன் முருகனைப் பாடி ஆவேச உருவத்தில் வரச் செய்கிறான். மறியை அறுத்து வெறியாட்டெடுக்கும்பொழுது முருகனைப் பரவிப் பாட்டு பாடுகிறான்.
முருகனை வழிபடும் பூசாரிச்சியாகிய தேவராட்டி குறிஞ்சி நிலத்துக்குரிய குறிஞ்சிப் பண்ணில் அமைந்த பாடலைப்பாடுகிறாள்.
--------
[1]. நற்றிணை, 322: 10-12, [2]. குறுந்தொகை, 263 : 4.
---------
தினைக் கொல்லையில் குற மகளிர் கிளிகளைக் கடிவதற்காக ஒருவகைப் பாட்டைப் பாடுவர். அதைப் பிற்காலத்தில் ஆலோலம் என்பர்.
குற மக்கள் புலியொடு பொருகின்றனர். அப்போது அவர்களுக்குக் காயம் உண்டாகிறது. அதனால் உண்டாகும் வேதனை தணிவதற்காக அவர் மனைவியராகிய குறமகளிர் பாடுகின்றனர்.
குறமகளிர் தினையைக் குத்தும்போது பாடுகிறார்கள். அந்தப் பாட்டுக்கு வள்ளைப் பாட்டு என்று பெயர்.
குறவர்கள் தம் பெண்டிரொடு குரவைக் கூத்தாடும்போது பாடுவர்.
"குறவர்தம் பெண்டிரொடு ... அயரும் குரவை."8
குறத்தியருள் கட்டுப் பார்க்கும் கட்டுவிச்சி மலைகளைப் பாடுவாள்.
_______________
[1]. திருமுருகாற்றுப்படை, 238-43. [2]. குறிஞ்சிப். 99-101
[3]. மலைபடு. 329 [4]. மலைபடு. 302-4
[5]. மலைபடு. 342. [6]. குறுந். 89; 1.
[7]. கலி. 42; 7-9. [8]. மலைபடு. 320-22.
-----------
பிறர் வீடுகளுக்குச் சென்று ஐயமேற்றுக் கிடைத்த தானியத்தைப் பலருக்கு ஈவது ஒருவகை விரதம் என்று தெரிகிறது. இதைத் திருமணம் நிகழ்வதற்குமுன் சிறு பெண்கள் மேற்கொள்வார்கள். அவ்வாறு பிறர் வீடு சென்று ஐயமேற்கும் போது அவர்கள் பல பாடல்களைப் பாடுவார்கள்.
சிவராத்திரியிலும் ஸ்ரீஜயந்தியிலும் சிறு குழந்தைகள் எண்ணெய் முதலியவற்றைக் கேட்டுப் பாடும் பாடல்கள் இங்கே நினைவுக்கு வருகின்றன.
பாலை
பாலை நிலத்தில் வாழும் மக்கள் தம்முடைய தெய்வமாகிய துர்க்கையைப் பரவி வேட்டுவ வரி பாடுவதைச் சிலப்பதிகாரத்தின் வாயிலாக நாம் உணரலாம்.
முல்லை
முல்லை நிலத்தில் ஆயரும் ஆய்ச்சியரும் வாழ்கின்றனர். அவர்கள் தாம் வழிபடு கடவுளாகிய கண்ணனைப் பரவிக் குரவையாடிப்பாடுகிறார்கள். சிலப்பதிகாரத்தில் ஆய்ச்சியர் குரவை இருக்கிறது.
அவ்வாறு குரவை பாடும்போது ஆயன் ஒருவன் ஏறு தழுவிய சிறப்பையும் பாடுவதுண்டு.
"பாடுகம் வம்மின் பொதுவன் கொலையேற்றுக்
கோடு குறிசெய்த மார்பு." [4]
___________
[1]. குறுந். 23. [2]. கலி. 59; 16-7.
[3]. கலி. 103; 75-6. [4]. கலி. 104; 63-4.
-----------
மருதம்
மருத நிலத்தில் ஆடவரும் மகளிரும் இணைந்து ஆடிப்பாடுவார்கள்.
மகளிர் தாம் கூடிக் கைகோத்து ஆடுவதைத் துணங்கை என்பர். அவர்கள் ஆடும்போது அதற்குரிய பாடல்களைப் பாடுவார்கள்.
"முழவிமிழ் துணங்கை தூங்கும் விழவின்." [3]
நெய்தல்
நெய்தல் நிலத்தில் கேட்கும் பாடல்களின் ஒலியை ஒருங்கே மதுரைக் காஞ்சி சொல்கிறது. நீரை இறைப்பவர்களின் பாட்டொலி, ஏற்றம் இரைப்பார் ஓசை, பறவைகளை ஓட்டுகிறவர்களின் பாட்டு, பரதவர் மகளிர் ஆடும் குரவையில் பாடும் பாட்டு ஆகியவற்றை அங்கே காண்கிறோம்.
அங்கும் மகளிர் தெய்வத்துக்குரிய பூசனையை இயற்றி வழிபட்டுப் பாடுகிறார்கள்.
____________
[1]. மதுரைக். 264-6. [2]. கலி 70 : 13-4.
[3]. அகநானூறு. 336 : 16. [4]. மதுரைக். 89-97.
----------
என்பது நெய்தல் நிலத்துத் தலைவியின் கூற்று.
நெய்தல் நிலத்தில் ஊசலாடும் மகளிர் அதற்குரிய பாடல்களைப் பாடுகிறார்கள்.
"சேயுயர் ஊசற்சீர் நீஒன்று பாடித்தை." [2]
கலித்தொகையில் மடலேற்றத்தைப் பற்றிய செய்தி வரும் பாடல்களால், மடலால் குதிரை பண்ணி ஊர்ந்து வரும் ஆடவன் பாடுவதுண்டு என்ற செய்தி தெரிய வருகிறது.
சங்க காலத்து நூல்களுக்குப் பின் எழுந்த காப்பியங்களிலும் பிற நூல்களிலும் இவ்வாறு அவ்வத் திணையில் வாழும் மக்கள் தத்தமக்கு உரிய வகையில் பாடுவதாக வரும் இடங்கள் பல.
"பண்கள்வாய் மிழற்றும் இன்சொற் கடைசியர்.""[6]
"கொன்றை வேய்ங்குழற் கோவலர் முன்றிலிற்
கன்று றக்கும் குரவை." [7]
என்பனபோலப் பல எடுத்துக் காட்டுக்களைக் காட்டலாம்.
மேலே கூறிப் போந்தவற்றிற் குறிப்பிக்கப்பெறும் பாடல்கள் யாவும் நாடோடிப் பாடல்களே. இத்தகைய பாடல்களில் நெஞ்சைப் பறிகொடுத்ததாகப் பாரதியார் குயிற் பாட்டில் பாடுகிறார்.
"ஏற்றநீர்ப் பாட்டின் இசையினிலும், நெல்இடிக்கும்
கோற்றொடியார் குக்குவெனக் கொஞ்சும் ஒலியினிலும்
சுண்ணம்இடிப் பார்தம் சுவைமிகுந்த பண்களிலும்
பண்ணை மடவார் பழகுபல பாட்டினிலும்
____
[1]. நற். 358 : 6-7. [2]. கலி. 131 : 24.
[3]. கலி. 140 : 13-4. [4]. கலி. 141 : 5-6.
[5]. கலி. 141 : 22. [6]. கம்ப. நாட்டுப். 10.
[7]. கம்ப. நாட்டுப். 34.
---------
பிரபந்தங்கள்
கம்பர் ஏற்றக்காரன் முதல்நாள் பாதியில் விட்ட பாட்டை மறுநாள் அவன் வாயிலாகக் கேட்குமட்டும் எவ்வளவு முயன்றும் முடிக்க முடியாமல் அல்லலுற்றாரென்று ஒரு வரலாறு வழங்குகிறது. [2]
"ஏற்றப் பாட்டிற்கு எதிர்ப்பாட்டில்லை, பூசாரி பாட்டிற்குப் பின் பாட்டில்லை" என்ற பழமொழி அந்தப் பாடல்கள் தாமாக வருமேயன்றிப் புலமையால் அமைவனவல்ல என்பதைப் புலப்படுத்துகிறது.
இலக்கணப் புலவராகிய தொல்காப்பியர் நாடோடிப் பாடல்களைப் பண்ணத்தி யென்று கூறி இசை வகுத்தார். இலக்கியப் பெரும் புலவர்கள் அப் பாடல்களில் மனம் செலுத்தி இன்புற்று அவற்றைப் பற்றித் தம் நூல்களில் கூறினார்கள்; அவற்றைப் போன்ற அமைப்பை வைத்துப் பல பாடல்களைப் பாடினார்கள். இதுவரையில் கூறியவற்றிலிருந்து இவை தெள்ளத் தெளிய விளங்கும்.
நாடோடிப் பாடல்களை அடியொற்றிப் பாடிய பல பாடல்கள் நாளடைவில் தனிப் பிரபந்தமாக வழங்கலாயின. குறத்தியின் பாட்டிலிருந்து குறம் எழுந்து, பின்பு குறவஞ்சி எழுந்தது. பள்ளர்கள் பாடும் குலவைப் பாட்டு முதலியவற்றிலிருந்து பள்ளேசலும் பள்ளும் தோன்றின. தாலாட்டிலிருந்து தனியே தாலாட்டு நூல்கள் உண்டாயின. தாலாட்டு உருவத்தில் கீதாசாரத் தாலாட்டு என்ற நூல் ஒன்று தமிழில் உண்டு. பிள்ளைத் தமிழில் வரும் தாலப் பருவமும் குலசேகரப் பெருமாள் சக்கரவர்த்தி திருமகனைப்பாடும் தாலாட்டும் இந்த வகையிலே எழுந்தன. "அம்புலிமானே வாவா" என்று குழந்தைகளுக்கு விளையாட்டுக் காட்டும் பாட்டைப் பார்த்து அம்புலிப் பருவம் எழுந்தது. ஓடப் பாட்டைப் பார்த்துப் பல புலவர்கள் ஓடப்பாட்டைப் பாடினர்.
___________
[1]. குயிற் பாட்டு, 3 : 35-44.
[2]. இதன் விரிவை. "புது மெருகு" ( கி. வா. ஜ. ) என்னும் புத்தகத்திற்காண்க.
-----------
பல புலவர்கள் கும்மி பாடியிருக்கிறார்கள். அது நாடோடிப் பாடலாக முளைத்துப் பின்பு புலவர் படைப்புக்குள்ளும் புகுந்து கொண்டது. கோபாலகிருஷ்ண பாரதியார் பாடிய சிதம்பரக் கும்மியும், அருட்பிரகாச வள்ளலார் பாடிய கும்மிகளும், வாலைக் கும்மி முதலிய வேறு பல கும்மிகளும் எழுவதற்கு ஆதியில் உருவான நாடோடிக் கும்மிகளே வழிகாட்டிகள்.
5. நாடோடிப் பாடல்களின் சிறப்பியல்புகள்
நாடோடிப் பாடல்களுக்கென்று சில சிறப்பான இயல்புகள் உண்டு. ஒரு குறிப்பிட்ட பாடலை முதல் முதலில் யாரேனும் ஒருவர் இயற்றி யிருக்கத்தான் வேண்டும். அவர் இலக்கியப்புலமை படைக்காவிட்டாலும் மற்றப் பாமரர்களைப்போல் இல்லாமல் ஓரளவு சொல்வன்மை உடையவராகவே இருப்பார். கூலி வேலை செய்யும் பெண்கள் தம்மிடம் உள்ள இயற்கையான ஆற்றலால் அவ்வப்போது பாடல்களைப் பாடுவதும் உண்டு. இலங்கையில் மட்டக் களப்பு என்னும் பகுதியில் இன்றும் இவ்வாறு பாடல்கள் முளைக்கின்றன. எதுகை, மோனை, ஓசை என்னும் மூன்றும் தெரிந்தவர்கள் பாடல்களைப் பாடிவிடலாம்.
எதுமை மோனை
எதுகை மோனை என்பவை தமிழ்நாட்டு மக்களுக்கு இயல்பாகவே கைவரப் பெற்றவை என்றே சொல்லவேண்டும். "மானங் கெட்டவளே - மரியாதை கெட்டவளே, ஈனங் கெட்டவளே - இடுப் பொடிந்தவளே" என்ற வசவில்கூட எதுகையும் மோனையும் இருக்கின்றன. அடிமுதலில் எதுகை வருவதென்பது தமிழுக்கே அமைந்த தனிச்சிறப்பு. பேச்சு வழக்கில் எத்தனையோ தொடர்கள் எதுகைச் சிறப்புடையனவாகப் புரளுகின்றன. அக்கிலி பிக்கிலி, அக்கம் பக்கம், அசட்டுப் பிசட்டு, அடிதடி, அமட்டல் குமட்டல், ஆசாரம் பாசாரம், ஏழை பாழை, கண்டதுண்டம், காமா சோமா, ஜபதபம் என்பவைபோல உள்ளவற்றைக் காண்க. அப்படியே மோனை நயம் அமைந்த தொடர்களுக்கும் குறைவில்லை. அல் அசல், ஆடி அமாவாசை, கல்யாணம் கார்த்திகை கொள்வினை கொடுப்பினை, பற்றுப் பாத்திரம், கோயில் குளம், தோப்புத் துரவு முதலியவற்றைக் காண்க. பேச்சு வழக்கில் தண்ணீர் பட்ட பாடாக வழங்கும் எதுகை மோனைகள் பழமொழிகளில் சிறப்பாக அமைந்திருப்பது வியப்பன்று. 'அக்கரைக்கு இக்கரை பச்சை', அகதியைப் பகுதி கேட்கிறதா?', 'அகம் ஏறச் சுகம் ஏறும்', 'ஒன்றைப் பெற்றாலும் கன்றைப் பெறு', 'குட்டையில் ஊறிய மட்டை' என்பனபோல ஆயிரக்கணக்கான பழமொழிகளில் எதுகை அமைந்திருக்கிறது. அப்படியே, 'சிங்கத்தின் காட்டைச் சிறுநரி வளைத்தாற்போல' 'சூலிக்குச் சுக்குமேல் ஆசை', 'தலை ஆட்டித் தம்பிரான்', 'தீயில் இட்ட நெய் திரும்புமா?', 'பெண்சாதி கால்கட்டு, பிள்ளை வாய்க்கட்டு', 'மனப்பால் குடித்து மாண்டவர் அநேகர்' என்பன போன்றவற்றில் மோனை நயத்தைக் காணலாம்.
நாடோடிப் பாடல்களில் குழந்தைகள் விளையாடும்போது பாடும் பாடல்களிலே ஒன்றும் இல்லாவிட்டாலும் எதுமை நயமும் மோனை யமைதியும் உள்ள பல பாடல்கள் உண்டு. அந்த இரண்டும் குழந்தைகளுக்கு இன்பத்தை உண்டாக்குகின்றன.
என்பது கண்ணாமூச்சி விளையாட்டுப் பாடல். கண்ணை மூசுதல் என்றால் கண்ணை மூடுதல் என்று பொருள். கண் மூசி என்பது கண்ணா மூச்சி ஆகிப் பிறகு கண்ணாம்பூச்சி என்றும் வழங்குகிறது. இந்தப் பாட்டில் பொருள் சிறிதளவே இருக்கிறது. ஆனால் எதுகை மோனை அமைதியே சிறப்பாக இருக்கிறது.
இந்தப் பாட்டில் சொற்களுக்குப் பொருள் இருந்தாலும் அந்தப் பொருள் தொடர்ச்சியாக இல்லை; ஆனாலும் எதுகையினாலும் மோனையினாலும் ஓசையழகு அமைந்திருக்கிறது.
__________
[1]. மலையருவி, ப. 260.
---------
என்பதிலும் அந்த இயல்பையே காணலாம்.
ஓசை அமைதி
இலக்கியங்களில் நால்வகைப் பாக்களும் அவற்றின் இனங்களும் அமைந்திருக்கின்றன. நாடோடிப் பாடல்களில் பெரும்பாலும் கண்ணிகளும் சிந்துகளும் பயின்று வருகின்றன. பல பாடல்களில் ஏதோ ஒருவகையில் ஒழுங்கான ஓசை அமைதி இருக்கிறது. சில வகையான பாடல்களுக்கு இன்ன ஓசைதான் என்ற மரபு அமைந்திருக்கிறது. தெம்மாங்கு என்பது ஒரு குறிப்பிட்ட ஓசையமைதியோடு இருக்கிறது. தாலாட்டு, ஏற்றப் பாட்டு, ஒப்பாரி, கும்மி, ஓடப் பாட்டு முதலியவற்றிற்கும் திட்டமான உருவங்கள் அமைந்திருக்கின்றன. இன்ன பாட்டிற்கு இன்னதுதான் இலக்கணம் என்று புலமையுலகத்து வாய்பாட்டிலே சொல்ல இயலாவிட்டாலும் காதிலே கேட்டால் இன்ன பாட்டு என்று பழக்கத்தால் தெரிந்து கொள்ளலாம். இலக்கியங்களில் வரும் பாக்களுக்கும் இந்த இலக்கணம் பொருந்தும். பேராசிரியர் பாவைப்பற்றிச் சொல்லுகையில், 'பாவென்பது, சேட்புலத்திருந்த காலத்தும் ஒருவன் எழுத்தும் சொல்லும் தெரியாமற் பாடம் ஓதுங்கால், அவன் சொல்லுகின்ற செய்யுளை விகற்பித்து இன்ன செய்யுள் என்று உணர்தற் கேதுவாகிப் பரந்துபட்டுச் செல்வதோர் ஓசை' [2] என்று கூறுவதிலிருந்து இது புலனாகும்.
சொற்கள்
நாடோடிப் பாடல்களில், வழக்கில் மாத்திரம் வழங்கும் சொற்களும், சிதைந்த சொற்களும் மிகுதியாக வரும்.
________
[1]. குழந்தை உலகம் ( கி. வா. ஜ. ), ப. 34.; [2]. தொல். செய்யுள் 1, உரை.
[3]. கஞ்சியிலும் இன்பம் ( கி. வா. ஜ. ), ப. 19.; [4]. மேற்படி ப. 23.
[5]. குழந்தை உலகம் ( கி. வா. ஜ. ), ப. 76.
------
சொற்கள்
என்பவற்றில் வரும் சந்தை, துப்பட்டி, அம்மத்தாள் என்ற சொற்களை இலக்கியங்களில் காணல் இயலாது. சி்தைந்து வழங்கும் சொற்களும் சொற்றொடர்களும் கணக்கு வழக்கின்றி நாடோடிப் பாடல்களில் வரும். அவற்றைத் திருத்தினால் எதுகை, மோனை, ஓசை ஆகியவை சிதைந்துவிடும்.
என்ற முத்துவீராயி பாட்டில், தென்னல் என்று வருவது தென்றல் என்பதன் சிதைந்த உருவம். இயல்பான சொல்லாக அதைத் திருத்தினால் முன் அடியிலுள்ள தென்னமரம் என்பதற்கு ஏற்ற எதுகை அமையாது; ஆதலின் தென்னல் என்று இருப்பதே பொருத்தம்.
இதில் அன்றைக்கு என்று திருத்தினால் எதுகை நயம் போய்விடும்.
என்பதில் 'ஒத்தையிலே' என்பதை 'ஒற்றையிலே' என்று மாற்றினாலும்,
என்பதில் மாத்தினாள் என்பதை மாற்றினாள் என்று திருத்தினாலும் எதுகையழகு இல்லாமற் போய்விடும்.
இப்படியே மோனையிலும் வழக்குச் சொற்கள் அமைந்து மாற்ற முடியாமல் இருக்கும் இடங்கள் பல.
_________
[1]. நாடோடி இலக்கியம் ( கி. வா. ஜ ), ப. 111.; [2]. மலையருவி, 71; 3.
[3]. மலையருவி, ப. 89; 35.; [4]. மேற்படி 136; 1.
[5]. மேற்படி 85; 10
--------
என்பதில் புரட்டாசி என்ற சொல் வாய்மொழியிலே சிதைந்த உருவமாகிய பெரட்டாசி என்று நின்று, பெரிய என்பதில் உள்ள முதலெழுத்தோடு ஒன்றி மோனையமைதி பெற்றிருக்கிறது. பெரட்டாசியைப் புரட்டாசி ஆக்கிவிட்டால், பெரிய என்பதைப் புரிய ஆக்க இயலுமா?
என்பதில் மேளம் மோளமாகியிருக்கிறது.
என்பதில் பிள்ளை புள்ளையாகி யிருக்கிறது.
என்பதில் அல்லாத்துக்கும் என்பதை எல்லாவற்றிற்கும் என்று மாற்றினால் மோனை போய்விடும்.
சிதைந்த சொல்லைத் திருத்தப் புகுந்தால் ஓசை கெட்டுவிடுவதற்குச் சில உதாரணங்கள் வருமாறு:-
_________________
[1]. மலையருவி, 223; 6.; [2]. மேற்படி 243; 82.
[3]. மேற்படி 243; 89.; [4]. மேற்படி 92; 51.
[5]. மேற்படி 207; 54.; [6]. மேற்படி 222; 2
--------
இலக்கணத்துக்கு மாறு
இலக்கணத்துக்கு மாறாகப் பலவற்றை நாடோடிப் பாடல்களில் காணுகிறோம். பேச்சு வழக்கில் எவ்வாறு இலக்கண வழுக்கள் இருக்கின்றனவோ அப்படியே நாடோடிப் பாடல்களிலும் இருக்கின்றன. கொச்சை வார்த்தைகளும் இலக்கண வழுக்களும் பேச்சு மொழிக்கு இயல்பாகிவிட்டன; அவ்வாறே நாடோடிப் பாடல்களிலும் அவை இயல்பாகப் பொருந்திவிட்டன.
திருப்பிச் சொல்லுதல்
நாடோடிப் பாடலைப் படித்துப் பார்ப்பதில் இன்பம் அவ்வளவு இராது. அதைப் பாடிக் கேட்கும்போதுதான் அதன் இசையும் தாள அமைப்பும் ஒருவிதமான கவர்ச்சியைத் தருவதைக் காணலாம். இலக்கியங்களில் ஒன்றையே திருப்பித் திருப்பிச் சொன்னால் அது கூறியது கூறல் என்னும் குற்றத்தின் பாற்படும். ஆனால் நாடோடிப் பாடல்களிலே சொன்னதையே மடக்கி மடக்கித் திருப்பிச் சொல்வது மரபு. கந்தருவ மார்க்கம் என்னும் இசைப்பாட்டு நெறியில் அடிகள் இடை மடக்கி வருவதைப் பார்க்கிறோம். இயற்றமிழில் கூறியது கூறலாக முடிவதே இசைத் தமிழ் உருப்படிகளில் இடை மடக்காக வந்து நயத்தைத் தருகிறது. கீர்த்தனங்களில் பல்லவி பலமுறை வருவது இசைப் பாட்டுக்கு இன்பம் உண்டாக்குகிறது. நாடோடிப் பாடல்களும் இசையோடு பாடப்படுவன ஆதலின் அவற்றில் மீட்டும் மீட்டும் சில சொற்றொடர்களும் அடிகளும் வருவது அவற்றிற்கு அழகு பயப்பதாக இருக்கிறது.
________
[1]. நாடோடி இலக்கியம், ப. 28.; [2]. அல்லியரசாணி மாலை.
--------
_____________
[1]. மலை. ப. 45. ; [2]. மலை. 59.
-----------
6. பலவகைப் பாடல்கள்
மலையிலிருந்து கங்குகரையின்றி அணைப்பார் தடுப்பாரின்றி வேகமாக வீழும் அருவியைப் போலப் பாமர மக்களிடையே உணர்ச்சியும் இசையும் இணையப் பெருகி உலவும் நாடோடிப் பாடல்கள் அடங்கிய இந்தத் தொகுதிக்கு மலையருவி என்ற பெயர் புதியதாக அமைத்துக் கொண்டது. இதில் பதின்மூன்று வகையாகப் பிரித்த பகுதிகள் அடங்கியிருக்கின்றன.
கிராமங்களில் உள்ள மக்கள் பல பாடல்களைத் தெரிந்து கொண்டிருப்பார்கள். அவற்றை ஒருவர் பாடுவதும் அதற்கு எதிர்ப் பாட்டுப் பாடுவதும் வழக்கம். பந்தயம் வைத்துக்கொண்டு பாடுவதும் அதில் தோற்றால் சிறுமையுறுவதும் உண்டென்று தெரிகிறது.
என்பதனால் ஆடவன் பெண்களைப் புகழ்ந்து பாடுவது ஒருவகை என்று புலனாகும். அப்படிப் பாடுகிறவன் பாடினால் அதைக் கேட்டு மகளிர் ஆடுவது உண்டு.
-------------
[3]. ப. 9 : 42. ; [4]. ப. 11 : 58.
--------
அவ்வாறு பாடும் பாடல்களில் ஏலேலங்கிடிப் பாட்டு, தில்லாலங்கிடிப் பாட்டு, கள்ளன் பாட்டு, தெம்மாங்குப் பாட்டு, வண்டிக்காரன் பாட்டு என்று பலவகை உண்டு.
என்னும் இடத்தில் அந்தப் பாட்டுக்களைப்பற்றித் தொழில் செய்யும் பெண்கள் சொல்லுகிறார்கள்.
திருடனாக நடித்துப் பாடும்போது பாடுவது கள்ளப் பாட்டு. அதைப்பற்றிய பேச்சுப் பின்னும் இரண்டு இடங்களில் வருகிறது.
__________
[1]. ப. 134 : 93.; [2]. ப. 146 : 55-9.
[3]. ப. 192 : 3.; [4]. ப. 193 : 8.
-----------
'நீண்ட சாலையில் இரவில் வண்டிகள் ஒன்றன்பின் ஒன்றாகப் போகின்றன. பாரம் ஏற்றிக்கொண்டு செல்லும் அந்த வண்டிகள் மெல்ல மெல்ல நகர்கின்றன. மாடுகள் மெதுவாகச் செல்கின்றன. இயற்கையே தூக்கத்தில் ஆழ்ந்திருக்கும்போது அந்த வண்டித் தொடர் 'கடக் கடக்' என்ற சத்தத்தோடு மோனத்தைக் குலைத்துச் செல்கின்றது. வண்டிக்காரர்களுள் ஒருவன் நன்றாகப் பாடத் தெரிந்தவன். ராகதாள அறிவுடையவனென்று எண்ணிக் கொள்ளாதீர்கள். நாடோடி உலகத்துப் பாடல்களிலே அவன் வல்லவன். அந்த நள்ளிருளில் இருட்டின் கனத்தைக் கிழித்துக் கொண்டு புறப்படும் கணீரென்ற சாரீரம் அவனுக்கு இருக்கிறது. அவன் பாட ஆரம்பித்தால் எல்லா வண்டிகளும் அந்த இசையிலே ஒன்றிப்போய்விடும். வண்டிக்காரர் யாவரும் பேச்சை நிறுத்திப் பாட்டிலே லயித்து விடுவார்கள். சிலர் தம் கையில் உள்ள கயிற்றை வண்டியிலே கட்டிவிட்டுத் தூங்கிக்கூடப் போய்விடுவார்கள். மாட்டை விரட்டி ஓட்டவேண்டுமா? வழி மாற வேண்டுமா? ஒன்றுமே இல்லை. முதல் வண்டி போகும் போக்கைப் பின்பற்றி ரெயில் வண்டித் தொடரைப்போல அந்த வண்டிகள் அவ்வளவும் போய்க் கொண்டிருக்கின்றன.
'வண்டிக்காரன் பாடும் பாட்டை அவன் தோழர்கள் மாத்திரமா கேட்கிறார்கள்? அந்த மாடுகளும் காதை நெறித்துக் கொண்டு கேட்கின்றன. மாடுகளுக்குச் சங்கீத உணர்ச்சி உண்டென்று புத்தகங்களில் எழுதியிருக்கிறார்கள். அந்தச் சாலையில் நடுநிசியில் அந்த உண்மைக்குச் சாட்சி சொல்லுகின்றன, வண்டியை இழுக்கும் காளை மாடுகள். விடிய விடியப் பாடிக் கொண்டே இருந்தாலும் வண்டி இழுக்கிறோம் என்ற உணர்ச்சியே இல்லாமல் அவை நடந்துகொண்டே இருக்கும். வண்டிக்காரனுடைய பாட்டு அலையலையாக எழும்பிக் காளை மாடுகளை இழுத்துச் செல்கிறது.
'தெம்மாங்கு பாடுகிறான் அவன். தேன் பாங்கு என்பது அப்படித் தேய்ந்து மாறி வழங்குகிறதென்று சொல்வார்கள். தேன் எப்படி இனிக்கிறதோ அப்படி இனிக்கும் பான்மை அந்தப் பாட்டுக்கு உண்டாம். கட்டிளங் காளையாகிய வண்டிக்காரன் வண்டியிழுக்கும் காளைகளையும் மயக்கும்படியாகப் பாடும் பாட்டல்லவா அது?' [1]
இந்தப் புத்தகத்தில் தெம்மாங்கைப் பற்றிக் குறிப்பிடும் பாடல்கள் பல வருகின்றன.
______
[1]. கஞ்சியிலும் இன்பம், ப. 53, 54.
---------
______
[1]. ப. 15 : 90, 91. ; [2]. 247 : 41.
[3]. ப. 96 : 76. ; [4]. ப. 321 : 7.
[5]. ப. 137 : 2.; [6]. ப. 247 : 40.
[7]. ப. 251 : 18.; [8]. ப. 290 : 8.
[9]. ப. 292 : 4.; [10]. ப. 312 : 8.
-----------
பாகம் II
1. தெம்மாங்கு
இந்தப் புத்தகத்தில் முதலில் தெம்மாங்கு என்ற பகுதி இருக்கிறது. தெம்மாங்குக்கு ஒரே ஒரு மெட்டுத்தான் உண்டு; ஆனாலும் அதைப் பலவாறு தாளத்தை மாற்றிப் பாடுவதுண்டு. இப்பகுதியில் ஆணின் கூற்றாகவும் பெண்ணின் கூற்றாகவும் 206 கண்ணிகள் இருக்கின்றன. இந்தக் கண்ணிகளில் பொருள் தொடர்பு ஏதும் இல்லை. பல பல நிலையிலே உள்ள ஆண்களும் பெண்களும் பாடும் முறையிலே துண்டு துண்டாக அமைந்தவை இவை.
தன்னுடைய மாமனிடத்தில் காதல் கொண்டிருந்தாள் ஒரு பெண். அவனை மணக்க வேண்டுமென்ற ஆசையில் தன்னை அழகுபடுத்திக் கொண்டாள். தன் கூந்தலை மிகவும் பாதுகாப்பாக வளர்த்துக் கொண்டை போட்டு அழகு பார்த்தாள். அவள் காதல் வளர்ந்தது; கூந்தல் வளர்ந்தது; அழகும் வளர்ந்தது. ஆனால் விதி அவளுக்கும் அவள் மாமனுக்கும் குறுக்கே நின்றது. யாரோ ஒரு சோம்பேறிப் பயலுக்கு அவள் தன் கழுத்தை நீட்டும்படி ஆகிவிட்டது. அவள் உள்ளம் மறுகினாள். சோறாக்கும் இயந்திரமாக அவனிடம் தன் வாழ்நாள் முழுவதும் இருக்கும்படி முடிந்ததை எண்ணி எண்ணி ஏங்குகிறாள்.
ஒருநாள் அவள் மாமன் வருகிறான். அவன் உலகியலின்படி, "சௌக்கியமாக இருக்கிறாயா?" என்று கேட்கிறான். அப்போது அருகில் ஒருவரும் இல்லை.
சௌக்கியமா! அவளுக்குத் துயரம் பொங்கி வருகிறது. வெடித்துக்கொண்டு வருகிறது உணர்ச்சி.
_____
[1.]பக்கம், 3 : 6.
----------
இலக்கியத்தில் இப்படி வருவது அரிது. ஆனால் உலகில் இவ்வாறு வெந்து மனம் புண்ணாகும் மெல்லியலார் இருக்கிறார்கள். அவர்கள் வாழ்வை உள்ளபடியே எடுத்துக்காட்டுகிறது இந்தத் தெம்மாங்கு.
மற்றொரு பெண், களவுக் காதலில் ஈடுபட்டிருக்கிறாள். இராக்காலத்தில் அவளைத் தேடிக்கொண்டு அவள் காதலன் வருவது வழக்கம். அன்று அவனை எதிர்பார்த்திருக்கிறாள். அவனை யாரும் அறியாமல் சந்திக்கவேண்டும். அதற்கு இடையூறாக நிலாப்பால்போலக் காய்கிறது. அதுகண்டு அப்பெண் வருந்துகிறாள்.
இத்தகைய காட்சியை இலக்கியங்களிலும் காணலாம். நிலவு வெளிப்பட வருந்தல் என்பது அந்தத் துறைக்குப் பெயர்.
சின்னஞ் சிறிய ஊரில் நிலவைக் கண்டு வருந்திய இளம் பெண், அந்த நிலவை வேண்டிக்கொள்வதாக ஒரு தெம்மாங்கு வருகிறது. அவள் மிகவும் பணிவோடும், "சாமி!" என்று மரியாதையோடும் நிலாவை அழைக்கிறாள். திங்களும் ஒரு தெய்வந்தானே? 'நீ கொஞ்சம் மறைந்துகொண்டால் ஆகாதோ?' என்று அவள் கேட்கிறாள்.
_________
[1]. குறுந். 47.; [2]. மலை. ப. 4 : 7. [3]. ப. 4 : 13.
--------
கூந்தலுக்கு இலக்கியங்களில் வரும் உவமைகள் பல உண்டு. தெம்மாங்குக்காரன் தான் போகும் சாலையிலே பார்த்த பொருளை உவமை கூறுகிறான்.
ஆலம் விழுது போலே
அந்தப் புள்ளை தலைமயிரு
தூக்கி முடிஞ்சிட்டாளாம்
தூக்கணத்தாங் கூடுபோலே. [3]
இந்தத் தெம்மாங்குப் பாடல்கள் மதுரைப் பக்கத்தில் வழங்கியவை என்பதற்கு வேறொரு சான்றும் கிடைக்கிறது.
_______
[1]. ப. 5 : 15. ; [2]. ப. 7 : 32.
[3]. ப. 27 : 169.; [4]. ப. 12 : 67.
---------
ஆஸ்பத்திரியும் காபித் தண்ணியும் வந்த பிறகு பாடிய பாட்டு இது:
_______
[1]. ப. 14 : 82. ; [2]. ப. 15 : 89.
[3]. ப. 17 : 100., [4. ப. 21 : 131.
--------
இந்தப் பாடல்களில் நகைச்சுவைக்கும் பஞ்சம் இல்லை. குமரிகளைக் கண்டவுடன் ஒரு கிழவனுக்கு விறு விறுப்பு உண்டாகிறதாம்! அதை ஒரு பெண் நகைச் சுவைபடச் சொல்கிறாள்;
[1]. ப. 23 : 141. ; [2]. ப. 25 : 156.
[3]. ப. 25 : 160.; [4]. ப. 25 : 157.
----------
இதே சுவையமைய, ஒரு கிழவி குமரியாகக் காட்டிக்கொள்வதையும் மற்றொரு பாட்டுச் சொல்கிறது:
2. தங்கரத்தினமே!
இதில் உள்ள இரண்டாவது பகுதியில் ஒவ்வொரு பாட்டிலும் தங்கரத்தினமே என்ற விளி வருகிறது. 27 பாடல்கள் அடங்கிய பகுதி இது. முதலில் தினைக் கொல்லையில் ஒரு பெண்ணை ஓர் ஆடவன் கண்டு பேசுவதாக வரும் கண்ணிகள் இருக்கின்றன. தினை விதைத்து மகளிரைக் காவல் வைக்கும் வழக்கத்தைச் சில பாடல்கள் சொல்கின்றன.
தினைக் கதிரைப் பாறையின்மேல் கொட்டி அதைத் தன் காலினால் மிதித்துத் துகைக்கும் வழக்கத்தை வள்ளியின்மேல் ஏற்றிச் சொல்கிறது ஒரு பாட்டு.
தேனும் தினை மாவும் பிசைந்து வாழையிலையில் அவள் வாரும் அழகையும் காணலாம்.
__________
[1]. ப. 26; 161.; [2]. ப. 36; 11.
[3]. ப. 37; 13.
---------
இல்லாமற்போகவில்லை. அந்த எண்ணத்தைக் காட்டுகிறது பின்வரும் பாட்டு:
3. ராசாத்தி
ஒவ்வொரு பாட்டிலும் ராசாத்தி என்ற மகடூஉ முன்னிலை ( பெண்ணை முன்னிலைப்படுத்திச் சொல்வது ) அமைந்த பாட்டுக்களை உடையது மூன்றாம் பகுதி. இப்பகுதியின் தொடக்கத்தில் ஒரு காதலன் தன் காதலிக்குத் திருவிழாக் காட்சிகளைக் காட்டுகிற நிகழ்ச்சி இருக்கிறது. கரும்பு, கற்கண்டு, கடலை, அவல் முதலியவை விற்கிறதை அவன் காட்டுகிறான். பிள்ளைகள் விளையாடுவதையும் மற்போர் நிகழ்வதையும் அவர்கள் பார்க்கிறார்கள். மற்போரில் தன்னோடு பொருதவனைத் தோல்வியுறச்செய்து, 'பீட்டுக் காண்பித்து' விட்டான் ஒருவன். அவன் பீரங்கி போன்ற தன் வயிறு பிதுங்கப் பெருமிதத்தோடு நிற்கிறான்,
அடுத்தபடி ஒரு பெண்ணின் பெருமையை ஒருவன் விரிவாகச் சொல்கிறான். அவள் குளத்துக்கும் கோயிலுக்கும் போகிறாள். பல தாதிப்பெண்களை ஆதரிக்கிறாள். அவர்களுக்கெல்லாம் பல பரிசில்களை வழங்குகிறாள். மந்திர தந்திரக்காரிகளையும், மாற்றாந்தாய்மாரையும், வம்பு செய்யும் ஆடவர்களையும் அவள் கண்டிக்கிறாள்.
ஒரு பெண்ணைப் பார்த்துப் பல கேள்விகள் கேட்பதாக அமைந்த பாடல்கள் பின்பு வருகின்றன. சோறு ஆக்கிக் குழம்பு வைத்துக் கடைக்குப் போய் ஆடை அணிகளை வாங்கும் செய்கைகளைச் சுட்டிக் காட்டுகிறான், கேள்வி கேட்கும் ஆடவன்.
----------
[1]. ப. 39 : 14.
[2]. ப. 47 : 19.
---------
அரண்மனைக்காரி ஒருத்தியின் வளவாழ்வையும் வண்மையையும் பற்றிய பாடல்கள் பின்பு உள்ளன. அவள் பல்லாக்கின் மேலும் ஆனையின் மேலும் போகிறாள். ஆடையும் அணியும் அணிகிறாள். தர்மம் செய்கிறாள்.
இறுதியில் சல்லிக்கட்டு வருணனை வருகிறது. காளையெல்லாம் சாயம் பூசிக் கருத்தாய் நிற்கின்றன.[1] கொம்புகள் ரம்பம் போல் உள்ளன. அவை ஓடுகின்றன. ஆட்கள் பிடிக்கிறார்கள்.
-----------
[1]. ப. 53 : 4.
-----------
4. ஆண் பெண் தர்க்கம்
ஆணும் பெண்ணும் ஒருவரோடு ஒருவர் எதிரெதிரே பேசும் பேச்சைத் தர்க்கம் என்று சொல்வது தெருக் கூத்து மரபு. இந்த நான்காவது பகுதியில் பலவகையான உரையாடல்கள் வருகின்றன.
முதலில் ஓராடவன் தான் விரும்பிய பெண்ணை அணுகித் தஞ்சமென்று அடைவதும், அவள் மிஞ்சிப் பேசுவதுமாகிய காட்சியைக் காணலாம். அவன்,
பின்னாலே வரும் வார்த்தைச் சண்டை என்ற பிரிவு முழுவதிலும் கீழ்த்தரமான பேச்சைப் பார்க்கிறோம். இங்கே பல வசவுகளை ஆணும் பெண்ணும் பொழிகிறார்கள்.
கண்ணாட்டியும் மச்சானும் என்னும் பிரிவில் ஆடவன் பெண்ணை, "என் ஆசைக் கண்ணாட்டி, என் நேசக் கண்ணாட்டி!" என்று விளித்துப் பேசுகிறான். அந்தப் பெண் அவனை, "என் திலக மச்சானே, எங் குலக மச்சானே!" என்று அழைக்கிறாள். அவள் இது வேண்டும், அது வேண்டும் என்று கேட்க அவன் அவற்றை வாங்கித் தருவதாகச் சொல்லுகிறான்.
அடுத்தபடி, ஓடும் ஜோடி வருகிறது. மணம் செய்துகொண்ட ஒருத்தியை வேறு ஓர் ஆடவன் தன்னுடன் ரங்கூனுக்கு ஓடிவந்து விடச் சொல்கிறான். அவள் தன் ஐயங்களெல்லாம் சொல்ல, அவன் தெளிவிக்கிறான். கடைசியில் அவள் சம்மதிக்கிறாள். இங்கிலாந்து தேசத்துக்கே போவோம் என்கிறாள்!
அடுத்தபடி தாசியின் காதல் என்ற பிரிவு உள்ளது. ஒருதாசி ஒருவனை நச்சுவதும், இருவரும் வாக்குவாதம் செய்வதும், அவன் பிறகு அவளைத் தேடிச் செல்வதும், இருவரும் சந்தித்துக் கூடுவதுமாகிய நிகழ்ச்சிகளைக் காட்டும் பாடல்கள் அதில் வருகின்றன.
பின்வரும் சண்டைப் பேச்சில் வார்த்தைச் சண்டை வளர்கிறது. ஆணும் பெண்ணும் ஒருவரை ஒருவர் ஏசியும் தூற்றியும் வைதும் உரப்புகிறார்கள். பின்பு சமாதானப் பேச்சும் வருகிறது. சமாதானமாகப் பேசிய பின் தாங்கள் இன்ன இன்னபடி திருமணத்தை நடத்த வேண்டும் என்று பேசிக்கொள்கிறார்கள். இங்கே கல்யாணத்துக்கு முன்னும் கல்யாணத்தின் போதும் நிகழும் பல வழக்கமான செயல்களைக் காணலாம்.
மாமன் பல ஊர்களுக்கு வருகிறாயா என்று தங்கம் தையலாளை அழைக்க, அவள் அங்கெல்லாம் வரமாட்டேன் என்று சொல்கிறாள். இப்படிச் சில பாடல்கள் உள்ளன. மலையின்மேல் தேயிலைத் தோட்டத்துக்குப் போய் வேலை செய்தால் அங்கே கூலி முதலியவை கிடைக்குமென்று அவன் கூற, அவள் தனக்கு வேண்டாம் என்று மறுக்கிறாள்.
--------
[1]. ப. 69 : 5.; [2]. ப. 74 : 22.
--------
அவன் அவளை அழைத்துப் போவதன் நோக்கம் இன்னதென்று அவனுடைய பேச்சிலே தெரிந்துவிடுகிறது.
இங்கே பல ஊர்களின் பெயர்கள் வருகின்றன. பெண்ணின் கூற்றில் ஒவ்வொரு கண்ணிக்குப் பின்னும்,
--------
[1]. ப. 107 : 45.; [2]. ப. 106 : 38.
[3]. ப. 107 : 46.
----------
5. தொழிலாளர் பாட்டு
கூலி வேலை செய்யும் பெண்களும் ஆண்களும் பாடும் பலவகைப் பாடல்களை இப்பகுதியில் காணலாம். சுண்ணாம்பு குத்தும் ஏழைப் பெண்ணின் அவலத்தை முதலில் பார்க்கிறோம். அவர்களுக்கு மணிக்கட்டெல்லாம் நோகின்றன. அவர்களுடைய வயிற்றில் பசி மூளுகிறது.
பிறகு தொடர்பற்ற பல கண்ணிகள் வருகின்றன. பின்பு சுண்ணாம்பு குத்தும் பாட்டில் துரைமகன் வருகையை விரிவாகச் சொல்லுகிறார்கள் பெண்கள். பல வண்டிகள் வருகின்றன. குதிரைகள் வருகின்றன. ஜட்கா, ரிக்ஷா, மோட்டார், லாரி, சைகிள் எல்லாம் வருகின்றன.
வண்டியிலே வந்த துரை அமலெல்லாம் செய்கிறான். அவனுக்குத் 'தீனி' தயாராகிறது. எதை எதையோ அவன் குடிக்கிறான். பல பழங்களைக் கொடுக்கிறான். பணியாரங்களை வழங்குகிறான். 'மச்சானை'க் கூட்டிக் கொண்டு மெத்தை வீட்டுக்குள் போகிறான்.
பல தோட்டங்கள் அங்கே இருக்கின்றன. வெள்ளைக்காரர் பலர் 'லேடி'களுடன் இருக்கிறார்கள்.[1] அவர்களிடையே இந்தத் துரை தளுக்கு நடை நடக்கிறான். பெண்ணுக்கு வேண்டியவற்றையெல்லாம் அவன் தருவானாம். அப்படி ஒரு பெண்ணைப் பார்த்து மற்றொருத்தி சொல்கிறாள். அவள் தன் வஞ்சகக் கருத்தைக் கடைசியில் வெளியிடுகிறாள்.
இந்தக் காட்சிக்குப் பின் ஒரு பெண் வயலுக்குச் சென்று கதிரறுத்துக் கூலிபெற்றுக் கடைக்குப்போய் வேண்டிய பொருளை வாங்குவதைச் சொல்லும் பாடல்கள் உள்ளன. பிறகு சந்தனத் தேவன் நிலத்தைப் பார்த்துவிட்டு வருவதைச் சில பாடல்கள் சொல்கின்றன.
நாற்று நடவை வருணிக்கும் கண்ணிகளைப் பிறகு காண்கிறோம். பின்பு கதிர்விளைய, அதை அறுக்க ஆள் தேடுகிறார்கள். விறகொடிக்கும் பெண் வருகிறாள். காளைகள் சூடடிக்கின்றன. எங்கே பார்த்தாலும் நெல்லாக இருக்கிறது.
சந்தனத் தேவன் பெருமையை 54 கண்ணிகள் சொல்கின்றன. பாண்டிநாட்டில் வாழ்ந்திருந்த திருடன் அவன். சொகுசான வாழ்க்கை நடத்தினவன். அவன் பருத்திக்காட்டை உடையவன்;
--------
[1]. ப. 134 : 87.; [2]. ப. 135 : 104, 105.
--------
மச்சு வீட்டில் வாழ்பவன்; மல் வேட்டி கட்டுகிறவன்; சரிகை வேட்டியும் பட்டுச் சட்டையும் அணிபவன்; மாயத் திருட்டு நடத்துகிறவன்; சம்பாச் சோறு உண்பவன்; ஜட்கா வண்டியில் போகிறவன்; பட்டாக்கத்தி பிடிக்கிறவன்; சிவத்த பெண்ணைக் கட்டிக்கொண்டவன்; வெள்ளிமிஞ்சி போடுகிறவன்.
கொழுந்து வெற்றிலைதான் அவன் போடுவது; சரியான தேக்குப் பெட்டியில்தான் அவன் பண்டம் வைப்பது; சந்தனக் கட்டிலில்தான் படுப்பான்; செம்பகப்பூவை அணிவான்; சாப்புத் தண்ணீர் குடிப்பான்.
வாழையிலையிலே உண்டு ஜப்பான் பாயிலே படுத்து வைர மோதிரம் அணிந்து தலைச்சவரம் பண்ணிக்கொண்டு ஊற்றுநீரைக் குடிக்கும் ஒய்யார ஆடவன் அவன். வாட் சண்டை போடுவான்; ஜெயில் கூடத்தில் இருப்பான். அவனிடம் நரிக்கொம்புதான் இருக்க வேண்டுமென்று தோன்றுகிறது. போலீஸ் என்றால் அவனுக்கு வேடிக்கை.
பஞ்சம் பிழைக்க ரங்கூனுக்குப் போன ஒருவன் தான் பட்ட பாட்டையெல்லாம் சொல்லி அழுகிறான். அவன் கதை 32 பாட்டாக அமைந்திருக்கிறது. சேசு பிறந்த நாளில் ஆடைகள் பெற்றதையும், டங்கன் துரை என்பவன் இல்லை என்னாமல் கொடுத்ததையும் சொல்கிறான். அந்தத் துரை சின்னப் பெண்ணைக் கண்டால் சேட்டை பண்ணுவானாம்.[1] கங்காணிமாரைக் கையிலே போட்டுக் கொண்டு கண்ட இடமெல்லாம் கண்ட கண்ட பெண்ணைக் கையைப் பிடித்து இழுப்பானாம். [2]
அதன் பின் வருவது மீனாம் பாட்டு. வலைஞர் பாடுகிற பாட்டு இது. இதில் ஒவ்வொரு கண்ணிக்கும் பின்,
------
[1]. ப. 163 : 26.; [2]. ப. 163 : 28.
[3] . ப. 163 : 29.
-------------
பின்பு வரும் ஓடப் பாட்டு மலைக்காட்டில் வேலை செய்யும் பெண்கள் தம்முடைய வேலையைப் பற்றிப் பாடும் வகையில் அமைந்திருக்கிறது. காட்டுக்குள் பல விலங்குகள் இருக்கின்றன. அங்கே உள்ள தோட்டத்தில் கூழ் குடித்துவிட்டு வேலை செய்யப் புறப்படுகிறார்கள் கூலியாட்கள். கங்காணியும் கணக்குப் பிள்ளையும் இருக்கிறார்கள். மழையானாலும் களை எடுக்க வேண்டும். பால் குடிக்கிற பச்சைப்பிள்ளை பாலுக்கழுதாலும் பறந்துகளை எடுக்கவேண்டும் [1]. பழம் பறிக்கிறார்கள் பெண்கள். பெரிய ரைட்டர் வந்து அவர்களை வெருட்டுவான். கங்காணிக்குத் தலைக்காசு கொடுக்க வேண்டும். இல்லையானால் அவன் கூச்சல் போட்டுக் குதிப்பான். [2] வெண்ணீட் என்னும் துரை வருகிறார். அவர் கங்காணிமாருக்குக் காசு கொடுக்கிறார். நோயாளிகளுக்கு மருந்து கொடுக்கிறார்.
இந்தத் தொடருக்குப் பின் தோட்டவேலை சம்பந்தமாகத் தொடர்பில்லாத கண்ணிகள் இருக்கின்றன. ரைட்டரை ரைட்டன் என்று சொல்கிறாள் பாட்டுப் பாடும் பெண்!
--------
[ 1]. ப. 168 : 27. ; [2]. ப. 169 : 39, 40.
[3]. ப. 172 : 8.
-------------
6. கள்ளன் பாட்டு
நாடகத்தில் கள்ளன் வேடம் போடுகிறவனைக் கண்டு ஆரவாரம் செய்து கிராம மக்கள் பெரு மகிழ்ச்சி அடைந்த காலம் ஒன்று உண்டு. அந்தக் காலத்தில் திருடன் பாட்டு, கள்ளன் பாட்டு என்று பல பாட்டுக்கள் அங்கங்கே வழங்கின.
இந்தப் பகுதியில் முதலில் ஒரு திருடன் தன் பெருமைகளைச் சொல்லிக் கொள்வதாக ஆறு பாடல்கள் இருக்கின்றன. அவன் அந்தமான் மலையிலே பிறந்தவனாம்; ஆயிரம் மெடல் பெற்றவனாம்.
என்பது அவனுடைய சித்தாந்தம்.
-------
[1]. ப. 175 : 6.
-----------
ஜம்புலிங்கம் என்ற கொள்ளைக்காரன் திருநெல்வேலிச் சீமையிலே முப்பது நாற்பது ஆண்டுகளுக்கு முன்னாலே இருந்தான். அவன் பணக்காரர்களைக் கொள்ளையடித்து ஏழைகளுக்கு உபகாரம் செய்தவன். அதனால் ஏழைகளுக்கெல்லாம் அவனிடம் பரிவு இருந்தது. அவனுடைய சாகசச் செயல்களை வியப்புடன் கதை கதையாகச் சொல்லிக்கொண்டார்கள். அவனைப் பிடிக்கப் போலீஸ்காரர்கள் பலபடியாக முயன்றும் அவன் அகப்படவில்லை. அவனுக்கு ஒரு காமக் கிழத்தியிருந்தாள். அவள் செய்த வஞ்சகத்தால் கடைசியில் ஜம்புலிங்கம் அகப்பட்டுக் கொண்டான். அவள் போலீஸ்காரருக்கு அவனைக் காட்டிக் கொடுத்துவிட்டாள்.
அந்தக் காலத்தில் பத்திரிகைகளில் நாள்தோறும் ஜம்புலிங்கத்தைப் பற்றிய செய்திகள் வந்தவண்ணமாக இருந்தன. மக்கள் ஆர்வத்தோடு அவற்றைப் படித்தார்கள்.
ஜம்புலிங்கத்தின் வரலாற்றைப் புத்தகமாக ஒருவர் எழுதினார். அவனைப் பற்றிப் பல பாடல்கள் எழுந்தன. அவற்றில் ஒரு தொடரே இங்கே 57 பாடல்களாக இருக்கிறது. ஒவ்வொரு பாட்டின் இறுதியிலும்,
ஜம்புலிங்கத்தைச் சிறந்த வீரனாகவும் தர்மவானாகவும் சித்திரிக்கிறது இந்தப் பாடல். அவனுக்கு மலையாளம், செந்தமிழ் இரண்டும் தெரியுமாம். எம்.ஏ., பி.ஏ. படித்து இங்கிலீஷூம் பேசுவானாம். ஆளிலே அழகன்; ஆசாரபோசன்; தோள்கள் பருத்த மன்னன். முறுக்கிவிட்ட மீசையும் முன்னம் பல் வரிசையும் மினுக்கி வைத்த கத்தியும் கையில் வெடிகளுமாகக் காட்சி அளிப்பான். தன் வீட்டையும் தாய் பிள்ளைகளையும் விட்டு விட்டுத் தைரியமாகத் தர்மம் செய்ய வேண்டுமென்றே இந்தத் தொழிலை மேற்கொண்டானாம்!
அவனுக்கு அத்தை மகள் ஒருத்தி இருந்தாள். அவளைச் சட்டை பண்ணாமல் அந்நியப் பெண்களின் மேல் ஆசை வைத்துப் போனதால் மோசம் வந்தது.
செந்தலைப் புலிகள் அவன் பேரைக் கேட்டு நடுங்குவார்கள் ஏட்டு, இன்ஸ்பெக்டர் ஆகியவர்கள் எட்டி எட்டிப் பார்க்கும் போதே அவன் சுவரிலேறிக் கட்டிடத்தையே தாண்டிப் போய்விடுவான்.
பணக்காரப் பெண்கள் பழமை பேசி வழி நடக்கும்போது பதனமாக நகைகளையெல்லாம் பறித்துக்கொள்வான். லட்சாதிபதிகளை லட்சியம் பண்ணாமல் மானத்தை வாங்கி விரட்டி விரட்டி அடிப்பான். ஆயிர ரூபாயையும் அரைக்காசென்று எண்ணி ஏழைகளுக்கு அள்ளி இறைத்துவிடுவான். அன்னதானம் செய்வான். புல்லுக்காரப்பெண்கள் தன் பேரைச் சொல்லிப் பிழைக்கட்டுமென்று நல்ல நல்ல நகைகளையெல்லாம் கொடுத்துப் பூட்டிக் கொள்ளச் செய்வான். நெல்லறுக்கப் போனவளைப் பாதையிலே நிற்கவைத்து நகைகளைப் பூட்டி அனுப்புவான். கையெடுத்த பேருக்கெல்லாம் கை நிறையப் பணம் கொடுத்துப் பைகளைத் திறக்கச்சொல்லிப் பற்றாததற்குப் போட்டு நிரப்புவான். தங்கம் பொன் வெள்ளி எல்லாம் தண்ணீருக்குச் சமமாக எண்ணித் தானதர்மம் செய்வான்.
ஆட்களை விட்டு உளவை அறிந்துவரச் செய்து பணக்காரரிடம் பணம் பறிப்பான். அவனும் அவன் மைத்துனனுமே இந்த வேலையில் ஈடுபட்டிருந்தனர்.
பட்டப் பகலிலே சப் இன்ஸ்பெக்டர் சட்டையைக் கழற்றித் தான் போட்டுக்கொண்டு போவான். ராத்திரி வேளையில் குதிரையின்மேல் ஏறிக்கொண்டு போய்ப் போலீஸ்காரர் கும்பிட அவர்கள் ‘பீட்நோட்’டில் பென்சிலால் கையெழுத்துப் போடுவான்!
இப்படி அவன் செய்த சாகசச் செயல்கள் பல. கடைசியில் ஒரு நாள் ராத்திரி அவனுடைய காமக் கிழத்தி காட்டிக் கொடுக்கப் போலீஸ்காரர்கள் அவனைச் சுட்டுவிட்டார்கள்.
இந்தக் கதையைச் சொன்ன நாடோடிப் பாவலன் கடைசியில் நீதியைச் சொல்லி முடிக்கிறான்.
எண்டப்புளி ரோட்டில் எக்குத்தப்பாய்ச் சில பேரிடம் சிக்கிக்கொண்ட திருடன் ஒருவன் தன் கதையைச் சொல்லும் பகுதி பிறகு வருகிறது. இதில் ஒவ்வொரு பாட்டுக்கும் பின்பு,
தாடிப்பத்திரி சீலை - இழுத்துப் போத்தடி மேலே
என்ற அடி அமைந்திருக்கிறது.
இறுதியில் ஒரு திருடன் தன் பிரதாபங்களைக் கூறிக் கொள்வதாக 11 பாடல்கள் இருக்கின்றன. அவன் பேச்சில் பறங்கிமலை, பல்லாவரம், சென்னை, வண்ணாரப்பேட்டை, தஞ்சாவூர், மானா மதுரை ஆகிய ஊர்கள் அடிபடுகின்றன.
--------
[1]. ப. 187 : 56, 57.
------------
7. குடும்பம்
இந்தத் தலைப்பில் கல்யாணப் பாட்டுக்களும் மாமியார் மருமகள் சண்டையும் கோக்கப் பெற்றிருக்கின்றன. கல்யாணத்தைப்பற்றிய சில பாட்டுக்களும் கொழுந்தியாள் மாப்பிள்ளையைக் கேலி பண்ணும் பரிகாசப் பாட்டும் முன்பு உள்ளன.
பின்பு பெண்ணுக்கு அறிவுரை வருகிறது. அறிவுரை கேட்கும் பெண் சுண்டெலிப் பெண் அந்தக் காலத்தில் இளம் பருவத்திலே திருமணம் செய்துவிடுவதனால் மணப்பெண் சின்னஞ் சிறியவளாகச் சுண்டெலியைப்போல இருந்தாள். அதனால்தான் ‘சுண்டெலிப் பெண்ணே!’ என்று விளிக்கிறார்கள் போலும்!
சுண்டெலிப் பெண்ணுக்குச் செய்யும் இந்த உபதேசம் மிக நீளமாக இருக்கிறது.
பெண் அடக்க ஒடுக்கமாக இருக்க வேண்டுமென்பதைப் பல படியாகச் சொல்லிக் காட்டுகிறாள், உபதேசம் செய்யும் தாய். “அக்கம்பக்கம் போகாதே; கண்ணடிக்கிறவனையும் கடைக்குப் போகிறவனையும் பாராதே” என்கிறாள். பல பல நீதிகளை அவள் சொல்கிறாள். எவற்றைச் செய்யக்கூடாது என்று வரிசையாகச் சொல்லிவிட்டு எவற்றைச் செய்யவேண்டுமென்று பின்பு கூறுகிறாள். காலையில் எழுந்து வாசலுக்குச் சாணி போட்டுச் சட்டி பானையைக் கழுவி வைத்துப் பாத்திரங்களை விளக்கிவைக்க வேண்டும். வெள்ளி, செவ்வாயில் வீடு முழுவதும் மெழுக வேண்டும். ஆடி அமாவாசையில் ஆண்டவனைக் கும்பிடவேண்டும். கிழிந்துபோன கந்தலைக்கூட எறிந்து விடாமல் தைக்க வேண்டும். கடவுளைக் கும்பிட வேண்டும். தர்மம் செய்ய வேண்டும். - இப்படிப் பல உபதேசங்களை அவள் உரைக்கிறாள். இறுதியில்,
இதன்பின் வரும் மாமியாள் மருமகள் சண்டை மிகவும் இழிவான முறையில் இருக்கிறது. திட்டும் வசவும் மிகுதி. முதலில் மாமியாள் மருமகளை மிரட்டி உருட்டி வைது தாக்குகிறாள். இறுதியில் மருமகள் திருப்பிக் கொள்கிறாள். கடைசியில் மாமியாள் கெஞ்சிப் பணிந்து போகிறாள்.
---------
[1]. ப. 201 : 1. ; [2]. ப. 208 : 63.
------------
8. தாலாட்டு
இந்தப் பகுதியில் முதலில் குழந்தையைத் தாய் தாலாட்டும் பாடல்கள் சில உள்ளன. அப்பால் தாலாட்டு என்ற சட்டத்துக்குள்ளே வெவ்வேறு பொருளைப் புகுத்திக் கூறும் அமைப்பைக் காணலாம்.
ஆர் அடித்தார்?’ என்ற முதற் பகுதியில் உண்மையான குழந்தை இருக்கிறது; கவிச் சுவையும் இருக்கிறது.
இந்தத் தாலாட்டுக்குப் பிறகு ‘மீன் பாட்டு’ வருகிறது, அப்பன் மீன் பிடிக்கப் போனதும், பலவகை மீனைப் பிடித்துச் சென்று விற்று வந்ததும், தாய் விற்று வந்ததும், விற்ற பணத்தைக் கொண்டு குழந்தைக்கு அணிசெய்து போட்டதும் இதில் தொடர்ச்சியாக வருகின்றன.
பிறகு வருவது கோயில் தாலாட்டு. முருகன் ஊர்வலம் வருவதும் யாவரும் தரிசிப்பதும் இதில் சொல்லப்பெறுகின்றன.
தந்தையின் பயணத்தைச் சொல்கிறதாலாட்டும், வேட்டையைப் பற்றிச் சொல்லும் தாலாட்டும், அறுவடையை வருணிக்கும் தாலாட்டும் அடுத்தடுத்து நிற்கின்றன. பிறகு உபதேசம் என்னும் தலைப்பில் உள்ள தாலாட்டில் மார்கழி மாதம் முதல் கார்த்திகை முடியவுள்ள பன்னிரண்டு மாதங்களிலும் வெவ்வேறு காரியங்களைச் செய்கையில் கடவுளை வழிபட வேண்டுமென்று தாய் சொல்கிறாள்; திங்கட்கிழமை முதல் ஞாயிறு முடிய ஏழு நாட்களிலும் எந்தக் காரியம் செய்தாலும் நியாய வழியில் நடக்க வேண்டுமென்று அவள் அறிவுறுத்துகிறாள்.
பின்பு உள்ள கதம்பமான தாலாட்டில் சில அருமையான கண்ணிகள் இருக்கின்றன.
-----------
[1]. ப. 219 : 5, 6. ; [2]. ப. 221 : 30-33.
-------------
மாமன் பரிசு, நோயும் மருந்தும் என்ற இரண்டுக்கும் பின், தூங்கு என்ற தலைப்பில் சில நல்ல கண்ணிகள் வருகின்றன.
ஆற்று வருணனைத் தாலாட்டு அடுத்தபடி வருகிறது. ஆறு தலைமுடிபோல் ஓடுகிறது. ஆற்றுக்குப் பாலம் இருக்கிறது. தண்ணீரைப் பலர் எடுக்கிறார்கள். இங்கே தண்ணீரின் பெருமையை பல கண்ணிகளில் தாய் சொல்லுகிறாள்.
தண்ணீருக்கு ஒரு தீட்டும் இல்லை; தடுப்பார் யாரும் இல்லை. எல்லா சாதிக்கும் அது உரியது. தோட்டி முதல் தொண்டைமான் வரை அதைத் தொழுகிறார்கள். சில சமயங்களில் அது சண்டைக்குக் காரணமாகிறது. மலைமேலும் குழியின் கீழும் இருப்பது அது.
தோட்டம் வைத்ததையும் வீடு கட்டின கதையையும் இரு வேறு பாடல்கள் தெரிவிக்கின்றன.
----------
[1]. ப. 230 : 7.; [2]. ப. 231 : 19, 20.
[3]. ப. 241 : 53.
-------------
‘உறங்கிடம்மா!’ என்ற பாடலுக்குப் பின் தாயின் கதை வரும் பாடல் இருக்கிறது.
தாய் தன் கதையை விரிவாகச் சொல்கிறாள். அவள் ஒருத்திக்கு ஒரு மகளாகப் பிறந்தாளாம். தாராபுரத்தில் வாழ்ந்த தகப்பனுக்கும் தர்மபுரியில் பிறந்த தாய்க்கும் குழந்தையாக உதித்தவள் அவள். அவள் இளமையில் மிகச் செல்வமாக வளர்ந்தாள். பல தாதிகள் அவளுக்கு உடனிருந்து ஏவல் புரிந்தார்கள். அஞ்சு வயசில் அவள் ‘அரிசித்தரி’ படித்தாள். பத்து வயசுக்குள் படிப்பெல்லாம் முடித்தாள். பன்னிரண்டு வயசிலே பருவமாகித் திருமணம் செய்து கொண்டாள். பிறகு ஆண்டு இருபதாகியும் குழந்தை பிறக்கவில்லை.
பலவகையான நேர்த்திக் கடன்களை நிறைவேற்றினாள். தான தர்மம் செய்தாள். தலயாத்திரை, தீர்த்த யாத்திரை போனாள். அப்பொழுதும் குழந்தை பிறக்கவில்லை.
இங்கே சில கண்ணிகள் மிகச் சிறந்த சுவையையுடையனவாக விளங்குகின்றன.
[1]. ப. 253 : 56-59.
-----------
இந்த நிலையில் மிக வருந்திய அந்தப் பெண் சில தர்மங்களைச் செய்தாள். ஆனால் அந்தத் தர்மத்தை உரிய சீவன்கள் பயன்படுத்திக் கொள்ளவில்லையாம். அதற்குக் காரணம் இன்னதென்று அவள் பொருமி உணர்ச்சியுடன் சொல்லுகிறாள்.
----------
[1]. ப. 254 : 60-63.; [2]. ப. 254 : 64-5. 70-72.
[3]. ப. 254 : 73-4.
-----------
இவ்வாறு வருந்தியவள் கடைசியில் ஒரு தவ முனிவரைக் கண்டு அருள் பெற்று ஒரு பெண் குழந்தையைப் பெற்றாள். அப்புறம் அவள் நிலை உயர்ந்தது. நிந்தனை மாறியது.
----------
[1]. ப. 255 : 86-89.
-------
9. சிறுவர் உலகம்
குழந்தை உலகத்தில் இருவகையான பாட்டுக்களைக் காணலாம். ஒன்று, குழந்தைக்காக மற்றவர்கள் பாடுவன. மற்றொன்று குழந்தைகளே பாடுவன. இந்தப் பகுதியில் உள்ள முதல் மூன்றும் பிறர் பாடுவன. குழந்தையைச் சாய்ந்தாடவும், கை வீசவும், தோள் வீசவும் பழக்கும்போது பாடும் பாடல்கள் இவை.
கண்ணாமூச்சி விளையாட்டுப் பாட்டுப் பின்னே உள்ளது. இத்தகைய விளையாட்டுப் பாடல்களில் ஓசைதான் முக்கியம். சில சொற்களுக்கு ஓசை இருக்கும்; பொருள் இராது. சி்லவற்றிற்குப் பொருள் இருக்கும்; தொடர்பு இராது. பலிஞ்சடுகுடு விளையாட்டில் மூச்சு விடாமல் ஆண்பிள்ளைகள் பாடல்களைச் சொல்வார்கள். பாட்டின் கடைசியில் வரும் சொல்லைப் பன்முறை சொல்வார்கள். அந்தப் பாட்டுக்குப் பொருள் என்ன என்று பார்ப்பதனால் பயன் ஒன்றும் இல்லை.
பெண்கள் விளையாடுவது கல்லாங்காய் விளையாட்டு; கழங்காடல் என்றும் இதைச் சொல்வார்கள். பெதும்பைப் பருவத்துப் பெண்கள் கழங்கு விளையாடுவதாகவும் அப்போது ஒன்று முதல் ஏழு வரையில் எண்ணிக்கை வரும்படியான பாடல்களைப் பாடுவதாகவும் புலவர்கள் உலா என்னும் பிரபந்தத்தில் அமைத்திருக்கிறார்கள். [2]
கல்லாங்காய் விளையாட்டுப் பாட்டிலும் இந்த வரிசையைப் பார்க்கலாம். எப்படியாவது ஒன்று இரண்டு முதலிய எண்ணின் பெயர் தொனித்தால் போதும், இந்தப் பாட்டிலே.
------
[2] . இதன் விரிவை, குழந்தையுலகம் ( கி. வா. ஜ. ) 43-ஆம் பக்கம் முதலியவற்றில் காணலாம்.
-----
வினா விடைகளை ஐந்து விளையாட்டுப் பாடல்களில் காணலாம். இரண்டு குழந்தைகளில் ஒருவர் கேட்க மற்றொருவர் விடை கூற வளரும் பாட்டு இது. சொன்ன வார்த்தையின் முதல் பகுதியைக் கேள்வியாகக் கேட்க, அதற்கு விடை சொல்ல, அந்த விடையின் முற்பகுதியை மீட்டும் கேட்க, விடை சொல்ல, இந்த வினா விடை நீண்டுகொண்டே போகும்.
நிலாப் பாட்டு இன்சுவை ததும்பும் பாடல்களையுடைய பகுதி. குழந்தைக்கு விளையாட்டுக் காட்டத் தாயும் பிறரும் பாடுவார்கள்; குழந்தைகளும் பாடுவார்கள்.
‘சிறுவர் உலகம்’ என்ற பகுதியின் இறுதியில் வேடிக்கைப் பாட்டுக்கள் இருக்கின்றன.
---------
[1]. ப. 262 : 1.; [ ] 2. ப. 268 : 2.
-------------
10. புலம்பல்
பெண்கள் உணர்ச்சி வசப்பட்டுப் பாடும் பாடல்களில் இரண்டு வகை மனித வாழ்வின் தொடக்கத்திலும் இறுதியிலும் கேட்பதற்குரியன. பிறந்த குழந்தையைத் தாலாட்டும் தாலாட்டுப் பாடலும் இறந்தவர்களை எண்ணிப் புலம்பும் ஒப்பாரியும் ஆகிய அவற்றைப் பாடும் ஆற்றல் இந்த நாட்டுப் பெண் குலத்திற்கே உரியது. இந்த இரண்டு வகையிலும் உணர்ச்சி நிரம்பியிருக்கும். முன்னதில் வாத்ஸல்ய பாவமும், பின்னதில் அவலச் சுவையும் பொங்கிவரும்; கவிப் பண்பும் சிறந்து நிற்கும்.
பெண்கள் புலம்பும் ஒப்பாரியைப் பிலாக்கணம் என்றும் சொல்வார்கள். அது பிணக்கானம் என்பதன் திரிபு என்று அறிஞர் கூறுவர். இலக்கியங்களில் இத்தகைய பாடல்களைக் கையறு நிலை என்று சொல்வார்கள்.
இப்புத்தகத்தில் புலம்பல் என்ற பகுதியில் இந்த அவலச் சுவைப் பாடல்கள் தொகுக்கப்பெற்றிருக்கின்றன. அவற்றில் குறிப்பும் உருவகமும் விரவி நிற்கின்றன.
----------
[1]. ப. 278 : 14.
-----------
கணவனை இழந்தவளைக் கண்டவர்கள். “அவள் தலை எழுத்து!” என்று இரங்குகிறார்கள். ‘தலையெழுத்தா! அதை என் தாய் அல்லவா முதலில் தெரிந்துகொண்டிருக்கவேண்டும்? என் தலையைப் பார்த்த அவள் அதனை அறியவில்லையே!’ என்று புலம்புகிறாள் அந்தப் பெண்.
---------
[1]. ப. 279; 18-19.; [2]. ப. 279; 22.
[3]. ப. 281; 12, 13.
-----------
11. கும்மி
எல்லாச் சாதியாரும் பல சமயங்களில் ஆடிப்பாடி விளையாடும் ஆட்டம் கும்மி. அதற்கென்று தனியே பாட்டும், அதற்கு வரையறையான மெட்டும் இருக்கின்றன. இந்தப் பகுதியில் நாலு வேறு பிரிவுகளைக் காணலாம்.
முதல் பிரிவில் வரலாற்றோடு தொடர்புடைய சில செய்திகள் வருகின்றன.
அடுத்த வரிசையில் ஒன்றுக்கொன்று தொடர்பில்லாத 20 பாட்டுக்கள் இருக்கின்றன. சரசுவதி வணக்கத்தோடு அது தொடங்குகிறது. [3]
---------
[1]. ப. 289 : 2.; [2]. ப. 290 : 11. [3]. ப. 291 : 1.
-------------
பெண்கள் தாம் உடுத்திருக்கும் சீலைகளின் வண்ணச் சிறப்பைப் பாடுகிறார்கள்.
--------
[1]. ப. 292 : 2-3.: [2]. ப. 293 : 11.
[3]. ப. 298 : 34.
-------
கண்ணகியின் வரலாறு தெரிந்தவர்கள் இந்தப் பாட்டைப் பாடுகிறார்கள். கண்ணகியின் கண் மிக அழகு என்பது இதனால் தெரிய வருகிறது. கண்ணகை என்று நாடோடிப் பாடல்களில் அவள் பேர் வழங்குவதுண்டு. கண்ணிலே எப்போதும் ஒளியுடையவள் என்றும், கண்ணிலே சிரிக்கும் பாவம் எப்போதும்
ஒளிரும் என்றும் இருவகையில் பொருள்கொள்ளலாம். கண்+நகை என்பதற்குக் கண்ணில் ஒளியுடையாள் அல்லது சிரிப்புடையாள் என்று பொருள் கூறி, ஏழாம் வேற்றுமைத் தொகைப் புறத்துப் பிறந்த அன்மொழித் தொகையாகக் கொள்ளலாம். கண்ணகை என்பதே முதலில் உண்டான பெயரென்றும், அது பின்பு மாறிக் கண்ணகியென்று ஆயிற்றென்றும் ஊகிக்கலாம்.
நாரதன் தான் எழுதிய படத்தைக் கந்தனிடம் கொண்டு போய்க் காட்ட அதைப் பார்த்து அப்பெருமான் வள்ளியின்மேல் காதல்கொண்டு, ‘பித்துப் பிடித்த மனிதனைப்போல்’ என்ன என்னவோ பேசுகிறான். எப்படியாவது அவளைத் தேடி மணக்க வேண்டும் என்று உறுதிகொள்கிறான்.
அவன் முதல் மனைவியாகிய தெய்வயானை இதனை அறிந்து நாரதனைப் பார்த்து, கண்டபடியாக குடை குடை‘கிறாள்.’ [2] அவ்விருவருக்கும் வாக்குவாதம் நிகழ்கிறது. பின்பு முருகன் தெய்வயானையிடம் சொல்லிவிட்டு நாரதன் வழிகாட்ட வேடராசன் போலக் கோலம் புனைந்து வள்ளியிருக்கும் தினைக் கொல்லைக்குப் போகிறான். போய் வள்ளியிடம் தன் காதலை உரைக்கிறான்.
வானம்பூ மிதண்ணீர் எல்லாவற் றுக்கும்நான்
வஞ்சிமார்த் தாண்டன்போல் ராசாவடி [3]
என்று தன் பெருமையைச் சொல்லிக்கொள்கிறான்.
---------
[1]. கம்ப கைகேசி சூழ்வினை. 50.; [2]. ப. 299 : 44.
[3]. ப. 302 : 62.
--------------
இந்தப் பாட்டைப் பாடியவன் திருவனந்தபுரம் அரசராகிய மார்த்தாண்டவர்மாவின் காலத்தில் இருந்தவனென்பதை இதனால் உய்த்துணரலாம்.
வள்ளி சினந்து பேசுகிறாள். ஓடிப்போகச் சொல்கிறாள்.
இப்படி இருக்கையில் அந்த ஆண்டிப் பண்டாரம் திடீரென்று களை வந்து மூடிச் சாய்கிறான். தொண்டை வறளுகிறதென்று கத்தி வைகிறான். அவள் தண்ணீர் கொடுக்க, “நீ மாவைக் கொடுத்ததனால் இப்படி ஆயிற்று. நீ கொடுக்கும் தண்ணீரை உண்ணமாட்டேன்” என்று அவன் சொல்ல, அவள் அவனைக் கேணிக்குக் கூட்டிக்கொண்டு போகிறாள். அவன் தண்ணீர் குடித்து அதில் விழுந்துவிடுகிறான்.
“கையைப் பிடித்து என்னைத் தூக்கடி பாவி” என்று கத்துகிறான் கிழவன். பின்பு மறுபடியும் வேடனாகி நிற்க, வள்ளி அவனைச் சினந்து பேசுகிறாள். மீட்டும் அண்ணன்மார் வரவே கந்தன் வேங்கைமர மாகிறான். அதைக் கண்டு அவர்கள் போய் விட, மீண்டும் முருகன் வேடனாக முன் நிற்கிறான்; கெஞ்சுகிறான்.
இதற்குமேல் பாடல்கள் இல்லை. கதை அரைகுறையாக நிற்கிறது.
கும்மி என்ற பகுதியில் இறுதியில் இருப்பது மாரியம்மன் கும்மி. இந்த நாட்டில் மாரியம்மனைப் பற்றி வழங்கும் பாடல்கள் பல. அவளே பகவதி, அவளே காளி, அவளே காமாட்சி, அவளே பார்வதி என்று இந்தக் கும்மி புகழ்கிறது. [2]
------------
[1]. ப. 302 : 64.: [2]. ப. 307 : 2.
-----------
12. தெய்வம்
பன்னிரண்டாவது பகுதி தெய்வங்களைப் பற்றிய பாடல்கள் அடங்கியது. முதலில் முத்துமாரி பாட்டு வருகிறது. பாரதியார் இந்தப் பாட்டின் மெட்டை அறிந்து அதே மெட்டில் தாம் தனியே முத்து மாரியின்மேல் ஒரு கவிதை பாடியிருக்கிறார்.
அடுத்தபடி மற்றொரு மாரியம்மன் பாட்டு வருகிறது. கண்கண்ட தெய்வம் மாரியம்மன்; தாங்க முடியாத அம்மை பூட்டுவாள்; அது நீங்க வேப்பிலை விபூதி எல்லாம் தருவாள்; ஆயிரங்கண் மாரி இல்லாத இடம் இல்லை; அவளை வழிபடுகிறவர்கள் காவடி கட்டி வழிபடுவார்கள்; தீச்சட்டி எடுப்பார்கள் - என்ற செய்திகள் இதில் உள்ளன.
பூசாரிப் பாட்டுப் பின்பு இருக்கிறது. பூசாரி ஓம் என்றும் ஆம் என்றும் உச்சரிக்கிறான். மயான ருத்ரி முதலிய பல தெய்வங்களை அழைக்கிறான்.
பின்பு வரும் கரகப் பாட்டில் ஒன்று முதல் பத்துக் கரகங்களைச் சொல்லும் கண்ணிகள் உள்ளன.
இதன் பின் ஆதாம் ஏவாள் கதையையும் ஏசு சரிதையையும் சொல்லும் கும்மிகள் இருக்கின்றன.
-----------
[1]. ப. 311 : 1.; [2]. ப. 313 : 19.
[3]. ப. 318 : 11.
------------
ஆண்டவர் ஆதாம் ஏவாள் என்றவர்களைப் படைத்ததும், ஏதேன் தோட்டத்தில் வாழ்ந்ததும், அத்தோட்டத்தில் ஒரு வர்ணப் பழமரம் வளர்ந்திருந்ததும், பாவிப் பிசாசு வந்து தின்னத் தகாத அந்தப் பழத்தைத் தின்ன வழி சொல்லிக்கொடுத்ததும், ஏவாள் அதைப் பறித்துத் தான் பாதி தின்று ஆதாமுக்கும் பாதி கொடுத்ததும், அவர்கள் அப்படித் தின்றதனால் அவர்களுடைய சந்ததியார்கள் பாவிகளாகப் போனதுமாகிய வரலாறு ஆதாம் ஏவாள் கும்மியில் வருகிறது. பின்பு,
ஏசு சரிதையைச் சொல்லும் கும்மி பின்பு வருகிறது. ஏசு பிறந்தார். பல இடங்களுக்குப் போனார். பல அற்புதங்களைச் செய்தார். இந்தக் கும்மி பத்துக் கண்ணிகளோடு முடிகிறது. பிறகு வேறு சந்தத்தில் ஏசுவையே விளித்துப் பாடும் பாட்டு ஒன்று அப்பெருமான் சரிதையை விரிவாகச் சொல்கிறது. 108 கண்ணிகள் அடங்கியது இப் பாடல். ஏசு பிறந்து குழந்தைப் பருவத்துக்குரிய விளையாடல்களெல்லாம் விளையாடுகிறார். அன்னை கன்னி மரிக்குத் துணையாக இருக்கிறார். சூசை முனிக்கு அடங்கி நடக்கிறார். முப்பது வயசுக்குமேல் கப்பலேறிப் போகிறார். பல அற்புதங்களைச் செய்கிறார். பல அரிய உபதேசங்கள் செய்கிறார்.
கிறிஸ்துவர் பாடும் பாட்டு ஆனாலும் தமிழராக வாழ்பவர்கள் பாட்டு ஆதலினால் இந்த நாட்டுக்கே உரிய பழக்க வழக்கங்களை ஏசுவுக்கும் சார்த்திச்சொல்லியிருக்கிறான், இதைப் பாடிய நாடோடிப் பாவலன்.
சாஷ்டாங்கமாக விழுந்து வணக்கம்புரிவது இந்தநாட்டுமரபு.
-----------
[1]. ப. 319 : 13.; [2]. ப. 325 : 18.
-----------
மும்மூர்த்தி என்ற வழக்கு, பாரத நாட்டுக்கு உரியது. இதை ஏசுநாதரோடு சார்த்தி,
தமிழ்நாட்டுக் குழந்தையைப் போல ஏசு வளர்கிறார். தமிழன் பாடும் ஏசு அப்படி வளர்ந்தால்தான் அவன் உள்ளமென்னும் சிங்காதனத்தில் வீற்றிருக்க முடியும்.
---------
[1]. ப. 326:24, [2]. ப. 326:33. 327:35. [3]. ப. 332:107, 108.
---------
13. பல கதம்பம்
இந்த நாடோடிப் பாடல் தொகுதியில் கடைசிப் பகுதியில் மூன்று வெவ்வேறு பாட்டுக்கள் இருக்கின்றன. தாது வருஷத்தில் (1876) ஒரு பஞ்சம் உண்டாயிற்று. அப்போது தமிழ்நாட்டு மக்கள் மிகவும் துன்புற்றார்கள். அந்தப் பஞ்சத்தைப்பற்றி அக்காலத்தில் வேதநாயகம் பிள்ளை முதலிய பல புலவர்கள் பாடியிருக்கிறார்கள். [1]
அதைப்பற்றி ஒரு பாட்டு இதில் இருக்கிறது. தாய் வேறே, பிள்ளை வேறே என்று பிரிந்த அவலத்தையும், மாடுகள் பட்டினி கிடந்து இறந்த அலங்கோலத்தையும், வயிறு ஒட்டி ஆணும் பெண்ணும் அலறிய துயரத்தையும், கண்ட இடங்களிலெல்லாம் பிணம் கிடந்த கண்ணராவியையும் பாட்டு விரிக்கிறது.
------
[1]. என் சரித்திரம் ( டாக்டர் உ. வே. சாமிநாத ஐயர் ), ப. 569.
------------
அக்காலத்தில் இந்தியாவின் ஆட்சியுரிமை விக்டோரியா மகாராணியிடம் இருந்தது. அரசாங்கத்தார் கஞ்சித்தொட்டி வைத்து உதவி செய்ததும் இந்தப் பாட்டினால் தெளிவாகிறது.
தொதுவர் பாட்டு என்ற பாடலில், ஒருவன் நீலகிரிக்குச் சென்று தொதுவர்களைக் கண்டு, அவர்களிடம் எப்படிப் பழகுகிறதென்று தெரியாமல் அடிபட்ட கதை வருகிறது. அந்தத் தொதுவர்களின் நிலையை,
இறுதியில் இருப்பது வெள்ளைக்காரன் பாட்டு. ஆங்கிலேயர்கள் இந்த நாட்டுக்கு வந்து பலவகையான நன்மைகளைச் செய்தார்கள் என்று அக்காலத்தில் பல புத்தகங்கள் வெளியாயின. சிலவற்றிற்குப் பரிசும் கிடைத்தது. பெரிய மனிதர்கள் பலர் ஆங்கிலத்தில் சொற்பொழிவாற்றினார்கள். அந்த முறையில் நாடோடி மக்களிடம் யாரோ ஒருவன் எழுதிப்பரப்பிய பாட்டு இது
---------
[1]. ப. 335:14, 336:21.; [2]. 337:23-5. [3]. ப. 340:1.
-------------
---------
[1]. ப. 344 : 40.
-------------
ஆராய்ச்சி உரை - பாகம் III
பொருள் உலகம்
வாழ்க்கையில் வழங்கும் பொருள்களும் சிந்திக்கும் எண்ணங்களும் பழக்கவழக்கங்களும் இலக்கியத்தில் வருகின்றன. வாழ்க்கையோடு நெருங்கிப் பிறந்து வளர்ந்த நாடோடி இலக்கியத்தில் பெரும்பாலும் உண்மைப் பொருள்களும், இயல்பான எண்ணங்களும், கண்ணாரக் காணும் காணும் செயல்களும் காட்சியளிக்கும். அவற்றைத் தொகுத்து வகைப்படுத்திப் பார்த்தால் பல உண்மைகள் புலனாகும். பின்னே வரும் ஆராய்ச்சிப் பகுதிகளில் அத்தகைய வகைகளை அகராதி வரிசையில் அமைத்துத் தந்திருக்கிறேன்.
சொல், பொருள் என்று இருவேறு உலகம் உண்டு. சப்தப் பிரபஞ்சம், அர்த்தப் பிரபஞ்சம் என்று அவற்றைக் கூறுவார்கள். பொருள் தோன்றி, அதைக் குறிக்கச் சொல் தோன்றுகிறது. ஆதலின் முதலின் பொருளுலகத்தைப் பார்ப்போம்.
இந்தப் பிரிவில் அணி, ஆடை, உணவு, பழம், புதுப் பொருள்கள், பூ, மாடு, மீன் என்பவற்றை வகை வகையாகப் பார்க்கலாம்.
1. அணிவகை
மனிதன் தன்னை அழகுபடுத்திக் கொள்ளவும் ஆபத்துக்கு உதவவும் அணிகளை அணிகிறான். அவை காலத்துக்கும், இடத்துக்கும், வாழ்க்கை நிலைக்கும், ஆண், பெண்பாலுக்கும், உறுப்புக்கும் ஏற்ப மாறுபடுகின்றன. பல அணிகள் மறைந்து போயின; பல புதிய அணிகள் வந்துவிட்டன.
2. ஆடைவகை
‘அணியெல்லாம் ஆடையின்பின்’ என்று சொல்வார்கள். மானத்தைக் காக்க மனிதன் ஆடைகளை அணிந்தாலும் நாளடைவில் நாகரீக வளர்ச்சிக்கு ஏற்பப் பலவகை ஆடைகள் வந்துவிட்டன.
நாட்டுக்கும், சமுதாயத்துக்கும் ஏற்றபடி அமைந்த ஆடைகள் தனித் தனியே உண்டு.
-------------
3. உணவு வகை
‘விலங்கும் மனிதனும் உணவு உண்டாலும் மனிதன் பசியைப் போக்க மாத்திரம் உணவு உண்பதில்லை; ருசிக்காகவும் அவன் உண்ணுகிறான். அதனால் அவன் சமைக்கும் உணவில் பலவகைகள் வளர்ந்து வருகின்றன.
-----------
4. பழவகை
இயற்கைத் தேவி வழங்கும் இனிய உணவு பழம். மனிதன் தோட்டம் போட்டுப் பழங்களை உண்டாக்கி உண்ணுகிறான். வேற்று நாட்டிலிருந்து பழமரங்களைக் கொண்டுவந்து பயிராக்கிக் கனிகளை உண்டாக்குகிறான்.
5. புதுப் பொருள்கள்
இவை ஆங்கிலேய அரசாட்சியோடு வந்தவை
-----------
6. பூ வகை
தமிழ் நாட்டில் ‘மலரும் மணமும் போல’ என்று ஓர் உவமைப் பழமொழி வழங்குகிறது. இந்த நாட்டில் உள்ள மலர்கள் மணத்தால் சிறப்புடையவை. தமிழர் வாழ்வில் மலர்கள் பல துறையிலும் பயின்று பரவி இணைந்து மணக்கின்றன.
----------
7. மாட்டு வகை
வேளாண்மையையே முக்கியத் தொழிலாகப் பெற்ற தமிழர் வாழ்வில் மாடுகள் இன்றியமையாதன. அவற்றைப் போற்றிப் பாதுகாக்கும் இயல்புள்ளவர் தமிழர். பலவகை மாடுகளை அவர்கள் அறிவார்கள்.
----------
8. மீன் வகை
ஆற்றிலும், குளத்திலும், கடலிலும் பலவகை மீன்கள் வாழ்கின்றன. வலைஞர் பாடும் பாடல்களில் அவற்றின் பெயர்களைக் காணலாம்.
----------
9. பழக்க வழக்கங்கள்
இலக்கியங்களில் காணாத பல செய்திகள் நாடோடிப் பாடல்களில் வருகின்றன. வாழ்க்கையின் பல கோணங்களையும் நெருங்கிக் கண்ட நாடோடிக் கவிஞன் தான் கண்டதைக் கண்டபடி சொல்லுகிறான். அவன் பாட்டில் சமுதாயத்தில் உள்ள பல பழக்க வழக்கங்களைக் காணுகிறோம். இடத்திற்கும் வகுப்பிற்கும், காலத்திற்கும்ஏற்ப இவை வேறுவேறாக இருக்கும்.
கீழே வரும் அகராதியில் பழக்க வழக்கங்களோடு பல செயல்களும், சில விலங்கினங்களின் செய்கைகளும் காணப்படும். எண்கள், பக்க எண்களைக் குறிப்பவை.
----------
அக்காள் தங்கச்சி இல்லாதவருக்கு அன்னம் கொடுத்தல் 51
அட்டகாசம் செய்தல் 63
அட்டை கடித்தல் 220
அட்வான்ஸ் கொடுத்தல் 105
அடிபணிந்து நிற்றல் 189
அடிமேல் அடிவைத்து நடத்தல் 303
அடுப்பு மூட்டுதல் 225
அண்டாவில் சோறு ஆக்குதல் 25
அண்ணன் தம்பி கோடி போடுதல், 2791
அரவணைத்தல் அண்ணன் தம்பிமாரை 207
அத்தை குழந்தைக்குப் பேர்இடல் 263
அத்தை மகளிடம் உரிமை கொண்டாடுதல் 59
அந்தரடித்தல் 190
அந்நியப் பெண்மேல் ஆசை வைத்தல், 177
அந்நியரையும் அடுத்தவரையும் 123
ஆதரித்தல் 207
அம்பு வைத்து எய்தல 281
அம்மியை மடியில் கட்டிக்கொண்டு ஆழக்கிணற்றில் இறங்குதல் 292
அரசனுக்குச் சாமரம் வீசுதல 6
அரிசியை அரித்து உலைவைத்துச் சோறு வடித்தல், 11-கடன் வாங்கிச் சமைத்தல், 22
அரிவாள் சொல்லி அடித்தல் 21
அரிவாளை இடுப்பில் வைத்தல் 226
அரும்பெடுக்கும் நாளையில் அலைய விட்டுப் போதல் 281
அருமை குலைத்தல் 63
அலங்கன் ஆளைத் தேடுதல் 149
அழகுக்குக் கொண்டை போடுதல் 3
அழுத கண்ணைத் துடைத்தல் 235
அழுது புரளுதல் அறுப்பறுத்துக் கட்டுக்கட்டல் 164
-புரி முறுக்கல் 164
அன்னநடை நடத்தல் 143
ஆகாசத்தில் வீசுதல் 305
ஆகாசம் பூமியைச் சாட்சியாக வைத்தல் 300
ஆகாயக் கப்பலில் ஏறுதல் 73
ஆசை வைத்து மோசம் போதல் 177
ஆட்டம் நின்று ஓட்டமாதல் 335
ஆட்டுக் குட்டியின் கழுத்தைத்திருகுதல் 162
ஆட்டைப்போல் உரித்தல 297
ஆடவன் பெண்ணை ஏமாற்றிக் கொண்டு வருதல் 70
ஆடி அமாவாசையில் ஆண்ட வனைக் கும்பிடுதல் 205
ஆடிப்பாடிப் போதல் 220
ஆடிமாசம் அடிவைக்கக கூடாது் 161
ஆடு கருவேலங்காயைத் தின்னுதல் 17
ஆடைக்குக் கஞ்சி போடுதல் 16
ஆண்டவனைக் கும்பிடுதல் 206
ஆண்டி வேஷம் போடுதல் 306
ஆணம் காய்ச்சுதல் 225
ஆணுக்கும் பெண்ணுக்கும் பொன் கொடுத்தல் 52
ஆமை அருட்டப் பார்த்தல் 168
ஆரஞ்சித்தோல் பொறுக்குதல் 123
ஆராய்ச்சிமணி அடித்தல் 222
ஆலமரத்தின் அடியில் பிள்ளையை ஆட்டுதல் 142
ஆவாரம் பூவால் தாவாரம் இறக்குதல் 125
ஆளோசை கேட்டு வருதல் 286
ஆற்றில் சுரைக்குடுக்கை கொண்டு நீந்துதல் 239
ஆற்று மணலில் ஊற்றெடுத்தல் 290
ஆற்றோரத்தில் காத்திருந்து பெண்களைப் பார்த்தல் 198
-தோட்டம் வைத்தல் 244
ஆனைமேலே அம்பாரி வைத்தல் 51
ஆனையை அகழி வெட்டி அடக்குதல் 342
இஞ்சி முற்றித் தோப்பாதல் 280
இடுப்பை ஒடித்தல் 88
இணக்கமாப் போதல் 211
இரவில், காட்டில் புலி அலைதல் 74
- காந்த விளக்குப் போட்டு வேலை செய்தல் 247
இராச் சம்பளம் தருதல் 163
இரும்படித்தல் 29
இரும்பைக் காயவைத்துச் சம்மட்டியால் அடித்தல் 29
இலுப்பை மரத்தால் தொட்டில் செய்தல் 230
---------
1. இவை அருமையாகச் சமுதாயத்தில் காணுபவை.
--------
இலை போட்டுச் சோறு தின்னுதல் 244
இலையும் குழையும் தின்றல் 211
இழுத்துப்போட்டு உதைத்தல் 210
இழுத்துப்போர்த்துக் கொண்டு வருதல் 291
இளைத்தால் இளநீர் குடித்தல் 242
இறக்கிப் பேசுதல் 86
இறுமாப்புப் பேசுதல் 203
இஷ்டம்போல் உதை கொடுத்தல் 163
ஈ எறும்பு கடித்தல் 251
ஈக்கும் நாய்க்கும் இரையாதல் 300
உச்சந்தலை தொடங்கி உள்ளங்கால் மட்டும் அடித்தல் 339
உடம்பு நோவுக்கு ஒற்றடம் கொடுததல் 233
உதவி இல்லாதவருக்கு உப்புக் கொடுத்தல் 51
உதை கொடுத்தல் 162
உயர்த்திப் பேசுதல் 60
உயிரைத் தத்தம் செய்தல் 82
உருட்டி உருட்டி விழித்தல் 203
உலக்கையால் இடித்தல் 213
உலகமெல்லாம் சுற்றுதல் 255
உற்றார் பெற்றார் குழந்தையை மெச்சுதல் 328
ஊர் இரண்டாதல், -சிரித்தல், 286, 214
ஊர்க்குருவி உயரப் பறத்தல் 65
ஊர் நாடு அறியத் தாலிகட்டுதல் 118
எச்சில் துப்பிச் சேறு குழைத்தல் 330
எச்சிலைத் துப்பினால் செல்வம் தங்காது, 206
எட்டி உதைத்தல் 72
எட்டு வச்சுப் போதல், எடுத்தெறிந்து பேசுதல் 66, 207
எண்ணெய் தேய்த்துத் தலை முழுகுதல 289
எண்ணெயிலும் வெந்நீரிலும் ஒற்றடம் கொடுத்தல் 252
எமலோகம் சேர்தல் 87, 278
எரிந்த குலைகள் அமர ஈரக்குலைகள குளிர்தல் 185
எருமைமாடு மேய்த்தல் 200
எருவு தட்டுதல் 66
எலி கதிரைப் பொந்திலே சேர்த்தல் 149
எலும்பைத் தட்டுதல் 290
எறும்பு கதிரைப் புற்றில் சேர்த்தல் 149
ஏங்கி ஏங்கி முகம் பார்த்தல் 305
ஏணிமேல் ஏணி வைத்து ஏறுதல் 284
ஏரிக்குள்ளே படகு போதல் 289
ஏழு மாதத்தில் வீடு கட்டுதல் 248
ஏழைகளுக்குக் கஞ்சி தர்மம் கொடுத்தல் 182
ஐந்து வயசில் அரிச்சுவடி படித்தல் 252
ஒன்றுக்குப் பத்தாக அபராதம் செலுத்துதல் 102
ஒருவன் எட்டுப் பேரை எதிர்த்தல் 179
ஓடும் தண்ணீரைக் குறுக்காட்டுதல் 292
ஓடும் தண்ணீரை உத்தரத்தால,்கடத்தல் 238
ஓந்தி பதுங்கிப் பதுங்கிப் பயமுறுத்தல் 168
ஓலை முதலியவற்றை விற்றல் 243
கங்காணிக்குத் தலைக்காசு தருதல் 169
கங்காணி கணக்குப் பார்த்துக் காசு கொடுத்தல் 172
கச்சேரியில் கையெழுத்துப் போடுதல் 19
கஞ்சி ஊற்றுதல் 320
கஞ்சிக்குக் காணத் துவையலைக்கடித்துக் கொள்ளுதல் 336
கஞ்சி குடிக்கும்போது கடித்துக் கொள்ளுதல் 151
கட்டி மாரடித்தல் கட்டி முத்தம் கொடுத்தல் 234
கட்டிவைத்தடித்தல் 162
கட்டு அவிழ்த்தல் 331
கட்டுத் தாலி கட்டுதல் 92
கட்டைக் களம் சேர்த்தல் 164
தூக்கி விடுதல் 164
கட்டை வண்டியில் காட்டுவழி போதல் 179
கடவுள் ஊர்வலம் வருதல் -மிருகத்துக்கு நீச்சம் கற்றுக் கொடுத்தல் 223, 239
கடவுளுக்கு உகந்து நடத்தல்-கடலை அவல் நிவேதனம் பண்ணுதல் 208
-----------
கை எடுத்தல், சூடம், சாம்பிராணிபோடுதல் 223, 229, 206
கடித்துக் கொள்ளுதல் 336
கண் அடித்தல் 102, 178, 201
இரண்டும் சோர்தல் 52
- பஞ்சடைதல் 302
- குளிரப் பார்த்தல்,குளிர வளருதல் 295
கண்ட துண்டம் ஆக்குதல் 72
கண்டபடி பேசிப் பழித்தல் 296
கண்டவனுடன் பேசுதல் 205
கண்ணகியைப் போல் கண் எழுதுதல் 298
கண்ணீர் விட்டு அழுதல் 331
கண்ணுக்கு அப்பால் விரட்டுதல் 329
கண்ணைச் சிமிட்டிப் பார்த்தல் 299
தோண்டுதல் 208
கண்மணிபோல் காத்தல் 216
கணக்குப் பிள்ளை கம்பால் அடித்தல், , 169
- கம்பு வைத்திருத்தல் 168
கணவன் மனைவியை அடித்தல் 210
கத்திக்கு இரையாதல் 89
கத்தியை மினுக்கி வைத்தல் 176
கதவுநிலை வைக்கும்போது கடலை அவல் தேங்காய் பழம் கொடுத்தல், 248
கதிரறுத்தல் 226
கதிரைக் கட்டி வைத்தல் 227
- கொட்டிக் காலால் மிதித்தல் 36
கப்பல் ஏறிக் கடலைத் தாண்டுதல், கதை பேசுதல் 299
82 - ஏறிச் சீமை பார்க்கப் போதல், 40-வந்து கரைசேருதல், 125
கப்பலில் ஆடு மாடு போல ஆணையும் பெண்ணையும் அடைத்தல் 161
கம்பங் கஞ்சியும் கடலைத் துவையலும் உண்ணுதல் 151, 171
கம்பு விளைந்தால் கிளி வருதல் 6
கயிற்றை முறுக்கித் தொட்டில் செய்தல் 294
கரகம் எடுத்தல் 317
கரடி காட்டில் வழி மறித்தல் 167
கருநாய் காடுசுற்றி வருதல் 254
கரு மருந்தைத் துளையில் கெட்டித்தல், 247
கருவைக்கரைக்க மருந்த உண்ணல், 8
கல் பொறுக்கி அடுப்புக் கூட்டுதல், 49
- கோபுரம் கட்டுதல், 53
கல்மேல் கல் அடுக்கி ஏறுதல் 284
கல்யாணத்தில் அத்தைமார் ஆலத்தி எடுத்தல் 96
- ஊர்வலம் போதல் 92
- ஊர் வெற்றிலை வைத்தல் 94
எல்லோருக்கும் சந்தனமும் குங்குமமும் கொடுத்தல் 95
- ஏழைகளுக்குச் சோறு போடுதல் 93
- சகோதர சகோதரிகளுக்குத் துணி வாங்குதல் 93
- சம்பந்திகளுக்குப் பழம் பாக்கு வைத்தல் 94
- தாம்பாளத்தில் பூவும் தாலிக் கயிறும் வைத்தல் 95
- தாலிகட்டுதல் 92
- தேங்காய் பழம் தாம்பூலம் தம்பதிக்குக் கொடுத்தல் 95
- பந்தலில் சனங்கள் உட்காருதல 197
- புரோகிதர் க்ஷேம லாப நேரத்தைச் சொல்லுதல் 94
- பொய்ப் பந்தல் போடுதல் 95
- மணமக்கள் சம்மணங்கால் போட்டு உட்காருதல் 96
- மணமக்கள் நமஸ்காரம் செய்தல் 96
- மணமக்களுக்கும் பூசாரிக்கும் நடுவே திரைகட்டுதல் 96
- மணமக்களின்மேல் சிறு பிள்ளைகள் பூவை இறைத்தல் 96
- மணமகன் கொழுந்திமாருக்குக் கறுத்த கோழிக் காலைக் காண்பித்தல் 98
- மண மகனுக்குச்சாதிக்கோழி அடித்துப்போடுதல் 98
- மந்திரங்களை உச்சரித்தல் 95
-மாமன்மார் மச்சான்மாருக்கு மாலை போடுதல் 93
- மைத்துனன்மார் மஞ்சள் தண்ணீர் ஊறறுதல் 97
- மைத்துனன்மார் மணமகன் மேல் சாணியைக் கரைத்து ஊற்றுதல 97
-மைத்துனன்மார் மணமகனைப் பரிகாசம் செய்தல் 67
-வரிசைக்குப் பதில் வரிசை கொடுத்தல் 93
-விருந்து வைத்தல் 93
-கல்யாணத்துக்கு நாகசுரக்காரனை அழைத்தல் 94
- நாள் நட்சத்திரம் பார்த்தல 94
- முன்முகூர்த்தக்கால் ஊன்றுதல் 94
கல்யாணப் பாட்டுப் பாடுதல் 96
-----------
கல்லால் அடித்தல் 290
கல்லுக்கும் கல்லுக்கும் அணை போடுதல் 389
கல்லை உருட்டித் திரட்டி அடித்தல் 160
- எறிந்து உறங்குபவனை எழுபபுதல் 124
கலசத்தில் பால்குடித்தல் 237
கவண் எறிந்து காக்கை குருவியைத் துரத்துதல் 295
கழுதைப்புலி வழிமறைத்தல் 167
கழுதைபோல் அலைதல் 305
கள்ளன் ஆளைவிட்டு உளவறிதல் 181
- கள்ளுக்குடித்தல் 175
- கன்னக்கோலை எடுத்தல் 192
- கொத்தவால்காலைவெட்டுதல் 187
- கோட்டைகொத்தளம் ஏறுதல் 187
- சமயத்தில் கதவை உடைத்துப்புகுதல் 29
- சாமத்தில் சாககைக்கொண்டுவருதல் 148
- சுவர் ஏறித் தாண்டுதல் 178
- தானதர்மம் பண்ணுதல் 181
- துப்பாக்கியைக் காட்டிப் பணம் வாங்குதல் 180
- நகைகளைக் கழறஞற்றிக் கொள்ளுதல் 179
- பணத்தைப் பறித்தல் 180
- முள்வேலியைத் தாண்டுதல் 183
கள்ளுக்கடைக்குப் போய்க்களை ஆற்றுதல் 162
களிமண்ணால் வீடுகட்டுதல் 269
களைத்தால் கள் குடித்தல் 243
களைப்புத் தீரத் தண்ணீர் குடித்தல் 139
களைபறித்தால் காசு பெறுதல் 106
களையாளுக்குக் கங்காணிகளைக் கொட்டுக் கொடுத்தல் 168
களைவந்து மூடிச் சாய்தல் 304
கறுப்புத்தூள் பறத்தல் 127
கறுப்புப் பொட்டு வைத்துக் கண்ணடித்தல் 212
கன்றுக் குட்டியைத் தேடிக் கயிறெடுத்து வருதல் 124
கன்று போகும் வழியில் கல் கிணறு கட்டி வைத்தல் 254
கன்னத்தில் அடித்தல் 209
- மஞ்சள் தேய்த்தல் 209
கன்னத்தைத் திருகுதல் 210
காசி தீர்த்தம் ஆடுதல் 253
காட்டுக்காரன் காக்கை கத்தும் நேரத்தில் கம்மாய்க்குப் போதல் 147
காட்டுக்கு எரு ஆகுதல் 85
காட்டைக் காத்தல் 35
காடும் வனமும் கண்டபடி அலைதல் 255
காடு மலையைப் பிடித்தல் 341
காடு மேட்டை அழித்துப் பங்களாக்கட்டுதல் 342
காடு விதைத்துப் பயிர் ஆக்குதல் 295
- வெட்டிக்கம்புசோளம் தினை விதைத்தல் 35
- வெட்டிக் கல் பொறுக்குதல் 35
காணாத தேசத்தைக் கண்டு பிடித்தல் 340
காணிக்கை தருதல் 293
காத்தவராயன் பலிகொள்ளுதல் 317
காதலி மடியின்மேல் காதலன் உறங்குதல் 21
காதில் ஊசிபோட்டுக் குத்தல் 42
- கையை வைத்தல் 305
காதுகளைப் பிணைத்துப் பூட்டுதல் 179
காதைக் கடித்தல் 210
காயை எறிந்து கடுங்காவல் பெறுதல் 24
கார்த்திகை தீபாவளியில் கடவுளைப் பாடுதல் 206
கால்பிடிக்க ஆள் வைத்தல் 13
கால்வாய்த் தண்ணீரைக் கம்பால் அடித்தல் 238
காலுக்குக் காலாழி மாட்டுதல் 295
காலுக்கு மிஞ்சி போடுதல் 51
காலையில் எழுந்து கைகாலைச் சுத்தம பண்ணுதல் 175, 245
- பெண்கள வாசலுக்குச் சாணி போடுதல் 205
- கடவுளைக் கும்பிடுதல் 245
காலையிலும் மாலையிலும் துணி மாற்றல் 250
காவல்காரன் பயிரைக்காத்தல் 148
காளைக்குச் சாயம் பூசுதல் 53
- சூடு போடுதல் 5
காளைகள் சூடடித்தல் 139, 227
கிழவன் மீசையைக் கோதுதல் 25
கிழவி நெல்லைக் கூட்டிப் பொறுக்கிக் கொண்டு போதல் 154
-------------------
கிழிந்து போன கந்தலைத் தைத்தல் 206
கிளியை விரட்டுதல் 36
கிளி வளர்த்தல் 39
குடல் தட்டுதல் 233
குடிகெடுத்தல் 300
குடிசையைக் கிடுகுபோட்டு மேய்தல் 242
குடுவையிலேகள் வைத்தல் 339
குடை பிடித்தல் 224
குண்டுபோட்டுச் சுடுதல் 281
குண்டை உருட்டுதல் 200
குதிரைக்குக் கண்ணி வைத்தல் 26
- லாடம் அடித்தல் 170, 285
குதிரை குதித்து ஓடுதல் 128
குந்திக் கணக்கு எழுதுதல் 231
கும்மாளம் போடுதல் 251
கும்மி அடித்தல் 251
கும்மிப்பாட்டுப் பாடுதல் 137
குமரிப்பிள்ளை கொழுந்து வெற்றிலை போடுதல் 141
குரலோசை கேட்டு வருதல் 286
குருவி ஆளைக் கண்டு கத்துதல் 10
- மின்மினியை விளக்காக வைத்தல் 274
குலுக்கி நடத்தல் 70
குலையை அறுத்தல் 211
குலை எரிந்துபோதல் 256
குழந்தை அடுத்த வீட்டுப் பிள்ளைகளை அடித்து விளையாடுதல் 326
- எட்டு வயசில் பட்டுச் சட்டை போடுதல் 328
- ஏழு வயசில் எழுத்தாணி பிடித்தல் 327
- ஏழு வயசில பள்ளிக்கூடம் போதல் 327
குழந்தைக்கு எழுத்தாணியும் ஓலையும் தருதல் 236
- கவி சொல்லிக் கொடுத்தல் 237
- காதுகுத்திப் பஞ்சுத் தக்கை வைத்தல் 295
கையும் காலும் அமுக்குதல் 281
- கொத்துக் கொத்தாக நகை போடுதல் 294
- சட்டைபோடுதல் 250
- சிரிப்புக் காட்டுதல் 251
- தண்ணீர் ஊற்றுதல் 251
- தாதி மார் பலர் வைத்தல் 250
- பல் முளைத்தல் 326
குழந்தை கூட்டாஞ்சோறு ஆக்குதல் 326
- கொஞ்சி விளையாடுதல் 326
- திண்ணையின் கீழ்த் தவழ்ந்து விளையாடுதல் 258
- தொட்டிலில் தூங்குதல் 233
- நாலு வயசில் நன்றாக நடத்தல் 326
- பசியால் அழுதல் 325
- பால் குடிமறத்தல் 326
- மிட்டாய் வாங்கித் தின்னுதல் 260
- மூன்று வயசில் முகம் பார்த்துச் சிரித்தல் 326
குழந்தையில் அறுத்தல் 277
குழந்தையை இரவில் காவல் காத்தல் 250
- கொஞ்சி முத்தமிடுதல் 294
- தாலாட்டுதல் 237
குழி வெட்டுதல் 162
குளத்தில் குளித்தல் 330
குளவி கொட்டுதல் 69
குற்றாலத்தில் நீராடுதல் 253
குறச்சாதி சொல் தவறாமை 296
குறும்பு செய்தல் 203
குஸ்தி போடுபவர் தொடக்கத்தில் தொடையில் அடித்தல் 46
கூட்டாஞ்சோறு ஆக்குதல் 49
கூடத்தைக் கட்டிக்குயில் எழுதுதல் 281
கூடாரம் கட்டுதல் 11
கூடுவிட்டுக் கூடு பாய்தல் 49
கூடையில் பழமெடுத்தல் 169
கூந்தலை விரித்துப் போடுதல் 187
கூப்பாடு போட்டழுதல் 199
கூலிக்கு உழுதல் 26
- கல் உடைத்தல் 162
- பேர் கொடுத்தல் 105
கூழ்காய்ச்சி மூடிவைத்தல் 25
கூழ் குடித்துவிட்டு வேலைக்குப் போதல் 168
கேட்டில் காசு கொடுத்தல் 21
கேட்டுவாய் கேட்டு அறிதல் 286
கை அலைத்துக் கூப்பிடுதல் 184, 201
கை எடுத்த பேருக்குக் கைநிறையப் பணம் கொடுத்தல் 181
கை எடுத்துக் கும்பிடுதல் 24
கை கட்டிக் கையெடுத்தல் 170
கைகால் சுத்தம் செய்துகொண்டு கடவுளைக் கும்பிடுதல் 207
கைகால் சுளுக்குதல் 251
- பதைத்தல் 210
- பிசகுதல் 251
கைகால் வீக்கத்துக்குக் கணையெண் ணெயைக் கொடுத்தல் 233
-------------
கைச்சரசம் பண்ணுதல் 306
கை தூக்குதல் 329
கை நடுங்கக் கால் நடுங்குதல் 170
கை மருந்து கூட்டுதல் 15, 30
கையில் சங்குவளை அணிதல் 10
கையும் காலும் குலையும் உதறுதல் 306
கையை ஊன்றிக் கரணம் போடுதல் 41
- பிடித்துத் தூக்குதல் 305
- பிளந்து கொள்ளல் 159
கையையும் வாயையும் அடக்குதல் 211
கை வீசிப் போதல் 226
கொங்கணியைக் குடைபோலக் கொள்ளுதல் 168
கொசுக் கடித்தல் 220
கொசுவத்தைத் திருப்பி வைத்துக்கட்டுதல் 290
கொஞ்சிக் கேட்டல் 236
கொடி ஏற்றுதல் 341
கொடியை சுற்றிப் பழம் இருத்தல் 168
கொண்டவன் உயிராய் இருத்தல் 205
கொண்டவனுக்கு இரண்டகம் செயயாமை 205
கொண்டையை அறுத்தல் 214
கொய்யாப் பழத்தைக் குருவிகுடைதல் 141, 272
கொழுந்தியாள் மணமகனைப் பரி காசம் பண்ணுதல் 197
கோட்டையில் கொடி பறத்தல் 236
- மணி அடித்தல் 267
கோட்டையைப் பிடித்தல் 341
கோடாரி தெறித்துப் போதல் 121
- வாய் போதல், 121
கோபத்தால் கண் சிவத்தல் 3
கோயிலில் ஆணும் பெண்ணும் ஆடுதல் 223
- ஆணையிட்டுக் கொடுத்தல் 73
- கற்பூரத்தை அணைத்துச் சத்தியம் செய்தல் 72
- சங்கு முழங்குதல் 250
- சத்தம் போட்டுப் பாடுதல் 328
- சின்னம் முழங்குதல் 256
- தாசிகள் ஆடுதல் 223
- தேர் இழுத்தல் 222
- மேளதாளம் முழங்குதல் 223
- வேட்டி போட்டுத் தாண்டி சசத்தியம் செய்தல் 12, 18
- கோழி குப்பையிலே மேய்ந்து வருதல் 254
- கும்பு கும்பா மேய்தல் 103
- பொரித்தல் 316
கோள் குண்டுமணி சொல்லுதல்சங்கிலியில் கட்டி வைத்தல் 179
சட்டி பானை செய்ய மண் எடுத்தல் 268
சட்டி பானையில் சமையல் செய்தல் 49
- பணியாரம் சுடுதல் 123
சட்டினி செய்தல், சட்டைமேல் சட்டை போடுதல் 224
சண்டன் அண்ட மெல்லாம் அடுக்குதல் 316
சத்திரத்திலே படுத்தல் 17
சதி நினைத்துப் பேசுதல் 254
சதிராடுதல் 251
சதையை வகிர்தல் 210
சந்தனத்தேவன் கொழுத்த ஆட்டைத் திருடுதல் 159
- ஊற்றுத் தண்ணீரைக் குடித்தல -கொழுந்து வெற்றிலைப் போடுதல் 156
- சந்தனக் கட்டிலில் படுத்தல் 157
- சம்பாச் சோறு தின்றல் 155
- சரிகை வேட்டி கட்டுதல் 155
- சாப்புத் தண்ணீர் குடித்தல் 157
சிவந்த பெண்ணைக் கட்டுதல் 156
- செம்பகப் பூவை அணிதல் 157
- பட்டாக் கத்தியால் வெட்டுதல் 156
- பட்டுச் சட்டை அணிதல் 155
- மச்சு வீட்டில் இருத்தல் 155
- வாட்சண்டை போடுதல் 158
- வாழையிலையில் சாப்பிடுதல் 157
- வெள்ளி மிஞ்சி போடுதல் 156
- வைர மோதிரம் அணிதல் 158
- ஜட்கா வண்டியில் ஏறுதல் 156
- ஜப்பான் பாயில் படுத்தல் 157
- ஜெயில்கூடத்தில் படித்தல் 158
சந்து சந்தாகக் கிழித்தல் 68
சந்தையிலே நகை வாங்குதல் 109
- பூ வாங்குதல் 108
சந்நிதியில் ஆணையிடுதல், சந்நியாசி வேஷம் போடுதல் 9
சம்இன்ஸ்பெக்டர் பீட்நோட்டில் கையெழுத்துப் போடுதல் 183
சமுத்திரம் பாடுதல் 325
சர்க்கார் சாலையில் மரம் வைத்தல் 35
-----------
சரசக்காரன் சாந்துப் பொட்டு வைத்தல் 160
சரசம் பண்ணுதல் 84
சாகாத வரம் பெறுதல் 91
சாணியால் வீடு மெழுகுதல் 269
சாணி வாருதல் 66
சாந்தோடு கருப்பட்டியும் முட்டையும் கலத்தல் 247
சாமானம் வாங்குதல் 171
சாமை குத்திச் சாறு காய்ச்சுதல் 171
சாய்ந்த கொண்டை போடுதல் 165
சாய்ந்து கணக்கு எழுதுதல் 231
சாயம் காய்ச்சுதல் 20
சாராயத்தால் தொண்டை வலி தீர்தல் 289
சாராயம் படைத்தல் 317
சாலை மரத்தில் தூக்குப் போடுதல் 35
சாலையில் மண் எடுத்துப் போடுதல் 170
சாஷ்டாங்கமாகப் பணிதல் 77, 328
சிங்கக் கொடி நாட்டுதல் 193
சித்திர வேலை செய்தல் 329
சில்லரை மாற்றுதல் 136, 270
சில்வண்டிச் செலவு வாங்கச் சின்னக் கடைக்குப் போதல் 327
சிலுவையைத் தோளில் வைத்தல் 293
சிலையிலே பேர் எழுதுதல் 23
சிவப்புத் தூள் பறத்தல் 127
சிவலோகம் போதல் 279
சிவனாண்டி செங்கல் தருதல் 245, 247
சின்ன ஆற்றைச் சின்ன மரப பாலத்தால் கடத்தல் 239
சீட்டெழுதி விடுதல் 286
சீர்வரிசை வாங்குதல் 228
சீலை மங்காமை 292
சீலையில் சிவப்புக் குறிபோடுதல் 20
சீலை வரிந்து கட்டல்
சுண்ணாம்பு ஜாடைசொல்லுதல் 23
சுப முகூர்த்தத்தில் மாலையிடுதல், சுருக்குப் பையைச் செருகிக் கொள்ளுதல் 226
சுற்றத்தார் மாரடித்தல் 285
சுற்றி நின்று மாரடித்தல் 285
சூலம் பார்த்தல் 143
செட்டியார் கஞ்சா விற்றல் 25
செடிக்கு ஒருபூக்கொடுத்தல் 246
செந்தொட்டி சொறிய வைத்தல் 167
செம்பிலே சிலை எழுதுதல் 3
செருப்படி கொடுத்தல் 64
செல்லம் கொஞ்சுதல் 251
செல்லாத காசையும் செல்வமாக நினைத்து வைத்தல் 206
செவி கொடுத்துக் கேட்டல் 336
சேர்வைக்காரரிடம் சிற்றாளைப்பற்றிப் பேசுதல் 245
சேவகர்கள் இரவில் ரோந்து சுற்றுதல் 184
சைகையிலே பேசுதல் 184
சொல்லழகில் தோற்க வைத்தல் 204
சோட்டடி கொடுத்தல் 329
சோட்டாத் தடியையும் பிச்சுவாவையும் மாறி மாறி வீசுதல் 178
சோறு பொங்குதல் 164
ஞானஸ்நானம் பெறுதல் 324
டாக்டர் ஊசி ஏற்றுதல் 161
- சோதித்தல் 161
டிராம் வண்டி நின்று நின்று போதல் 343
தகப்பன் சொல் தவறாமை 235
தச்சுவேலை செய்தல் 320
தட்டான் நகை செய்தல் 28
தட்டுமுட்டுச் சாமான்களைத் தோலள் மேல் சுமந்து போதல் 162
தண்டனிட்டுப் பணிதல் 296
தண்ணீர் உயிர்எடுத்தல் 241
- உயிர கொடுத்தல் 241
- சண்டைக்குக் காரணமாதல் 240
- நெளி நெளியா ஓடுதல் 238
- மின்னுதல் 240
- மூன்றுபிழை பொறுத்தல் 78, 91
தண்ணீர்க் குடம் தலைமேல் வைத்தல் 264
தண்ணீரைத் தொழுதல் 240
தப்புத் திப்பென்று அடித்தல் 338
தலயாத்திரை செய்தல் 253
தலை எழுத்தை ஆராலும் அறிய முடியாது 279
-------------
தலை குனிந்து நடத்தல் 41
- சவரம் பண்ணித் தலைப்பாகை வைத்தல் 225
- சாய்ந்து படுத்தல் 278
- சீவித் தாழம்பூ வைத்தல் 279
- நடுங்கக் குலை நடுங்குதல் 170
- பார்த்தல் 22
தலைமேல் கையை வைத்து ஆசீர்வாதம் பண்ணுதல் 255
தலையைச் சுற்றிப் பணம் எறிதல் 293
தலைவலியினால் கண் சிவத்தல் 15
தவம் செய்து குழந்தையைப் பெறுதல் 81
தவமுனி காலில் விழுதல் 255
தழுவி முத்தமிடுதல் 301
தற்குறி கீறல் போடுதல் 344
தாங்கித் தாங்கி நடத்தல் 250
தாதி கால் கழுவுதல் 48
- மேல் தேய்த்தல், 48
தாய் குழந்தையை மடியில் வைததல் 325
தாய் சொல்லைத் தட்டாமை 235
தாய் தகப்பன் இல்லாதவருக்குத் தர்மம் கொடுத்தல் 51
தாய்பிள்ளை அழுது வருதல் 186
தாய்போலப் பாதுகாத்தல் 102
தார்ரோட்டில் தண்ணீர் நில்லாமை 343
தாலிக்கொடி செய்தல் 279
தாலியைப் பறி கொடுத்தல் 122
- விடியற்காலம் கழற்றுதல் 284
தாழைமுள் குத்துதல் 283
தாளித்த சட்டியை வழித்துநக்குதல் 293
தாறுமாறாகப் பேசுதல் 297
திகைத்துப்போய் நிற்றல் 337
திருநீறும் பன்னீரும் தெளித்தல் 255
தில்லைக் காளி பிள்ளை வரம் தருதல் 312
தினை கதிரைக் கொய்தல் 307
தினை கதிர் வாங்கி மணிபிடித்தல் 295
தினைமா திரித்தல் 307
தினை மாவும் தேனும் உண்ணுதல் 295
தினை மாவைத் திரித்துப் பிள்ளையார்க்குக் கொடுத்தல் 253
தினைவயல் காத்தல் 295
தினை விதைக்க நிலம் பார்த்தல் 295
தீச்சட்டி எடுத்தல் 315
தீர்த்தமாடல் 253
தீர்த்தயாத்திரை செய்தல் 253
தீனி தின்னுதல் 210
துப்பாக்கியால் வேட்டை ஆடுதல் 342
துரை உதை கொடுத்தல் 163
- கங்காணிமாருக்குக் காசு கொடுத்தல் 170
- கங்காணிமாரைக் கைக்குள்ளே போட்டுக் கொள்ளுதல் 163
- கண்டகண்ட பெண்ணைக்கையைப் பிடித்து இழுத்தல் 163
- கண்ணைச் சிமிட்டுதல் 163
- கம்பளி கொடுத்தல் 170
- காசை இறைத்தல் 163
- காய்ச்சல்காரருக்குக்கொய்னாத் தருதல் 170
- கால் சட்டைப் போட்டுக் கையை உள்ளேவிடுதல 163
- கின்னாரம்வாசித்தல் 39
- குதிரைமேல் ஏறி வருதல் 170
- கையலைத்துக் கூப்பிடுதல் 170
- கையைப்பிடித்துக்குலுக்குதல் 130
- சம்பளம் தருதல் 39
- சாராயம்குடித்தல் 131
சின்னப் பெண்ணைக் கண்டு சேட்டை பண்ணுதல் 163
- சுடுதல் 31
- சுருட்டுக் குடித்தல் 131
- தேக்கிலையில் தீனி தின்னுதல் 291
- நோயாளிகளுக்குச் சீமைச்சாராயம் தருதல் 170
- பழங்களைக் கொடுத்தல் 131
புகையிலைப் பொடி குடித்தல் 130
துரைக்குத் தீனி தயார் செய்தல் 129
- தேமேசை போடுதல் 128
வெந்நீர் தயார் செய்தல் 128
தூணிலே கட்டிப் போடுதல் 213
தூரியில் உறங்குதல் 232
தெள்ளுப் பூச்சி கடித்தல் 210
தென்னம்பிள்ளைக்குக்களை யெடுத்தல் 243
- தினந்தோறும் தண்ணீர் ஊற்றுதல் 243
தேங்காயைக் கம்மால் எறிதல் 330
தேச வரி கொடுத்தல் 382
தேம்பித் தேம்பி அழுதல் 211
தேயிலைக் கொழுந்து எடுத்தல் 105
---------------
தேயிலை பறிப்பவள் கம்பளி பெறுதல் 106
- மகாராசா காசு பெறுதல் 107
- வழிச் செலவு பெறுதல் 106
ஒன்று வாங்குதல் 105
தேயிலை பறிப்பவளுக்கு அரிசிகிடைத்தல் 105
- சீலை இனாம் கிடைத்தல் 106
தேனும் பாலும் அருந்துதல் 303
தேனும் மாவும் பிசைதல் 37
தைலம் தேய்த்தல் 252
தொங்கு கொண்டை போடுதல் 165
தொட்டிலில் பூவிரித்தல் 220
தொடை வலிக்கு வெந்நீர் ஊற்றுதல் 289
தொப்பை வாடுதல் 282
தொதுவர் ஆடையின்றி நிற்றல் 337
தொழில் செய்வார் பாட்டுப்பாடுதல் 247
தொழிலாளர்களுக்குக் காபி கொடுத்தல் 247
தோட்டத்துக் கணக்குப் பிள்ளைகளையாள் கொடுத்தல் 168
தோட்டத்துக்கு நாயக்கன்மாரைக் காவல் வைத்தல் 244
தோற்றுப் போனவன் ஓடுதல் 47
நகை செய்யத் தட்டானிடம் பொனனைக் கொடுத்தல் 28்
நங்கு பண்ணுதல் 213
நண்டு வங்குமண் எடுத்து நாகபடம ்உண்டு பண்ணுதல் 166
நந்தவனத்தில் சூதாடுதல் 248
- பந்தாடுதல் 249
நம்பி மோசம் போதல் 322
நரி ஊளையிடுதல் 168
- வழி மறித்தல் 168
நல்லதனம் பண்ணிப் பணம் தட்டுதல் 292
நல்ல நாள் பார்த்து முகூர்த்தம் வைத்தல் 118
நாக்கை அறுத்தல் 61
நாகரிகக்காரர் ஆற்றில் போட் விடுதல் 239
நாட்டியக் குதிரைபோல் ஆடுதல் 214
நாடு இரண்டாதல் 286
நாதியற்ற பிள்ளைகளை ஆதரித்தல் 344
நாய் சோற்றை இழுத்தல் 27
நாயைப்போல ஊளையிடுதல் 81
- குலைத்தல், 213-திரிதல் 73
- வாரத்துக்கு ரூபாய் நாரை மீனைக் கொத்துதல் 240
நாள் நட்சத்திரம் பார்த்து அஸ்தி வாரம் போடுதல் 247
நாற்று நடுதல் 99, 166
நாற்றைக் குவித்து வைத்தல் 227
நான்று கொண்டு சாதல் 13
நிலம் விளைய நெய் விளக்கு ஏற்றுதல் 253
நிலா வெளிச்சத்தில் காற்றோட்டமாகப் படுத்தல் 107
நெஞ்சுச் சளிபிடித்தல் 232
நெய்விளக்கு ஏற்றி வைத்தல் 253
நெருங்கி நின்று பேசுதல் 202
நெல் கொடுத்துக் கடலை அவல் வாங்குதல் 138
- பண்டங்களை வாங்குதல் 138
நெல்லும் புல்லும் அறுத்துக் கட்டுக் கட்டுதல் 122
நெல் வண்டியில் வருதல் 154
- விளைந்து சாய்தல் 292
நெற்றியில் சாந்துப் பொட்டு வைத்தல் 166
நெற்றி வேர்வை நிலத்தில் விழுதல் 145
நேர்த்திக்கடன் செலுத்துதல் 233
பக்குவமாகப் பிழைத்தல் 213
பச்சைக் கிளியும் வெட்டுக்கிளியும் கதிரைத் தின்னுதல் பச்சைப்பிள்ளை பாலுக்கு அழுதல் 168
பசிக்களை ஆறுதல் 303
பசியினால் காது அடைத்தல் 8
பசுமாடு புல் தின்னுதல் 225
பசு வாங்கி விடுதல் 254
பஞ்சத்தில் எங்கும் பிணம் கிடத்தல் 335
- கஞ்சித்தொட்டி போடுதல் 336
- கஞ்சி யில்லாமல் மக்கள் மாளுதல் 336
- தயிர் கிடைக்காமை 335
- தாகத்தால் மக்கள் இறத்தல் 336
- தாய் வேறு பிள்ளை வேறு போதல் 335
மாடுகள் பட்டினி கிடத்தல் 335
பஞ்சம் பிழைக்க ரங்கூன் போதல் 159, 163
பஞ்சைக் கொட்டுதல் 302
--------------
பட்சபாதம் இல்லாமல் ஆகாரம் பகிர்ந்து கொடுத்தல் 207
பட்டபாட்டை விட்டுச் சொல்லுதல் 163
பட்ட மட்டையைப் பறித்தல் 243
பட்டாளம் கூடாரத்தில் இறங்குதல் 293
பண்டிகை கொண்டாடும்போது செம்மறிக் குட்டியைப் பலிகொடுத்தல் 323
பணத்தால் கொழுப்பு உண்டாதல் 211
பணத்தை இறைத்தல் 181, 246
பத்தாம்மாதம் பாலன பிறத்தல் 321
பந்து விளையாடுதல் 328
பத்து வயசில் பக்தி உருவாதல் 328
பத்து வயசுக்குள் படிப்பெல்லாம் முடித்தல் 252
பதினொரு வயசில் பாதி மனிதனாதல் 328
பயிரிட்டு வேலி கட்டுதல் 295
பயில்வான்கள் பாய்ச்சல் காட்டுதல் 46
பரலோகம் சேர்தல் 278
பருத்தி இலையும் பச்சரிசி மையும் சேர்த்துப் பொட்டு வைத்தல் 166
பல் கிட்டுதல் 302
பல்லக்கு ஏறிய பவனிபோதல் 51
பல்லைத் தட்டுதல் 67, 208
பலிஞ்சடுகுடு அடித்தல் 261
பவுன் வாங்கிக் காப்பு அடித்தல் 277
பழத்தைச் சாக்கிலே போடுதல் 32
பழமை பேசிப் போதல் 179
பழனிமலை போதல் 253
பழி இழுத்துப் போடுதல் 204
பழிவாங்குதல் 76
பள்ளிக்கூடம் போகாமல் பிரம்படி வாங்குதல் 327
பன்றி மேய்த்தல் 192
பன்னிரண்டு வயசில், பருவமாதல் 252
- வாழ்க்கைப்படுதல் 252
பஜார் ரோட்டில் ஒட்டுப்பீடி பொறுக்குதல் 269
பாக்குத் துவர்த்தல் 27
பாக்குப்பட்டையில் சோறாக்குதல் 291
பாக்குமுற்றித் தோப்பாதல் 280
பாக்கு வைத்தல், பாசாங்கு பண்ணுதல் 214
பாட்டி பால் ஊற்றுதல் 219
பாட்டுக்கு எதிர்பாட்டு பாடுதல் 9
பாட்டுப் பாடி நாற்று நடுதல் 146
பாத்தி கட்டி நாற்று நடுதல் 227
பாதக்குறடு போட்டுக்கொள்ளுதல் 224
பாம்பை அடித்து வழியில் போடுதல் 249
பால்துணி கசக்குதல் 250
பாவநாசம் போதல் 253
பாவைக் கூத்து ஆடுதல் 19
பாறையை வெடிவைத்துப் பிளத்தல் 246
- ஜம்பர் கம்பியால் துளைத்தல் 246
பிச்சை படசமாகக் கொடுத்தல் 207
பிடரியிலே கூடையை மாட்டிக் கொள்ளுதல் 169
பித்தம் தலைக்கு ஏறுதல் 299
பித்துப் பிடித்தவன்போல் ஓடுதல் 305
பிரம்பால் அடிபடுதல் 293
பிரியைக் கட்டி இழுத்தல் 87
பிள்ளை அண்டாச்சோற்றை அள்ளித்தின்னுதல் 253
- கூட்டி வைத்த வீட்டில் குப்பை போடுதல் 253
- கொள்ளி வைத்தல் 253
செத்தால் வெள்ளி தருதல் 163
- துள்ளி விளையாடுதல் 269
நிறைகுடத்தைக் குறைத்து வைத்தல் 253
- மெழுகி வைத்த வீட்டில் விளையாடுதல் 253
பிள்ளைக்காகத் தவத்துக்கு போதல் 289
பிள்ளைக்குப் பேர் வைத்தல் 292
மீசை முளைத்தல் 292
பிள்ளைகள் குஸ்தி போடுதல் 46
நொண்டி அடித்தல் 45
- பட்டம விடுதல் 46
பிள்ளைகளுக்குச் செல்லம் கொடுத்தல் 52
பிள்ளைப் பேற்றுக்காகத் தான தர்மம் செய்தல் 253
- தீர்த்தம் பல ஆடுதல் 253
-------------
பிள்ளை பிறந்தபின் நிந்தனை மாறுதல் 255
பிள்ளை பெற்றவளுக்குக் காயம் கருப்பட்டி கொடுத்தல் 321
- வெந்நீர் ஊற்றுதல் 321
பிள்ளை பெற்றாள் ரூபாய் பெறுதல் 106
- வெள்ளி பெறுதல் 163
பிள்ளையைக் கொஞ்சுதல் 253
பிள்ளை வேண்டுமென்று நேர்த்திக ்கடன் நிறைவேற்றுதல் 253
பிறந்த கோலத்தோடு நிற்றல் 337
புரட்டுக் களத்தில் பேர் கொடுத்தல் 169
புரி முறுக்குதல் 137, 164
புருசனிடம் பேசுதல் 274
புருவத்தில் மையிடுதல் 202, 224
புல்லை அறுத்தல் 12
- அறுத்துப் புரிமுறுக்குதல் 164
புலியைக் குத்திப் புலி வாங்குதல் 291
புலி வேட்டை ஆடுதல் 226
புறங்காலைப் பாலேறுதல் 251
புறாக்கள் கதிரைத் தின்னுதல் 149
புறாவைக் கூப்பிட்டுத் தீனி போடுதல் 38
பூங்கரகம் எடுத்து ஆடுதல் 317
பூச்சி கடித்தல் 220
பூசாரி ஓமென்று உச்சரித்தல் 315
நிலம் விளைய நெய் விளக்கு ஏற்றி வைத்தல் 223
- மழை பெய்யப் பூ இறைத்தல் 223
பூமாதேவியைச் சாட்சி வைத்தல் 136
பூமியில் பல்லாங்குழி ஆடுதல் 280
பூமியை நம்புதல் 282
- பிளத்தல் 85
பூவைப் பறித்துப் பெட்டியில் வைத்தல் 265
பெண்கள் ஏலேலங்கிடிப் பாட்டுப் பாடுதல் 147
- கதிர் அறுத்தல் 137
- கணவனைக் கடவுளென்று பணிதல் 212
- காலையில் எழுந்து வாசலுக்குச் சாணி போடுதல் 205
- காலையில் பாத்திரங்களை விளக்கி வைத்தல் 205
- கொண்டவனை அடித்தல் 289
- சீலையை வரிந்து கட்டிக்கொண்டு சேற்றுக்குள்ளே இறங்குதல் 144
- தலையில் கதிர்க் கட்டும் இடுப்பில் ஒரு கையும் வைத்து நடத்தல் 144
நாற்று நடுதல் 145
- நாற்றுப்பிடுங்கும ்போது நண்டையும் பிடித்தல் 144
- புல் அறுக்கப் போதல் 100
- மாமனார் மாமியாரை மேன்மையாக நடத்துதல் 206
- மைத்துனன்மார் கொழுந்தன்மாருக்கு மரியாதை கொடுத்தல் 207
விறகு ஒடித்து விற்றல் 152
வெள்ளியிலும் செவ்வாயிலும் வீடு முழுதும் மெழுகுதல் 205
பெண்களால் ராசாதி ராசர் நாசமாய்ப் போதல் 185
பெண்களின் நகையைப் பறித்தல் 179
பெண்களைச் சிறையெடுத்தல் 116
- பரிகாசம் செய்தல் 198
பெரிய பேச்சுப் பேசுதல் 306
பெருந்தீனி தின்னுதல் 212
பேயைப் போல் ஆட்டுதல் 215
பேயை விரட்டுதல் 330
பேர் பறத்தல், 214-விளங்குதல் 269
பேறு காலத்துக்குப் போதல் 229
பைகளில் பணத்தை நிரப்புதல் 181
பொடி எடுத்து உறிஞ்சுதல் 200
பொத்திப் பொத்தி வளர்த்தல் 250
பொதுமகள் பணம் பறித்தல் 78
பொய்க்கால் குதிரை ஆடுதல் 107
பொல்லாப்புச் சொல்லுதல் 165
பொழுதோடே வீடு சேர்தல் 85
பொன்மணிபோல் போற்றுதல் 216
போகவிட்டுப் புறஞ் சொல்லுதல் 256
போயன்மார் பாறையைப் பிளத்தல் 246
போலீஸ்காரன் தடிபிடித்து நிற்றல் 242
- பாரா நிற்றல் 183
மகளிர் கம்பங்காட்டைக் காத்தல்களை எடுத்தல் 27
- மண்ணைத் தூக்குதல் 27
மகளிருக்கு இடுப்புச் சிறுத்தல் 24
மங்கள வாக்குக் கொடுத்தல் 330
மஞ்சள் குளித்துக் கொண்டையில் பூ வைத்தல் 207
மஞ்சள் தேய்த்துக் குளித்தல் 51
--------------
மஞ்சள் மிளகாயை அம்மியிலே அரைத்தல் 49
மண்டையிடிக்கு ஏலமும் இஞ்சிச்சாறும் கொடுத்தல் 233
- மருந்து உரைத்துப் போடுதல் 232
மண்டை வகிர்ந்து மல்லிகைப்பூ வைத்தல் 279
மண்ணைக் கவ்வ வைத்தல் 85
மண்ணை நிரவி விடுதல் 165
மணலில் விளையாடுதல் 249
மணற்சோறு ஆக்கி விளையாடுதல் 249
மணப்பெண் பாலும் பழமும் உண்ணுதல் 197
மத்தியான்ன வேளையில், கட்டுச் சோற்றை உண்ணுதல் 139
தோப்புக்கு மதிப்பு உண்டாதல் 243
மதயானை அதம் பண்ணுதல் 167
மந்தி மரத்தில் மறைந்திருத்தல் 167
மந்திரம் உச்சரித்து மாங்கனி தருதல் 255
மந்திரவாள் சுற்றுதல் 226
மயிர் சுருண்டு நீண்டு வளர்தல் 203
மயிரை அறுத்தல் 211
- ஆற்றுதல் 7
- வளைத்து அடித்தல் 67
மரத்தடியில் அயர்ந்து படுத்து உறஙகுதல் 339
மரத்தில் கட்டி அடித்தல் 68
மரத்துக்கு ஒரு பூக் கொடுத்தல் 277
மருக்கொழுந்து கிள்ளுதல் 165
நாற்று நடுதல் 165
மருந்து அரைத்தல் 252
உரைத்துப் போடுதல், கூட்டல் மருமகள் வீட்டுவேலை செய்தல் 209
மலை ஓரம் பிழைத்திருக்கப் போதல் 234
மலைப் பாம்பு மாலையில் மரப்பொந்தில் மறைந்திருத்தல் 167
மலையின்மேல் கோட்டை கட்டுதல் 341
- மாடு மேய்த்தல் 277
மழையில் ஆட்டுக்காரன் கம்பளிக்குள் இருத்தல் 21
- களை எடுத்தல் 108
மழை பெய்து வழுக்குதல் 167
மழை பெய்யப் பூ இறைத்தல் 223
மழையை நம்பி மண் இருத்தல் 215
மனப்பால் குடித்தல் 89
மனம் புண்ணாதல் 302
மா இடித்தல், 213-கொழித்துக் கோலம் இடுதல் 230
மாங்காய் இறங்காத சோற்றையும் இறங்கச் செய்தல் 244
- கனிந்து விழுதல் 290
மாங்காயைக் கம்பால் எறிதல் 230
மாட்டின் கொம்பில் பட்டைச் சுற்றுதல் 54
மாட்டுக்குச் சல்லி கட்டுதல் 53
- சலங்கை கட்டுதல் 224
மாட்டைத் தாற்றால் குத்துதல் 23
மாடத்தைக் கட்டி மயில் இரண்டைஎழுதுதல் 281
மாடுகள் கதிரை மிதித்தல் 152
மாடுகளைக் குளிப்பாட்டுதல் 239
மடக்குதல் 225
மாடுகன்று மந்தையில் படுத்து உறங்குதல் 254
மாடு கொம்பாலே குத்திக் கொல்லுதல் 75
- மலடிகைத் தருமமென்று தண்ணீர் குடிக்காமை 254
- வெருண்டு ஓடுதல் 225
மாடு போகும் வழியில் வைக்கோல் போட்டுவைத்தல் 254
மாடு மேய்த்தல் 66, 198
மாதின்மேல் மையல் கொள்ளுதல் 306
மாந்திரிகனைப்போல் மாறுவேஷம் போடுதல் 307
மாமரத்தில் ஊஞ்சல் கட்டுதல் 9
மாமன் வீடு போதல் 228
மார்கழி மாதம் சேசுவின் பிறப்பு 163
மாரியம்மன் அம்மை பூட்டுதல் 315
- ஆயுசுவரம் கொடுத்தல் 314
எல்லையைக் காத்தல் 308
காலன் அணுகாமல் காப்பாற்றுதல் 308
- கொலு விருத்தல் 312
- சிங்கத்தில் ஏறி வருதல் 311
சொர்க்கம் தருதல் 314
- தீராப் பிணி தீர்த்தல் 311
- தேசத்தைக் காத்தல் 312
- நினைத்த இடத்துக்குத் துணையாய் வருதல் 315
வறுமை தீர்த்தல் 315
- வீரரைக் கொல்லுதல் 311
-----------
- வேப்பிலை விபூதி தருதல் 315
மாரியம்மனால் வாந்திபேதி வருதல் 313
மாரியம்மனுக்கு ஆயிரம் கண் இருத்தல் 308, 315
- காணிக்கை தருதல் 308
- பாலும் இளநீரும் அபிஷேகம் செய்தல் 315
- மா விளக்குச் சட்டி எடுத்தல் 314
- வேப்பிலைக் காவடி எடுத்தல் 308
மாரியம்மனை ஆவணி மாசம் கடைசி ஞாயிற்றுக்கிழமையில் தரிசித்தல் 315
- தீச்சட்டிகளைத் தலைமேல் வைத்து வழிபடுதல் 315
மாரியாத்தாள் அருளால் மழை பெயதல் 295
மாலையிடுதல்
மாற்றால் அடித்தல் 67
மானம் கெட்டுப்போதல் 86, 256
மானைக் கயிற்றால் பிடித்துக்கட்டுதல் 219
மானைப் போலத் துள்ளுதல் 178
மிருக வேட்டையாடுதல் 342
மீசையை முறுக்கி விடுதல் 176
- வளர்த்தல் 272
மீன் பிடித்தல் 221
- விற்றல் 221
மீனுக்குத் தூண்டில் போடுதல் 231
முகக்களை மங்குதல் 147
முகத்திலே துப்புதல் 82
- விழித்தல் 339
முட்டியில் ஆணம் காய்ச்சுதல் 231
- கூழ் காய்ச்சுதல் 25
முட்டியோடு முட்டி ஒட்டுதல் 147
முடி எடுத்தல் 233
முடிச்சை முழங்காலில் மோதி அடித்தல் 144
முத்திடித்து மாக் கொழித்தல் 230
முத்துமாரி ஆதிசத்தியாதல் 311
முதுகிலே இழுத்தல் 161
- போடுதல் 269
முப்பதில் முழு மனிதனாதல் 324
முழங்கால் தண்ணீரில் முங்கிக் குளித்தல் 48
முறைப்புப் பண்ணுதல் முன்றானையால் முகம் துடைத்தல் 38
மூங்கில் வெட்டி, கூடாரம் போடுதல் 230
- சாளை இறக்குதல் 125
மூஞ்சி வீங்கிப் போதல் 67
மூட்டைப் பூச்சி கடித்தல் 220
மூட்டை முடிச்சுக் கட்டுதல் 71
மூலையிலே உட்கார்ந்து முக்காட்டைப் போட்டுக் கொள்ளுதல் 213
மூலை வருவுதல் 160
மெத்தையில் படித்தல் 278
மேட்டுமேல் மண் எடுத்தல் 12
மேஸ்திரி கணக்குக் குறைந்தால் அடித்தல் 162
மொச்சைக் கொட்டை கொரித்தல் ரப்பர் தோட்டத்துக்கு ஆள் போதல் 167
ரப்பர் பால் எடுக்கச் சாலும் கோலும் கொண்டு போதல் 162
ராச்சியங்களைப் பிடித்தல் 341
ராசா மகள் குளிக்கக் கட்டிடம் கட்டுதல் 241
ராசா மகள் வெண்சாமரை வீசுதல் 241
ராமேசுவரம் போதல் 253
ரெங்கூனுக்கு ஓடிப்போதல் 18, 71
ரோட்டில், அயர்ந்து தூங்குதல் 161
- சண்டை போடுதல் 203
வட்டப் பொட்டு வைத்தல் 165
வண்டிக் காளைக்குச் சூடு போடுதல் 254
வண்ணான் கல்லில் அடித்துக் கசக்குதல் 29
வம்பிலே தாலி கட்டுதல் 23
வம்புக்குச் சண்டை வளர்த்தல் 302
வயசிலே அறுத்தல் 277
வயிற்று வலிக்கு வெற்றிலையும் உப்பும் தின்னுதல் 233
வயிறு ஒட்டிப் போதல் 335
வருணித்துப் பேசுதல் 332
வருஷ வேலை செய்து கை நிறையக் லி வாங்குதல் 105
வலப்பக்கம் சுற்றுதல் 315
வலம்புரி இடம்புரி சுற்றிவருதல் 255
வழிமறித்துப் பேசுதல் 202
வழியில் போகிறவளைக் கூப்பிட்டுப் பேசுதல் 204
--------
வழியைப் பார்த்துப் பிழைத்தல் 67
வற்புறுத்திச் சொல்லுதல் 331
வாங்கிக் குடித்துப் பிழைத்தல் 67
வாசல் கதவு முதல் வாகனம் வரையில் செய்தல் 329
வாணவேடிக்கை காட்டுதல் 247
வாணாளை வீணாக்குதல் 60
வாய் எச்சில் ஒழுகுதல் 302
வாய்க்கரிசி போடுதல் 280
வாய்ச்சாலம் பண்ணுதல் 75
வாயாடுதல் 213
வார்த்தைக் கடன் வைத்தல் 165
வாழாத பெண்களுக்கு மை, பொட்டு, மஞ்சள் குளிப்பு இல்லாமை 38
வாழைப்பழத்தைத் தோல் உரித்துத் தொண்டைக்குள் அடைத்தல், வாழையிலையில் பொங்கல் வைத்தல் 289
வானத்தை நம்புதல் 282
வானமும் பூமியும் பார்த்து நிற்றல் 298
வியாழக்கிழமையில் வெற்றிலை மடித்துக் கொடுத்தல் 216
விரட்டி விரட்டி அடித்தல் 179
வில்லில் கொட்டைகளை வைத்து அடித்தல் 388
வில்லும் ஈட்டியும் கொண்டு வேடடைக்குப் போதல் 226
விலங்கு போடுதல் 235
விழிக்கு மை எழுதுதல் 7
வீட்டுக்கு மூலைக்கல் அடித்தல் 160
வீடு மெழுகுதல் 205
வீணைக்குச் சுருதி ஏற்றுதல் 229
வீறாப்புப் பேசுதல் 203
வெட்டி வேலை செய்தல் 272
வெயில் அடிக்கும் நேரத்தில் மீன் வெளிவருதல் 240
வெயிலில் வேதல் 171
வெலவெலத்துப் போதல் 306
வெள்ளம் இருகரையும் புரண்டு ஓடுதல் 241
வெள்ளாடு வேலிப் பக்கம் மேய்தல் 255
வெள்ளிக்கிழமை குளித்தல் 216
- விளக்கு ஏற்றுதல் 229
வெள்ளிச்சுங்கம் கட்டி வீசுதல் 290
வெள்ளி விடிந்து விடியற்காலம் ஆகுதல் 165
வெள்ளெழுத்து மாறி நல்லெழுத்து வருதல் 344
வெற்றிலை மடித்துக் கொடுத்தல் 187
வேங்கைப் புலி விரட்டுதல் 167
வேட்டைக்காரன் காயிதம் போடுதல் 290
வேட்டி போட்டுத் தாண்டுதல் வேடர்கள் காடு செய்தல 295
வேடிக்கை காட்டுதல் வேப்பம்பூ விடியற்காலையில் மலர்தல் 166
வேப்பிலைக் காவடி எடுத்தல் வேலி கட்டுதல் 244
வேலைக்காரருக்கு வேட்டி வழங்குதல் 248
வேலைச் சமயத்தில் வேசியுடன் பேசுதல் 166
வைத்தெடுத்து வாரிக் கொள்ளுதல் 260
ஜம்புலிங்கம் அயல் பெண்ணிடம் மோசம் போதல் 177
- இங்கிலீஷ் பேசுதல் 176
- இன்ஸ்பெக்டர் உடையைப் போட்டுக் கொள்ளுதல் 183
- ஏழைகளுக்கு உதவி செய்தல் 180
- ஏழைப் பெண்களுக்கு நகைபூட்டுதல் 180
குதிரைமேல் ஏறி வருதல் 183
பணக்காரரிடம் கொள்ளையடித்தல் 179
- மலையாளமும் தமிழும் பேசுதல் 176
ஜாடைப் பேச்சுப் பேசுதல் 202
ஜாடையாலே பார்த்தல் 40
ஜோட்டியில் மாட்டல் வைத்தல் 202
ஜோட்டியில் மாட்டல் வைத்தல் 202
-------
10. கடவுளர்
தமிழ்நாட்டில் தெய்வம் பல பல உருவங்களில் கோயில் கொண்டிருக்கிறது. கிராம மக்கள் வணங்கும் கடவுளர் பலர்.
---------------
-----------
11. பழம் பெயர்கள்
புராணங்களிலும் காவியங்களிலும் வரும் பாத்திரங்களில் பலருடைய பெயர்கள் தமிழ்நாட்டின் மூலை முடுக்குகளிலும் வழங்குகின்றன. அப்படியே வரலாற்றில் வரும் சிலருடைய பேர்களும் கிராம மக்களுக்கும் தெரிந்தவைகளாக உள்ளன.
-------------
1. இவர்கள் வரலாற்றில் வருகிறவர்கள். .
----------
12. ஆண் பெண் பெயர்கள்
தமிழ்நாட்டில் மக்களுக்குத் தெய்வங்களின் பெயர்களையே பெரும்பாலும் வைப்பார்கள். சிறுபான்மை வேறு பெயர்களும் வைப்பதுண்டு. பெயர் வைப்பதைப் பெரிய விழாவாகக் கொண்டாடுவோர் உண்டு. பெயர் வைக்கும் உரிமை சிலருக்கே உண்டென்ற வரையறை சில வகுப்பில் இருக்கிறது.
-----------------
13. ஊர்களும் இடங்களும்
இப்புத்தகத்தில் பல ஊர்களின் பெயர்கள் அங்கங்கே வந்துள்ளன; மலைகள், காடுகள் சொல்லப் பெறுகின்றன. பெரும்பாலும் தமிழ்நாட்டில் உள்ளனவே இவை; சிற்றூரும் பேரூருமாக இருப்பவை.
-----------
[1]. தமிழ்நாட்டில் இல்லாதவை.
------------
இனிச் சொல் உலக வழக்காறுகளைப் பார்ப்போம். அருஞ்சொற்கள், ஆங்கிலச் சொற்கள், பிறமொழிச் சொற்கள் ஆகியவை இப் பாடல்களில் அங்கங்கே வந்துள்ளன.
---------
14. அருஞ்சொற்கள்
இலக்கியங்களில் காணப் பெறாத பல சொற்களை நாடோடிப் பாடல்களிலே காணுகிறோம்.
---------------
15. ஆங்கிலச் சொற்கள்
ஆங்கில அரசாட்சி இந்த நாட்டுக்கு வந்தது முதல் ஆங்கில மொழியும் இங்கே வந்துவிட்டது. மேல் நாட்டிலிருந்து வந்த பண்டங்களுக்குரிய ஆங்கிலப் பெயர்கள் தமிழ்ப் பெயர்களைப் போலவே இணைந்துவிட்டன. வேறு ஆங்கிலச் சொற்களும் பேச்சிலும் நாடோடிப் பாடல்களிலும் புகுந்துகொண்டன.
----------
[1]. இவை உருவு திரிந்தவை.
----------
16. பிறமொழிச் சொற்கள்
---------------
17. இணைந்து வரும் சொற்கள்
சில வகையான சொற்கள் இரண்டிரண்டாகச் சேர்ந்து வருவதைப் பேச்சு வழக்கிலே பார்க்கிறோம். அப்படி வரும் இரட்டைகளில் (1) அக்காள் தங்கச்சி, அடிதடி என்பவைபோல இரண்டு சொற்களுக்கும் வெவ்வேறு பொருள் இருப்பன ஒருவகை. (2) கண்டதுண்டம் தப்புத்தவறு என்பனபோல ஒரே பொருளில் வருவன
ஒருவகை. (3)ஆசாரம் பாசாரம், கிழடு கட்டை என்பன போல முதல் சொல்லுக்கு மாத்திரம் பொருள் இருப்பன ஒருவகை. (4) அக்கம் பக்கம், எக்குத் தப்பு, கன்னங் கறேல் என்பனபோல இரண்டாவது சொல்லுக்கு மட்டும் பொருள் இருப்பன ஒருவகை.
-------------
18. ஒருவகை வழக்கு
எந்த வார்த்தை சொன்னாலும் அதோடு கிகரத்தில் தொடங்கும் பொருளற்ற சொல் ஒன்றையும் சேர்த்துச் சொல்லும் ஒருவகை வழக்கு இந்நாட்டில் வழங்குகிறது. அது நாடோடிப் பாடல்களிலும் ஏறியிருக்கிறது.
------------
19. குறிப்புத் தொடர்
ஒலியையும் நிறத்தையும் வேகத்தையும் பிறவற்றையும் குறிக்கும் சில தொடர்கள் பலகாலமாக வழங்கி வருகின்றன. கம கம என்று சொன்னாலே மணத்தைப் பற்றிய பேச்சு வருகிறது என்று தெரிந்துவிடும்.
---------
[1]. இவற்றிலிருந்து வினைச் சொற்கள் பிறப்பதுண்டு; உ-ம். கடகடத்தல.
-----------
20. முன்னிலைகள்
நீதி நூல்களில் புலவர்கள் தாம் கூறும் நீதிகளை யாரேனும் பெண்ணையோ ஆடவனையோ முன்னிலைப்படுத்திச் சொல்லுதல் ஒரு வழக்கம். அவற்றை முறையே மகடூஉ முன்னிலை, ஆடூஉ முன்னிலை என்பார்கள். நாடோடிப் பாடல்களில் அப்படி இருபாலார்களையும் முன்னிலைப்படுத்திப் பேசும் வழக்கம் பெருக வழங்குகிறது. இத் தொகுதியில் வரும் முன்னிலைகளையெல்லாம் கீழே அகராதி வரிசையிற் காணலாம்.
----------------
21. வசவுகள்
வாழ்த்து வகைகளை இலக்கியங்களில் மிகுதியாகக் காணலாம். வையும் இடங்களில் அந்த வசவு குறிப்பாகவும் நாகரிகமாகவும் அமைந்திருக்கும். ஆனால் வாழ்க்கையில் வசவுகள் சொல்லம்புகளாக வீசப்படுகின்றன. வாழ்க்கைநிலை தாழத் தாழ வசவுகள் மிகுதியாகின்றன; இழிந்த தரம் பெறுகின்றன.
பின்னே வரும் வசவுகளில் உவமையாகு பெயராக உள்ளவை சில; இயல்பையே குறித்து வைவன சில; ஒழுக்கக் கேட்டைக் குறிப்பவை சில; உறுப்புக் குறையைக் குறிப்பவை சில; சாதி குறிப்பவை சில; அடையால் இழிவைப் புலப்படுத்துவன சில. ஒரு சொல்லாக உள்ளன சில; பல சொற்களாக உள்ளன சில.
பழங்குடி மக்களின் மொழிகளையும், வழக்குகளையும் ஆராயும் அறிஞர்கள் அவர்களிடையே வழங்கும் வசவுகளிலிருந்து அவர்களுடைய இயல்புகளையும், கொள்கைகளையும், ஒழுக்க முறைகளையும் தெளியலாம் என்பார்கள்.
---------
[1]. மக்கள் அல்லாதவற்றையும் வையும் வசவுகள்
---------
22. குறிப்பு வழக்குகள்
சில வகையான வழக்குகளுக்குச் சொற்களின் பொருளைக்கொண்டு கருத்தை உணர இயலாது. அவற்றினூடே ஒரு குறிப்புப் பொருள் இருக்கும். அத்தகைய வழக்கைப் பழகு தமிழிலேதான் பார்க்கலாம். ‘கம்பி நீட்டினான்’ என்பதில் உள்ள சொல்லின்வழியே பொருள் செய்தால் பொற்கொல்லன் செயலாகத் தோன்றும். அதற்கு ஏமாற்றி ஓடிவிட்டான் என்பது பொருள். இந்தக் குறிப்பு, வழக்கறிந்தவர்களுக்கே தெரியவரும். இவற்றை மரபுத் தொடர்கள் என்றேனும் குறிப்பு வழக்குத் தொடர்கள் என்றேனும் சொல்லலாம்.
------
[1]. இவை பொதுப் பெயர்கள்
------------
23. கிறிஸ்தவர் வழக்கு
------
[1]. இவை பொதுப் பெயர்கள்
------------
----------
24. வழக்கில் சிதைவு - இலக்கணம்
உலக வழக்கில் சிதைந்து வழங்கும் சொற்கள் பல. அவற்றில் சில இலக்கியங்களிலும் வழங்குகின்றன. அவற்றை மரூஉ மொழிகள் என்பார்கள். சொற்களில் நிகழும் சிதைவை ஆராய்வது மிகவும் சுவையான ஆராய்ச்சி. மொழி நூலறிஞர்களுக்கு இந்தச் சிதைவு நெறி பல உண்மைகளை விளக்குகிறது. சொல்லின் உருவம் எப்படியெல்லாம் மாறிவரும் என்பதை இந்தச் சிதைவுகளை வகைப்படுத்திப்பார்த்து உணர்ந்துகொள்ளலாம். கொச்சைத் தமிழ், கொச்சை மொழி என்று நாம் இவற்றை வழங்குகிறோம்.
பகுபதம் பகாப்பதமாகிய ஒருமொழிகள் சிதைவதும், இருமொழித்தொடர் சிதைந்து ஒருமொழிபோல வழங்குவதும், பன்மொழித்தொடர் சிதைந்து ஒரு மொழிபோல வழங்குவதும் பேச்சு வழக்கில் இயல்பாக உள்ளன.
முதல், இடை, கடை என்ற மூன்று இடங்களிலும் தோன்றல் திரிதல் கெடுதல் என்னும் மூன்று வகையான விகாரங்களும் பெற்றுச் சொற்களும் சொற்றொடர்களும் சிதைகின்றன.
ஒரே சொல்லுக்கும், சொற்றொடர்க்கும் வெவ்வேறு விதமாகச் சிதைந்த உருவங்கள் வேறு வேறு இடங்களில் வழங்கும். இந்த வேறுபாடு இடம், வகுப்பு முதலியவற்றிற்கு ஏற்ப அமையும். நின்று என்ற ஒரு சொல்லே வழக்கில் நின்னு என்றும், நிண்ணு என்றும், நிண்டு என்றும், நிந்து என்றும் பலவகையாகச் சிதைந்து வழங்குவதைக் காண்க. அவர்கள் என்ற சொல்லே அவங்க,
-------------
அவுங்க, அவுக, அவாள், அவா என்று பலவாறு சிதைந்து வழங்குகிறது.
இந்தச் சிதைவுகளைப் பேச்சு வழக்கில் பெருகக் காணலாம். நாடோடிப் பாடல்களிலும் மிகுதியாக இவை வழங்குகின்றன. இந்தப் புத்தகத்தில் வரும் சிதைந்தசொற்களைத் தொகுத்து வகைப்படுத்தி, அவற்றினூடே சில பொது இயல்புகளை ஆராய்ந்து பின்னே வரிசையாகக் கொடுத்திருக்கிறேன்.
இத்துறையில் செய்ய வேண்டிய வேலை கடல்போல இருக்கிறது. தமிழ்நாட்டில் வழங்கும் மொழிச்சிதைவுகளை எல்லாம் தொகுத்து ஆராய்ந்தால் அந்தச் சிதைவுகளிலும் ஒரு நெறி இருப்பதை உணரலாம். இந்தப் புத்தகத்தில் சொற் சிதைவு உருவங்கள் யாவும் வந்துள்ளன என்று சொல்வதற்கில்லை. ஆயினும் கிடைப்பவற்றைப் பாகுபடுத்தி ஆராய்ந்திருக்கிறேன்.
சிதைவுச் சொற்களைத் தொகுத்துப் பின்னே அகராதி வரிசையில் கொடுத்திருக்கிறேன்.
-----
1. விகாரத்தின்மேல் விகாரம்.
-----------
25. வழக்கில் சிதைவு - இலக்கியம்
[முதலில் இயல்பான சொற்களும், அவற்றின் பின்பு சிதைந்த உருவங்களும் கொடுக்கப்பட்டுள்ளன. ]
அக்காள் - அக்கா
அகப்பட்டது - அம்புட்டுச்சு
அங்கு - அங்கிட்டு
அசைந்து - அசைஞ்சு
அடக்கடி - அடக்குடி
அடக்குகிறேனடா - அடக்குறேண்டா
அடங்கவில்லை - அடங்கலை
அடா - டா
அடபுடாவென்று - அடாபுடாண்ணு
அடி - டி
அடிப்பவில்லை - அடிக்கலை
அடிக்கிறது - அடிக்குது
அடிக்கிறாயே - அடிக்கிறையே
அடிக்கிறார் - அடிக்கிறாரு
அடித்த அரிவாள் - அடிச்சரிவாள்
அடித்தது - அடிச்சது
அடித்தவன் - அடிச்சவன்
அடித்தார் - அடிச்சார்
அடித்தார்களா - அடிச்சாங்களா
அடித்தால் - அடிச்சால்
அடித்தான் - அடிச்சான்
அடித்து - அடிச்சு
அடித்துக்கொண்டு - அடிச்சிக்கிட்டு
அடிப்பார்கள் - அடிப்பாங்க
அடியடியென்று - அடியடிண்ணு
அடியுங்களடி - அடியுங்கடி
அடுக்கிக்கொண்டு - அடிக்கிக்கிட்டு
அடைந்த - அடைஞ்ச
அண்ணன்மார் - அண்ணன்மாரு
அணைத்திடுவேன் - அணைச்சிடுவேன்
அத்தைமார் - அத்தைமாரு
அதிலே - அதுலே
அப்புகிறது - அப்புது
அப்போது - அப்ப, அப்போ
அப்போதென்றால் - அப்பண்ணா
அம்மட்டு - அம்புட்டு
அமாவாசை - அம்மாவாசி
அமைந்ததே - அமைஞ்சுச்சே
அமைந்துவிட்டது - அமைஞ்சிருச்சு
அயர்ந்து - அசந்து
அயலூர் - அயலூரு
அரண்மனை - அரமனை
அரவணைத்து - அரவணைச்சு
அரிந்து - அரிஞ்சு
அரிந்துவிடுவேன் - அரிஞ்சிடுவேன்
அல்லவடா - அல்லடா
அருண்டு - அரண்டு
அல்லவோ - அல்லோ
அலப்புகிறாயே - அலப்புறியே
அலைகிறது - அலையுது
அலைந்தவர் - அலைஞ்சவர்
அவர்கள் - அவங்க, அவுக, அவுங்க, அவுங்கள்
அவள் - அவ
அழ - அழுக
அழவில்லை - அழுகலை
அழாதே - அழுகாதே, அளுகாதே
அழித்து - அழிச்சு
அழித்துவிட்டது - அழிச்சிடுத்து
அழுகிறாய் - அழுகிறே
அழுதுவிட்டது - அழுதிருச்சு
அறியவில்லை - அறியலை
அறுக்கிறானடி - அறுக்கிறாண்டி
அறுக்க வேண்டுமடா - அறுக்கணும்டா
அறுத்துவிடுவேன் - அறுத்துடுவேன்
அறைத்து - அறைச்சு
அன்றைக்கு - அண்ணைக்கு
அனுப்பிவிடுவார் - அனுப்பிடுவார்
ஆகவில்லை - ஆகலை
ஆகிறது - ஆகுது
ஆட்டிக்கொண்டு - ஆட்டிக்கிட்டு
ஆடம் - ஆதாம்[1]
ஆடவில்லை - ஆடலை
-----------
[1]. இலக்கியத்திலும் வரும் சொற்கள்
-----------
ஆடவேணும்--- ஆடனும்
ஆடுகிறார்கள்--- ஆடுறாங்க
ஆண்--- ஆணு
ஆண்டவர்--- ஆண்டவரு
ஆண் பிள்ளை--- ஆம்பளை
ஆத்தாள்--- ஆத்தா
ஆதரியென்றாள்--- ஆதரின்னாள்
ஆதரிக்க வேண்டுமடி--- ஆதரிக்க ணுண்டி
ஆதரித்து --- ஆதரிச்சு
ஆமாம்--- ஆமா
ஆய்-- -ஆயி
ஆயிற்று--- ஆச்சு
ஆர் --- ஆரு
ஆள் --- ஆளு
ஆற்றில் --- ஆத்தில்
ஆற்றிற்று --- ஆத்துச்சு
ஆற்றுக்கு--- ஆத்துக்கு
ஆற்றுகிறாள் --- ஆத்துறாள்
ஆற்றோரம்--- ஆத்தோரம்
ஆறுகிறது--- ஆறுது
ஆனையென்றால்--- ஆனைண்ணா
இங்கு--- இங்கிட்டு
இடித்து --- இடிச்சு
இடிப்பேனடி --- இடிப்பேண்டி
இப்போது--- இப்போ, இப்ப
இரங்கவில்லை--- இரங்கலை
இரட்டு --- ரெட்டு
இரண்டகம்--- ரெண்டகம்
இரண்டு--- ரெண்டு
இரா --- ரா, ராவு
இருக்கவில்லை--- இருக்கலை
இருக்கிற --- இருக்க
இருக்கிறது--- இருக்கு, இருக்குது
இருக்கிறதென்றால்--- இருக்குதுண்ணால்
இருக்கிறாய்--- இருக்கே
இருக்கிறாயே--- இருக்கிறியே
இருக்கிறார்கள் --- இருக்கிறாங்க
இருக்கிறாள் --- இருக்காள்
இருக்கிறான் --- இருக்கான்
இருக்கிறேன் --- இருக்கேன்
இருக்கிறேனென்று--- இருக்கிறேண்ணு
இருக்கிறோம்--- இருக்கோம்
இருந்தது--- இருந்திச்சு, இருந்துச்சு, இருந்தது
இருந்தார்கள் --- இருந்தாங்கள்
இருந்தீர்கள்--- இருந்தீங்கள்
இருப்பாள்--- இருப்பா
இருப்பாளென்று--- இருப்பாண்ணு
இருபது--- இருவது
இல்லாவிட்டால--- இல்லாட்டி
இல்லையடி--- இல்லைடி
இல்லையென்று--- இல்லேண்ணு
இல்லையென்னுவார்--- இல்லேண்ணு வார்
இல்லையாவென்று--- இல்லையாண்ணு
இவர்கள்--- இவுங்க
இழுத்தது--- இழுத்து
இழுத்துக்கொண்டு--- இழுத்துக்கிட்டு
இழுத்துவிடுவேன்--- இழுத்திடுவேன்
இளிக்கிறானடி--- இளிக்கிறாண்டி
இறக்கினேனடி--- இறக்கினேண்டி
இறங்குகிறது--- இறங்குது
இறங்குகிறார்கள்--- இறங்குறாங்க
இறங்குகையில்--- இறங்கையில்
இறக்குங்கள்--- இறக்குங்க
இறங்குங்களடி--- இறங்குங்கடி
இறைத்து--- இறைச்சு
இன்னம்--- உண்ணம்
இனிக்கிறது--- இனிக்குது
ஈவ்--- ஏவாள்
உங்கள்--- உங்க
உங்களப்பன்--- உங்கப்பன்
உங்களம்மா--- உங்கம்மா
உங்களாத்தாள்--- உங்காத்தாள்
உங்களாயா--- உங்காயா
உச்சரிக்க வேண்டும்--- உச்சரிக்கணும்
உட்காரடி--- உட்காருடி
உட்கார்ந்து--- உக்கார்ந்து, உக்காந்து
உடைக்கிறானடி--- உடைக்கிறாண்டி
உடைத்திட்டால்--- உடைச்சுட்டால்
உடைத்து விட்டேன்--- உடைத்துட்டேன்
உடைத்து விடுவார்--- உடைச்சிடுவார்
உதவாதது--- உதவாது
உதை--- ஒதை
உதையென்று- -- உதைண்ணு
உதைக்கிறாயோ- -- உதைக்கிறையோ
உதைப்பேனடி--- உதைப்பேண்டி
உயர்த்தி--- உசத்தி, ஒசத்தி
உயர்ந்த- -- உசந்த, ஒசந்த
உயர- -- உசக்க
உயிர்--- உசிர்
-----------
உரல்--- உரலு
உராய்ந்தது--- உராஞ்சுது
உரித்து--- உரிச்சு
உருகிற்று--- உருகுச்சு
உலக்கை--- ஒலக்கை
உலுக்குகிறானடி--- உலுக்குறாண்டி
உழாத--- உழுகாத
உறங்குகிறேனென்றாள்--- உறங்கிறேண்ணாள்
உறங்குகையில்--- உறங்கையில்
உறவின் முறையார்--- உறமுறையார்
ஊதுகிறான்--- ஊதுறான்
ஊர்--- ஊரு
ஊர்ந்துகொண்டு--- ஊர்ந்துக்கிட்டு
ஊற்றி--- ஊத்தி
ஊற்று --- ஊத்து
ஊற்றுகையில் --- ஊத்தையில்
ஊன்றி--- ஊணி
ஊன்று --- ஊணு
எங்கள் --- எங்க
எங்கேயென்று --- எங்கேண்ணு
எச்சில் --- எச்சி
எட்டவில்லை --- எட்டலை
எடுக்க வேண்டும்--- எடுக்கணும்
எடுக்கிறது--- எடுக்குது
எடுத்துக்கொண்டு --- எடுத்துக்கிட்டு
எடுப்பார்கள்--- எடுப்பாங்கள்
எதனால்--- எதினால்
எது --- ஏதுஎப்போதும் --- எப்பவும்
எப்போதென்று--- எப்பன்னு
எம்மட்டு--- எம்புட்டு
எரிந்து--- எரிஞ்சு
எல்லார் --- எல்லாரு
எல்லாவற்றுக்கும்--- எல்லாத்துக்கும்
எழுதவில்லை--- எழுதலை
எழுதுகிறார்--- எழுதுறார்
எழுந்திருந்து --- எந்திரிச்சு, எளுந்தி ரிச்சு,
எழுந்திருச்சுஎள் --- எள்ளு
எறிந்து--- எறிஞ்சு
என்கிட்டே--- எங்கிட்டே
என்கிறானடி--- என்கிறாண்டி
என்பாள்--- என்னுவாள்
என்றால்--- இண்ணா, இண்ணால், இன்னா, உண்ணா,
உண்ணால்என்றாள் --- இன்னாள்
என்று--- இண்ணு, இன்னு, உண்ணு, உன்னு, எண்ணு,
என்னுஎன்னவடி--- என்னாங்கடி
என்னவும்--- என்னமும்
என்னவென்றால்--- என்னான்னா
என்னவோ--- என்னமோ
ஏசினார்கள்--- ஏசினாங்க
ஏசுகிறதால்--- ஏசுகுறதால்
ஏடன்--- ஏதேன்
ஏமாற்றிக்கொண்டு--- ஏமாற்றிக்கிட்டு
ஏய்த்து--- ஏய்ச்சு
ஏய்த்துப் போட்டேன்--- ஏச்சுப் புட்டேன்
ஏற்ற--- ஏத்த
ஏற்றவள்--- ஏத்தவள்
ஏற்றாற்போல--- ஏத்தாற்போல்
ஏற்று--- ஏத்து
ஏற்றுகையில்--- ஏற்றையில்
ஏற்றும்--- ஏத்தும்
ஏறிக்கொண்டு--- ஏறிக்கிட்டு
ஏறினாள்--- ஏறினா
ஏறுகிறதென்பார்--- ஏறுதுண்ணுவார்
ஏறுகையில்--- ஏறையில்
ஏறுங்களடி--- ஏறையில்
ஏறுங்களடி--- ஏறுங்கடி
ஏனடா--- ஏண்டா
ஏனடி--- ஏண்டி
ஐந்து--- அஞ்சு
ஒடித்துக் கொண்டேன்--- ஒடிச்சுக்கிட்டேன்
ஒடிந்துவிட்ட தென்று--- ஒடிஞ்சிச் சின்னு
ஒடித்து விடுவேன்--- ஒடிச்சிடுவேன்
ஒத்தவர்களை--- ஒத்தவங்களை
ஒழிந்தீர்களா--- ஒழிஞ்சீங்களா
ஒளியாதேயடி--- ஒளியாதேடி
ஒற்றை--- ஒத்தை
ஒற்றைத் தலை--- ஒத்தத் தலை
ஒன்று--- ஒண்ணு, ஒன்னு
ஓடவேண்டும்--- ஓடணும்
ஓடிவரவில்லை--- ஓடியாரலை
ஓடிவிட்டான்--- ஓடிட்டான்
ஓடி விடுவேன்--- ஓடிடுவேன்
ஓடிற்று-- ஓடிச்சு
ஓடுகிற-- ஓடுற
ஓடுகிறது-- ஓடுது
ஓடுகிறான்-- ஓடுறான்
ஓடுகிறானடி-- ஓடுறாண்டி
-------------
உரைக்ராஸ்-- குருஸ்
கசக்கிறது-- கசக்குது
கட்ட வேண்டும-- கட்டணும்
கட்ட வேண்டுமடா-- கட்டணுண்டா
கட்ட வேண்டுமென்று--- கட்டணுண்ணு
கட்டிக்கொண்டு--- கட்டிக்கிட்டு
கட்டிக்கொள்ள--- கட்டிக்கிட1
கட்டுகிற --- கட்டுற
கட்டுங்களென்றால்--- கட்டுங்கன்னா
கடக்க வேண்டுமென்றால்--- கடக்கணுன்னா
கடகடவென்று --- கடகடண்ணு
கடல் --- கடலு
கடிக்கிறது--- கடிக்குது
கடித்திடுவேன்--- கடிச்சிடுவேன்
கடித்துக் கொள்கிற --- கடிச்சிக்கிற
கடித்து விட்டதோ--- கடிச்சிருச்சோ
கடித்து விடாமே --- கடிச்சிடாமே
கண்--- கண்ணு
கண்காணி--- கங்காணி
கண்டக்கால் --- கண்டாக்க
கண்டாயா --- கண்டையா
கண்டாயா அடி--- கண்டாயாடி
கண்டுகொண்டான் --- கண்டுக் கிட்டான்
கண்டுவிட்டால் --- கண்டுட்டால்
கண்ணீர் --- கண்ணீரு
கண்ணே யென்றும்- - கண்ணேன்னும்
கண்மணி யென்றும் --- கண்மனின்னும்
கத்தவில்லை --- கத்தலை
கத்திக்கொண்டு --- கத்திக்கிட்டு
கத்துகிறது --- கத்துது
கதறுகையில் --- கதறையில்
கதிர் --- கதிரு
கப்பலென்றால் --- கப்பலுண்ணா
கபிலை--- கமலை
கம்பளி--- கம்பிளி
கம்மல்- - கம்மலு
கருகருவென்று --- கருகருன்னு
கரைத்து --- கரைச்சு
கல் --- கல்லு
கல்லழுத்தி--- கல்லளுத்தி
கலகலவென்று--- கலகலெண்ணு
கலங்கிக் கொண்டிருந்தீர்கள்--- கலங்கிக்கிட்டிருந்தீங்க
கலங்குகிறான்--- கலங்குறான்
கலங்குகிறேனடி--- கலங்குறேண்டி
கலந்தார்களாம்--- கலந்தாங்களாம்
கலந்துகொண்டு--- கலந்துக்கிட்டு
கலந்தேனென்று--- கலந்தேண்ணு
கவனிக்க வேண்டும்--- கவனிக்கணும்
கழலுகிறது--- கழலுது
கழற்றி--- கழட்டி
கழற்றுகிறார்கள்--- கழற்றுறார்கள்
கழற்றுகையில்--- கழற்றையில்
கழிக்கவில்லை--- கழிக்கலை
கழித்தவன்--- கழிச்சவன்
கழுதையே--- கழுதே
கழுவுகிற-- கழுவுற
கள்- கள்ளு
கற்கண்டு-- கல்லுக்கண்டு
கறுத்துவிட்டது- கருத்திருச்சு
கன்று- கண்ணு
கன்றே- கண்ணே
கன்னிமார்- கன்னிமாரு
கனிந்த- கனிஞ்ச
கனைத்துக்கொண்டு- கனைத்துக்கிட்டு
கஷ்கம்- கக்கம்
காக்குமடி---காக்குண்டி
காட்டவேணும்---காட்டணும்
காட்டிக்கொண்டு---காட்டிக்கிட்டு
காட்டினார்---காட்டினாரு
காட்டினேனடி---காட்டினேண்டி
காட்டுகிறார்---காட்டுறார்
காட்டுகிறானடி---காட்டுறாண்டி
காடென்று---காடுண்ணு
காண்பிக்க வேண்டும்---காண்பிக்கணும்
காணவில்லை---காணலை
காணோம்---காணாம்
காணோமென்று---காணாமின்னு
காப்பாற்றுவேன்---காப்பாத்துவேன்
காய்க்கிறது---காய்க்குது
காய்கிறது---காயுது
காய்ச்சி---காச்சி
காய்ந்த---காஞ்ச
கார்---காரு
கார்த்திகை---கார்த்தி
காரைக்கால்---காரைக்காலு
கால்---காலு
---------
1. தென் பாண்டி நாட்டு வழக்கு.
-------------
காலத்தாலே---கார்த்தாலே
காலம்பெற---காலம்பர
கிழமையிலிருந்து---கிழமெருந்து
கிழித்தார்---கிழிச்சார்
கிழித்துப்போட்டேன்---கீச்சுப்புட்டேன்
கிழித்துவிடுவேன்---கிழிச்சிடுவேன்
கிழிந்து---கிழிஞ்சு
கிழிப்பார்களடா---கிழிப்பாங்கடா
கிளியேயென்றும்---கிளியேன்னும்
கின்னரம்---கிண்ணாரம், கின்னாரம்
கிடக்கிறது---கிடக்கு, கிடக்குது, கெடக்குது
கிடுகிடுவென்று- --கிடுகிடுண்ணு
கிடுகிடென்று---கிடுகிடெண்ணு
கிடுகிடுவென்ன---கிடுகிடுங்க
கிடைத்து ---கிடைச்சு
குசுகுசென்று---குசுகுசுண்ணு
குடல்---குடலு
குடிக்கவில்லை- -குடிக்கலை
குடிக்கிறானடி ---குடிக்கிறாண்டி
குடிசை---குடிசு
குடித்த ---குடிச்ச
குடித்தவன் ---குடிச்சவன்
குடித்து ---குடிச்சு
குடித்துக்கொள்ளம்மா ---குடிச்சுக்கம்மா
குடித்துவிட்டு---குடிச்சிட்டு
குடிப்பார்கள்---குடிப்பாங்கள்
குடியுங்கள் ---குடிங்க
குடுகுடுவென்று---குடுகுடுன்னு
குத்தவில்லை ---குத்தலை
குத்திக்கொண்டு---குத்திக்கிட்டு
குத்துகிற ---குத்துற
குத்துகிறது ---குத்துறது
குதித்து ---குதிச்சு
குதித்துக்கொண்டு---குதிச்சுக்கிட்டு
குந்திக்கொண்டு---குந்திக்கிட்டு
கும்பிட்டுவிட்டு---கும்பிட்டுட்டு
கும்பிடவேண்டும்---கும்பிடணும்
கும்பிடுகிறேன்---கும்பிடுறேன்
கும்பிடுமடி ---கும்பிடுண்டி
குயில் ---குயிலு
குரங்கென்று---குரங்குண்ணு
குரை ---குலை
குவித்திட்டாலும்---குமிச்சிட்டாலும்
குழைக்கவில்லை---குழைக்கலை
குளித்து---குளிச்சு
குற்றம்---குத்தம்
குறித்து---குறிச்சு
குறுகிக்கொண்டு---குறுகிக்கிட்டு
குறைந்தது---குறைஞ்சது
குறையவில்லை---குறையலை
குன்றிமணி---குண்டுமணி
குனிந்து---குனிஞ்சு
கூப்பிட்டாயே---கூப்பிட்டையே
கூப்பிட்டுக்கொண்டு---கூப்பிட்டுக்கிட்டு
கூப்பிடுகிறேன்---கூப்பிடுறேன்
கூட்டவில்லை---கூட்டலை
கூட்டிக்கொண்டு---கூட்டிக்கிட்டு
கூட்டுகிறாள்---கூட்டுறாள்
கூடஇருக்கிறது---கூடருக்கு
கூடவில்லை---கூடலை
கூடிக்கொண்டு---கூடிக்கிட்டு
கூவுகிறது---கூவுது
கூவுகிறதென்று---கூவுதுண்ணு
கூன்---கூனு
கெட்டிக்காரர்---கெட்டிக்காரரு
கெடு---கெடுவு
கேட்கட்டுமா---கேக்கட்டுமா
கேட்கவில்லை---கேட்கலை, கேக்கலே
கேட்காவிட்டால்---கேக்காட்டி
கேட்கிறேனடி---கேட்கிறேண்டி
கேட்டாரென்றால்---கேட்டாருண்ணா
கேட்டார்கள்---கேட்டாங்கள்
கேட்டுக்கொள்---கேட்டுக்கோ
கேட்டுவிட்டது---கேட்டுருச்சு
கேள்---கேளு
கேளுங்களம்மா---கேளுங்கம்மா
கொஞ்சவேண்டும்---கொஞ்சணும்
கொஞ்சுகிறதற்கு---கொஞ்சறதுக்கு
கொட்டிவிட்டது---கொட்டிருச்சு
கொட்டுகிறது---கொட்டுது
கொடு---குடு
கொடுக்கவில்லை---கொடுக்கலை
கொடுக்கவேண்டும்---கொடுக்கணும்
கொடுக்கவேண்டுமடி---கொடுக்கணுண்டி
கொடுக்கவேண்டுமென்றால்---கொடுக்கணும்னா
கொடுக்கிறார்கள்---கொடுக்கிறாங்க
கொடுக்கிறானடி---கொடிக்கிறாண்டி
கொடுக்கிறேனடி---கொடுக்கிறேண்டி
கொடுத்தவர்---கொடுத்தவரு
--------------
கொடுத்தார்களே---கொடுத்தாங்களே
கொடுத்திடுங்கள்---கொடுத்திடுங்க
கொடுத்துவிட்டது---குடுத்திடுச்சு
கொடுப்பேனடி---கொடுப்பேண்டி
கொண்டவனென்று---கொண்டவன்னு
கொண்டுவந்த---கொண்டாந்த
கொண்டுவந்தாலும்---கொண்டாந்தாலும்
கொண்டுவர---கொண்டார
கொண்டுவருகிறார்கள்---கொண்டாறாங்க
கொண்டுவருகிறாள்---கொண்டாறாள்
கொண்டுவா---கொண்டா
கொண்டுவாருங்கள்---கொண்டாருங்கள்
கொய்சகம்---கொசுவம்
கொரித்துக்கொள்---கொரிச்சுக்கோ
கொல்லன்மார்---கொல்லன்மாரு
கொள்ளவில்லை---கொள்ளலை
கொன்றுவிடுவேன்---கொன்னுடுவேன்
கோடரி---கோடாலி
கோடானுகோடி---கோடாகோடி
கோணல்---கோண
கோதுகிறான்---கோதுறான்
கோபம்---கோவம்
கோபி---கோவி
கோபித்துக்கொண்டு---கோவிச்சுக்கிட்டு
கோலார்---கோலாரு
சட்டென்று---சட்டுன்னு
சடசடவென்று---சடசடண்ணு
சந்தித்துவிட்டு---சந்திச்சிட்டு
சந்தோஷம்---சந்தோசம்
சந்தோஷமடி---சந்தோசண்டி
சந்யாசி---சந்நாசி
சப்மாஜிஸ்ட்ரேட்---சம்மாஸ்திரிட்
சமயமென்று---சமயம்னு
சமர்த்து---சமத்து
சமிக்ஞை---சயிக்கினை
சமைந்த---சமைஞ்ச
சர்க்கார்---சர்க்காரு, சருக்கார், சலுக்காரு
சரசரவென்று---சரசரன்னு
சரி---செரி
சல சலவென்ன---சலசலங்க
சவட்டுகிறார்---சவட்டுறார்
சறுக்கிற்று---சறுக்கிச்சு
சாடுகிறார்கள்---சாடுறாங்க
சாடுகிறானடி---சாடுறாண்டி
சாண்---சாணு
சாணார்சனம்---சாணாசனம்
சாப்பிடவில்லை---சாப்பிடலை
சாப்பிடுகிற---சாப்பிடுற
சாமானம் என்று---சாமானம்ணு
சாமியார்---சாமியாரு
சாமியென்று---சாமிண்ணு
சாய்கிறது---சாயுது
சாய்ந்து---சாஞ்சு
சாஷ்டாங்கம்---சாஸ்டாங்கம்
சாக்ஷி---சாக்கி
சிட்டான் என்று---சிட்டாண்ணு
சிரிக்கவில்லை---சிரிக்கலை
சிரிக்கிறது---சிரிக்குது
சிரித்து---சிரிச்சு
சிவக்கவில்லை---சிவக்கலை
சிவக்கிறது---சிவக்குது
சிவத்த---செவத்த
சிற்றாடை---சித்தாடை
சிறிது---செறிசு
சின்ன அண்ணன்---சின்னண்ணன்
சிஷ்யர்---சீசர்
சுட்டுவிட்டான்---சுட்டுட்டான்
சுண்டுகிறாள்---சுண்டுறாள்
சுப்பிரமணியன்---சுப்ரமணி
சும்மாவிருக்கிறேன்---சும்மாருக்கேன்
சுரித்த---சுரிச்ச
சுருதி---சுதி
சுருள்---சுருளு
சுவர்---சுவரு
சுற்ற---சுத்த
சுற்றி---சுத்தி
சுற்றுகிறது---சுத்துது
சுற்றுகிறான்---சுத்துறான்
சூக்ஷ்மம்---சூச்சம்
செம்பு---சொம்பு
செய்கிறதற்கு---செய்றதுக்கு
செய்கிறானடி---செய்கிறாண்டி
செய்ததாமடி---செய்ததாண்டி
செய்தாயிற்றா---செஞ்சாச்சா
செய்தா யென்றால்---செஞ்சியின்னா
செய்தாயென்று---செஞ்சேண்ணு
செய்தால்---செஞ்சால்
-------------
செய்தி---சேதி
செய்து---செஞ்சு
செய்துகொண்டு---செஞ்சுக்கிட்டு
செய்துவிடுமா---செஞ்சிடுமா
செய்யவில்லை---செய்யலை
செய்யவேண்டும்---செய்யணும்
செய்யுங்களடி---செய்யுங்கடி
செய்வேனடா---செய்வேண்டா
செருகி---சொருகி
செல்வம்---செல்லம்
செவ்வாய்---செவ்வா
சேர்---சேரு
சேர்க்கிறது---சேர்க்குது
சேர்த்து---சேத்து
சேர்ந்துவிட்டார்---சேர்ந்துட்டார்
சேரவில்லை---சேரலை
சேவகர்---சேவகரு
சொத்துக்காரனடி---சொத்துக்காரண்டி
சொல்---சொல்லு
சொல்கிறது---சொல்றது, சொல்லுறது
சொல்கிறேன்---சொல்றேன்
சொல்லவில்லை---சொல்லலை
சொல்லவேண்டும்---சொல்லணும்
சொல்லாதேயடா---சொல்லாதேடா
சொல்லாதேயடி---சொல்லாதேடி
சொல்லாதேயம்மா---சொல்லாதேம்மா
சொல்லிவிடு---சொல்லிடு
சொல்லுகிறேன்---சொல்லுறேன்
சொல்லுங்கள்---சொல்லுங்க, சொல்லுங்கோ
சொல்லுங்களம்மா---சொல்லுங்கம்மா
சொன்னாயென்றால்---சொன்னியின்னால்
சொன்னாயே---சொன்னையே
சொன்னேனடி---சொன்னேண்டி
சோவென்று---சோண்ணு
சோதிக்கவில்லை---சோதிக்கலை
சோதித்து---சோதிச்சு
சோருகிறது---சோருது
சோற்றை---சோத்தை
டமாரென்று---டமாருண்ணு
தங்கவேண்டுமென்றால்---தங்கணுண்ணா
தங்காதேயடா---தங்காதேடா
தஞ்சாவூர்---தஞ்சாவூரு
தச்சன்மார்---தச்சன்மாரு
தட்டுகிறான்---தட்டுறான்
தட்டுங்களடி---தட்டுங்கடி
தட்டுவேனடி---தட்டுவேண்டி
தடதடவென்று---தடதடண்ணு
தண்ணீர்---தண்ணி
தண்ணீரென்றால்---தண்ணின்னா
தந்திடுங்கள்---தந்திடுங்க
தப்பிக்கொள்ள---தப்பிக்க
தப்பித்து---தப்பிச்சு
தப்புகிற---தப்புற
தயங்குகிறாய்---தயங்குறே
தரிசிப்பேன்---தெரிசிப்பேன்
தருகிறேன்---தாறேன்
தருகிறேனடி---தாரேண்டி
தலையணை---தலைகாணி
தவறாமேதான்---தவறாமெத்தான்
தறிப்பார்களாம்---தறிப்பாங்களாம்
தாண்டிக்கொண்டு---தாண்டிக்கிட்டு
தாய்---தாயி
தாயார்---தாயாரு
தாருங்கள்---தாங்க
தாள்---தாளு
தானடி---தாண்டி
திகைத்து---திகைச்சு
திட்டாதேயடா---திட்டாதேடா
திட்டிக்கொண்டு---திட்டிக்கிட்டு
திடீரென்று---திடீருண்ணு
திணறிக்கொண்டு---திணறிக்கிட்டு
திரித்து---திரிச்சு
திரும்புகையில்---திரும்பையில்
திறக்கிறானடி---திறக்கிறாண்டி
திறப்பு---துறப்பு
தின்றவள்---தின்னவள்
தின்று---தின்னு
தின்றுகொண்டு---தின்னுக்கிட்டு
தின்றுகொள்---தின்னுக்கோ
தின்றுபோட்டு---தின்னுப்பிட்டு
தின்றுவிடு---தின்னுடு
தின்னவில்லை---தின்னலை
தினம்---நிதம்
தீட்டுகையில்---தீட்டையில்
தீய்ந்துவிடும்---தீஞ்சிடும்
தீர்க்க வேண்டும்---தீர்க்கணும்
தீரவில்லை---தீரலை
துப்பாதேயடி---துப்பாதடி
துப்பினார்கள்---துப்பினாங்க
-----------
துப்பென்று---துப்புண்ணு
துரைமார்---தொரைமாரு
துவக்கவில்லை---துவக்கலை
துவர்க்கிறது---துவர்க்குது
துள்ளாதேயடா---துள்ளாதடா
துள்ளுகிற---துள்ளுற
துளைத்துவிட்டது---தொளைச்சுருச்சு
தூக்கவில்லை---தூக்கலை
தூக்குகையில்---தூக்கையில்
தூங்கிக்கொண்டு---தூங்கிக்கிட்டு
தூங்குகிறான்---தூங்குறான்
தூங்குகையில்---தூங்கையில்
தூள்---தூளு
தெரிந்து---தெரிஞ்சு
தெரியவில்லை---தெரியலை
தெரு---தெருவு
தெறித்த---தெறிச்ச
தேங்குழல்---தேங்குழலு
தேம்புகிறாய்---தேம்புறாய்
தேய்த்து---தேச்சு
தேர்---தேரு
தேவடியாள்---தேவடியா
தேன்---தேனு
தைக்கவேண்டுமடி---தைக்கணுண்டி
தொட்டில்---தொட்டி
தொத்தல் பயல்---தொத்தப் பயல்
தொழுதார்கள்---தொழுதாங்க
தோய்த்து---தோய்ச்சு
தோற்று---தோத்து
தோன்றுகிறது---தோணுது
தோஷம்---தோசம்
நஞ்சடாவப்பா---நஞ்சுடாப்பா
நட்டவர்கள்---நட்டவங்க
நடக்க வேண்டும்---நடக்கணும்
நடக்கிறது---நடக்குது
நடத்த வேண்டுமடி---நடத்தணுண்டி
நடத்துகிறாள்---நடத்துறாள்
நடத்துகையில்---நடத்தையில்
நடந்துகொண்டு---நடந்துக்கிட்டு
நடுங்குகிறது---நடுங்குது
நம்---நம்ம
நம்மை---நம்மளை
நன்றாகவில்லை---நல்லால்லை
நன்றாய்---நல்லா
நனையவில்லை---நனையலை
நாங்கள்---நாங்க
நாடார்---நாடாரு
நாடுவார்கள்---நாடுவாங்க
நாத்தனார்---நாத்தனா
நாம்---நம்ம, நம்மள்
நாள்---நாளு
நான்---நானு
நானடி---நாண்டி
நிமிர்ந்துகொண்டு---நிமிந்துக்கிட்டு
நிமிஷம்---நிமிசம்
நிரப்பி---ரொப்பி
நிரம்ப---ரொம்ப
நியாயம்---ஞாயம், நாயம்
நின்றார்களே---நின்னாங்களே
நின்றால்---நிண்ணா
நின்று---நிண்ணு
நின்றுகொண்டு---நின்னுக்கிட்டு
நிற்கவில்லை---நிற்கலை
நிற்காவிட்டாலும்---நிற்காட்டியும்
நிற்கிறது---நிக்குது, நிற்குது
நிற்கிறானடி---நிற்கிறாண்டி
நிற்கிறீர்கள்---நிற்கிறீங்க
நிறைக்கிறது---நிறைக்குது
நினைத்தாயாவடி---நினைச்சியாடி
நினைத்தால்---நினைச்சால்
நினைத்து---நினைச்சு
நினைத்துக்கொண்டிருக்கிறாய்---நினைச்சிக்கிட்டிருக்கிறே
நீங்கள்---நீங்க
நீட்டிவிடுவோம்---நீட்டிடுவோம்
நீத்து---நீச்சு
நெல்---நெல்லு
நெற்றி---நெத்தி
நேர்---நேரு
நேர்த்தி---நேத்தி
நேரமடி---நேரண்டி
நேற்று---நேத்து
நோய்---நோயி
பகட்டுகிறதடி---பகட்டுதடி
பட்டுக்கொண்டாள்---பட்டுக்கிட்டாள்
பட்டுவிட்டது---பட்டுடுத்து
படபடவென்று---படபடண்ணு
படாரென்று- -- படாருண்ணு
படிக்கவில்லை- -- படிக்கலை
படிக்கவேண்டும்- -- படிக்கணும்
படித்தாய்- -- படிச்சை
படியுங்களடி- -- படியுங்கடி
படுக்க வேண்டும்- -- படுக்கணும்
படுக்க வேண்டுமென்றால்- -- படுக்கணுண்ணா
படுத்துகிறாள்- -- படுத்துறா
------------
பண்ணவில்லை- -- பண்ணலை
பண்ணாதேயடி- -- பண்ணாதடி, பண்ணாதேடி
பண்ணிக்கொண்டு- -- பண்ணிக்கிட்டு
பண்ணிவிட்டதே- -- பண்ணிருச்சே
பண்ணுகிறது- -- பண்ணுது
பண்ணுகிறான்- -- பண்ணுறான்
பண்ணுவார்கள்- -- பண்ணுவாங்க
பணிகிறேனடி- -- பணிகிறேண்டி
பதித்த- -- பதிச்ச
பதிந்தது- -- பதிஞ்சுச்சு
பதைக்கிறது- -- பதைக்குது
பம்பரம்- -- பொம்பரம்
பம்மினார்- -- பம்மினாரு
பயந்துகொண்டாய்- -- பயந்துகிட்டே
பயமடி- -- பயம்டி
பயிர்- -- பயிரு
பரபரவென்று- -- பரபரண்ணு
பரிஹாசம்- -- பரியாசம்
பல்- -- பல்லு
பலிக்கவில்லை- -- பலிக்கல்லே, பலிக்கலை
பலேயென்று- -- பலேண்ணு
பளபளவென்று- -- பளபளங்க
பற்றவில்லை யென்று- -- பத்தலேண்ணு
பற்றுகிறது- -- பத்துது
பறக்கிறது- -- பறக்குது
பறக்கிறார்கள்- -- பறக்கிறாங்க
பறந்தாயென்றால்- -- பறந்தீண்ணா
பறந்துகொண்டு- -- பறந்துக்கிட்டு
பறந்துவிட்டான்- -- பறந்துட்டான்
பறைச்சி- -- பறச்சி
பன்னிரண்டு- -- பன்னெண்டு
பஸ்மம்- -- பஸ்பம்
பாடிற்றாமடி- -- பாடிச்சாண்டி
பாடுகிறார்கள்- -- பாடுறாங்க
பாடுகிறேனடி- -- பாடுறேண்டி
பாடுகையில்- -- பாடையில்
பாய்- -- பாயி
பாய்கிறது- -- பாயுது
பாயசம்- -- பாயாசம்
பார்- -- பாரு
பார்க்கட்டுமா- -- பார்க்கட்டா
பார்க்கவில்லை- -- பார்க்கலை
பார்க்க வேண்டும்- -- பார்க்கணும்
பார்க்க வேண்டுமடி- -- பார்க்கணுண்டி
பார்க்கிறதற்கு- -- பார்க்கறதுக்கு
பார்க்கிறது - -- பாக்றது, பார்க்குது
பார்க்கிறாய்- -- பார்க்கிறே
பார்க்கிறார்- -- பார்க்கிறாரு
பார்க்கிறார்கள்- -- பாக்குறாங்க
பார்க்கிறானடி- -- பார்க்கிறாண்டி
பார்க்கிறேனடி- -- பார்க்கிறேண்டி
பார்க்கையில்- -- பாக்கையில்
பார்த்தவர்கள்- -- பார்த்தவங்க
பார்த்தாயா- -- பார்த்தையா
பார்த்தாள்- -- பாத்தாள்
பார்த்து- -- பாத்து
பார்த்துக்கொண்டு- -- பார்த்துக்கிட்டு
பார்த்துக்கொள்- -- பார்த்துக்கோ
பார்த்துக்கொள்ளடி- -- பாத்துக்கடி
பார்த்துவிட்டாயே- -- பாத்துட்டையே
பார்த்துவிட்டு- -- பாத்திட்டு
பார்ப்பார்கள்- -- பார்ப்பாங்க
பார்ப்பார்களாம்- -- பார்ப்பாங்களாம்
பார்ப்பான்- -- பாப்பான்
பாரடா- -- பாருடா
பாருங்களடி- -- பாருங்கடி
பாருங்களம்மா- -- பாருங்கம்மா
பால்- -- பாலு
பாஷாணம்- -- பாசாணம்
பாஷை- -- பாசை
பிடரி- -- பொடனி
பிடிக்கலாமடி- -- பிடிக்கலாண்டி
பிடிக்கவில்லை- -- பிடிக்கலை
பிடிக்கிறது- -- பிடிக்குது
பிடிக்கிறார்கள்- -- பிடிக்கறாங்க
பிடித்த- -- பிடிச்ச, புடிச்ச
பிடித்தவள்- -- பிடிச்சவள்
பிடித்துக்கொண்டு- -- பிடிச்சுக்கிட்டு
பிடித்தேன்- -- பிடிச்சேன்
பிடுங்குகிறது- -- பிடுங்குது
பிடுங்குகிறான்- -- புடுங்குறான்
பிண்ணாக்கு- -- புண்ணாக்கு
பிய்த்து- -- பிச்சு
பிரிக்கவில்லை- -- பிரிக்கலை
பிழைத்தது- -- பொழைச்சுது
பிழைத்துக்கொள்- -- பிழைச்சுக்கோ
பிழைத்துக்கொள்ளென்று- -- பிழைச்சுக்கண்ணு
பிழைத்துக் கொள்வாய்- -- பொழைச்சுக்குவே
பிழைப்பு- -- பொழப்பு, பொழைப்பு
பிள்ளை- -- புள்ளே, புள்ளை
பிள்ளையார்- -- புள்ளையார்
-------------
பிளக்கிறது- -- பிளக்குது
பிளந்தார்கள்- -- பொளந்தாங்கள
பிளந்தால்- -- பொளந்தால்
பிறந்தார்கள்- -- பிறந்தாங்கோ
பின்னல்- -- பின்னலு
பின்னாரேயென்று- -- பின்னாரெண்ணு
புகுந்துகொண்டு- -- புகுந்துக்கிட்டு
புகுந்துகொள்- -- புகுந்துக்கோ
புடுபுடென்று- -- புடுபுடுண்ணு
புதிது- -- புதுசு
புதுபுதென்று- -- புதுபுதுன்னு
புரட்டாசி- -- பெரட்டாசி
புரட்டு- -- பெரட்டு
புரண்டு- -- பெரண்டு
புருஷன்- -- புருசன்
புல்- -- பில், பில்லு, புல்லு
புல்லாக்கு- -- பில்லாக்கு
புலம்புகிறது- -- புலம்புறது
புலம்புகிறேன்- -- புலம்புறேன்
புளியேயென்றும்- -- புளியேன்னும்
புளுக்கென்று- -- புளுக்கின்னு
புறப்படவேண்டும்- -- பெறப்படணும்
புறப்படு- -- பெறப்புடு
புறப்படுவான்- -- பெறப்படுவான்
பூ- -- பூவு
பெட்டு- -- பொட்டி
பெட்டை- -- பொட்டை
பெண்- -- பொண்ணு
பெண்கள்- -- பொண்ணுங்க
பெண்சாதி- -- பொண்சாதி
பெண்டாட்டி- -- பொண்டாட்டி
பெண் பிள்ளை- -- பொம்பளை
பெய்கிறது- -- பெய்யுது
பெய்யவில்லை- -- பெய்யலை
பெரிது- -- பெரிசு
பெற்றவனடா- -- பெற்றவண்டா
பெற்று - -- பெத்து
பெற்றேன் - -- பெத்தேன்
பெறவேண்டும் - -- பெறணும்
பேசவில்லை - -- பேசலே, பேசலை
பேசாதீர்கள் - -- பேசாதீங்க
பேசாதேயடி- -- பேசாதடி
பேசாதேயம்மா- -- பேசாதேம்மா
பேசிக்கொண்டார்கள்- -- பேசிக்கிட்டாங்கோ
பேசிக்கொள்- -- பேசிக்கோ
பேசினக்கால் - -- பேசினாக்க
பேசினார்கள் - -- பேசினாங்க
பேசினாள்- -- பேசினா
பேசுகிற- -- பேசுற
பேசுகிறது- -- பேசுது
பேசுகிறாய்- -- பேசுறாய்
பேசுகிறாயே- -- பேசுறையே
பேசுகிறாயோ- -- பேசுறியோ
பேசுகிறேன்- -- பேசுறேன்
பேசுகையில்- -- பேசையில்
பேசுங்கள்- -- பேசுங்கோ
பேர்- -- பேரு
பொக்கிஷம்- -- பொக்கிசம்
பொங்கல்- -- பொங்கலு
பொசுக்கவில்லை- -- பொசுக்கலை
பொல்லாதவர்கள்- -- பொல்லாதவங்க
பொழிந்து- -- பொழிஞ்சு
பொறுக்கவில்லை- -- பொறுக்கலை
பொறுக்கிறது- -- பொறுக்குது
பொறுத்தவனடி- -- பொறுத்தவண்டி
பொறுத்துக்கொள்- -- பொறுத்துக்கோ
பொன்- -- பொன்னு
பொன்னென்றாலும்- -- பொன்னுண்ணாலும்
போகலாமடா- -- போகலாம்டா
போகவில்லை- -- போகலை
போக வேண்டுமடி- -- போகணுண்டி
போக வேண்டுமென்றால்- -- போகணுண்ணா
போகிற- -- போற
போகிறதற்கு- -- போறத்துக்கு, போறதுக்கு
போகிறது- -- போகுது, போறது
போகிறவன்- -- போறவன்
போகிறாப்போலே- -- போறாப்பலே
போகிறாய்- -- போறாய், போறே
போகிறாயா- -- போறியா, போறையா
போகிறார்- -- போறா, போறாரு
போகிறார்கள்- -- போகிறாங்க, போறாங்கள்
போகிறாங்களடி- -- போறாங்கடி
போகிறான்- -- போறான்
போகிறானடி- -- போறாண்டி, போறானடி
போகிறேனடி- -- போறேண்டி
போகுமென்று- -- போகுமுன்னு
போங்கள்- -- போங்க, போங்கோ
போட்டவர்கள்- -- போட்டவங்கள்
போட்டார்- -- போட்டாரு
போட்டார்கள்- -- போட்டாங்கள்
-----------
போட்டுக்கொண்டு- -- போட்டுக்கிட்டு
போட்டுக்கொள்- -- போட்டுக்கோ
போட்டுக்கொள்ள வேண்டும்- -- போட்டுக்கிடணும்
போட்டுவிட்டால்- -- போட்டுட்டால்
போட வேண்டும்- -- போடணும்
போடாவென்று- -- போடான்னு
போடுகிறது- -- போடுது
போடுகிறார்- -- போடுறார்
போடுகிறானடி- -- போடுறாண்டி
போடுங்களடி- -- போடுங்கடி
போடுவேனடி- -- போடுவேண்டி
போய் - -- போயி
போய்விட்டது- -- போயிடுச்சு
போய்விட்டார்- -- போயிட்டார்
போய்விட்டாலும்- -- போயிட்டாலும்
போய்விட்டேன்- -- போயிட்டேன்
போய்விடடா- -- போயிரடா
போய்விடு- -- போயிடு
போய் விடுவாய்- -- போயிடுவே
போய் விடுவோம்- -- போயிடுவோம்
போயன்மார் - -- போயன்மாரு
போயிற்று - -- போச்சு, போச்சுது
போர்த்து- -- போத்து
போர்த்துக்கொண்டு- -- போர்த்திக்கிட்டு
போவாய் - -- போவே
போவார்கள் - -- போவாங்க, போவாஙகள்
போவேன் என்றால்- -- போவேண்ணா
போனாய் - -- போனே
போனாயோ - -- போனையோ
மகளென்று - -- மகள்னு, மகளுன்னு
மகனடி - -- மகண்டி
மங்குகிறது- -- மங்குது
மஞ்சள்கண் - -- மஞ்சக்கண்ணு
மடக்கினார் - -- மடக்கினாரு
மடக்குங்களடி - -- மடக்குங்கடி
மடமடவென்று- -- மடமடன்னு
மண் - -- மண்ணு
மண்வெட்டி - -- மம்முட்டி
மணக்கிறது- -- மணக்குது
மணல் - -- மணலு
மதிப்பார்கள் - -- மதிப்பாங்கள்
மந்த்ரம் - -- மந்தரம்
மயக்காதேயடி- -- மயக்காதேடி
மயக்குகிறது- -- மயக்குது
மயங்கவில்லை- -- மயங்கலை
மயங்கினார்கள் -- மயங்கினாங்க
மயங்குகிறது -- மயங்குது
மயங்குகிறேன் -- மயங்குறேன்
மயிர் -- மயிரு
மருக்கொழுந்து -- மருக்கொளுந்து
மருமகள் -- மருமக
மல் -- மல்லு
மற்றவர்கள் -- மத்தவங்க
மறக்கவடித்தாள் -- மறக்கடிச்சாள்
மறக்கவில்லை -- மறக்கலை
மறக்காவிட்டால் -- மறக்காட்டி
மறந்தீர்களென்றால் -- மறந்தீங்கன்னா
மறந்துவிட்டாய் -- மறந்திட்டை
மறந்துவிட்டாயா -- மறந்துட்டியா
மறந்துவிட்டார் -- மறந்துட்டார்
மறித்து
-- மறிச்சு மறைத்த -- மறைச்ச
மறைந்து -- மறைஞ்சு
மறைந்துவிட்டான் -- மறைஞ்சிட்டான்
மறையவில்லை -- மறையலை
மன்னிக்கவேண்டும் -- மன்னிக்கணும்
மன்னித்துவிட்டால் -- மன்னிச்சிட்டால்
மனிதர் -- மனிசர்
மா -- மாவு
மாட்டிக்கொண்டு -- மாட்டிக்கிட்டு
மாட்டேனென்னுவார் -- மாட்டேன்ணுவார்
மாதாவென்று -- மாதாண்ணு
மாமாவென்று -- மாமாண்ணு
மாமியார் -- மாமியா
மாய்ந்து -- மாஞ்சு
மார்பு -- மார்
மாள வேண்டுமென்று -- மாளணு முண்ணு
மாற்றி -- மாத்தி
மாற்றினாள் -- மாத்தினாள், மாத்துனா
மாற்று -- மாத்து
மாறிவிட்டது -- மாறிருச்சு
மிஞ்சினக்கால் -- மிஞ்சினாக்க
மிஞ்சுகிறது -- மிஞ்சுது
மிட்டாய் -- முட்டாயி
மிதிக்கிறது -- மிதிக்குது
மிதித்தால் -- மிதிச்சால்
மிளகாய் -- முளகாய், மொளகாய்
மின்னுகிறது -- மின்னுது
மினுமினுவென்ன -- மினுமினுங்க
-------------
மினுமினுக்கிறது- - மினுமினுக்குது
மீன்- - மீனு
முக்கால்- - முக்கா
முக்கியமடா- - முக்கியண்டா
முடிக்காவிட்டால்- - முடிக்காக்கட்டி
முடித்தார்- - முடிச்சார்
முடித்துவிடுவேன்- - முடிச்சிடுவேன்
முடித்தேன்- - முடிச்சேன்
முடிந்த- - முடிஞ்ச
முடிந்திருப்பான்- - முடிஞ்சிருப்பான்
முடிந்துகொண்டு- - முடிச்சுக்கிட்டு
முடிந்துகொள்- - முடிஞ்சுக்கோ
முடியவில்லை- - முடியலை
முணுமுணுவென்று- - முணுமுணுன்னு
முதலியார்- - முதலியாரு
முழங்குகிறது- - முழங்குது
முள் - - முள்ளு
முளைக்கவில்லை- - முளைக்கலை
முளைத்தவன் - - முளைச்சவன்
முளைத்து - - முளைச்சு
முன்றானை - - முந்தாணி
மூடடி - - மூடுடி
மூத்த அண்ணன்- - மூத்தண்ணன்
மூன்று - - மூணு
மெடல் - - மெடலு
மெயில் - - மெயிலு
மெல்ல - - மெள்ள, மொள்ள
மெல்லிது - - மெல்லிசு
மெழுகவேண்டுமடி- - மெழுகணுண்டி
மேடென்று - - மேடுண்ணு
மேய்கிறது - - மேயுது
மேய்த்தவன் - - மேய்ச்சவன்
மேய்த்து - - மேச்சு
மேய்ந்த- - மேய்ஞ்ச
மேரி- - மரி
மேல் - - மேலு
மேளம்- - மோளம்
மை - - மையி
மைத்துனன் - - மச்சான், மச்சினன்
மைத்துனன்மார்- - மச்சான்மாரு
மொரமொரவென்று - - மொரமொரண்ணு
மோட்டார் - - மோட்டாரு
மோதுகிறாய் - மோதுறாய்
மோர் - மோரு
யமன் - எமன், ஏமன்
யார்- -- யாரு
யாரென்று- -- யாருண்ணு
ரங்கூன்- -- ரங்கோன்
ரப்பர்- -- ரப்பரு
ரிக்ஷா- -- ரிக்சா
ரூபாய்- -- ரூபா, ரூபாயி, ரூவா, ரூவாய்
ரெயில்- -- ரெயிலு
ரைட்டர்- -- ரைட்டன்
ரோட்- -- ரோதை
லக்ஷ்மி- -- லச்சுமி, லெச்சுமி
லக்ஷம்- -- லட்சம்
லாபம்- -- லாவம்
லாஸரஸ்- -- லாசரு
வகிர்ந்துவிடுவேன்- -- வகுந்திடுவேன்
வண்மாரி- -- மம்மாரி
வணக்குவேனடி- -- வணக்குவேண்டி
வதங்கல்- -- வதங்க
வதைக்கிறேனடி- -- வதைக்கிறேண்டி
வந்தவர்கள்- -- வந்தவங்கள்
வந்தவனடி- -- வந்தவண்டி
வந்தார்கள்- -- வந்தாங்கள்
வந்தாயாவாடா- -- வந்தாயாடா
வந்தாயென்றால்- -- வந்தியின்னா, வந்தின்னா
வந்தாயா- -- வந்தியா
வந்தீர்களோ- -- வந்தியளோ
வந்தேனடி- -- வந்தேண்டி
வந்தேனென்றால்- -- வந்தேண்ணா
வந்துகொண்டு- -- வந்துக்கிட்டு
வந்துவிட்டதா- -- வந்திருச்சா
வந்துவிட்டது- -- வந்திடுச்சு, வந்திருச்சு
வந்துவிட்டானடி- -- வந்துட்டாண்டி
வந்துவிடுங்கள்- -- வந்திடுங்கள்
வம்சம்- -- வங்கிசம்
வர்ணித்து- -- வர்ணிச்சு
வரவில்லை- -- வரலே, வரலை
வரவேண்டும்- -- வரணும்
வரிந்துகொண்டு- -- வரிஞ்சுக்கிட்டு
வருகிற- -- வர, வாற
வருகிறது- -- வருகுது, வருது, வாறது
வருகிறதை- -- வாறதை
வருகிறவள்- -- வாறவள்
வருகிறாய்- -- வாறே
வருகிறாயா- -- வாறியா
வருகிறார்- -- வாறார், வாறாரு
வருகிறார்கள்- -- வர்றாங்க, வராங்க, வாறாங்க, வாறாங்கள்
-------------
வருகிறாள்- -- வாறாள்
வருகிறானடி- -- வாறாண்டி
வருகிறேன்- -- வாறேன்
வருகிறேனடி- -- வாறேண்டி
வருவார்- -- வருவாரு
வருஷம்- -- வருசம்
வரைந்து- -- வரைஞ்சு
வலிக்கிறது- -- வலிக்குது
வலித்துவிட்டதோ- -- வலிச்சிருச்சோ
வழங்கவேண்டும்- -- வழங்கணும்
வளர்க்க- -- வளக்க
வளர்த்தார்கள்- -- வளத்தாங்க
வளர்த்தி- -- வளத்தி
வளர்ந்தவன்- -- வளந்தவன்
வளர்ப்பார்கள்- -- வளர்ப்பாங்கள்
வளருகிறது- -- வளருது
வளைத்து- -- வளைச்சு
வளைந்து- -- வளைஞ்சு
வற்றல்- -- வத்தல்
வாங்கலாமடி- -- வாங்கலாண்டி
வாங்கவில்லை- -- வாங்கலை
வாங்கிப் போட்டேன்- -- வாங்கிப்புட்டேன்
வாங்கினேனடா- -- வாங்கினேண்டா
வாங்குகிறது- -- வாங்குது
வாங்குகிறாள்- -- வாங்குறாள்
வாங்குகையில்- -- வாங்கையில்
வாங்குங்களடி- -- வாங்குங்கடி
வாடவில்லை- -- வாடலை
வாடிவிட்டதே- -- வாடிருச்சே
வாடுகிறது- -- வாடுது
வாய்- -- வாயி
வாருகிறாள்- -- வாருறாள்
வாருங்கள்- -- வாங்க
வாருங்களடி- -- வாங்கடி
வால்- -- வாலு
வாழலாமடி- -- வாழலாண்டி
வாழவில்லை- -- வாழலை
வாழவேண்டுமேயடி- -- வாழணுமேடி
வாள்- -- வாளு
விட்டில் - -- விட்டி
விடவில்லை - -- விடலை
விடாய்- -- வெடாயி
விடியற்காலம்- -- விடியக்காலம்
வியாபாரம்- -- வியாவாரம்
விரட்டவில்லை- -- விரட்டலை
விரைவா - -- விரைசா
வில்- -- வில்லு
விலகிடுமம்மா- -- விலகிடும்மா
விழாதே- -- விழுகாதே
விழாதேயடி- -- விழுகாதடி
விழி- -- முழி
விழிப்பார்- -- முழிப்பார்
விழுகிறது- -- விழுகுது
விழுங்கினேன்- -- முழுங்கினேன்
விழும்- -- விழுகும்
விளங்குகிறது- -- விளங்குது
விளைந்து- -- விளைஞ்சு
விளைந்துவிட்டது- -- விளைஞ்சிருச்சு
விளையாடவில்லை- -- விளையாடலை
விளையாடுகையில்- -- விளையாடையில்
விற்கவில்லையா- -- விற்கலையா
விற்கிறது- -- விக்குது
விற்றதென்றால்- -- வித்துச்சுண்ணா
விற்றுவிட்டாலும்- -- வித்துட்டாலும்
விறகு- -- வெறகு
வீசாதேயடி- -- வீசாதடி
வீசிக்கொண்டு- -- வீசிக்கிட்டு
வீசிடுமடா- -- வீசிடுண்டா
வீசுகிறது- -- வீசுது
வீசுகிறாய்- -- வீசுறாய்
வீசுகையில்- -- வீசையில்
வீசுங்களம்மா- -- வீசுங்கம்மா
வீடென்று- -- வீடுண்ணு
வெட்கம்- -- வெக்கம்
வெட்டிவிடுவேன்- -- வெட்டிடுவேன்
வெட்டுகையில்- -- வெட்டையில்
வெடித்துவிட்டது- வெடிச்சிருச்சு
வெந்நீர்- வெந்நீரு
வெயில்- வெய்யில்
வெருண்டு- மிரண்டு
வேகிறத - வேகுது
வேண்டாம் - வாணாம், வேணாம்
வேண்டாமென்று - வேணாமிண்ணு
வேண்டா மென்னுவார் - வோணா முன்னுவார்
வேண்டும - வேணும்
வேண்டுமா வென்றால்- வேணுமாண்ணா
வேண்டுமென்றால்- வேணுமுன்னா
வேண்டுமென்று- வேணுண்ணு, வேணும்னு, வேணுமின்னு
வேர- வேரு
வேலையென்று- வேலையென்னு
வேளாண்மை- வெள்ளாமை
-----------
வேஷ்டி- வேட்டி
வேஷம- வேசம்
வைக்கவேண்டும்- வைக்கணும்
வைக்காதேயடி- வைக்காதேடி
வைக்கிறானடி- வைக்கிறாண்டி
வைத்த- வச்ச
வைத்தார்கள்- வச்சான்கள்
வைத்தார்களா- வச்சாங்களா
வைத்தால்- வைச்சா
வைத்தான்- வச்சான்
வைத்து- வச்சு, வைச்சு
வைத்துக்கொண்டு- வச்சுக்கிட்டு
வைத்துக்கொள்- வச்சுக்கோ
வைத்தேனடா- வச்சேண்டா
ஜ்வலிக்கிறது- ஜொலிக்குது
ஜகம்- செகம்
ஜனம்- சனம்
ஜன்மம்- சென்மம்
ஜீஸஸ் - சேசு
ஜெயில்- ஜெயிலு
ஷாப்- சாப்பு
ஸ்டேஷன்- டேசன்
ஹார்பர்- ஆர்பரு
ஹாஜர்- ஆஜர்
ஹெட்- ஏட்டு
க்ஷணம்- சணம்
க்ஷவரம- சவரம்
க்ஷேமம் - சேமம்
----------
26. உவமைகள்
இலக்கியங்களில் உவமைகள் பல பல வரும்.
நாடோடி இலக்கியங்களில் சில அரிய உவமைகள் வரும்.
ஆற்றுக்கு அல்லிமுடி 237
- காளி முடி 237
தலை முடி 237
- பாம்பு 103
வீமன் முடி 2371
கட்டிடத்துக்கு இரும்பு 30
கண்ணழகுக்குக் கண்ணகி 298
கணவனுக்கு உயிர் 205
கத்திரிப் பூவுக்குக் காசு 283
கழுத்தழகுக்கு ரதி 298
காதலனுக்குத் தோள் 92
- மருக்கொழுந்து 70
- முத்துச்சரம் 16
- வாழையிளங்குருத்து 70
காதலிக்கு அன்னம் 64
- ஏலம் 17
கண் 61
- கண்மணி 52
- கிராம்பு 17
- கிளி 19
- குயில் 27
- சந்தனம் 17
- சர்க்கரை 69
- செங்கரும்பு 69
- திரவியம் 64
- தேன் 64
- நாவற் பழம் 17
- மயில் 18
- மரகதம் 64
- மாங்கனி 82
- மான் 64
- மின்மினி 21
- ரத்தினம் 37
- வண்டு 9
கிழவனுக்குச் சுக்கான்கல் சரளை 25
- பழம் 303
குழந்தைக்கு ஆவாரம்பூ 259
- குயில் 224
- வண்டு 224
கூந்தல் முடிச்சுக்குத் தூக்கணங் குருவிக்கூடு 27
கூந்தலுக்கு ஆலம்விழுது 7, 27, 222
- வாழை 12
கொங்காணிக்குக் குரங்கு 168
சாலைக்கு ஆலம் விழுது 23
தண்ணீருக்குத் தெய்வம் 240
- முத்து 5
துயரத்துக்கு ஆறு 280
தென்னம்பிள்ளைக்குப் பிள்ளை 243
நடைக்கு அன்னம் 143
பசு 51
- மயில் 242
நரை மயிருக்குப் பஞ்சு 302
நல்ல ஊருக்குச் சிவலோகம் 100
தேவலோகம் 100
நல்ல பெண்ணுக்குக் காராம்பசு 208
நெஞ்சுக்குப் பகல் 166
பல்லுக் காவிக்கு வயிரம் 12
பாதைக்கு ஆலமரம் 23
பாலத்துக்குத் தொட்டில் 239
மரத்துக்கு மலை 9
மனத்துக்குக் கல் 78
- பாம்பு 9
மூக்குக்கு ஊசி 100
மோட்டார் வண்டிக்குக் கடவுள் 26
--------
1. இலக்கியங்களிற் காணப் பெறாதவை.
-----------
வாடிய நிறத்துக்குக் குருவியின் நிறம் 6
வாய்க்கு ஏலம்பூ 256
விழிக்குக் கிளி 166
--------------
27. பழமொழிகள்
அவல் பெருத்தது ஆர்க்காடு[1]
அழுதழுது புரண்டாலும் அவள் தான் பிள்ளை பெற வேணும்
அளவுக்கு மிஞ்சினால் அமுதமும் நஞ்சாம்
ஆகாசம் பூமி பாதாளம் சாட்சி
ஆசை உறவாகுமோ, ஆதரவு சோறாகுமோ
ஆசைக்காரனுக்கு ரோசம் இல்லை
ஆடி மாசம் அடி வைக்கக் கூடாது
ஆலாய்ப் பறக்கிறான்
ஆறிலும் சாவு, நூறிலும் சவு
இஞ்சி தின்ற குரங்குபோல
---------
[1]. அருமையாக வழங்குவன.
------
இத்தனையும் செய்து, கத்தரி நட்டவன் இல்லை என்று சொன்னான்
உண்ட வீட்டுக்கு இரண்டகம் செய்யக் கூடாது
ஊரார் பிள்ளையை ஊட்டி வளர்த்தால் தன் பிள்ளை தானே வளரும்
எட்டாத தேனுக்கு ஏறாத நொண்டி கொட்டாவி விட்டதுபோல
எட்டாத பழத்துக்குக் கொட்டாவி விடுதல்
எள்ளுக்குள் எண்ணெய்போல்
ஏட்டுச் சுரைக்காய் கறிக்கு உதவுமா
ஏணி வைத்தாலும் எட்டாது
ஒருத்திக்கு ஒரு மகன்
கண்ணாலேயும் பார்த்ததில்லை, காதாலேயும் கேட்டதில்லை
கருமம் தொலையாது
கல் என்றாலும் கணவன், புல் என்றாலும் புருசன்
கல்யாணம்பண்ணுமுன்பு கன்னி குளி குளிப்பாளா?
காத்திருந்தவன் பெண்டாட்டியை நேற்று வந்தவன் கொண்டு போனான்
காரியம் ஆகுமட்டும் காலைப்பிடி
கோடி சனம் கையெடுக்கும்
செட்டி சிதம்பரம்
தப்பிப் பிழைத்தது தம்பிரான் புண்ணியம்
தருமம் தலைகாக்கும்
தாய்க்குத் தலைப்பிள்ளை
துள்ளுகிற மாடு பொதி சுமக்கும்
தொட்டிலை ஆட்டித் தொடையையும் அறுத்தான்
தொண்டை வலிக்குச் சாராயம் தொடை வலிக்கு வெந்நீர்
தோட்டி முதல் தொண்டமான்வரை
நெற்றி வேர்வை நிலத்தில் விழ
பணம் பெருத்தது நீலகிரி
பள்ளுப்பறை பதினெட்டுச் சாதி
பனங்காட்டு நரி சலசலப்புக்கு அஞ்சாது
பொந்திலே அகப்பட்ட மந்தியைப் போல
மலை ஏறிப் போனாலும் மச்சான் தயவு வேணும்
மலைபோல் வந்தது பனிபோல் விலகியது
மாமியார் உடைத்தால் மண் சட்டி, மருமகள் உடைத்தால் பொன் சட்டி
வம்புச் சண்டையை வளர்க்க மாட்டோம், வந்த சண்டையையும் விடமாட்டோம்.
விதி வசம்போல் ஆகும்
விருந்தும் மருந்தும் மூன்று நாள்
வெல்லம் பெருத்தது வேலூர்.
Malai Aruvi (Folksongs in Tamil)
collected by Mr. Percy MacQueen
1958, Saraswathi Mahal Series No. 77
Madras Government Oriental Series
Published Under the authority of
The Govt. Of Madras
General Editor: T. Chandrasekaran, Curator, Govt. Oriental Manuscript Library, Madras
மலையருவி (நாடோடிப் பாடல்கள்)
Mr.பர்ஸி மாக்வீன்,I,C,S., என்பவரால் சேகரிக்கப்பட்டவை
கலைமகள் ஆசிரியர்: கி.வா.ஜகந்நாதன், அவர்களால் தொகுக்கப்பட்டு,
நாடோடிப் பாடல்களைப் பற்றிய விரிவான முகவுரையுடன் பதிப்பிக்கப்பட்டது
தஞ்சை சரஸ்வதி மகால் நிர்வாகக் குழுவினருக்காகக்
கவுரவ காரியதரிசி ஸ்ரீ எஸ். கோபாலன் அவர்களால் பிரசுரிக்கப்பட்டது.
1958, இதன் விலை ரூ. 5.50
----------------------
- மலையருவி : பொருள் அடக்கம்
Preface
முகவுரை
பதிப்புரை
இரண்டாம் பதிப்புரை
General Introduction
ஆராய்ச்சி உரை
I.1. நாடோடிப் பாடல்களின் தோற்றமும் இயல்பும்
2. தொல்காப்பியர் கூறும் பண்ணத்தி
3. சிலப்பதிகாரத்தில் கண்ட வரிப்பாடல்கள்
4. சங்க இலக்கியங்களில் உள்ள செய்திகள்
5. நாடோடிப் பாடல்களின் சிறப்பியல்புகள்
II. பலவகைப் பாடல்கள்
III. பொருள் உலகம் - சொல் உலகம்
பாடல்கள்
தெம்மாங்கு | தாலாட்டு |
தங்கரத்தினமே! | புலம்பல் |
ராசாத்தி! | கும்மி |
ஆண் பெண் தர்க்கம் | தெய்வம் |
தொழிலாளர் பாட்டு | பல கதம்பம் |
கள்ளன் பாட்டு | குடும்பம் |
PREFACE
This publication contains a selection of Tamil folk-songs collected by the late Mr. Percy Macqueen, I.C.S., and presented by him to the University Library Madras. This Manuscript therefore does not belong to the Saraswathi Mahal Library. Its publication was taken up because it was selected for publication by the Selection Committee appointed by the Government. They represent the product of the exuberant fancy of untutored and unfettered imagination of labourers. The struggle for expression of poetic fancy among the uncultured and unbridled youth often ends in ribaldry.
A good number of songs had thus to be eschewed from the collection when making the selection. The collection has however a special value for students of Sociology. Fine strokes of fancy are however not wanting in the collection.
Sri K.V. Jagannathan, the Editor of Kalaimagal, well-known for his Tamil scholarship has bestowed his time and labour in selecting the pieces for the collection and contributing an introduction on "Folk Songs in Tamil". Our thanks are due to him for his valuable services.
We are grateful to the Government of Madras for their generous grants that have helped us to publish this and other valuable manuscripts of this Library.
Saraswathi Mahal }
S. GOPALAN
Tanjore Honorary Secretary
18-03-58 T.M.S.S.M. Library Committee
----------------
மலையருவி : முகவுரை
இந்த வெளியீட்டில் திரு. பர்ஸி மக்வீன் I.C.S. என்பவரால் சேகரிக்கப்பட்ட நாடோடிப் பாடல்களில் ஒரு பகுதி அடங்கியுள்ளது. அன்னாரால் சேகரிக்கப்பட்ட பாடல்கள் சென்னைச் சர்வகலாசாலைக்கு நன்கொடையாகக் கொடுக்கப்பட்டு அவர்கள் வசம் இருந்து வருகின்றன. ஆகையால் இந்நூல் நமது சரஸ்வதிமஹால் நூல் நிலையத்தைச் சேர்ந்ததல்ல. எனினும் சுவடிகளை வெளியீட்டிற்குத் தெரிந்தெடுப்பதற்காக சென்னை சர்க்கார் அவர்களால் நியமிக்கப்பட்ட குழுவினரால் இந்நூலும் தெரிந்தெடுக்கப்பட்டு நமது நூல் நிலையத்தாரால் வெளியிடப்பட்டிருக்கிறது.
இதில் அடங்கியுள்ள பாடல்கள் தெம்மாங்கு வகையைச் சேர்ந்தவை. சென்னைச் சர்வகலாசாலையில் உள்ள தொகுதியில் சில பாடல்கள் சபைக்கு அருகமில்லாமல் இருந்தன. அவற்றை விலக்கி இந்த வெளியீட்டிற்கான பாடல்கள் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கின்றன. "கலைமகள்" ஆசிரியரும் தமிழில் சிறந்த புலமைவாய்ந்தவருமான ஸ்ரீ கி. வா. ஜகந்நாதன் அவர்கள் பாடல்களைத் தேர்ந்தெடுத்துப் பதிப்பித்துக் கொடுக்கும் பணியை மகிழ்ச்சியுடன் ஏற்றுக்கொண்டதோடு நமது நாடோடிப் பாடல்களின் வரலாற்றைப்பற்றி ஓர் முகவுரையையும் எழுதியளித்துள்ளார். அன்னார் செய்திருக்கும் அரிய சேவைக்கு எமது நன்றி உரித்தாகும்.
இந்த நூலையும், இன்னும் பல அரிய நூல்களையும் வெளியிடுவதற்கு உதவியாக நமது சென்னை அரசாங்கத்தார் செய்திருக்கும் நிதி உதவிக்காக அவர்களுக்கு நாங்கள் என்றும் கடமைப்பட்டிருக்கிறோம்.
ஸ்ரஸ்வதி மஹால் எஸ். கோபாலன்
18-3-58 } கௌரவக் காரியதரிசி
-------------
மலையருவி :பதிப்புரை
சில காலமாகத் தமிழ் நாடோடிப் பாடல்களைப் பற்றிய ஆராய்ச்சி தமிழ்நாட்டில் ஓங்கி வருகிறது. வானொலியில் அடுத்தடுத்து நாடோடிப் பாடல்களைப் பாடிவருகிறார்கள். நான் பலகாலமாக நாடோடிப் பாடல்களைத் தொகுத்து வருகிறேன். அவற்றின் சம்பந்தமாக நான்கு புத்தகங்களும் எழுதியிருக்கிறேன்.
பல ஆண்டுகளுக்குமுன் சென்னை மாகாணத்தில் கலெக்டராக இருந்த ஸ்ரீ பர்ஸி மாக்வீன் என்னும் ஆங்கிலேயர் தமிழ் நாடோடிப் பாடல்களைத் தொகுக்கத் தொடங்கினார். ஒரு வரிக்கு இத்தனை அணா என்று பணம் கொடுத்துப் பலரிடம் பெற்றார். பெரும்பாலும் மலைப்பகுதிகளில் உள்ள தோட்டத் தொழிலாளிகளிடத்தும், கிறிஸ்தவர்களிடத்தும் இந்தப் பாடல்களைச் சேகரித்திருக்கவேண்டுமென்று தோன்றுகிறது.
இவற்றிற் சிலவற்றை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்துச் சில பத்திரிகைகளில் அவர் வெளியிட்டிருக்கிறார். பின்பு இவற்றைச் சென்னைப் பல்கலைக் கழக நூல்நிலையத்துக்கு வழங்கினர். அவை நூல் நிலையத் தலைவரின் பாதுகாப்பில் இருந்தன. தஞ்சைச் சரஸ்வதிமகால் நிர்வாகிகள் அவற்றைப் புத்தக உருவத்தில் வெளியிட எண்ணி, பதிப்பிக்கும் வேலையை என்னிடம் விட்டார்கள். இத்துறையில் பலகாலம் ஈடுபட்டவனாதலின் இப்பணியை மகிழ்ச்சியுடன் ஏற்றுக்கொண்டேன்.
பலவாறாக இருந்த பாடல்களை ஒருவாறு வகைப்படுத்தி இந்த உருவத்தில் அவற்றைப் பதிப்பித்தேன். இடக்கராக இருந்த பல பாடல்களை விட்டுவிட்டேன்.
இயற்கைச் சூழ்நிலையில் கட்டுப்பாடின்றி உணர்ச்சிவசப்பட்ட மக்கள் பாடும் பாடல்கள் ஆதலின் இவற்றைக் காட்டுமலருக்கும், மலையருவிக்கும் ஒப்பிடலாம். மலையருவி என்ற பெயர் உருவக வகையால் இந்தத் தொகுதிக்குப் பொருத்தமாக இருக்குமென்று எண்ணி அதனை அமைத்தேன்.
இப்பணியில் என்னை ஈடுபடச்செய்த தஞ்சைச் சரசுவதிமகால் நூல் நிலைய நிர்வாகிகளுக்கு என் நன்றி உரியது.
16-4-58 கி. வா. ஜகந்நாதன
-------------
மலையருவி -1 (அறிமுகம்)
பேசத் தெரிந்த மனிதன்
மனிதன் பேசத் தெரிந்தவன்; தன்னுடைய உணர்ச்சியையும் கருத்தையும் பிறருக்கு வெளிப்படுத்தத் தெரிந்தவன். விலங்கினங்கள் ஏதோ ஒரு வகையில் வெளிப்படுத்தினாலும் மனிதனைப் போல வெளியிடும் அறிவும் ஆற்றலும் அவற்றுக்கு இல்லை. மனிதனோ தக்கது, தகாதது என்று உணரும் அறிவு பெற்றிருக்கிறான்; சிந்திக்கும் திறமை பெற்றிருக்கிறான்; பல குணங்களின் வெளியீடான உணர்ச்சியைப் பெற்றிருக்கிறான்; அவற்றை வெளியிடும் மொழியாற்றலையும் அதற்கு ஏற்பப் பண்பட்ட கருவிகளையும் பெற்றிருக்கிறான். அதனால், சில விலங்குகளிடம் சில சமயங்களில் ஒலி உண்டானாலும் மனிதனைப்போலத் தம் கருத்தை ஒலி மயமாக்கி வெளியிடும் ஆற்றலை அவை பெறவில்லை.
காக்கை, குருவி முதலியன ஒருவாறு தம்முடைய குரிலினால் தம் கருத்தை வெளியிடுகின்றன என்றும், அவற்றிற்கும் மொழி உண்டு என்றும் ஆராய்ச்சி வல்லுநர்கள் சொல்லுகிறார்கள். நம் நாட்டுப் பழங் கதைகளிலும் விலங்கின் மொழிகளை உணர்ந்தவர்கள் இருந்தார்கள் என்ற செய்தி வருகிறது. அறுபத்துமூன்று நாயன்மார்களில் ஒருவராகிய சேரமான் பெருமாள் நாயனாருக்கு விலங்கு, பறவை முதலியவற்றின் மொழி தெரியுமென்றும், அவை பேசுவனவற்றை அவர் கூர்ந்தறிந்தாரென்றும், அதனால் அவருக்குக் கழறிற்றறிவார் என்ற பெயர் உண்டாயிற்றென்றும் பெரியபுராணம் கூறும்.[1] ஆயினும் அந்த ஒலிகள் மிகச் சிலவே; மனிதனுடைய மொழியைப் போல நுட்பமும் விரிவும் உடையன அல்ல.
-----------
[1]. சேரமான் பெருமாள் நாயனார் புராணம், 14, 16.
இவ்வாறு உயிர்க் குலங்களுக்குள் பிற உயிர்களுக்கில்லாத பெரும் பேறாகிய மொழியைப் பெற்ற மனிதன் வரவர அதனை வளப்படுத்திக் கொண்டான். முதலில் பண்டங்களின் பெயர்களையும் பிறகு செயல்களையும் குறிப்பிட்டுப் பேசக் கற்றுக்கொண்ட ஆதி மனிதன் நாளடைவில் பழைய நினைவுகளையும், கருத்துக்களையும் வெளிப்படுத்தவும் தெரிந்துகொண்டான். தன் கருத்தை அப்போதைக்கு வேண்டுமளவுக்கு வெளிப்படுத்துவதோடு நில்லாமல், தான் கூறுவதைப் பிறரும் நினைவுபடுத்திக் கொள்ளும் வகையில் தன் மொழியை அமைத்தான். வரவர அதில் அழகும் உணர்ச்சியும் மலிந்தன. மனித சமுதாயத்தில் சிலர் நன்றாகப் பேசினார்கள்; அழகாகப் பேசினார்கள்; உணர்ச்சியை ஊட்டும்படி பேசினார்கள். அவர்களுடைய பேச்சை அப்படியே பிறர் வாங்கிச் சொன்னார்கள்.
பாடல்கள்
சில சொற்களால் ஆன பாடலை ஏதோ ஒரு வகையில் அவர்கள் இசையோடு பாடினார்கள். அந்தப் பாடல்களின் ஓசை பிறர் உள்ளத்தை இழுத்தது. அதோடு அந்தப் பாட்டின் தாளம் கேட்டவர்களிடம் இயக்கத்தை உண்டாக்கியது. பாட்டும் ஆட்டமும் கலந்தன. அவர்கள் உவகை மிகுதியாகியது.
வாயால் பாட வேண்டியிருந்தமையின் இசையும் தாளமும் அமைந்த அந்தப் பாட்டுக்கு ஓர் உருவம் வேண்டியிருந்தது. வெறும் ஒலியுருவோடு நில்லாமல் சொற்களும் கலந்த உருவம் அமைந்தது; சொற்கள் கோவையாய், கருத்தைத் தெளிவாய்ச் சொல்லுவனவாய், சிறந்த கற்பனைக்கு இடமாய் இருக்கவில்லை. ஆனாலும் அவற்றினூடே உள்ளமும் உள்ளமும் உணர்ந்து கொள்ளும் ஏதோ ஒருவகை உணர்ச்சி இருந்தது. இசையமைதிக்கும் தாளத்திற்கும் ஏற்ற ஓசை ஒவ்வொரு பாட்டிலும் இருந்தது.
இப்படி உண்டான மனித குலத்தின் பழம் பாடல்கள் மெல்ல மெல்ல எங்கும் பரவின; வாய் மொழியாகவே பரவின. புலவர்களும் புத்தகங்களும் தோன்றாததற்கு முன்பே இந்தப் பாடல்கள் மனித இனத்தின் களியாட்டத்துக்குத் துணையாக எங்கும் பரவின. ஒரு குறிப்பிட்ட மொழியைப் பேசும் இனத்தாரிடம் அந்த மொழியில் அமைந்த பாடல்கள் பரவி வந்தன.
மனிதன் நாளடைவில் நாகரிகத்தைக் கற்றுக்கொண்டான். ஆழமாகச் சிந்திக்கத் தெரிந்துகொண்டான். மொழியை வளப்படுத்தினான். அதற்கு வரையறைகளை அமைத்துக்கொண்டான். புலவர்கள் தோன்றினார்கள். நாடோடியாக வழங்கும் பாடலின் இசையையும் தாளத்தையும் எடுத்துக்கொண்டார்கள். சொற்களில் தம்முடைய ஆற்றலைப் புகுத்தினார்கள். வளம் பெற்ற மொழியின் கலையழகு கவிகளில் மலர்ந்தன, இலக்கியம் பிறந்தது.
கட்டில்லாக் கவிதை
நாகரிகம் வளர வளர மனிதன் தான் வாழ மாளிகையும், செல்ல வாகனமும், பூணப் பூணும், உடுக்க நுண்ணிய துகிலும், பயன்படுத்தப் பல அரிய பண்டங்களும் படைத்துக் கொண்டான். அப்படிப் படைத்துக்கொண்ட காலத்திலும் மாளிகையில் வாழாதவர்களே மிகுதியாக இருந்தார்கள்; அணிகளைப் பூணாதவர்களே பலராக இருந்தார்கள், இலக்கியத்தை நுகரத் தெரியாதவர்களே பெரும்பாலோராக இருந்தனர். அவர்களைப் பாமரர் என்று மற்றவர்கள் சொன்னார்கள். எழுதப் படிக்கத் தெரியாத அவர்களுக்குப் புலவர்களின் பாடல்களும் காவியமும், பண்களும் தாளபேதங்களும் விளங்காதவை. ஆனால் அவர்களுக்கு இன்பத்தைத் தரும் வகையில் அமைந்த பாடல்கள் இல்லாமற் போகவில்லை. பழங்கால முதற்கொண்டு மனித குலம் வாய்மொழியாகப் பாடிவந்த கட்டில்லாக் கவிதையும், காலில்லாக் கதைகளும் அவர்களிடம் உலாவின. பழையவை பரவின; அவற்றிற்குப் புதிய உருவங்கள் அமைந்தன. புதியவை தோன்றின. அவர்களிடையே வழங்கிய அந்தப் பாடல்களை எழுதிவைப்பார் இல்லை; பாடம் சொல்வார் இல்லை. அவற்றுக்கு இலக்கணம் வகுப்பார் இல்லை; உரை கூறுவாரும் தேவை இல்லை.
இருப்பினும் பெரும்பாலான மக்களிடையே அவை பரவின; வளர்ந்தன; வேரூன்றின. புலமையும் கற்பனையும் உணர்ச்சியும் கலை நலமும் இணைந்த இலக்கியம் ஒருபால் வளர்ந்துகொண்டு வந்தது. கரையும் போக்கும் வரையறுத்த ஆறுகளாகக் கால்வாய்களாக, உரமும், பந்தலும் இட்டுப் படர்ந்த மல்லிகையாக அவ்விலக்கியங்கள் பரவின. அதே சமயத்தில் மலையிலிருந்து தானே வீழும் அருவியாக, காட்டிலே தானே மலர்ந்து மணக்கும் முல்லையாக, சோலையிலே தானே பாடும் குயிலின் இன்னிசையாக நாடோடிப் பாடல்களும் வளர்ந்து வந்தன. இருவகைப் பாடல்களிலும் இசையும் தாளமும் உணர்ச்சியும் இருந்தன.
இலக்கியத்தில் உள்ள சொல்லமைதி நாடோடிப் பாடல்களில் இல்லாமல் இருக்கலாம்; ஆனால் நாடோடிப் பாடல்களில் ஒருவகை மழலைத் தன்மை இருக்கிறது. இலக்கியத்தில் நுட்பம் இருக்கிறது; நாடோடிப் பாடல்களில் குழந்தை உள்ளம் பேசுகிறது. இலக்கியத்தில் அபூத கற்பனைகள் இருக்கின்றன; கட்டில்லாக் கவிதையில் பாமரனுக்கு இன்பம் ஊட்டும் எளிய கற்பனை இருக்கிறது. மனித இனத்தின் உன்னத லட்சியத்தை இலக்கியக் கவிதை சொல்கிறது; அன்றன்று மனிதன் படும் இன்ப துன்பத்தை உள்ளபடியே நாடோடிக் கவிதை காட்டுகிறது. மனித குலத்தின் அழகை மாத்திரம் புலவர்கள் தம் கவிகளில் காட்டுகிறார்கள்; நாடோடிப் பாவலனோ அழகையும் காட்டுகிறான்; அழுக்கையும் காட்டுகிறான்.
இப்படி வழி வழி வருகிற நாடோடிப் பாடல்களைப் பாமரர் போற்றினர். புலவர்களும் கவனித்தனர்; அவற்றைப் புறக்கணிக்கவில்லை. தமிழ் மொழி மிகப் பழையது; தமிழ்ச் சாதியின் வரலாறு மிகப் மிகப் பழையது. ஆதலின் தமிழ்ச் சாதியின் படைப்புகளும் பழையன. தமிழன் உலகில் முதலில் தோன்றிய மனித இனத்தைச் சேர்ந்தவன். ஆதலின் அவன் முதலில் பேசப் பழகிக்கொண்டக் கூட்டத்தைச் சேர்ந்தவன். அந்தக் கால முதலே அறிவுதோன்றி வளரப் பெறுபவன் அவன். தமிழர் தம்முள்ளே இலக்கியத்தை வளர்ப்பதற்கு முன்பே கட்டில்லா இலக்கியமாகிய நாடோடிப் பாடல்கள் வளர்ந்து வந்தன. பல காலமாக வாழ்ந்து வரும் சாதி ஆதலின் அதற்குக் கிடைத்த பழைய சொத்து மிகுதியாக இருத்தல் வியப்பன்று. தமிழ சாதிக்குப் பழம் பாடல்கள் அதிகம்; பழமொழிகள் பல பல; பழைய கருத்துக்கள் ஏராளம்; பழைய வழக்கங்கள் வேண்டாமென்றாலும் போகாமல் ஒட்டிக்கொண்டு உள்ளன. ஆகவே, நாடோடிப் பாடல்களும் பல பல உண்டு; பழையனவும் புதியனவுமாக அவை வளர்ந்து வருகின்றன.
-----------------
2. தொல்காப்பியர் கூறும் பண்ணத்தி
தொல்காப்பியம்
இன்று கிடைக்கும் பழந் தமிழ் நூல்களில் மிகப் பழையது தொல்காப்பியம். அது இன்ன காலத்தில் தோன்றியது என்று திட்டமாக வரையறுக்க முடியாவிட்டாலும் இரண்டாயிரம் ஆண்டுகளுக்குமுன் தோன்றிய சங்க நூல்களிற் காணாத பல பழைய மரபுகளை அது சொல்வதால் அந்த நூல்களுக்கும் முந்தியது அது என்று கொள்ளக்கிடக்கிறது. குறைந்தது இரண்டாயிரத்து ஐந்நூறு ஆண்டுகளுக்கு முந்தியது என்று கொள்வதில் தவறு இல்லை. அந்த இலக்கண நூலில் பொருளதிகாரத்தில் செய்யுளியல் என்னும் பகுதியில், தனிச் செய்யுட்களைப் பற்றியும் இலக்கிய வகைகளைப் பற்றியும் பல இலக்கணங்களைத் தொல்காப்பியர் கூறுகிறார்.
பல காலமாக வழங்கும் இலக்கியங்களில் கண்ட பொதுவான அமைப்பையெல்லாம் தொகுத்து இலக்கணமாக வகுத்தல் மரபு. அப்படி அமைந்த இலக்கணமும் நாளடைவில் திருத்தம் பெற்றும் விரிந்தும் பின்னும் நல்ல வரையறை பெற்றும் விளங்கும். மிகத் திருத்தமாக ஓர் இலக்கணம் அமைந்தால் அதற்குப் பிறகு அடிக்கடி இலக்கண நூல் எழுவதற்கு அவசியம் இராது. தொல்காப்பியத்துக்குப் பின் பல நூற்றாண்டுகள் கழிந்து 13-ஆம் நூற்றாண்டில் நன்னூல் எழுந்தது. இடையிடையே எழுந்த இலக்கண நூல்கள் தமிழுலகத்துக்குப் பயன்படாமல் ஒழிந்தன. தொல்காப்பியமே தமிழுக்கு இலக்கணமாக வழங்கியது. நன்னூலும் யாப்பருங்கலக் காரிகை முதலியனவும் வந்த பிறகும் தொல்காப்பியம் வழக்கொழிந்து போகவில்லை. பல உரையாசிரியர்கள் அதற்கு உரை எழுதி அதன் பயனை மிகுதிப்படுத்தினார்கள். இன்றளவும் தொல்காப்பியத்தின் மதிப்புக் குறையவே இல்லை. இதற்குக் காரணம் அதில் உள்ள திட்பமும் நுட்பமும் ஒழுங்குமாகும்.
எடுத்தவுடன் இப்படி ஒரு நூல் தோன்றுவது எளிதன்று. அதற்குமுன் பல இலக்கண நூல்கள் தோன்றித் தோன்றி வழக்கொழிந்து போயிருக்க வேண்டும். அகத்தியர் இயற்றிய இலக்கணம் ஒன்று முன்பு இருந்தது என்று கேள்விப்படுகிறோம். சில காலம் இருந்து, பின்பு வந்த இலக்கண நூல்களின் சிறப்புக் காரணமாக, மங்கி வழக்கொழிந்த இலக்கணங்கள் பல இருக்கலாம். முன் நூல்களில் இருந்த குறைபாடுகளை நீக்கித் திருத்தமாகச் செய்யப் பெற்றமையினால் தொல்காப்பியம் தனக்குமுன் இருந்தவற்றை மறையச்செய்து இன்றளவும் ஒளிவிட்டு நிலவுகிறது.
இங்கே ஓர் உண்மையை நினைவில் வைக்கவேண்டும். இப்படி அமைந்த தொல்காப்பியம் பல காலமாகத் தமிழில் வழங்கிய மரபுகளைத் தொகுத்து முறைப்படுத்திச் சொல்லும் நூல் என்பதை நாம் மறக்கக்கூடாது. தொல்காப்பியத்தில் கண்ட இலக்கணங்கள் யாவும் தொல்காப்பியரால் புதியனவாகக் கூறப்பட்டவை அல்ல. பெரும்பாலும் புலவர் பெருமக்கள் இயற்றிய முன்நூல்களில் கண்டவை. அவற்றோடு, அக்காலத்து வழங்கிய இலக்கியங்களிலும் வாய்மொழியிலும் கண்ட பல அமைதிகளை நுனித்துணர்ந்து அவற்றைப் பற்றிய வரையறைகளையும் தொல்காப்பியர் தம் நூலில் இணைத்துக் கொண்டார். சூத்திரங்களில் 'என்ப' என்றும், 'என்மனார் புலவர்' என்றும் அடிக்கடி வருவதனால் தொல்காப்பியர் பலகாலமாக வழங்கிவந்த இலக்கண மரபுகளை ஏற்று ஒழுங்குபடுத்தியிருக்கிறார் என்பது தெரியவரும்.
அடிவரையறை இல்லாத செய்யுட்கள்
இலக்கியத்தைப் பற்றியும் செய்யுட்களைப் பற்றியும் சொல்லி வரும் செய்யுளியலில் ஓரிடத்தில் அடிவரையறையில்லாத செய்யுட்கள் இன்னவை என்று கூறி, அவற்றிற்கு இலக்கணம் அமைக்கிறார்.
"எழுநிலத்து எழுந்த செய்யுள் தெரியின
அடிவரை இல்லன ஆறென மொழிப" [1]
என்பது ஒரு சூத்திரம். 'அகமும் புறமுமாகிய எழுநிலத்தும் தோன்றிய செய்யுளை ஆராயின் அடிவரையின்றி வரும் இலக்கணத்தன ஆறாம் என்றவாறு' என்பது பேராசிரியர் உரை. முன்னால் அடிவரையறையுள்ள செய்யுட்களுக்குரிய இலக்கணத்தைக் கூறியிருக்கிறார் தொல்காப்பியர். இப்போது அடிவரையறை இல்லாதன இன்னவை என்று சொல்ல வருகிறவர், முதலில் அவை ஆறு என்று தொகுத்துக் கூறினார். கூறும்போது: "ஆறென மொழிப" என்றார். 'இந்த ஆறு என்ற பகுப்பு நெடுங்காலமாகப் புலவர் உலகத்தில் வழங்கி வருவன' என்ற கருத்தை 'மொழிப' என்பது காட்டும்; மொழிப-புலவர்கள் சொல்வார்கள். இவ்வாறு தோற்றுவாய் செய்துவிட்டு அந்த ஆறு வகைகளையும் ஒரு சூத்திரத்தில் சொல்கிறார்.
"அவைதாம்
நூலி னான, உரையி னான,
நொடியொடு புணர்ந்த பிசியி னான,
ஏது நுதலிய முதுமொழி யான,
மறைமொழி கிளந்த மந்திரத் தான,
கூற்றிடை வைத்த குறிப்பி னான," [2]
--------------
[1]. செய்யுளியல், 164. [2]. செய்யுளியல், 165.
--------
இந்தச் சூத்திரத்தில் நூல், உரை, பிசி, முதுமொழி, மந்திரம், குறிப்பு மொழி என்னும் ஆறு சொல்லப்படுகின்றன. நூல் என்பது இலக்கணம்; அது புலவர் இயற்றுவது. உரை என்பது உரைநடை அல்லது வசனம். பிசி என்பது விடுகதை அல்லது புதிர். முதுமொழி என்பது பழமொழி. மந்திரம் என்பது காமாலை மந்திரம் முதலியன போலத் தமிழிலே வழங்கிய மந்திரம். குறிப்பு மொழி என்பது இத்தனையிலும் சேராமல் குறிப்பால் பொருளை உணர்த்தும் வகை.
இவை அனைத்தும் பலரிடம் பலகால் வழங்கியமையின் இலக்கண நூலில் சொல்லப் பெறும் இலக்கியங்களாயின. இவற்றில் நூல், எழுதப்பெற்ற புலவர் படைப்பு. உரை, புலவர் படைப்பிலும் வாய் மொழியிலும் வழங்குவது. ஏனைய அனைத்தும், எழுதப்பெறாமல் ஒருவர்பால் மற்றொருவர் கேட்டுணர்ந்து செவி வழியாகவே வருவன. 'நொடியொடு புணர்ந்த பிசியும்' ஏது நுதலிய முதுமொழியும், மறைமொழி கிளந்த மந்திரமும் கூற்றிடைனவத்தை குறிப்புமென நான்கும் வழக்கு மொழியாகியும் செய்யுளாகியும் வருதலின் அவற்றுட் செய்யுளையே கோடற்கு . . . . . . . . ." என்று கூறுவார் பேராசிரியர். செய்யுளில் வந்தவற்றிற்கே இங்கே இலக்கணம் அமைக்கிறார் தொல்காப்பியர் என்பது அவர் கருத்து. இலக்கியங்களில் இந்த நான்கு வகையும் மிகுதியாகக் காணப்பெறவில்லை. வழக்கு மொழியில் இருந்தாலும் மக்கள் அவ்வப்போது பேசி மறக்கும் பேச்சைப் போலன்றி அடிப்பட்ட வழக்காக இடந்தோறும் காலந்தோறும் பரவி நிற்பதால் அவற்றையும் ஒரு வகையில் இலக்கிய மதிப்புடையனவாகக் கருதியே தொல்காப்பியர் அவற்றைச் சொன்னார். அவர் காலத்துக்கு முன்பே இந்த ஆறையும் தனியாகப் பார்த்து வகை பண்ணினார்கள் புலவர்கள் என்பதை 'மொழிப' என்ற குறிப்பு உணர்த்துவதை முன்பு பார்த்தோம். பேராசிரியர், இவை எழுதப்பெறும் இலக்கியத்துக்குரிய இலக்கணம் என்று சொன்னாலும், வழக்கு மொழியிலும் வழங்கும் என்பதையும் சொல்கிறார். அந்த அளவேனும் அவர் நாடோடி இலக்கியத்தை நினைவில் வைத்திருக்கிறார் என்பதை நாம் உளங்கொள்ள வேண்டும்.
பாமரர்களிடையே வாய் மொழியாக வழங்கும் இத்தகைய இலக்கிய வகைகளை மேல்நாட்டினர் 'பாமரர் இலக்கியம்' ( Folklore ) என்று கூறுவார்கள். நாடோடிப் பாடல்கள், நாடோடிக் கதைகள், பழமொழிகள் முதலியவை அந்தப் பரப்பில் அடங்கும். இங்கே தொல்காப்பியர் ஆறாகப் பகுத்துக் கூறியவற்றில் வழக்கு மொழியில் வழங்கும் நான்கில் மூன்று நாடோடி இலக்கிய வகையையே சார்ந்தன. பிசி, முதுமொழி, குறிப்பு மொழி என்பன அவை. உரை என்ற பகுதியின் இலக்கணத்தைச் சொல்லுமிடத்தில், அதை நான்காக்குவார். அவற்றில்,
"பொருள்மர பில்லாப் பொய்ம்மொழி யானும
பொருளொடு புணர்ந்த நகைமொழி யானும்" [1]
என்று வரும் இருவகையும் நாடோடிக் கதைகளைப் பற்றியனவே.
பண்ணத்தி
இப்படிப் பண்டையோர் வகுத்த வகைகளைக் கூறிய பிறகு தொல்காப்பியர் புதிதாகப் பண்ணத்தி என்ற ஒன்றின் இலக்கணத்தைக் கூறுகிறார். அடிவரையறையில்லாத செய்யுட்களைக் கூறிவிட்டு இதைக் கூறுவதனால், இதுவும் அடிவரையறையில்லாதது என்று கொள்ளவேண்டும். அன்றியும், வழக்கு மொழியாக நிலவும் நான்குக்குப் பின் சொல்வதனால், இதையும் வாய் மொழியிலக்கிய வகையில் சேர்ப்பதுவே பொருத்தமாக இருக்கும்.
தொல்காப்பியர் கூறுவதைப் பார்க்கலாம்.
"பாட்டிடைக் கலந்த பொருள வாகிப்
பாட்டின் இயல பண்ணத்தி இயல்பே" [2]
என்பது சூத்திரம். இதற்கு, 'பழம்பாட்டினூடு கலந்த பொருளே தனக்குப் பொருளாகப் பாட்டும் உரையும் போலச் செய்யப்படுவன பண்ணத்தி என்றவாறு' என்று பேராசிரியர் உரை எழுதியிருக்கிறார். பின்பு,
-----------
[1]. செய்யுளியல், 173. [2]. செய்யுளியல், 180.
-------
'மெய் வழக்கல்லாத புற வழக்கினைப் பண்ணத்தி என்ப, இஃது எழுதும் பயிற்சியில்லாத புறவுறுப்புப் பொருள்களைப் பண்ணத்தி யென்ப வென்பது. அவையாவன: நாடகச் செய்யளாகிய பாட்டு மடையும் வஞ்சிப் பாட்டும், மோதிரப் பாட்டும் கடகண்டும் முதலாயின. அவற்றை மேலதே போலப் பாட்டென்னாராயினர், நோக்கு முதலாயின உறுப்பு இன்மையின் என்பது. அவை வல்லார் வாய்க் கேட்டுணர்க'
என்று பண்ணத்தியைப் பற்றிய சில இயல்புகளைக் கூறியுள்ளார். அவ்வுரையிலிருந்து பண்ணத்தி என்பது முன்பே சிலவற்றிற்கு வழங்கிய பெயரென்றும், அந்தப் பெயர் ஒப்புமை பற்றி இங்கே சுட்டப் பெறும் இலக்கிய வகைக்கு வந்ததென்றும் தெரிய வருகிறது. 'மெய் வழக்கல்லாத புற வழக்கினைப் பண்ணத்தி என்ப' என்று தமிழ்நாட்டில் இருந்த ஒரு வழக்கைப் பேராசிரியர் குறிக்கிறார். அது இன்னது என்று திட்டமாகத் தெரியவில்லை. மெய் வழக்கு என்பது உண்மை வரலாற்றையும், புற வழக்கு என்பது கற்பனையையும் குறித்தல் கூடும். கட்டுக் கதைகளைச் சொல்லும்போது, "பொருள் மரபில்லாப் பொய்ம்மொழி" என்று குறித்தார் தொல்காப்பியர். அது உரை நடையில் வருவது. அது போன்ற கற்பனையைப் பண்ணத்தியென்று அக்காலத்தில் சொல்லியிருத்தல் கூடும்.
அடுத்தபடி, 'இஃது எழுதும் பயிற்சியில்லாத புறவுறுப்புப் பொருள்களைப் பண்ணத்தி என்ப' என்று கூறுகிறார் உரைகாரர். வாய் மொழியாக வருவது, எழுதப் பெறாதது என்பதைக் குறிக்கவே இவ்வாறு எழுதினர் போலும்.
பிறகு பண்ணத்திக்கு உதாரணம் கூறும்போது, நாடகச் செய்யுளாகிய பாட்டுமடை, வஞ்சிப் பாட்டு, மோதிரப் பாட்டு, கடகண்டு என்பவற்றைச் சொல்கிறார். கூத்தில் இடையிடையே பாடும் பாட்டையே நாடகச் செய்யுளாகிய பாட்டுமடை என்று குறிக்கிறார். வஞ்சிப் பாட்டு என்பது ஓடப் பாட்டு; இன்றும் மலையாளத்தில் ஓடப் பாட்டை வஞ்சிப் பாட்டு என்று வழங்குகிறார்கள். மோதிரப் பாட்டு, கடகண்டு என்பவை அக்காலத்தில் வாய் மொழியாக வழங்கியவை போலும்.
கவிஞர்களின் பாட்டிலே வரும் பொருள் இந்தப் பண்ணத்தியிலும் வரும்; ஆனால் அதில் வருவது போலத் தெளிவும் தொடர்பும் இரா. அதனால், "பாட்டிடைக் கலந்த பொருளவாகி" என்று இலக்கணம் கூறினார். இதுவும் ஓசையாலும் தாளத்தாலும் பாட்டென்றே சொல்லத்தக்கது; ஆனால் பாட்டைப்போல வரையறை செய்ய முடியாதது. அதனால், "பாட்டின் இயல" என்றார். இந்த இரண்டு இலக்கணங்களும் நாடோடிப் பாடல்களுக்கு உரியன. ஆதலின், பண்ணத்தி என்ற பெயரால் தொல்காப்பியர் குறிக்கும் இலக்கிய வகை நாடோடிப் பாடல்களே என்று கொள்வது பொருத்தமென்று தோன்றுகிறது. பண்ணத்தி ( பண் நத்தி ) என்ற சொல்லுக்கு, 'பண்ணை விரும்புவது' என்று பொருள். இசைப்பாட்டில் வரையறையான பண் அமைந்திருக்கும்; இப் பாட்டிலும் இன்னோசை இருப்பினும் இசைப் பாட்டுக்குரிய வரையறையில்லை. ஆதலின் பண்ணமைந்த பாடல் என்னாமல் பண்ணத்தி என்றார்.
இசைப் பாட்டைப் போன்றது; ஆனால் அதுவேயன்று; இரண்டிலும் இன்னிசை உண்டு. கவியைப் போன்ற பொருளை உடையது; ஆனால் அது அன்று; அந்தப் பொருள் தொடர் பின்றி இடையிடையே விட்டு விட்டு வரும். பாட்டைப் போன்ற ஓசை உடையது; ஆனால் வரையறையில்லை. இந்த மூன்று தன்மைகளையும் பண்ணத்தி என்ற பெயரும், பாட்டிடைக் கலந்த பொருள என்ற இலக்கணமும், பாட்டின் இயல என்பதும் புலப்படுத்துகின்றன.
இந்த இலக்கணங்களாலும், வாய் மொழியாக வழங்குவனவற்றோடு சார்த்திச் சொன்னமையாலும் பண்ணத்தியென்பது நாடோடிப் பாடல்களையே குறிப்பது என்று கொள்ளலாம்.
மேலே, பண்ணத்தியைப் பற்றித் தொல்காப்பியர் மூன்று சூத்திரங்களைக் கூறுகிறார்.
"அதுவே தானும் பிசியொடு மானும்."
"அடிநிமிர் கிளவி யீரா றாகும்."
"அடியிகந்து வரினும் கடிவரை யின்றே." [1]
என்பன அவை.
'அந்தப் பண்ணத்தியென்பது பிசியோடு ஒத்து வரும்; அடிகள் மிகுதியாகி வரும் பாட்டுப் பன்னிரண்டடியாக வரும்; அந்த அடிக்கணக்கில் மிக்கு வந்தாலும் நீக்குதற்குரிய தன்று' என்பது இவற்றின் பொருள். பெரும்பாலும் பன்னிரண்டடிகளுக்குள்ளே இப்பாடல்கள் அமையும் என்றும், சிறுபான்மை அந்த அளவுக்கு மேலும் வருமென்றும் தெரிகிறது.
'பிசியொடு மானும்' என்பதனை, 'அதனை ஒத்தலாவது அதுவும் செவிலிக்குரித் தென்றவாறு. பிசியொடும் என்ற உம்மையால், "பொருளொடு புணராப் பொய்ம்மொழி யோடும், பொருளொடு புணர்ந்த நகைமொழியோடும்" ஒக்குமென்று உணர்க' என்று பேராசிரியர் விளக்குகிறார்.
வாய் மொழிப் பாடல்களையும், புதிர்களையும், கதைகளையும் செவிலித் தாய்மார் தலைவனைப் பிரிந்த தலைவிக்குச் சொல்லிப் பொழுது போக்குவது வழக்கம். அதையே இவ்வுரைகாரர் குறிக்கிறார். பாட்டிமார்கள் இவற்றைச் சொல்வது எல்லா நாடுகளுக்கும் உரிய வழக்கமே யாகும்.
பிசியின் இலக்கணத்தை,
"ஒப்பொடு புணர்ந்த உவமத் தானும்
தோன்றுவது கிளந்தது துணிவி னானும்
என்றிரு வகைத்தே பிசிவகை நிலையே" [2]
என்று தொல்காப்பியர் கூறுகிறார். உவமையாகிய பொருளைக் கூறி மறைமுகமாகச் சொல்வது, வெளிப்படையாகத் தெளிவுபெறச் சொல்வது என்ற பிசிகள் இரண்டு வகையாகும். பண்ணத்தி பிசியோடொக்கும் என்று தொல்காப்பியர் சொல்வதைக் கொண்டு நாடோடிப் பாடல்களிலும் குறிப்பாகப் பொருளை உணர்த்துவன ஒருவகை யென்றும், வெளிப்படையாகப் பொருளை உணர்த்துவன ஒருவகை யென்றும் கொள்ளலாம்.
--------
[1]. செய்யுளியல், 181, 182, 183. 2. செய்யுளியல், 176
---------
இவ்வளவும் கூறியவற்றிலிருந்து தொல்காப்பியர் காலத்தில் வாய் மொழியாக வழங்கும் இலக்கியங்கள் புலவர்களின் கவனத்துக்குரியனவாக இருந்தனவென்றும், நாடோடிப் பாடல்களைப் பண்ணத்தியென்று வழங்கினரென்றும் தெரியவரும்.
---------------
3. சிலப்பதிகாரத்தில் கண்ட வரிப்பாடல்கள்
நாடோடிப் பாடல்களில் பல வகைகள் உண்டு. ஏற்றம் இறைத்தல், மீன் பிடித்தல், சுண்ணாம்பு குத்துதல் முதலிய தொழில்களைச் செய்பவர்கள் அத்தொழில்களால் உண்டாகும் அலுப்புத் தெரியாமல் பாடிக்கொண்டே அவற்றைச் செய்வார்கள். நெடுநேரம் தொழில் செய்வதனால் அவர்கள் பாடும் பாடல்கள் நீண்டனவாக இருக்கும். அவை ஒரு வகை. வண்டிக்காரன், இடையன், வீட்டில் இருக்கும் மகளிர் முதலியோர் பாடும் பாடல்கள் இன்பமாகப் பொழுது போக்குவதற்கு உதவுவன. அவை ஒரு வகை. கல்யாணத்தில் பாடும் பாடல்கள், யாரேனும் இறந்தால் பாடும் ஒப்பாரி, தெய்வத்தை வழிபடும்போது பாடுபவை முதலியன உணர்ச்சி மிக்கனவாக உள்ளவை. இவை ஒரு வகை. குழந்தைகளுக்கு விளையாட்டுக் காட்டும்போதும், சோறு ஊட்டும்போதும், தாலாட்டும் போதும் தாய்மார் முதலியோர் பாடுபவை ஒரு வகை. குழந்தைகளும் மகளிரும் விளையாடும்போது தாமே பாடும் அம்மானை, பலிஞ்சடுகுடு, கண்ணாமூச்சி முதலிய விளையாட்டுப் பாடல்கள் ஒருவகை. அரிய கருத்துக்களை உடையன வாய்ப் பாமரர்களல்லாதவர்களிடத்தில் வாய்மொழியாகவே வழங்கும் பாடல்கள் பல உண்டு; இவற்றில் சிறந்த தத்துவக் கருத்துக்கள் இருக்கும். இவை ஒரு வகை. கதை பொதிந்த பாடல்கள் ஒரு வகை.
இன்னும் பலவற்றைச் சொல்லலாம். ஆயினும் ஒருவாறு மிகுதியாக வழங்குபவற்றை எண்ணி மேலே கூறியபடி' (1) தொழில் செய்வார் பாடல், (2) இன்பப்பாடல் (3) உணர்ச்சிப் பாடல், (4) குழந்தைப் பாடல், (5) விளையாட்டுப் பாடல் (6) கருத்துப் பாடல், (7) கதைப்பாடல், என்று ஏழு பகுப்பாகப் பிரித்துக்கொள்ளலாம்.
வரிப் பாடல்கள்
சிலப்பதிகாரத்தில் வரிப் பாடல்கள் என்று சில பாடல்கள் வருகின்றன. அவை இளங்கோவடிகளால் இயற்றப் பெற்றவை. இயல்பாக இந்நாட்டில் வழங்கிய, பல வரிப் பாடல்களை அடியொற்றி அவர் அமைத்துக்கொண்டவை அவை என்றே சொல்ல வேண்டும். கானல்வரி, ஆற்றுவரி, சார்த்துவரி, முகமில் வரி, நிலைவரி, முரிவரி, திணைநிலைவரி, மயங்குதிணைநிலைவரி, சாயல்வரி, வேட்டுவவரி, ஆய்ச்சியர் குரவை, ஊர்சூழ்வரி, குன்றக்குரவை, அம்மானைவரி, கந்துகவரி, ஊசல்வரி, வள்ளைப்பாட்டு என்ற பாடல்கள் அதில் வருகின்றன. இவை பண்ணத்தியாகிய நாடோடிப் பாடல்களை நினைத்துப் பாடியவையே ஆகும். சில எடுத்துக் காட்டுக்களைக் கொண்டு இதை உணரலாம்.
அம்மானைவரி என்ற பாட்டு இளங்கோவடிகள் பாடி அமைத்தது. மாணிக்கவாசகர் பாடிய திருவாசகத்தில் திரு அம்மானை என்றே ஒரு பகுதியிருக்கிறது. மூவர் அம்மானை என்று ஒரு தனி நூல் உண்டு. கலம்பகம் என்ற பிரபந்தத்தில் அம்மானை என்பது ஓர் உறுப்பு. இவை யாவும் புலவர் பாடியவை; ஆயினும் மகளிர் பாடுவனவாக அமைந்தவை. தமிழ்நாட்டுப் பெண்கள் அம்மானைக் காய்களை வைத்துக்கொண்டு ஆடும்போது பல பாடல்களைப் பாடுவார்கள். அந்தப் பாடல்களைக் கேட்டு அந்த மெட்டில் அமைத்தவையே இப்பாடல்கள். அப்படியே மற்ற வரிப்பாடல்களுக்கும் நாடோடி இலக்கிய உலகத்தில் மூலம் இருப்பதை உணரலாம்.
நாடோடிப் பாடல்களின் உருவத்தை இலக்கியம் படைத்த புலவர்களும் எடுத்தாண்டார்கள் என்பதற்கு இப்போது கிடைப்பவற்றுக்குள் பழைய எடுத்துக்காட்டு இளங்கோவடிகள் சிலப்பதிகாரத்தில் பாடியுள்ள வரிப்பாடல்கள்.
வரிப்பாட்டின் இலக்கணம்
வரி என்பது ஒருவகைக் கூத்துக்கும், ஒருவகைப் பாடலுக்கும் பொதுவாக வழங்கும் பெயர். இரண்டிடத்தும் பாடல் உண்டு. வரிப் பாடலின் இயல்பை, 'வரிப் பாடலாவது பண்ணும் திறமும் செயலும் பாணியும் ஒரு நெறியின்றி மயங்கிச் சொல்லப்பட்ட எட்டன் இயல்பும் ஆறன் இயல்பும் பெற்றுத் தன் முதலும் இறுதியும் கெட்டு இயல்பும் முடமுமாக முடிந்து கருதப்பட்ட சந்தியும் சார்த்தும் பெற்றும் பெறாதும் வரும். அதுதான் தெய்வஞ் சுட்டியும் மக்களைப் பழிச்சியும் வரும்' [1] என்று சிலப்பதிகார அரும்பதவுரையாசிரியர் விளக்குவார். ஆற்று வரிக்கு உரை எழுதுவதற்குமுன் இவ்வாறு அவர் எழுதினார். சிலப்பதிகாரத்தில்,
"அரங்கும் ஆடலும் தூக்கும் வரியும்" [2]
"ஆடலும் வரியும் பாணியும் தூக்கும்" [3]
"நேரத் தோன்றும் வரியும் குரவையும்" [4]
"வரியும் குரவையும் சேதமும்" [5]
என்னும் இடங்களில் வரும் வரி என்னும் சொல் வரிப் பாடலையே குறித்து நிற்கின்றது.
வரிக்கூத்து
இனி வரிக் கூத்து என்பது ஒன்று உண்டு. அது வரிப் பாட்டோடு ஆடுவதாதலின் அந்தப் பெயர் பெற்றதென்று தோன்றுகிறது. அதன் இலக்கணத்தைப் பழைய சூத்திரம் ஒன்று தெரிவிக்கிறது.
"வரியெனப் படுவது வகுக்குங் காலைப்
பிறந்த நிலனும் சிறந்த தொழிலும்
அறியக் கூறி ஆற்றுழி வழங்கல்" [6]
என்ற அச்சூத்திரத்தை அடியார்க்கு நல்லார் மேற்கோளாகக் காட்டியிருக்கிறார். பிறிதோரிடத்தில், 'வரியாவது அவரவர் பிறந்த நிலத் தன்மையும் பிறப்பிற்கேற்ற தொழில் தன்மையும் தோன்ற நடித்தல்' [7] என்று உரைநடையில் இவ்விலக்கணத்தை அமைக்கிறார். சூத்திரத்தில், "அறியக் கூறி" என்றமையினால் பிறந்த நிலத்தின் தன்மையும் தொழில் தன்மையும் புனைந்த கோலத்தில் மட்டுமன்றிப் பாடும் பாட்டிலும் தோன்ற வேண்டும் என்பது பெறப்படும். குறி சொல்லும் குறத்தி மலைவளத்தையும் குறிகூறும் தன் தொழிலையும் புலப்படுத்திப் பாடுகிறாள். ஏற்றம் இறைப்பவன் தன் வயலின் இயல்பையும் தண்ணீர் இறைக்கும் தொழிலின் இயல்பையும் ஏற்றப் பாட்டில் பாடுகிறான். ஆதலின் அவை வரிப் பாட்டுகளாக அமைகின்றன.
---------
[1]. சிலப்பதிகாரம், 7 : ஆற்றுவரி, உரை. [2], சிலப். 10, கட்டுரை, 10.
[3]. சிலப் 14 : 150. [4]. சிலப், 23: கட்டுரை, 11. [5]. சிலப். நூற் கட்டுரை, 13.
[6]. சிலப். 3 : 24, அடியார் மேற், [7]. சிலப் 8 : 74-7, மேற்.
--------
இவ்வரிக் கூத்தில் விநோதக் கூத்து என்று ஒருவகை உண்டென்று தெரிகிறது. மேலே காட்டிய சூத்திரம் அந்த விநோதக் கூத்தையே குறிப்பது. 'இவ்வரி யென்பதனை நிலனும் தொழிலும் தோன்ற நடிக்கும் விநோதக் கூத்து என்பாரும் உளர்' [1] என்று அடியார்க்கு நல்லார் எழுதுவதிலிருந்து இது புலனாகிறது.
பல்வரிக் கூத்து
வேறு ஒரிடத்தில், 'இவ்வரி யென்பதனைப் பல்வரிக் கூத்தென்பாரும் உளர்' [2] என்று கூறி ஒரு பழைய பாடலை மேற்கோள் காட்டுகிறார்.
--------
[1]. சிலப். 14 : 150, உரை. [2]. சிலப். 3 : 13, உரை.
----------
அப்பாடல் வருமாறு:
"சிந்துப் பிழுக்கை யுடன்சந்தி யோர்முலை
கொந்தி கவுசி குடப்பிழுக்கை - கந்தன்பாட்
டாலங்காட் டாண்டி பருமணல் நெல்லிச்சி
சூலந் தருநட்டம் தூண்டிலுடன் - சீலமிகும்
ஆண்டி அமண்புனவே டாளத்தி கோப்பாளி
பாண்டிப் பிழுக்கையுடன் பாம்பாட்டி - மீண்ட
கடவுட் சடைவீர மாகேசங் காமன்
மகிழ்சிந்து வாமன ரூபம் - விகடநெடும்
பத்திரம் கொற்றி பலகைவாள் பப்பரப்பெண்
டத்தசம் பாரம் தருணிச்சம் - கத்து
முறையீண் டிருஞ்சித்து முண்டித மன்னப்
பறைபண் டிதன்புட்ப பாணம் - இறைபரவு
பத்தன் குரவையே பப்பறை காவதன்
பித்தனொரு மாணி பெரும்பிழுக்கை - எத்துறையும்
ஏத்திவரும் கட்களி யாண்டு விளையாட்டுக்
கோத்த பறைக்குடும்பு கோற்கூத்து - மூத்த
கிழவன் கிழவியே கிள்ளுப் பிறாண்டி
அழகுடைய பண்ணிவிக டாங்கம் - திகழ்செம்பொன்
அம்மனை பந்து கழங்காடல் ஆலிக்கும்
விண்ணகக் காளி விறற்கொந்தி - அல்லாத
வாய்ந்த தனிவண்டு வாரிச்சி பிச்சியுடன்
சாந்த முடைய சடாதாரி - ஏய்ந்தவிடை
தக்கபிடார் நிர்த்தம் தரிப்பாட்டுச் சாதுரங்கம்
தொக்க தொழில்புனைந்த சோணாண்டு - மிக்க
மலையாளி வேதாளி வாணி குதிரை
சிலையாடு வேடு சிவப்புத் - தலையில்
திருவிளக்குப் பிச்சி திருக்குன் றயிற்பெண்
டிருள்முகத்துப் பேதை இருளன் - பொருமுகத்துப்
பல்லாங் குழியே பகடி பகவதியாள்
நல்லார்தந் தோள்வீச்சு நற்சாழல் - அல்லாத
உந்தி அவிலிடி ஊராளி யோகினிச்சி
குந்திவரும் பாரன் குணலைக்கூத் - தந்தியம்போ
தாடுங் களிகொய்யும் முள்ளிப்பூ ஐயனுக்குப்
பாடும்பாட் டாடும் படுபள்ளி - நாடறியும்
கும்பீடு நாட்டம் குணாட்டம் குணாலையே
துஞ்சாத சும்மைப்பூச் சோனக - மஞ்சரி
ஏற்ற வுழைமை பறைமைமுதல் என்றெண்ணிக்
கோத்தவரிக் கூத்தின் குலம்."
இந்தப் பாடலில் பலவகை விளையாடல்கள் கூறப் பெறுகின்றன; அவை யாவும் பாட்டுப் பாடி ஆடுபவை. இப்பாட்டில் உள்ளவற்றில் இப்போது இலக்கியத்திலும் வழக்கிலும் சில வழங்குகின்றன. கொந்தி ( காய் கொந்தும் விளையாட்டு ), ஆண்டி ( ஆண்டிபாட்டு ), பாண்டி, பாம்பாட்டி, குரவை, கட்களி, கிள்ளுப் பிறாண்டி ( கில்லாப்பரண்டி ), அம்மனை, பந்து, கழங்கு, வண்டு, பல்லாங்குழி, தோள்வீச்சு, சாழல், அவலிடி, படுபள்ளி என்பவற்றை இன்றும் நினைப்பூட்டிக்கொள்ள இலக்கியமும் வழக்கும் உதவுகின்றன.
திருவாசகம், திவ்யப் பிரபந்தம், தத்துவராயர் பாடுதுறை முதலியவற்றில் நாட்டில் வழங்கிய வாய் மொழிப் பாடல்களை அடியொற்றிப் பெரியோர்கள் இயற்றிய பலவகைப் பாடல்களைக் காணலாம். டாக்டர் ஐயரவர்கள் ஒரு சொற்பொழிவில் இவற்றைத் தொகுத்துத் தந்திருக்கிறார்கள். [1]
--------
[1]. சங்கத் தமிழும் பிற்காலத் தமிழும், ப. 45.
----------
அவை வருமாறு.
அக்கைச்சி, அச்சோ, அப்பூச்சி, அம்மானை, ஆற்றுவரி, இம்பில், உந்தியார், ஊசல், எம்பாவை, கப்பற் பாட்டு, கழல், கந்துகவரி, காக்கை, காளம், கானல்வரி, கிளிப்பாட்டு, குணலை, குதம்பை, குயில், குரவை, குறத்தி, கூடல், கொச்சகச் சார்த்து, கோத்தும்பி, கோழிப் பாட்டு, சங்கு, சாயல் வரி, சார்த்து வரி, சாழல், செம்போத்து, தச்சராண்டு, தச்சாண்டி, தாலாட்டு, திணைநிலைவரி, திருவங்கமாலை, திருவந்திக் காப்பு, தெள்ளேணம், தோணோக்கம், நிலைவரி, நையாண்டி, பகவதி, படைப்பு வரி, பந்து, பல்லாண்டு, பல்லி, பள்ளியெழுச்சி, பாம்பாட்டி, பிடாரன், பொற்சுண்ணம், மயங்குதிணை நிலைவரி, முகச்சார்த்து, முகமில் வரி, முகவரி, மூரிச் சார்த்து, வள்ளைப்பாட்டு முதலியன. இவையன்றிச் சித்தர் பாடல்களில் வழங்கும் பலவகை இசைப் பாட்டுக்களும் நொண்டிச் சிந்து, சிந்து முதலியவைகளும் கும்மி கோலாட்டம் முதலியவைகளும் பல வகையான கண்ணிகளும் ஆனந்தக்களிப்பு, கீர்த்தனங்கள் முதலிய பலவும் இசைப்பாட்டுக்களைச் சேர்ந்தனவே.
ஐயரவர்கள் காட்டிய உருப்படிகளில் கீர்த்தனம் முதலிய சிலவற்றையன்றி மற்றவை யாவும் நாடோடி உலகத்திலிருந்து இலக்கியப் புலவர்கள் ஏற்றுத் தழுவி அமைத்தனவே யாகும்.
-------------
4. சங்க இலக்கியங்களில் உள்ள செய்திகள்
குறிஞ்சி
குறிஞ்சி நிலத்தில் இறைவனை வழிபடும் பூசாரியாகிய வேலன் முருகனைப் பாடி ஆவேச உருவத்தில் வரச் செய்கிறான். மறியை அறுத்து வெறியாட்டெடுக்கும்பொழுது முருகனைப் பரவிப் பாட்டு பாடுகிறான்.
- "அணங்கென உணரக் கூறி, வேலன்
இன்னியம் கறங்கப் பாடிப்
பண்மலர் சிதறிப் பரவுறு பலிக்கே" [1]
"வேற்றுப்பெருந் தெய்வம் பலவுடன் வாழ்த்தி." [2]
முருகனை வழிபடும் பூசாரிச்சியாகிய தேவராட்டி குறிஞ்சி நிலத்துக்குரிய குறிஞ்சிப் பண்ணில் அமைந்த பாடலைப்பாடுகிறாள்.
--------
[1]. நற்றிணை, 322: 10-12, [2]. குறுந்தொகை, 263 : 4.
---------
- "நறுமலைச் சிலம்பில் நன்னகர் வாழ்த்தி
நறும்புகை எடுத்துக் குறிஞ்சி பாடி
... ... ... ... ... குறமகள்
முருகியம் நிறுத்து" [1]
தினைக் கொல்லையில் குற மகளிர் கிளிகளைக் கடிவதற்காக ஒருவகைப் பாட்டைப் பாடுவர். அதைப் பிற்காலத்தில் ஆலோலம் என்பர்.
- "புள்ளார் இயத்த விலங்குமலைச் சிலம்பின்
வள்ளுயிர்த் தெள்விளி இடைஇடைப் பயிற்றிக்
கிள்ளை ஓப்பியும்" [2]
"கிளிகடி மகளிர் விளிபடு பூசல்" [3]
குற மக்கள் புலியொடு பொருகின்றனர். அப்போது அவர்களுக்குக் காயம் உண்டாகிறது. அதனால் உண்டாகும் வேதனை தணிவதற்காக அவர் மனைவியராகிய குறமகளிர் பாடுகின்றனர்.
- "கொடுவரி பாய்ந்தெனக் கொழுநர் மார்பில்
நெடுவசி விழுப்புண் தணிமார் காப்பென
அறல்வாழ் கூந்தற் கொடிச்சியர் பாடல்." [4]
குறமகளிர் தினையைக் குத்தும்போது பாடுகிறார்கள். அந்தப் பாட்டுக்கு வள்ளைப் பாட்டு என்று பெயர்.
"தினைகுறு மகளிர் இசைபடு வள்ளை" [5]
"பாவடி உரல பகுவாய் வள்ளை" [6]
" கொல்யானைக் கோட்டால்
வெதிர்நெற் குருவாம்நாம்
வள்ளை அகவுவம்வா, இகுளைநாம்
வள்ளை அகவுவம் வா." [7]
குறவர்கள் தம் பெண்டிரொடு குரவைக் கூத்தாடும்போது பாடுவர்.
"குறவர்தம் பெண்டிரொடு ... அயரும் குரவை."8
குறத்தியருள் கட்டுப் பார்க்கும் கட்டுவிச்சி மலைகளைப் பாடுவாள்.
_______________
[1]. திருமுருகாற்றுப்படை, 238-43. [2]. குறிஞ்சிப். 99-101
[3]. மலைபடு. 329 [4]. மலைபடு. 302-4
[5]. மலைபடு. 342. [6]. குறுந். 89; 1.
[7]. கலி. 42; 7-9. [8]. மலைபடு. 320-22.
-----------
"அகவல் மகளே அகவல் மகளே
... ... ... ... ...
இன்னும் பாடுக பாட்டே, அவர்
நன்னெடுங் குன்றம் பாடிய பாட்டே." [1]
பிறர் வீடுகளுக்குச் சென்று ஐயமேற்றுக் கிடைத்த தானியத்தைப் பலருக்கு ஈவது ஒருவகை விரதம் என்று தெரிகிறது. இதைத் திருமணம் நிகழ்வதற்குமுன் சிறு பெண்கள் மேற்கொள்வார்கள். அவ்வாறு பிறர் வீடு சென்று ஐயமேற்கும் போது அவர்கள் பல பாடல்களைப் பாடுவார்கள்.
- "பொய்தல மகளையாய்ப் பிறர்மனைப் பாடிநீ
எய்திய பலர்க்கீத்த பயம்." [2]
சிவராத்திரியிலும் ஸ்ரீஜயந்தியிலும் சிறு குழந்தைகள் எண்ணெய் முதலியவற்றைக் கேட்டுப் பாடும் பாடல்கள் இங்கே நினைவுக்கு வருகின்றன.
பாலை
பாலை நிலத்தில் வாழும் மக்கள் தம்முடைய தெய்வமாகிய துர்க்கையைப் பரவி வேட்டுவ வரி பாடுவதைச் சிலப்பதிகாரத்தின் வாயிலாக நாம் உணரலாம்.
முல்லை
முல்லை நிலத்தில் ஆயரும் ஆய்ச்சியரும் வாழ்கின்றனர். அவர்கள் தாம் வழிபடு கடவுளாகிய கண்ணனைப் பரவிக் குரவையாடிப்பாடுகிறார்கள். சிலப்பதிகாரத்தில் ஆய்ச்சியர் குரவை இருக்கிறது.
- "குரவை தழீஇயாம் மரபுளிப் பாடித்
தேயா விழுப்புகழ்த் தெய்வம் பரவுதும்" [3]
அவ்வாறு குரவை பாடும்போது ஆயன் ஒருவன் ஏறு தழுவிய சிறப்பையும் பாடுவதுண்டு.
"பாடுகம் வம்மின் பொதுவன் கொலையேற்றுக்
கோடு குறிசெய்த மார்பு." [4]
___________
[1]. குறுந். 23. [2]. கலி. 59; 16-7.
[3]. கலி. 103; 75-6. [4]. கலி. 104; 63-4.
-----------
மருதம்
மருத நிலத்தில் ஆடவரும் மகளிரும் இணைந்து ஆடிப்பாடுவார்கள்.
- "... ... ஒலிகொள் ஆயம்
ததைந்த கோதை தாரொடு பொலியப்
புணர்ந்துடன் ஆடும் இசையே." [1]
மகளிர் தாம் கூடிக் கைகோத்து ஆடுவதைத் துணங்கை என்பர். அவர்கள் ஆடும்போது அதற்குரிய பாடல்களைப் பாடுவார்கள்.
- "நினக்கொத்த நல்லாரை
நெடுநகர்த் தந்துநின்
தமர்பாடும் துணங்கையுள்
அரவம்வந் தெடுப்புமே." [2]
"முழவிமிழ் துணங்கை தூங்கும் விழவின்." [3]
நெய்தல்
நெய்தல் நிலத்தில் கேட்கும் பாடல்களின் ஒலியை ஒருங்கே மதுரைக் காஞ்சி சொல்கிறது. நீரை இறைப்பவர்களின் பாட்டொலி, ஏற்றம் இரைப்பார் ஓசை, பறவைகளை ஓட்டுகிறவர்களின் பாட்டு, பரதவர் மகளிர் ஆடும் குரவையில் பாடும் பாட்டு ஆகியவற்றை அங்கே காண்கிறோம்.
- "நீர்த்தெவ்வும் நிரைத்தொழுவர்
பாடுசிலம்பும் இசை, ஏற்றத்
தோடுவழங்கும் அகலாம்பியின்
கயனகைய வயல்நிறைக்கும்
மென்தொடை வன்கிழாஅர்
... ... ... ... .... ...
இரும்புள் ஓப்பும் இசையே, என்றும்
மணிப்பூ முண்டகத்து மணல்மலி கானல்
பரதவர் மகளிர் குரவையொ டொலிப்ப." [4]
அங்கும் மகளிர் தெய்வத்துக்குரிய பூசனையை இயற்றி வழிபட்டுப் பாடுகிறார்கள்.
____________
[1]. மதுரைக். 264-6. [2]. கலி 70 : 13-4.
[3]. அகநானூறு. 336 : 16. [4]. மதுரைக். 89-97.
----------
- "கணம்கெழு கடவுட் குயர்பலி தூஉய்
பரவினம் வருகம் சென்மோ, தோழி" [1]
என்பது நெய்தல் நிலத்துத் தலைவியின் கூற்று.
நெய்தல் நிலத்தில் ஊசலாடும் மகளிர் அதற்குரிய பாடல்களைப் பாடுகிறார்கள்.
"சேயுயர் ஊசற்சீர் நீஒன்று பாடித்தை." [2]
கலித்தொகையில் மடலேற்றத்தைப் பற்றிய செய்தி வரும் பாடல்களால், மடலால் குதிரை பண்ணி ஊர்ந்து வரும் ஆடவன் பாடுவதுண்டு என்ற செய்தி தெரிய வருகிறது.
"என்னானும் பாடெனிற் பாடவும் வல்லேன்
சிறிதாங்கே
ஆடெனின் ஆடலும் ஆற்றுகேன்; பாடுகோ." [3]
"அணிநிலைப் பெண்ணை மடலூர்ந் தொருத்தி
அணிநலம் பாடி வரற்கு." [4]
"வருந்தமா வூர்ந்து மறுகின்கட் பாட." [5
சங்க காலத்து நூல்களுக்குப் பின் எழுந்த காப்பியங்களிலும் பிற நூல்களிலும் இவ்வாறு அவ்வத் திணையில் வாழும் மக்கள் தத்தமக்கு உரிய வகையில் பாடுவதாக வரும் இடங்கள் பல.
"பண்கள்வாய் மிழற்றும் இன்சொற் கடைசியர்.""[6]
"கொன்றை வேய்ங்குழற் கோவலர் முன்றிலிற்
கன்று றக்கும் குரவை." [7]
என்பனபோலப் பல எடுத்துக் காட்டுக்களைக் காட்டலாம்.
மேலே கூறிப் போந்தவற்றிற் குறிப்பிக்கப்பெறும் பாடல்கள் யாவும் நாடோடிப் பாடல்களே. இத்தகைய பாடல்களில் நெஞ்சைப் பறிகொடுத்ததாகப் பாரதியார் குயிற் பாட்டில் பாடுகிறார்.
"ஏற்றநீர்ப் பாட்டின் இசையினிலும், நெல்இடிக்கும்
கோற்றொடியார் குக்குவெனக் கொஞ்சும் ஒலியினிலும்
சுண்ணம்இடிப் பார்தம் சுவைமிகுந்த பண்களிலும்
பண்ணை மடவார் பழகுபல பாட்டினிலும்
____
[1]. நற். 358 : 6-7. [2]. கலி. 131 : 24.
[3]. கலி. 140 : 13-4. [4]. கலி. 141 : 5-6.
[5]. கலி. 141 : 22. [6]. கம்ப. நாட்டுப். 10.
[7]. கம்ப. நாட்டுப். 34.
---------
பிரபந்தங்கள்
- வட்டமிட்டுப் பெண்கள் வளைக்கரங்கள் தாமொலிக்கக்
கொட்டி இசைத்திடுமோர் கூட்டமுதப் பாட்டினிலும்
... ... ... ... ... ... ... ... ...
நெஞ்சைப் பறிகொடுத்தேன் பாவியேன்." [1]
கம்பர் ஏற்றக்காரன் முதல்நாள் பாதியில் விட்ட பாட்டை மறுநாள் அவன் வாயிலாகக் கேட்குமட்டும் எவ்வளவு முயன்றும் முடிக்க முடியாமல் அல்லலுற்றாரென்று ஒரு வரலாறு வழங்குகிறது. [2]
"ஏற்றப் பாட்டிற்கு எதிர்ப்பாட்டில்லை, பூசாரி பாட்டிற்குப் பின் பாட்டில்லை" என்ற பழமொழி அந்தப் பாடல்கள் தாமாக வருமேயன்றிப் புலமையால் அமைவனவல்ல என்பதைப் புலப்படுத்துகிறது.
இலக்கணப் புலவராகிய தொல்காப்பியர் நாடோடிப் பாடல்களைப் பண்ணத்தி யென்று கூறி இசை வகுத்தார். இலக்கியப் பெரும் புலவர்கள் அப் பாடல்களில் மனம் செலுத்தி இன்புற்று அவற்றைப் பற்றித் தம் நூல்களில் கூறினார்கள்; அவற்றைப் போன்ற அமைப்பை வைத்துப் பல பாடல்களைப் பாடினார்கள். இதுவரையில் கூறியவற்றிலிருந்து இவை தெள்ளத் தெளிய விளங்கும்.
நாடோடிப் பாடல்களை அடியொற்றிப் பாடிய பல பாடல்கள் நாளடைவில் தனிப் பிரபந்தமாக வழங்கலாயின. குறத்தியின் பாட்டிலிருந்து குறம் எழுந்து, பின்பு குறவஞ்சி எழுந்தது. பள்ளர்கள் பாடும் குலவைப் பாட்டு முதலியவற்றிலிருந்து பள்ளேசலும் பள்ளும் தோன்றின. தாலாட்டிலிருந்து தனியே தாலாட்டு நூல்கள் உண்டாயின. தாலாட்டு உருவத்தில் கீதாசாரத் தாலாட்டு என்ற நூல் ஒன்று தமிழில் உண்டு. பிள்ளைத் தமிழில் வரும் தாலப் பருவமும் குலசேகரப் பெருமாள் சக்கரவர்த்தி திருமகனைப்பாடும் தாலாட்டும் இந்த வகையிலே எழுந்தன. "அம்புலிமானே வாவா" என்று குழந்தைகளுக்கு விளையாட்டுக் காட்டும் பாட்டைப் பார்த்து அம்புலிப் பருவம் எழுந்தது. ஓடப் பாட்டைப் பார்த்துப் பல புலவர்கள் ஓடப்பாட்டைப் பாடினர்.
___________
[1]. குயிற் பாட்டு, 3 : 35-44.
[2]. இதன் விரிவை. "புது மெருகு" ( கி. வா. ஜ. ) என்னும் புத்தகத்திற்காண்க.
-----------
பல புலவர்கள் கும்மி பாடியிருக்கிறார்கள். அது நாடோடிப் பாடலாக முளைத்துப் பின்பு புலவர் படைப்புக்குள்ளும் புகுந்து கொண்டது. கோபாலகிருஷ்ண பாரதியார் பாடிய சிதம்பரக் கும்மியும், அருட்பிரகாச வள்ளலார் பாடிய கும்மிகளும், வாலைக் கும்மி முதலிய வேறு பல கும்மிகளும் எழுவதற்கு ஆதியில் உருவான நாடோடிக் கும்மிகளே வழிகாட்டிகள்.
நாடோடிப் பாடல்களுக்கென்று சில சிறப்பான இயல்புகள் உண்டு. ஒரு குறிப்பிட்ட பாடலை முதல் முதலில் யாரேனும் ஒருவர் இயற்றி யிருக்கத்தான் வேண்டும். அவர் இலக்கியப்புலமை படைக்காவிட்டாலும் மற்றப் பாமரர்களைப்போல் இல்லாமல் ஓரளவு சொல்வன்மை உடையவராகவே இருப்பார். கூலி வேலை செய்யும் பெண்கள் தம்மிடம் உள்ள இயற்கையான ஆற்றலால் அவ்வப்போது பாடல்களைப் பாடுவதும் உண்டு. இலங்கையில் மட்டக் களப்பு என்னும் பகுதியில் இன்றும் இவ்வாறு பாடல்கள் முளைக்கின்றன. எதுகை, மோனை, ஓசை என்னும் மூன்றும் தெரிந்தவர்கள் பாடல்களைப் பாடிவிடலாம்.
எதுமை மோனை
எதுகை மோனை என்பவை தமிழ்நாட்டு மக்களுக்கு இயல்பாகவே கைவரப் பெற்றவை என்றே சொல்லவேண்டும். "மானங் கெட்டவளே - மரியாதை கெட்டவளே, ஈனங் கெட்டவளே - இடுப் பொடிந்தவளே" என்ற வசவில்கூட எதுகையும் மோனையும் இருக்கின்றன. அடிமுதலில் எதுகை வருவதென்பது தமிழுக்கே அமைந்த தனிச்சிறப்பு. பேச்சு வழக்கில் எத்தனையோ தொடர்கள் எதுகைச் சிறப்புடையனவாகப் புரளுகின்றன. அக்கிலி பிக்கிலி, அக்கம் பக்கம், அசட்டுப் பிசட்டு, அடிதடி, அமட்டல் குமட்டல், ஆசாரம் பாசாரம், ஏழை பாழை, கண்டதுண்டம், காமா சோமா, ஜபதபம் என்பவைபோல உள்ளவற்றைக் காண்க. அப்படியே மோனை நயம் அமைந்த தொடர்களுக்கும் குறைவில்லை. அல் அசல், ஆடி அமாவாசை, கல்யாணம் கார்த்திகை கொள்வினை கொடுப்பினை, பற்றுப் பாத்திரம், கோயில் குளம், தோப்புத் துரவு முதலியவற்றைக் காண்க. பேச்சு வழக்கில் தண்ணீர் பட்ட பாடாக வழங்கும் எதுகை மோனைகள் பழமொழிகளில் சிறப்பாக அமைந்திருப்பது வியப்பன்று. 'அக்கரைக்கு இக்கரை பச்சை', அகதியைப் பகுதி கேட்கிறதா?', 'அகம் ஏறச் சுகம் ஏறும்', 'ஒன்றைப் பெற்றாலும் கன்றைப் பெறு', 'குட்டையில் ஊறிய மட்டை' என்பனபோல ஆயிரக்கணக்கான பழமொழிகளில் எதுகை அமைந்திருக்கிறது. அப்படியே, 'சிங்கத்தின் காட்டைச் சிறுநரி வளைத்தாற்போல' 'சூலிக்குச் சுக்குமேல் ஆசை', 'தலை ஆட்டித் தம்பிரான்', 'தீயில் இட்ட நெய் திரும்புமா?', 'பெண்சாதி கால்கட்டு, பிள்ளை வாய்க்கட்டு', 'மனப்பால் குடித்து மாண்டவர் அநேகர்' என்பன போன்றவற்றில் மோனை நயத்தைக் காணலாம்.
நாடோடிப் பாடல்களில் குழந்தைகள் விளையாடும்போது பாடும் பாடல்களிலே ஒன்றும் இல்லாவிட்டாலும் எதுமை நயமும் மோனை யமைதியும் உள்ள பல பாடல்கள் உண்டு. அந்த இரண்டும் குழந்தைகளுக்கு இன்பத்தை உண்டாக்குகின்றன.
கண்ணாம் கண்ணாம் பூச்சாரே
காது காது பூச்சாரே1
என்பது கண்ணாமூச்சி விளையாட்டுப் பாடல். கண்ணை மூசுதல் என்றால் கண்ணை மூடுதல் என்று பொருள். கண் மூசி என்பது கண்ணா மூச்சி ஆகிப் பிறகு கண்ணாம்பூச்சி என்றும் வழங்குகிறது. இந்தப் பாட்டில் பொருள் சிறிதளவே இருக்கிறது. ஆனால் எதுகை மோனை அமைதியே சிறப்பாக இருக்கிறது.
தத்தக்கா புத்தக்கா
தவலைச் சோறு
நெற்றிமா நெருங்கமா
பச்சை மரத்திலே பதவலை கட்டப்
பன்றி வந்து சீராடப்
பறையன் வந்து நெல்லுக் குத்தக்
குண்டுமணி சோறாக்கக்
குருவி வந்து கூப்பிடுது! [1]
இந்தப் பாட்டில் சொற்களுக்குப் பொருள் இருந்தாலும் அந்தப் பொருள் தொடர்ச்சியாக இல்லை; ஆனாலும் எதுகையினாலும் மோனையினாலும் ஓசையழகு அமைந்திருக்கிறது.
__________
[1]. மலையருவி, ப. 260.
---------
வெத்தலைக் கட்டு விரியக் கட்டு
தோட்டத்துக் காரனைப் புடிச்சுக் கட்டு [1]
என்பதிலும் அந்த இயல்பையே காணலாம்.
ஓசை அமைதி
இலக்கியங்களில் நால்வகைப் பாக்களும் அவற்றின் இனங்களும் அமைந்திருக்கின்றன. நாடோடிப் பாடல்களில் பெரும்பாலும் கண்ணிகளும் சிந்துகளும் பயின்று வருகின்றன. பல பாடல்களில் ஏதோ ஒருவகையில் ஒழுங்கான ஓசை அமைதி இருக்கிறது. சில வகையான பாடல்களுக்கு இன்ன ஓசைதான் என்ற மரபு அமைந்திருக்கிறது. தெம்மாங்கு என்பது ஒரு குறிப்பிட்ட ஓசையமைதியோடு இருக்கிறது. தாலாட்டு, ஏற்றப் பாட்டு, ஒப்பாரி, கும்மி, ஓடப் பாட்டு முதலியவற்றிற்கும் திட்டமான உருவங்கள் அமைந்திருக்கின்றன. இன்ன பாட்டிற்கு இன்னதுதான் இலக்கணம் என்று புலமையுலகத்து வாய்பாட்டிலே சொல்ல இயலாவிட்டாலும் காதிலே கேட்டால் இன்ன பாட்டு என்று பழக்கத்தால் தெரிந்து கொள்ளலாம். இலக்கியங்களில் வரும் பாக்களுக்கும் இந்த இலக்கணம் பொருந்தும். பேராசிரியர் பாவைப்பற்றிச் சொல்லுகையில், 'பாவென்பது, சேட்புலத்திருந்த காலத்தும் ஒருவன் எழுத்தும் சொல்லும் தெரியாமற் பாடம் ஓதுங்கால், அவன் சொல்லுகின்ற செய்யுளை விகற்பித்து இன்ன செய்யுள் என்று உணர்தற் கேதுவாகிப் பரந்துபட்டுச் செல்வதோர் ஓசை' [2] என்று கூறுவதிலிருந்து இது புலனாகும்.
சொற்கள்
நாடோடிப் பாடல்களில், வழக்கில் மாத்திரம் வழங்கும் சொற்களும், சிதைந்த சொற்களும் மிகுதியாக வரும்.
சந்தை விலைமதிப்பாள் சந்தனத்தைத் தோற்கடிப்பாள் [3]
துப்பட்டி வாங்கித் தந்தால் - மாமாடா
தோளிலே போர்த்திப் பார்ப்போம் [4]
அம்மத்தாளிடம் கொடுத்தேன் [5]
________
[1]. குழந்தை உலகம் ( கி. வா. ஜ. ), ப. 34.; [2]. தொல். செய்யுள் 1, உரை.
[3]. கஞ்சியிலும் இன்பம் ( கி. வா. ஜ. ), ப. 19.; [4]. மேற்படி ப. 23.
[5]. குழந்தை உலகம் ( கி. வா. ஜ. ), ப. 76.
------
சொற்கள்
என்பவற்றில் வரும் சந்தை, துப்பட்டி, அம்மத்தாள் என்ற சொற்களை இலக்கியங்களில் காணல் இயலாது. சி்தைந்து வழங்கும் சொற்களும் சொற்றொடர்களும் கணக்கு வழக்கின்றி நாடோடிப் பாடல்களில் வரும். அவற்றைத் திருத்தினால் எதுகை, மோனை, ஓசை ஆகியவை சிதைந்துவிடும்.
தென்ன மரத்துப் பாளைக்குள் ளேரெண்டு
தேரை இருந்து முழிக்குதுபார்
தென்ன லடிக்குது என்னை மயக்குது
தேன்மொழி யேமுத்து வீராயி [1]
என்ற முத்துவீராயி பாட்டில், தென்னல் என்று வருவது தென்றல் என்பதன் சிதைந்த உருவம். இயல்பான சொல்லாக அதைத் திருத்தினால் முன் அடியிலுள்ள தென்னமரம் என்பதற்கு ஏற்ற எதுகை அமையாது; ஆதலின் தென்னல் என்று இருப்பதே பொருத்தம்.
அண்ணைக்குச் சொன்ன சொல்லு
அம்புட்டையும் மறந்திட்டையோ
கண்ணாட்டி உன்னாலே கலங்குறேண்டி இந்தவேளை [2]
இதில் அன்றைக்கு என்று திருத்தினால் எதுகை நயம் போய்விடும்.
ஒத்தையிலே இருக்கிறேண்ணு
ஒருகாலும் நினைக்காதேடா
கத்திக்கிரை ஆகாதேடா [3]
என்பதில் 'ஒத்தையிலே' என்பதை 'ஒற்றையிலே' என்று மாற்றினாலும்,
சின்னக்குட்டி நாத்தனாள் - ஏலங்கிடி லேலோ
சில்லறையை மாத்தினாள் - ஏலங்கிடி லேலோ [4]
என்பதில் மாத்தினாள் என்பதை மாற்றினாள் என்று திருத்தினாலும் எதுகையழகு இல்லாமற் போய்விடும்.
இப்படியே மோனையிலும் வழக்குச் சொற்கள் அமைந்து மாற்ற முடியாமல் இருக்கும் இடங்கள் பல.
- பெரட்டாசி மாதத்திலே
பெரியகடை வீதியிலே [5]
_________
[1]. நாடோடி இலக்கியம் ( கி. வா. ஜ ), ப. 111.; [2]. மலையருவி, 71; 3.
[3]. மலையருவி, ப. 89; 35.; [4]. மேற்படி 136; 1.
[5]. மேற்படி 85; 10
--------
என்பதில் புரட்டாசி என்ற சொல் வாய்மொழியிலே சிதைந்த உருவமாகிய பெரட்டாசி என்று நின்று, பெரிய என்பதில் உள்ள முதலெழுத்தோடு ஒன்றி மோனையமைதி பெற்றிருக்கிறது. பெரட்டாசியைப் புரட்டாசி ஆக்கிவிட்டால், பெரிய என்பதைப் புரிய ஆக்க இயலுமா?
மோளங்களும் தாளங்களும் முழங்குதடி கோயிலிலே [1]
என்பதில் மேளம் மோளமாகியிருக்கிறது.
-
புள்ளையைப்போல் பொத்திப் பொத்திக் - கண்ணே நல்ல
பொறுமையோடே வளர்ப்பாங்களாம் [2]
என்பதில் பிள்ளை புள்ளையாகி யிருக்கிறது.
-
அடிதொடங்கி நுனிவரைக்கும் - கண்மணியே
அல்லாத்துக்கும் காசுதானாம் [3]
என்பதில் அல்லாத்துக்கும் என்பதை எல்லாவற்றிற்கும் என்று மாற்றினால் மோனை போய்விடும்.
சிதைந்த சொல்லைத் திருத்தப் புகுந்தால் ஓசை கெட்டுவிடுவதற்குச் சில உதாரணங்கள் வருமாறு:-
-
தமயந்தியைக் கட்டணுன்னு
சனிபகவான் பட்டபாடு [4]
-
பிச்சை கொடுக்க ணும்னாக் கூடச் சுண்டெலிப் பெண்ணே
பட்சமாய்க் கொடுக்க ணுண்டி சுண்டெலிப் பெண்ணே [5]
-
ஆடிருக்கு மாடிருக்கு - கண்ணே உனக்கு
அழகான வீடிருக்கு [6]
_________________
[1]. மலையருவி, 223; 6.; [2]. மேற்படி 243; 82.
[3]. மேற்படி 243; 89.; [4]. மேற்படி 92; 51.
[5]. மேற்படி 207; 54.; [6]. மேற்படி 222; 2
--------
இலக்கணத்துக்கு மாறு
இலக்கணத்துக்கு மாறாகப் பலவற்றை நாடோடிப் பாடல்களில் காணுகிறோம். பேச்சு வழக்கில் எவ்வாறு இலக்கண வழுக்கள் இருக்கின்றனவோ அப்படியே நாடோடிப் பாடல்களிலும் இருக்கின்றன. கொச்சை வார்த்தைகளும் இலக்கண வழுக்களும் பேச்சு மொழிக்கு இயல்பாகிவிட்டன; அவ்வாறே நாடோடிப் பாடல்களிலும் அவை இயல்பாகப் பொருந்திவிட்டன.
-
ராமரே துணைவா - ராகவரே தண்டம்
ரட்சிப்பதுன் பாரம் - இரண்டுடனே வாரீர் [1]
-
பயிரும் விளையாது பறவைகள் நாடாது
குடிக்கஜலம் கிடையாது குருவிகள் நாடாது [2]
திருப்பிச் சொல்லுதல்
நாடோடிப் பாடலைப் படித்துப் பார்ப்பதில் இன்பம் அவ்வளவு இராது. அதைப் பாடிக் கேட்கும்போதுதான் அதன் இசையும் தாள அமைப்பும் ஒருவிதமான கவர்ச்சியைத் தருவதைக் காணலாம். இலக்கியங்களில் ஒன்றையே திருப்பித் திருப்பிச் சொன்னால் அது கூறியது கூறல் என்னும் குற்றத்தின் பாற்படும். ஆனால் நாடோடிப் பாடல்களிலே சொன்னதையே மடக்கி மடக்கித் திருப்பிச் சொல்வது மரபு. கந்தருவ மார்க்கம் என்னும் இசைப்பாட்டு நெறியில் அடிகள் இடை மடக்கி வருவதைப் பார்க்கிறோம். இயற்றமிழில் கூறியது கூறலாக முடிவதே இசைத் தமிழ் உருப்படிகளில் இடை மடக்காக வந்து நயத்தைத் தருகிறது. கீர்த்தனங்களில் பல்லவி பலமுறை வருவது இசைப் பாட்டுக்கு இன்பம் உண்டாக்குகிறது. நாடோடிப் பாடல்களும் இசையோடு பாடப்படுவன ஆதலின் அவற்றில் மீட்டும் மீட்டும் சில சொற்றொடர்களும் அடிகளும் வருவது அவற்றிற்கு அழகு பயப்பதாக இருக்கிறது.
ரோடுஎல்லாம் கொழுத்தாடை
ரொம்பிக் கிடக்குதுபார் - ராசாத்தி
ரொம்பிக் கிடக்குதுபார்
________
[1]. நாடோடி இலக்கியம், ப. 28.; [2]. அல்லியரசாணி மாலை.
--------
-
நல்ல கரும்பு கட்டுக் கட்டா
நயமா விக்குதுபார் - ராசாத்தி
நயமா விக்குதுபார்! [1]
-
அன்னமே பொன்னம்மா
கண்ணிரண்டும் சோருதடி அன்னமேஏஏ
-
வாது செய்யாதடா
வந்தவழி போய்ச் சேரடாஆஆ [2]
_____________
[1]. மலை. ப. 45. ; [2]. மலை. 59.
-----------
மலையிலிருந்து கங்குகரையின்றி அணைப்பார் தடுப்பாரின்றி வேகமாக வீழும் அருவியைப் போலப் பாமர மக்களிடையே உணர்ச்சியும் இசையும் இணையப் பெருகி உலவும் நாடோடிப் பாடல்கள் அடங்கிய இந்தத் தொகுதிக்கு மலையருவி என்ற பெயர் புதியதாக அமைத்துக் கொண்டது. இதில் பதின்மூன்று வகையாகப் பிரித்த பகுதிகள் அடங்கியிருக்கின்றன.
கிராமங்களில் உள்ள மக்கள் பல பாடல்களைத் தெரிந்து கொண்டிருப்பார்கள். அவற்றை ஒருவர் பாடுவதும் அதற்கு எதிர்ப் பாட்டுப் பாடுவதும் வழக்கம். பந்தயம் வைத்துக்கொண்டு பாடுவதும் அதில் தோற்றால் சிறுமையுறுவதும் உண்டென்று தெரிகிறது.
-
பாட்டுக்குப் பாட்டறிவேன் - குட்டி
பலபாட்டு நான்அறிவேன்
எதிர்ப்பாட்டுப் பாடாவிட்டால் - நாக்கை
இழுத்துப்பிடித் தறுத்திடுவேன் [3]
-
பாடுறேண்டி உன்மேலே - குட்டி
பஞ்சவர்ணக் கிளியே பொண்ணே [4]
என்பதனால் ஆடவன் பெண்களைப் புகழ்ந்து பாடுவது ஒருவகை என்று புலனாகும். அப்படிப் பாடுகிறவன் பாடினால் அதைக் கேட்டு மகளிர் ஆடுவது உண்டு.
-------------
[3]. ப. 9 : 42. ; [4]. ப. 11 : 58.
--------
-
பாட்டுக்காரன் தாண்டிஅவன் - ஏலங்கிடி லேலோ
பாடப்பாட ஆடலாண்டி - ஏலங்கிடி லேலோ.[1]
அவ்வாறு பாடும் பாடல்களில் ஏலேலங்கிடிப் பாட்டு, தில்லாலங்கிடிப் பாட்டு, கள்ளன் பாட்டு, தெம்மாங்குப் பாட்டு, வண்டிக்காரன் பாட்டு என்று பலவகை உண்டு.
-
ஏலேலங்கிடிப் பாட்டுப்பாடி - ஏலங்கிடி லேலோ
எடுப்போமையா கருத்தா நாற்றை - ஏலங்கிடி லேலோ
தில்லாலங்கிடிப் பாட்டுப்பாடி - ஏலங்கிடி லேலோ
திருப்பித் திருப்பி நடுவோமையா - ஏலங்கிடி லேலோ
கள்ளப்பாட்டையும் கலந்து பாடி - ஏலங்கிடி லேலோ
நல்ல மனசா நடுவோ மையா - ஏலங்கிடி லேலோ
தெம்மாங்குப் பாட்டுப் பாடி - ஏலங்கிடி லேலோ
கம்மால் பண்ணவே மாட்டோ மையா - ஏலங்கிடி லேலோ
வண்டிக்காரன் பாட்டுப் பாடி - ஏலங்கிடி லேலோ
வழிவிலக மாட்டோ மையா - ஏலங்கிடி லேலோ [2]
என்னும் இடத்தில் அந்தப் பாட்டுக்களைப்பற்றித் தொழில் செய்யும் பெண்கள் சொல்லுகிறார்கள்.
திருடனாக நடித்துப் பாடும்போது பாடுவது கள்ளப் பாட்டு. அதைப்பற்றிய பேச்சுப் பின்னும் இரண்டு இடங்களில் வருகிறது.
-
கள்ளப் பாட்டுக் கற்றுக் கொண்டு
கணக்கா வந்தேனே - கன்னக்கோலைக்
கையில் எடுத்தேனே - கட்டிடத்தை
நாசம் செய்தேனே. [3]
மானா மதுரை மகராஜன் ராத்திரி
ஒருமணி தேட்டை - என்னைக்கண்டு
சிரிக்குது மூட்டை - வாயெடுத்துப்
படிப்பனே பாட்டை [4]
__________
[1]. ப. 134 : 93.; [2]. ப. 146 : 55-9.
[3]. ப. 192 : 3.; [4]. ப. 193 : 8.
-----------
'நீண்ட சாலையில் இரவில் வண்டிகள் ஒன்றன்பின் ஒன்றாகப் போகின்றன. பாரம் ஏற்றிக்கொண்டு செல்லும் அந்த வண்டிகள் மெல்ல மெல்ல நகர்கின்றன. மாடுகள் மெதுவாகச் செல்கின்றன. இயற்கையே தூக்கத்தில் ஆழ்ந்திருக்கும்போது அந்த வண்டித் தொடர் 'கடக் கடக்' என்ற சத்தத்தோடு மோனத்தைக் குலைத்துச் செல்கின்றது. வண்டிக்காரர்களுள் ஒருவன் நன்றாகப் பாடத் தெரிந்தவன். ராகதாள அறிவுடையவனென்று எண்ணிக் கொள்ளாதீர்கள். நாடோடி உலகத்துப் பாடல்களிலே அவன் வல்லவன். அந்த நள்ளிருளில் இருட்டின் கனத்தைக் கிழித்துக் கொண்டு புறப்படும் கணீரென்ற சாரீரம் அவனுக்கு இருக்கிறது. அவன் பாட ஆரம்பித்தால் எல்லா வண்டிகளும் அந்த இசையிலே ஒன்றிப்போய்விடும். வண்டிக்காரர் யாவரும் பேச்சை நிறுத்திப் பாட்டிலே லயித்து விடுவார்கள். சிலர் தம் கையில் உள்ள கயிற்றை வண்டியிலே கட்டிவிட்டுத் தூங்கிக்கூடப் போய்விடுவார்கள். மாட்டை விரட்டி ஓட்டவேண்டுமா? வழி மாற வேண்டுமா? ஒன்றுமே இல்லை. முதல் வண்டி போகும் போக்கைப் பின்பற்றி ரெயில் வண்டித் தொடரைப்போல அந்த வண்டிகள் அவ்வளவும் போய்க் கொண்டிருக்கின்றன.
'வண்டிக்காரன் பாடும் பாட்டை அவன் தோழர்கள் மாத்திரமா கேட்கிறார்கள்? அந்த மாடுகளும் காதை நெறித்துக் கொண்டு கேட்கின்றன. மாடுகளுக்குச் சங்கீத உணர்ச்சி உண்டென்று புத்தகங்களில் எழுதியிருக்கிறார்கள். அந்தச் சாலையில் நடுநிசியில் அந்த உண்மைக்குச் சாட்சி சொல்லுகின்றன, வண்டியை இழுக்கும் காளை மாடுகள். விடிய விடியப் பாடிக் கொண்டே இருந்தாலும் வண்டி இழுக்கிறோம் என்ற உணர்ச்சியே இல்லாமல் அவை நடந்துகொண்டே இருக்கும். வண்டிக்காரனுடைய பாட்டு அலையலையாக எழும்பிக் காளை மாடுகளை இழுத்துச் செல்கிறது.
'தெம்மாங்கு பாடுகிறான் அவன். தேன் பாங்கு என்பது அப்படித் தேய்ந்து மாறி வழங்குகிறதென்று சொல்வார்கள். தேன் எப்படி இனிக்கிறதோ அப்படி இனிக்கும் பான்மை அந்தப் பாட்டுக்கு உண்டாம். கட்டிளங் காளையாகிய வண்டிக்காரன் வண்டியிழுக்கும் காளைகளையும் மயக்கும்படியாகப் பாடும் பாட்டல்லவா அது?' [1]
இந்தப் புத்தகத்தில் தெம்மாங்கைப் பற்றிக் குறிப்பிடும் பாடல்கள் பல வருகின்றன.
______
[1]. கஞ்சியிலும் இன்பம், ப. 53, 54.
---------
-
இந்திரரைப் பார்த்துத்தான் நான் - சாமி
எடுத்து சொல்வேன் தெம்மாங்கைத்தான்.
தெம்மாங்குப் பாட்டுப்பாடிச் - சாமி
தெருத்தெருவாய்ப் போய்விட்டாலும் [1]
-
தில்லாலப் பாட்டு என்ன - கண்மணியே
தெம்மாங்குப் பாட்டு என்ன[2]
-
கலியாணப் பாட்டவுங்க
கனிவாய்த்தான் படிக்கையிலே. [3]
மாதா மனங்குளிரத் தானுமே - நல்ல
தாலாட்டுப் பாட்டெல்லாம் பாடுச்சாண்டி.[4]
கும்மிப் பாட்டுங் கூடப்பாடி - ஏலங்கிடிலேலோ
சும்மாட்டைத் தலையில் வைத்து - ஏலங்கிடிலேலோ.[5]
கும்மியென்ன கூட்ட மென்ன - கண்மணியே. [6]
கும்மி யடிக்கத் தாதி வேறே. [7]
முத்தே முத்தேநீ கும்மியடி - அடி
மோகன முத்தே கும்மியடி
கறுப்புக் கொசுவத்தைத் திருப்பிவச் சுக்கட்டும்
கண்ணாடி முத்தே கும்மியடி. [8]
கும்மியடிக்கிற பெண்டுகளா - ஒரு
கோளாறு சொல்கிறேன் கேளுங்கடி. [9]
கும்மி பாடிக் குப்பம் வருவாள்
எங்கள் முத்துமாரி. [10]
______
[1]. ப. 15 : 90, 91. ; [2]. 247 : 41.
[3]. ப. 96 : 76. ; [4]. ப. 321 : 7.
[5]. ப. 137 : 2.; [6]. ப. 247 : 40.
[7]. ப. 251 : 18.; [8]. ப. 290 : 8.
[9]. ப. 292 : 4.; [10]. ப. 312 : 8.
-----------
பாகம் II
ஆராய்ச்சி உரை
1. தெம்மாங்கு
இந்தப் புத்தகத்தில் முதலில் தெம்மாங்கு என்ற பகுதி இருக்கிறது. தெம்மாங்குக்கு ஒரே ஒரு மெட்டுத்தான் உண்டு; ஆனாலும் அதைப் பலவாறு தாளத்தை மாற்றிப் பாடுவதுண்டு. இப்பகுதியில் ஆணின் கூற்றாகவும் பெண்ணின் கூற்றாகவும் 206 கண்ணிகள் இருக்கின்றன. இந்தக் கண்ணிகளில் பொருள் தொடர்பு ஏதும் இல்லை. பல பல நிலையிலே உள்ள ஆண்களும் பெண்களும் பாடும் முறையிலே துண்டு துண்டாக அமைந்தவை இவை.
தன்னுடைய மாமனிடத்தில் காதல் கொண்டிருந்தாள் ஒரு பெண். அவனை மணக்க வேண்டுமென்ற ஆசையில் தன்னை அழகுபடுத்திக் கொண்டாள். தன் கூந்தலை மிகவும் பாதுகாப்பாக வளர்த்துக் கொண்டை போட்டு அழகு பார்த்தாள். அவள் காதல் வளர்ந்தது; கூந்தல் வளர்ந்தது; அழகும் வளர்ந்தது. ஆனால் விதி அவளுக்கும் அவள் மாமனுக்கும் குறுக்கே நின்றது. யாரோ ஒரு சோம்பேறிப் பயலுக்கு அவள் தன் கழுத்தை நீட்டும்படி ஆகிவிட்டது. அவள் உள்ளம் மறுகினாள். சோறாக்கும் இயந்திரமாக அவனிடம் தன் வாழ்நாள் முழுவதும் இருக்கும்படி முடிந்ததை எண்ணி எண்ணி ஏங்குகிறாள்.
ஒருநாள் அவள் மாமன் வருகிறான். அவன் உலகியலின்படி, "சௌக்கியமாக இருக்கிறாயா?" என்று கேட்கிறான். அப்போது அருகில் ஒருவரும் இல்லை.
சௌக்கியமா! அவளுக்குத் துயரம் பொங்கி வருகிறது. வெடித்துக்கொண்டு வருகிறது உணர்ச்சி.
-
ஆசைக்கு மயிர்வளர்த்து - மாமா
அழகுக்கொரு கொண்டை போட்டுச்
சோம்பேறிப் பயலுக்குநான் - மாமா
சோறாக்க ஆளானேனே. [1]
_____
[1.]பக்கம், 3 : 6.
----------
இலக்கியத்தில் இப்படி வருவது அரிது. ஆனால் உலகில் இவ்வாறு வெந்து மனம் புண்ணாகும் மெல்லியலார் இருக்கிறார்கள். அவர்கள் வாழ்வை உள்ளபடியே எடுத்துக்காட்டுகிறது இந்தத் தெம்மாங்கு.
மற்றொரு பெண், களவுக் காதலில் ஈடுபட்டிருக்கிறாள். இராக்காலத்தில் அவளைத் தேடிக்கொண்டு அவள் காதலன் வருவது வழக்கம். அன்று அவனை எதிர்பார்த்திருக்கிறாள். அவனை யாரும் அறியாமல் சந்திக்கவேண்டும். அதற்கு இடையூறாக நிலாப்பால்போலக் காய்கிறது. அதுகண்டு அப்பெண் வருந்துகிறாள்.
இத்தகைய காட்சியை இலக்கியங்களிலும் காணலாம். நிலவு வெளிப்பட வருந்தல் என்பது அந்தத் துறைக்குப் பெயர்.
-
"கருங்கால் வேங்கை வீயுகு துறுகல்
இரும்புலிக் குருளையின் தோன்றும் காட்டிடை
எல்லி வருநர் களவிற்கு
நல்லை அல்லை நெடுவெண் ணிலவே" [1]
சின்னஞ் சிறிய ஊரில் நிலவைக் கண்டு வருந்திய இளம் பெண், அந்த நிலவை வேண்டிக்கொள்வதாக ஒரு தெம்மாங்கு வருகிறது. அவள் மிகவும் பணிவோடும், "சாமி!" என்று மரியாதையோடும் நிலாவை அழைக்கிறாள். திங்களும் ஒரு தெய்வந்தானே? 'நீ கொஞ்சம் மறைந்துகொண்டால் ஆகாதோ?' என்று அவள் கேட்கிறாள்.
-
வெள்ளைவெள்ளை நிலாவே - சாமி
வெளிச்சமான பால்நிலாவே
கள்ள நிலாவேநீ
கருக்கலிட்டால் ஆகாதோ? [2]
-
வண்டியும் வருகுதடி - குட்டி
வடமதுரை டேசனிலே
தந்திபோய்ப் பேசுதடி - குட்டி
தம்புசெட்டி மெத்தையிலே. [3]
_________
[1]. குறுந். 47.; [2]. மலை. ப. 4 : 7. [3]. ப. 4 : 13.
--------
-
ஆறு சக்கரம் நூறுவண்டி - குட்டி
அழகான ரெயிலு வண்டி
மாடுகண்ணு இல்லாமல்தான் - குட்டி
மாயமாத்தான் ஓடுதடி. [1]
கூந்தலுக்கு இலக்கியங்களில் வரும் உவமைகள் பல உண்டு. தெம்மாங்குக்காரன் தான் போகும் சாலையிலே பார்த்த பொருளை உவமை கூறுகிறான்.
-
ஆலம் விழுதுபோலே - குட்டி
அந்தப் பிள்ளை தலைமயிரை
ஆளு ஒண்ணும் பார்க்காமல்தான் - குட்டி
ஆத்துறாளாம் ஆத்துக்குள்ளே. [2]
ஆலம் விழுது போலே
அந்தப் புள்ளை தலைமயிரு
தூக்கி முடிஞ்சிட்டாளாம்
தூக்கணத்தாங் கூடுபோலே. [3]
இந்தத் தெம்மாங்குப் பாடல்கள் மதுரைப் பக்கத்தில் வழங்கியவை என்பதற்கு வேறொரு சான்றும் கிடைக்கிறது.
-
கான மயிலேஉன்னைக் - குட்டி
கைவிடுவ தில்லையென்று
மீனாட்சி கோயிலிலே - குட்டி
வேட்டிபோட்டுத் தாண்டித் தாரேன். [4]
_______
[1]. ப. 5 : 15. ; [2]. ப. 7 : 32.
[3]. ப. 27 : 169.; [4]. ப. 12 : 67.
---------
-
ஈரோட்டுச் சாயச்சேலை - குட்டி
இருபத்து நாலுமுழம்
சுத்துக்குப் பத்தலேண்ணு - குட்டி
சுண்டுறாளாம் மூஞ்சியெல்லாம். [1]
ஆஸ்பத்திரியும் காபித் தண்ணியும் வந்த பிறகு பாடிய பாட்டு இது:
-
ஆஸ்பத்திரி மூலையிலே - குட்டி
ஆளடங்கும் சோலையிலே
காபித்தண்ணி தந்ததாலே குட்டி
கசக்குதடி என்வாய்பூரா. [2]
-
நாவல் பழமேஅடி - குட்டி
நான்பூசும் சந்தனமே
ஏலம் கிராம்பேகுட்டி - உன்னை
என்னசொல்லிக் கூப்பிடுவேன்? [3]
-
ஆல மரம்உறங்க
அடிமரத்துக் கிளிஉறங்க
உன்மடிமேல் நான்உறங்க
உலகம் பொறுக்கலையே? [4]
_______
[1]. ப. 14 : 82. ; [2]. ப. 15 : 89.
[3]. ப. 17 : 100., [4. ப. 21 : 131.
--------
-
வெற்றிலையைக் கையில்வச்சு
வெறும்பாக்கை நாக்கில்வச்சுச்
சுண்ணாம்பு ஜாடைசொல்லி
சுத்துறான்உன் அத்தைமகன். [1]
-
முட்டியிலே கூழுக்காய்ச்சி
மூடிவைக்கும் பண்ணைப்புரம்
அண்டாவிலே சோறாக்கி
அள்ளிவைக்கும் கூடலூரு. [2]
-
தண்ணி கருத்திருச்சு
தவளைச்சத்தம் கேட்டிருச்சு
புள்ளை அழுதிருச்சு
புண்ணியரே வேலைவிடு. [3]
இந்தப் பாடல்களில் நகைச்சுவைக்கும் பஞ்சம் இல்லை. குமரிகளைக் கண்டவுடன் ஒரு கிழவனுக்கு விறு விறுப்பு உண்டாகிறதாம்! அதை ஒரு பெண் நகைச் சுவைபடச் சொல்கிறாள்;
-
சுக்காங்கல்லுச் சரளைபோலே
சுரிச்ச கிழவன்வந்து
குமரிகளைக் கண்டுக்கிட்டுக்
கோதுறானாம் மீசைகளை. [4]
[1]. ப. 23 : 141. ; [2]. ப. 25 : 156.
[3]. ப. 25 : 160.; [4]. ப. 25 : 157.
----------
இதே சுவையமைய, ஒரு கிழவி குமரியாகக் காட்டிக்கொள்வதையும் மற்றொரு பாட்டுச் சொல்கிறது:
-
நாழிஎண்ணெய் தேச்சிட்டாலும்
நயனக்கொண்டை போட்டுட்டாலும்
குலுக்கி நடந்திட்டாலும்
குமரியாக மாட்டாய் நீ.[1]
இதில் உள்ள இரண்டாவது பகுதியில் ஒவ்வொரு பாட்டிலும் தங்கரத்தினமே என்ற விளி வருகிறது. 27 பாடல்கள் அடங்கிய பகுதி இது. முதலில் தினைக் கொல்லையில் ஒரு பெண்ணை ஓர் ஆடவன் கண்டு பேசுவதாக வரும் கண்ணிகள் இருக்கின்றன. தினை விதைத்து மகளிரைக் காவல் வைக்கும் வழக்கத்தைச் சில பாடல்கள் சொல்கின்றன.
தினைக் கதிரைப் பாறையின்மேல் கொட்டி அதைத் தன் காலினால் மிதித்துத் துகைக்கும் வழக்கத்தை வள்ளியின்மேல் ஏற்றிச் சொல்கிறது ஒரு பாட்டு.
-
வட்ட வட்டப் பாறை தேடிக்
கொட்டி னாளாம் அடிக்கதிரை
மோதிரக் காலி னாலே - தங்க ரத்தினமே
மொரமொ ரண்ணு மிதித்தாள் வள்ளி
- பொன்னு ரத்தினமே! [2]
தேனும் தினை மாவும் பிசைந்து வாழையிலையில் அவள் வாரும் அழகையும் காணலாம்.
-
கொச்சிமலைத் தேனெடுத்துக்
கூசாமே மாப்பிசைந்து
வாழையிலை முறமுஞ்செஞ்சு - தங்கரத்தினமே
வாருறாளாம் தினைமாவைத்தான்
- பொன்னு ரத்தினமே. [3]
__________
[1]. ப. 26; 161.; [2]. ப. 36; 11.
[3]. ப. 37; 13.
---------
இல்லாமற்போகவில்லை. அந்த எண்ணத்தைக் காட்டுகிறது பின்வரும் பாட்டு:
-
வண்டியிருக்கு மாடிருக்கு - தங்கரத்தினமே
வயற்காடு உழுதிருக்கு - பொன்னு ரத்தினமே
எருமைத் தயரிருக்கு - தங்கரத்தினமே
ஏண்டிபோறே ரங்கோனுக்குப் - பொன்னு ரத்தினமே? [1]
ஒவ்வொரு பாட்டிலும் ராசாத்தி என்ற மகடூஉ முன்னிலை ( பெண்ணை முன்னிலைப்படுத்திச் சொல்வது ) அமைந்த பாட்டுக்களை உடையது மூன்றாம் பகுதி. இப்பகுதியின் தொடக்கத்தில் ஒரு காதலன் தன் காதலிக்குத் திருவிழாக் காட்சிகளைக் காட்டுகிற நிகழ்ச்சி இருக்கிறது. கரும்பு, கற்கண்டு, கடலை, அவல் முதலியவை விற்கிறதை அவன் காட்டுகிறான். பிள்ளைகள் விளையாடுவதையும் மற்போர் நிகழ்வதையும் அவர்கள் பார்க்கிறார்கள். மற்போரில் தன்னோடு பொருதவனைத் தோல்வியுறச்செய்து, 'பீட்டுக் காண்பித்து' விட்டான் ஒருவன். அவன் பீரங்கி போன்ற தன் வயிறு பிதுங்கப் பெருமிதத்தோடு நிற்கிறான்,
-
பீட்டுக் காண்பித்த பீரங்கி வயிறன்
பெருமை பண்ணுறான் பார் - ராசாத்தி
பெருமை பண்ணுறான் பார்! [2]
அடுத்தபடி ஒரு பெண்ணின் பெருமையை ஒருவன் விரிவாகச் சொல்கிறான். அவள் குளத்துக்கும் கோயிலுக்கும் போகிறாள். பல தாதிப்பெண்களை ஆதரிக்கிறாள். அவர்களுக்கெல்லாம் பல பரிசில்களை வழங்குகிறாள். மந்திர தந்திரக்காரிகளையும், மாற்றாந்தாய்மாரையும், வம்பு செய்யும் ஆடவர்களையும் அவள் கண்டிக்கிறாள்.
ஒரு பெண்ணைப் பார்த்துப் பல கேள்விகள் கேட்பதாக அமைந்த பாடல்கள் பின்பு வருகின்றன. சோறு ஆக்கிக் குழம்பு வைத்துக் கடைக்குப் போய் ஆடை அணிகளை வாங்கும் செய்கைகளைச் சுட்டிக் காட்டுகிறான், கேள்வி கேட்கும் ஆடவன்.
----------
[1]. ப. 39 : 14.
[2]. ப. 47 : 19.
---------
அரண்மனைக்காரி ஒருத்தியின் வளவாழ்வையும் வண்மையையும் பற்றிய பாடல்கள் பின்பு உள்ளன. அவள் பல்லாக்கின் மேலும் ஆனையின் மேலும் போகிறாள். ஆடையும் அணியும் அணிகிறாள். தர்மம் செய்கிறாள்.
இறுதியில் சல்லிக்கட்டு வருணனை வருகிறது. காளையெல்லாம் சாயம் பூசிக் கருத்தாய் நிற்கின்றன.[1] கொம்புகள் ரம்பம் போல் உள்ளன. அவை ஓடுகின்றன. ஆட்கள் பிடிக்கிறார்கள்.
-----------
[1]. ப. 53 : 4.
-----------
ஆணும் பெண்ணும் ஒருவரோடு ஒருவர் எதிரெதிரே பேசும் பேச்சைத் தர்க்கம் என்று சொல்வது தெருக் கூத்து மரபு. இந்த நான்காவது பகுதியில் பலவகையான உரையாடல்கள் வருகின்றன.
முதலில் ஓராடவன் தான் விரும்பிய பெண்ணை அணுகித் தஞ்சமென்று அடைவதும், அவள் மிஞ்சிப் பேசுவதுமாகிய காட்சியைக் காணலாம். அவன்,
-
அன்னமே பொன்னம்மா
கண்ணிரண்டும் சோருதடி அன்னமேஏஏ
-
வாது செய்யாதேடா
வந்தவழி போய்ச்சேரடா
பின்னாலே வரும் வார்த்தைச் சண்டை என்ற பிரிவு முழுவதிலும் கீழ்த்தரமான பேச்சைப் பார்க்கிறோம். இங்கே பல வசவுகளை ஆணும் பெண்ணும் பொழிகிறார்கள்.
கண்ணாட்டியும் மச்சானும் என்னும் பிரிவில் ஆடவன் பெண்ணை, "என் ஆசைக் கண்ணாட்டி, என் நேசக் கண்ணாட்டி!" என்று விளித்துப் பேசுகிறான். அந்தப் பெண் அவனை, "என் திலக மச்சானே, எங் குலக மச்சானே!" என்று அழைக்கிறாள். அவள் இது வேண்டும், அது வேண்டும் என்று கேட்க அவன் அவற்றை வாங்கித் தருவதாகச் சொல்லுகிறான்.
-
சம்பங்கி எண்ணெய் வேணும்
சைனாப்பட்டுச் சீலைவேணும்
பம்பாய்ச் சோப்பு வேணும் - என் திலகமச்சானே
பயாஸ்கோப்பு ராவுக்கே வேணும் - எங் குலகமச்சானே! [1]
அடுத்தபடி, ஓடும் ஜோடி வருகிறது. மணம் செய்துகொண்ட ஒருத்தியை வேறு ஓர் ஆடவன் தன்னுடன் ரங்கூனுக்கு ஓடிவந்து விடச் சொல்கிறான். அவள் தன் ஐயங்களெல்லாம் சொல்ல, அவன் தெளிவிக்கிறான். கடைசியில் அவள் சம்மதிக்கிறாள். இங்கிலாந்து தேசத்துக்கே போவோம் என்கிறாள்!
-
இச்சைக் கிசைந்தசிறு
இன்பமுள்ள தங்கமாமா
இச்சணமே புறப்படலாம்
இங்கிலாந்து தேசத்துக்கு. [2]
அடுத்தபடி தாசியின் காதல் என்ற பிரிவு உள்ளது. ஒருதாசி ஒருவனை நச்சுவதும், இருவரும் வாக்குவாதம் செய்வதும், அவன் பிறகு அவளைத் தேடிச் செல்வதும், இருவரும் சந்தித்துக் கூடுவதுமாகிய நிகழ்ச்சிகளைக் காட்டும் பாடல்கள் அதில் வருகின்றன.
பின்வரும் சண்டைப் பேச்சில் வார்த்தைச் சண்டை வளர்கிறது. ஆணும் பெண்ணும் ஒருவரை ஒருவர் ஏசியும் தூற்றியும் வைதும் உரப்புகிறார்கள். பின்பு சமாதானப் பேச்சும் வருகிறது. சமாதானமாகப் பேசிய பின் தாங்கள் இன்ன இன்னபடி திருமணத்தை நடத்த வேண்டும் என்று பேசிக்கொள்கிறார்கள். இங்கே கல்யாணத்துக்கு முன்னும் கல்யாணத்தின் போதும் நிகழும் பல வழக்கமான செயல்களைக் காணலாம்.
மாமன் பல ஊர்களுக்கு வருகிறாயா என்று தங்கம் தையலாளை அழைக்க, அவள் அங்கெல்லாம் வரமாட்டேன் என்று சொல்கிறாள். இப்படிச் சில பாடல்கள் உள்ளன. மலையின்மேல் தேயிலைத் தோட்டத்துக்குப் போய் வேலை செய்தால் அங்கே கூலி முதலியவை கிடைக்குமென்று அவன் கூற, அவள் தனக்கு வேண்டாம் என்று மறுக்கிறாள்.
--------
[1]. ப. 69 : 5.; [2]. ப. 74 : 22.
--------
-
காடுகரை இங்கே இருக்கத்-தங்கமாமாவே
காணாதசீமை ஏன்போகப்-பொன்னுமாமாவே? [1]
அவன் அவளை அழைத்துப் போவதன் நோக்கம் இன்னதென்று அவனுடைய பேச்சிலே தெரிந்துவிடுகிறது.
-
பிள்ளைபெறும் காலத்திலே தங்கம் தையலாளே
பிள்ளைரூவா அஞ்சுவேறே-பொன்னு குயிலாளே [2]
-
கலியாணம் பண்ணுமுந்தித்-தங்கமாமாவே
கன்னிகுளி குளிப்பாளா-பொன்னு மாமாவே! [3]
இங்கே பல ஊர்களின் பெயர்கள் வருகின்றன. பெண்ணின் கூற்றில் ஒவ்வொரு கண்ணிக்குப் பின்னும்,
-
என்ன செய்யலாம் மாமா-நாம்
ஏது செய்யலாம் மாமா?
-
இன்னும் என்ன வேணும் பெண்ணே-உனக்
கேது வேணும் பெண்ணே?
--------
[1]. ப. 107 : 45.; [2]. ப. 106 : 38.
[3]. ப. 107 : 46.
----------
கூலி வேலை செய்யும் பெண்களும் ஆண்களும் பாடும் பலவகைப் பாடல்களை இப்பகுதியில் காணலாம். சுண்ணாம்பு குத்தும் ஏழைப் பெண்ணின் அவலத்தை முதலில் பார்க்கிறோம். அவர்களுக்கு மணிக்கட்டெல்லாம் நோகின்றன. அவர்களுடைய வயிற்றில் பசி மூளுகிறது.
பிறகு தொடர்பற்ற பல கண்ணிகள் வருகின்றன. பின்பு சுண்ணாம்பு குத்தும் பாட்டில் துரைமகன் வருகையை விரிவாகச் சொல்லுகிறார்கள் பெண்கள். பல வண்டிகள் வருகின்றன. குதிரைகள் வருகின்றன. ஜட்கா, ரிக்ஷா, மோட்டார், லாரி, சைகிள் எல்லாம் வருகின்றன.
வண்டியிலே வந்த துரை அமலெல்லாம் செய்கிறான். அவனுக்குத் 'தீனி' தயாராகிறது. எதை எதையோ அவன் குடிக்கிறான். பல பழங்களைக் கொடுக்கிறான். பணியாரங்களை வழங்குகிறான். 'மச்சானை'க் கூட்டிக் கொண்டு மெத்தை வீட்டுக்குள் போகிறான்.
பல தோட்டங்கள் அங்கே இருக்கின்றன. வெள்ளைக்காரர் பலர் 'லேடி'களுடன் இருக்கிறார்கள்.[1] அவர்களிடையே இந்தத் துரை தளுக்கு நடை நடக்கிறான். பெண்ணுக்கு வேண்டியவற்றையெல்லாம் அவன் தருவானாம். அப்படி ஒரு பெண்ணைப் பார்த்து மற்றொருத்தி சொல்கிறாள். அவள் தன் வஞ்சகக் கருத்தைக் கடைசியில் வெளியிடுகிறாள்.
-
சொத்தான சொத்துக்காரி-ஏலங்கிடி லேலோ
சொகுசாத்தான் நீஇருப்பே-ஏலங்கிடி லேலோ
அத்தான் உனக்குத்தானே-ஏலங்கிடி லேலோ
அல்லாத்தையும் கொடுத்திடுவான்-ஏலங்கிடி லேலோ. [2]
இந்தக் காட்சிக்குப் பின் ஒரு பெண் வயலுக்குச் சென்று கதிரறுத்துக் கூலிபெற்றுக் கடைக்குப்போய் வேண்டிய பொருளை வாங்குவதைச் சொல்லும் பாடல்கள் உள்ளன. பிறகு சந்தனத் தேவன் நிலத்தைப் பார்த்துவிட்டு வருவதைச் சில பாடல்கள் சொல்கின்றன.
நாற்று நடவை வருணிக்கும் கண்ணிகளைப் பிறகு காண்கிறோம். பின்பு கதிர்விளைய, அதை அறுக்க ஆள் தேடுகிறார்கள். விறகொடிக்கும் பெண் வருகிறாள். காளைகள் சூடடிக்கின்றன. எங்கே பார்த்தாலும் நெல்லாக இருக்கிறது.
சந்தனத் தேவன் பெருமையை 54 கண்ணிகள் சொல்கின்றன. பாண்டிநாட்டில் வாழ்ந்திருந்த திருடன் அவன். சொகுசான வாழ்க்கை நடத்தினவன். அவன் பருத்திக்காட்டை உடையவன்;
--------
[1]. ப. 134 : 87.; [2]. ப. 135 : 104, 105.
--------
மச்சு வீட்டில் வாழ்பவன்; மல் வேட்டி கட்டுகிறவன்; சரிகை வேட்டியும் பட்டுச் சட்டையும் அணிபவன்; மாயத் திருட்டு நடத்துகிறவன்; சம்பாச் சோறு உண்பவன்; ஜட்கா வண்டியில் போகிறவன்; பட்டாக்கத்தி பிடிக்கிறவன்; சிவத்த பெண்ணைக் கட்டிக்கொண்டவன்; வெள்ளிமிஞ்சி போடுகிறவன்.
கொழுந்து வெற்றிலைதான் அவன் போடுவது; சரியான தேக்குப் பெட்டியில்தான் அவன் பண்டம் வைப்பது; சந்தனக் கட்டிலில்தான் படுப்பான்; செம்பகப்பூவை அணிவான்; சாப்புத் தண்ணீர் குடிப்பான்.
வாழையிலையிலே உண்டு ஜப்பான் பாயிலே படுத்து வைர மோதிரம் அணிந்து தலைச்சவரம் பண்ணிக்கொண்டு ஊற்றுநீரைக் குடிக்கும் ஒய்யார ஆடவன் அவன். வாட் சண்டை போடுவான்; ஜெயில் கூடத்தில் இருப்பான். அவனிடம் நரிக்கொம்புதான் இருக்க வேண்டுமென்று தோன்றுகிறது. போலீஸ் என்றால் அவனுக்கு வேடிக்கை.
பஞ்சம் பிழைக்க ரங்கூனுக்குப் போன ஒருவன் தான் பட்ட பாட்டையெல்லாம் சொல்லி அழுகிறான். அவன் கதை 32 பாட்டாக அமைந்திருக்கிறது. சேசு பிறந்த நாளில் ஆடைகள் பெற்றதையும், டங்கன் துரை என்பவன் இல்லை என்னாமல் கொடுத்ததையும் சொல்கிறான். அந்தத் துரை சின்னப் பெண்ணைக் கண்டால் சேட்டை பண்ணுவானாம்.[1] கங்காணிமாரைக் கையிலே போட்டுக் கொண்டு கண்ட இடமெல்லாம் கண்ட கண்ட பெண்ணைக் கையைப் பிடித்து இழுப்பானாம். [2]
-
பஞ்சம் பிழைக்க ரெங்கோனுக்குப் போயி
பட்டேனம்மா பாடெல்லாம்
பட்டபாட் டையெல்லாம் விட்டுச்சொன் னேனுண்ணா
பகவானுக் கேற்கா தம்மா! [3]
அதன் பின் வருவது மீனாம் பாட்டு. வலைஞர் பாடுகிற பாட்டு இது. இதில் ஒவ்வொரு கண்ணிக்கும் பின்,
-
அண்ணே நன்னே நானே நன்னே மீனாம்போ
ஏண்டி அப்படி நானே நன்னே நானே நன்னே இப்போ
------
[1]. ப. 163 : 26.; [2]. ப. 163 : 28.
[3] . ப. 163 : 29.
-------------
பின்பு வரும் ஓடப் பாட்டு மலைக்காட்டில் வேலை செய்யும் பெண்கள் தம்முடைய வேலையைப் பற்றிப் பாடும் வகையில் அமைந்திருக்கிறது. காட்டுக்குள் பல விலங்குகள் இருக்கின்றன. அங்கே உள்ள தோட்டத்தில் கூழ் குடித்துவிட்டு வேலை செய்யப் புறப்படுகிறார்கள் கூலியாட்கள். கங்காணியும் கணக்குப் பிள்ளையும் இருக்கிறார்கள். மழையானாலும் களை எடுக்க வேண்டும். பால் குடிக்கிற பச்சைப்பிள்ளை பாலுக்கழுதாலும் பறந்துகளை எடுக்கவேண்டும் [1]. பழம் பறிக்கிறார்கள் பெண்கள். பெரிய ரைட்டர் வந்து அவர்களை வெருட்டுவான். கங்காணிக்குத் தலைக்காசு கொடுக்க வேண்டும். இல்லையானால் அவன் கூச்சல் போட்டுக் குதிப்பான். [2] வெண்ணீட் என்னும் துரை வருகிறார். அவர் கங்காணிமாருக்குக் காசு கொடுக்கிறார். நோயாளிகளுக்கு மருந்து கொடுக்கிறார்.
இந்தத் தொடருக்குப் பின் தோட்டவேலை சம்பந்தமாகத் தொடர்பில்லாத கண்ணிகள் இருக்கின்றன. ரைட்டரை ரைட்டன் என்று சொல்கிறாள் பாட்டுப் பாடும் பெண்!
-
ரயிட்டன் வந்து-ஏலேலோ-லயிட்டுப்போட்டு-ஐலசா
சயிட்ட டிப்பான்-ஏலேலோ-நயிட்டிலேதான்-ஐலசா. [3]
--------
[ 1]. ப. 168 : 27. ; [2]. ப. 169 : 39, 40.
[3]. ப. 172 : 8.
-------------
நாடகத்தில் கள்ளன் வேடம் போடுகிறவனைக் கண்டு ஆரவாரம் செய்து கிராம மக்கள் பெரு மகிழ்ச்சி அடைந்த காலம் ஒன்று உண்டு. அந்தக் காலத்தில் திருடன் பாட்டு, கள்ளன் பாட்டு என்று பல பாட்டுக்கள் அங்கங்கே வழங்கின.
இந்தப் பகுதியில் முதலில் ஒரு திருடன் தன் பெருமைகளைச் சொல்லிக் கொள்வதாக ஆறு பாடல்கள் இருக்கின்றன. அவன் அந்தமான் மலையிலே பிறந்தவனாம்; ஆயிரம் மெடல் பெற்றவனாம்.
-
காலையிலே எழுந்திரிச்சுக்
கைகாலைச் சுத்தம் பண்ணிக்
கால்படி கள்ளுக் குடிக்காமல் இருக்கிறவன்
கழுதைக்குச் சமானம்! [1]
என்பது அவனுடைய சித்தாந்தம்.
-------
[1]. ப. 175 : 6.
-----------
ஜம்புலிங்கம் என்ற கொள்ளைக்காரன் திருநெல்வேலிச் சீமையிலே முப்பது நாற்பது ஆண்டுகளுக்கு முன்னாலே இருந்தான். அவன் பணக்காரர்களைக் கொள்ளையடித்து ஏழைகளுக்கு உபகாரம் செய்தவன். அதனால் ஏழைகளுக்கெல்லாம் அவனிடம் பரிவு இருந்தது. அவனுடைய சாகசச் செயல்களை வியப்புடன் கதை கதையாகச் சொல்லிக்கொண்டார்கள். அவனைப் பிடிக்கப் போலீஸ்காரர்கள் பலபடியாக முயன்றும் அவன் அகப்படவில்லை. அவனுக்கு ஒரு காமக் கிழத்தியிருந்தாள். அவள் செய்த வஞ்சகத்தால் கடைசியில் ஜம்புலிங்கம் அகப்பட்டுக் கொண்டான். அவள் போலீஸ்காரருக்கு அவனைக் காட்டிக் கொடுத்துவிட்டாள்.
அந்தக் காலத்தில் பத்திரிகைகளில் நாள்தோறும் ஜம்புலிங்கத்தைப் பற்றிய செய்திகள் வந்தவண்ணமாக இருந்தன. மக்கள் ஆர்வத்தோடு அவற்றைப் படித்தார்கள்.
ஜம்புலிங்கத்தின் வரலாற்றைப் புத்தகமாக ஒருவர் எழுதினார். அவனைப் பற்றிப் பல பாடல்கள் எழுந்தன. அவற்றில் ஒரு தொடரே இங்கே 57 பாடல்களாக இருக்கிறது. ஒவ்வொரு பாட்டின் இறுதியிலும்,
-
வாரார் சொக்கத் தங்கம் - நம்ம
நாடார் ஜம்பு லிங்கம்
ஜம்புலிங்கத்தைச் சிறந்த வீரனாகவும் தர்மவானாகவும் சித்திரிக்கிறது இந்தப் பாடல். அவனுக்கு மலையாளம், செந்தமிழ் இரண்டும் தெரியுமாம். எம்.ஏ., பி.ஏ. படித்து இங்கிலீஷூம் பேசுவானாம். ஆளிலே அழகன்; ஆசாரபோசன்; தோள்கள் பருத்த மன்னன். முறுக்கிவிட்ட மீசையும் முன்னம் பல் வரிசையும் மினுக்கி வைத்த கத்தியும் கையில் வெடிகளுமாகக் காட்சி அளிப்பான். தன் வீட்டையும் தாய் பிள்ளைகளையும் விட்டு விட்டுத் தைரியமாகத் தர்மம் செய்ய வேண்டுமென்றே இந்தத் தொழிலை மேற்கொண்டானாம்!
அவனுக்கு அத்தை மகள் ஒருத்தி இருந்தாள். அவளைச் சட்டை பண்ணாமல் அந்நியப் பெண்களின் மேல் ஆசை வைத்துப் போனதால் மோசம் வந்தது.
செந்தலைப் புலிகள் அவன் பேரைக் கேட்டு நடுங்குவார்கள் ஏட்டு, இன்ஸ்பெக்டர் ஆகியவர்கள் எட்டி எட்டிப் பார்க்கும் போதே அவன் சுவரிலேறிக் கட்டிடத்தையே தாண்டிப் போய்விடுவான்.
பணக்காரப் பெண்கள் பழமை பேசி வழி நடக்கும்போது பதனமாக நகைகளையெல்லாம் பறித்துக்கொள்வான். லட்சாதிபதிகளை லட்சியம் பண்ணாமல் மானத்தை வாங்கி விரட்டி விரட்டி அடிப்பான். ஆயிர ரூபாயையும் அரைக்காசென்று எண்ணி ஏழைகளுக்கு அள்ளி இறைத்துவிடுவான். அன்னதானம் செய்வான். புல்லுக்காரப்பெண்கள் தன் பேரைச் சொல்லிப் பிழைக்கட்டுமென்று நல்ல நல்ல நகைகளையெல்லாம் கொடுத்துப் பூட்டிக் கொள்ளச் செய்வான். நெல்லறுக்கப் போனவளைப் பாதையிலே நிற்கவைத்து நகைகளைப் பூட்டி அனுப்புவான். கையெடுத்த பேருக்கெல்லாம் கை நிறையப் பணம் கொடுத்துப் பைகளைத் திறக்கச்சொல்லிப் பற்றாததற்குப் போட்டு நிரப்புவான். தங்கம் பொன் வெள்ளி எல்லாம் தண்ணீருக்குச் சமமாக எண்ணித் தானதர்மம் செய்வான்.
ஆட்களை விட்டு உளவை அறிந்துவரச் செய்து பணக்காரரிடம் பணம் பறிப்பான். அவனும் அவன் மைத்துனனுமே இந்த வேலையில் ஈடுபட்டிருந்தனர்.
பட்டப் பகலிலே சப் இன்ஸ்பெக்டர் சட்டையைக் கழற்றித் தான் போட்டுக்கொண்டு போவான். ராத்திரி வேளையில் குதிரையின்மேல் ஏறிக்கொண்டு போய்ப் போலீஸ்காரர் கும்பிட அவர்கள் ‘பீட்நோட்’டில் பென்சிலால் கையெழுத்துப் போடுவான்!
இப்படி அவன் செய்த சாகசச் செயல்கள் பல. கடைசியில் ஒரு நாள் ராத்திரி அவனுடைய காமக் கிழத்தி காட்டிக் கொடுக்கப் போலீஸ்காரர்கள் அவனைச் சுட்டுவிட்டார்கள்.
இந்தக் கதையைச் சொன்ன நாடோடிப் பாவலன் கடைசியில் நீதியைச் சொல்லி முடிக்கிறான்.
-
ஆழமான ஆற்றையெல்லாம்
ஆனைபுலி கரடியெல்லாம்
அஞ்சாமல்தான் நம்பலாம்
ஆனால் பதினாறுமுழச்
சீலைக்காரி பத்திரம் - அப்பா
சீலைக்காரி பத்திரம்!
வெற்றிலை மடித்துக்கொடுப்பாள்
வெறும்பேச்செல்லாம் பேசுவாள்
கூடச்சாகி றேனென்னுவாள்
கூந்தலை விரித்துப் போட்டு
ஏமாந்து மோசம்போகாதே - தம்பி
ஏமாந்து மோசம் போகாதே! [1]
எண்டப்புளி ரோட்டில் எக்குத்தப்பாய்ச் சில பேரிடம் சிக்கிக்கொண்ட திருடன் ஒருவன் தன் கதையைச் சொல்லும் பகுதி பிறகு வருகிறது. இதில் ஒவ்வொரு பாட்டுக்கும் பின்பு,
தாடிப்பத்திரி சீலை - இழுத்துப் போத்தடி மேலே
என்ற அடி அமைந்திருக்கிறது.
இறுதியில் ஒரு திருடன் தன் பிரதாபங்களைக் கூறிக் கொள்வதாக 11 பாடல்கள் இருக்கின்றன. அவன் பேச்சில் பறங்கிமலை, பல்லாவரம், சென்னை, வண்ணாரப்பேட்டை, தஞ்சாவூர், மானா மதுரை ஆகிய ஊர்கள் அடிபடுகின்றன.
--------
[1]. ப. 187 : 56, 57.
------------
இந்தத் தலைப்பில் கல்யாணப் பாட்டுக்களும் மாமியார் மருமகள் சண்டையும் கோக்கப் பெற்றிருக்கின்றன. கல்யாணத்தைப்பற்றிய சில பாட்டுக்களும் கொழுந்தியாள் மாப்பிள்ளையைக் கேலி பண்ணும் பரிகாசப் பாட்டும் முன்பு உள்ளன.
பின்பு பெண்ணுக்கு அறிவுரை வருகிறது. அறிவுரை கேட்கும் பெண் சுண்டெலிப் பெண் அந்தக் காலத்தில் இளம் பருவத்திலே திருமணம் செய்துவிடுவதனால் மணப்பெண் சின்னஞ் சிறியவளாகச் சுண்டெலியைப்போல இருந்தாள். அதனால்தான் ‘சுண்டெலிப் பெண்ணே!’ என்று விளிக்கிறார்கள் போலும்!
சுண்டெலிப் பெண்ணுக்குச் செய்யும் இந்த உபதேசம் மிக நீளமாக இருக்கிறது.
-
ஆக்க வாணாம் அரிக்க வாணாம் - சுண்டெலிப் பெண்ணே
அறிவிருந்தால் போதுமடி[1] - சுண்டெலிப் பெண்ணே
பெண் அடக்க ஒடுக்கமாக இருக்க வேண்டுமென்பதைப் பல படியாகச் சொல்லிக் காட்டுகிறாள், உபதேசம் செய்யும் தாய். “அக்கம்பக்கம் போகாதே; கண்ணடிக்கிறவனையும் கடைக்குப் போகிறவனையும் பாராதே” என்கிறாள். பல பல நீதிகளை அவள் சொல்கிறாள். எவற்றைச் செய்யக்கூடாது என்று வரிசையாகச் சொல்லிவிட்டு எவற்றைச் செய்யவேண்டுமென்று பின்பு கூறுகிறாள். காலையில் எழுந்து வாசலுக்குச் சாணி போட்டுச் சட்டி பானையைக் கழுவி வைத்துப் பாத்திரங்களை விளக்கிவைக்க வேண்டும். வெள்ளி, செவ்வாயில் வீடு முழுவதும் மெழுக வேண்டும். ஆடி அமாவாசையில் ஆண்டவனைக் கும்பிடவேண்டும். கிழிந்துபோன கந்தலைக்கூட எறிந்து விடாமல் தைக்க வேண்டும். கடவுளைக் கும்பிட வேண்டும். தர்மம் செய்ய வேண்டும். - இப்படிப் பல உபதேசங்களை அவள் உரைக்கிறாள். இறுதியில்,
-
காராம் பசுவைப் போலேநீ
கடவுளுக்கு உகந்து நட. [2]
இதன்பின் வரும் மாமியாள் மருமகள் சண்டை மிகவும் இழிவான முறையில் இருக்கிறது. திட்டும் வசவும் மிகுதி. முதலில் மாமியாள் மருமகளை மிரட்டி உருட்டி வைது தாக்குகிறாள். இறுதியில் மருமகள் திருப்பிக் கொள்கிறாள். கடைசியில் மாமியாள் கெஞ்சிப் பணிந்து போகிறாள்.
---------
[1]. ப. 201 : 1. ; [2]. ப. 208 : 63.
------------
இந்தப் பகுதியில் முதலில் குழந்தையைத் தாய் தாலாட்டும் பாடல்கள் சில உள்ளன. அப்பால் தாலாட்டு என்ற சட்டத்துக்குள்ளே வெவ்வேறு பொருளைப் புகுத்திக் கூறும் அமைப்பைக் காணலாம்.
ஆர் அடித்தார்?’ என்ற முதற் பகுதியில் உண்மையான குழந்தை இருக்கிறது; கவிச் சுவையும் இருக்கிறது.
-
பாட்டிஉன்னை அடித்தாளோ
பாலூற்றும் கையாலே?
நீட்டிஉன்னை அடித்தாளோ
நெய்யூற்றும் கையாலே [1]
-
பஞ்சுமெத்தை பட்டுமெத்தை
பரமசிவன் கொடுத்தமெத்தை
மாமனார் கொடுத்தமெத்தை
மல்லிகைப்பூச் செண்டுமெத்தை
அக்கா கொடுத்தமெத்தை
அழகான தங்கமெத்தை
மேலு வலிக்காமே
மெத்தைமேலே படுத்துறங்கு! [2]
இந்தத் தாலாட்டுக்குப் பிறகு ‘மீன் பாட்டு’ வருகிறது, அப்பன் மீன் பிடிக்கப் போனதும், பலவகை மீனைப் பிடித்துச் சென்று விற்று வந்ததும், தாய் விற்று வந்ததும், விற்ற பணத்தைக் கொண்டு குழந்தைக்கு அணிசெய்து போட்டதும் இதில் தொடர்ச்சியாக வருகின்றன.
பிறகு வருவது கோயில் தாலாட்டு. முருகன் ஊர்வலம் வருவதும் யாவரும் தரிசிப்பதும் இதில் சொல்லப்பெறுகின்றன.
தந்தையின் பயணத்தைச் சொல்கிறதாலாட்டும், வேட்டையைப் பற்றிச் சொல்லும் தாலாட்டும், அறுவடையை வருணிக்கும் தாலாட்டும் அடுத்தடுத்து நிற்கின்றன. பிறகு உபதேசம் என்னும் தலைப்பில் உள்ள தாலாட்டில் மார்கழி மாதம் முதல் கார்த்திகை முடியவுள்ள பன்னிரண்டு மாதங்களிலும் வெவ்வேறு காரியங்களைச் செய்கையில் கடவுளை வழிபட வேண்டுமென்று தாய் சொல்கிறாள்; திங்கட்கிழமை முதல் ஞாயிறு முடிய ஏழு நாட்களிலும் எந்தக் காரியம் செய்தாலும் நியாய வழியில் நடக்க வேண்டுமென்று அவள் அறிவுறுத்துகிறாள்.
பின்பு உள்ள கதம்பமான தாலாட்டில் சில அருமையான கண்ணிகள் இருக்கின்றன.
-----------
[1]. ப. 219 : 5, 6. ; [2]. ப. 221 : 30-33.
-------------
-
முத்திடிச்சு மாக்கொழித்து
முற்றமெல்லாம் கோலமிட்டு [1]
-
காட்டுக் கரும்பே-கண்ணே
கணுவில்லாச் செங்கரும்பே
வேலிக் கரும்பே-கண்ணே
விலையில்லா மாணிக்கமே! [2]
மாமன் பரிசு, நோயும் மருந்தும் என்ற இரண்டுக்கும் பின், தூங்கு என்ற தலைப்பில் சில நல்ல கண்ணிகள் வருகின்றன.
-
கொட்டிவைத்த முத்தே
குவித்துவைத்த ரத்தினமே
கட்டிப் பசும்பொன்னே
கட்டிமுத்தம் கொடுப்பாயே!
ஆற்று வருணனைத் தாலாட்டு அடுத்தபடி வருகிறது. ஆறு தலைமுடிபோல் ஓடுகிறது. ஆற்றுக்குப் பாலம் இருக்கிறது. தண்ணீரைப் பலர் எடுக்கிறார்கள். இங்கே தண்ணீரின் பெருமையை பல கண்ணிகளில் தாய் சொல்லுகிறாள்.
தண்ணீருக்கு ஒரு தீட்டும் இல்லை; தடுப்பார் யாரும் இல்லை. எல்லா சாதிக்கும் அது உரியது. தோட்டி முதல் தொண்டைமான் வரை அதைத் தொழுகிறார்கள். சில சமயங்களில் அது சண்டைக்குக் காரணமாகிறது. மலைமேலும் குழியின் கீழும் இருப்பது அது.
-
உயிர்கொடுப்பதும் பச்சைத்தண்ணி
உயிர்எடுப்பதும் பச்சைத்தண்ணி [3]
தோட்டம் வைத்ததையும் வீடு கட்டின கதையையும் இரு வேறு பாடல்கள் தெரிவிக்கின்றன.
----------
[1]. ப. 230 : 7.; [2]. ப. 231 : 19, 20.
[3]. ப. 241 : 53.
-------------
‘உறங்கிடம்மா!’ என்ற பாடலுக்குப் பின் தாயின் கதை வரும் பாடல் இருக்கிறது.
தாய் தன் கதையை விரிவாகச் சொல்கிறாள். அவள் ஒருத்திக்கு ஒரு மகளாகப் பிறந்தாளாம். தாராபுரத்தில் வாழ்ந்த தகப்பனுக்கும் தர்மபுரியில் பிறந்த தாய்க்கும் குழந்தையாக உதித்தவள் அவள். அவள் இளமையில் மிகச் செல்வமாக வளர்ந்தாள். பல தாதிகள் அவளுக்கு உடனிருந்து ஏவல் புரிந்தார்கள். அஞ்சு வயசில் அவள் ‘அரிசித்தரி’ படித்தாள். பத்து வயசுக்குள் படிப்பெல்லாம் முடித்தாள். பன்னிரண்டு வயசிலே பருவமாகித் திருமணம் செய்து கொண்டாள். பிறகு ஆண்டு இருபதாகியும் குழந்தை பிறக்கவில்லை.
பலவகையான நேர்த்திக் கடன்களை நிறைவேற்றினாள். தான தர்மம் செய்தாள். தலயாத்திரை, தீர்த்த யாத்திரை போனாள். அப்பொழுதும் குழந்தை பிறக்கவில்லை.
இங்கே சில கண்ணிகள் மிகச் சிறந்த சுவையையுடையனவாக விளங்குகின்றன.
-
மெழுகிவைத்த வீட்டுக்குள்ளே
விளையாடப் பிள்ளையில்லை
கூட்டிவைத்த வீட்டுக்குள்ளே
குப்பைபோடப் பிள்ளையில்லை
நிறைத்துவைத்த நிறைகுடத்தைக்
குறைத்துவைக்கப் பிள்ளையில்லை
ஆக்கிவைத்த அண்டாச்சோற்றை
அள்ளித்தின்னப் பிள்ளையில்லை. [1]
[1]. ப. 253 : 56-59.
-----------
இந்த நிலையில் மிக வருந்திய அந்தப் பெண் சில தர்மங்களைச் செய்தாள். ஆனால் அந்தத் தர்மத்தை உரிய சீவன்கள் பயன்படுத்திக் கொள்ளவில்லையாம். அதற்குக் காரணம் இன்னதென்று அவள் பொருமி உணர்ச்சியுடன் சொல்லுகிறாள்.
-
கன்றுபோற வழியிலேநான்
கல்கிணறு கட்டிவைத்தேன்
மலடிகைத் தருமமென்று
மாடுதண்ணி குடிக்கலையே!
மாடுபோற வழிமேலேநான்
மணிபோல்வைக்கோல் போட்டுவைத்தேன்
மலடிகைத் தருமமென்று
மாடுவைக்கோல் தின்னலையே! [1]
-
ஆனிமாசம் வாங்கிவிட்ட
அழகான பசுவும்மலடு
குப்பையிலே மேய்ந்துவரும்
கோழிகூடத் தான்மலடு
மந்தையிலே படுத்துறங்கும்
மாடுகன்றெல் லாம்மலடு
வேலிப்பக்கம் மேய்ந்துவரும்
வெள்ளாடெல் லாம்மலடு
காடெல்லாம் சுற்றிவரும்
கருநாயுந் தான்மலடு [2]
-
என்முகத்தி லேவிழித்த
எதிர்த்தவீட்டுப் பெண்மலடி
அண்டைவீடெல் லாம்மலடு
அடுத்தவரெல் லாம்மலடு! [3]
----------
[1]. ப. 254 : 60-63.; [2]. ப. 254 : 64-5. 70-72.
[3]. ப. 254 : 73-4.
-----------
இவ்வாறு வருந்தியவள் கடைசியில் ஒரு தவ முனிவரைக் கண்டு அருள் பெற்று ஒரு பெண் குழந்தையைப் பெற்றாள். அப்புறம் அவள் நிலை உயர்ந்தது. நிந்தனை மாறியது.
-
நீ்பிறந்த நாள்முதலா
நிந்தனையும் மாறிற்றம்மா
மலடிபெற்ற மலட்டுவரம்
மறங்கிற்றம்மா அன்றுமுதல்.
சீர்குலைக்கப் பார்த்தவங்க
சீரழிந்தார் என்கண்முன்னே
வெட்கப்படுத்தப் பார்த்தவங்க
வெட்கப்பட்டுப் போனாரம்மா! [1]
----------
[1]. ப. 255 : 86-89.
-------
குழந்தை உலகத்தில் இருவகையான பாட்டுக்களைக் காணலாம். ஒன்று, குழந்தைக்காக மற்றவர்கள் பாடுவன. மற்றொன்று குழந்தைகளே பாடுவன. இந்தப் பகுதியில் உள்ள முதல் மூன்றும் பிறர் பாடுவன. குழந்தையைச் சாய்ந்தாடவும், கை வீசவும், தோள் வீசவும் பழக்கும்போது பாடும் பாடல்கள் இவை.
கண்ணாமூச்சி விளையாட்டுப் பாட்டுப் பின்னே உள்ளது. இத்தகைய விளையாட்டுப் பாடல்களில் ஓசைதான் முக்கியம். சில சொற்களுக்கு ஓசை இருக்கும்; பொருள் இராது. சி்லவற்றிற்குப் பொருள் இருக்கும்; தொடர்பு இராது. பலிஞ்சடுகுடு விளையாட்டில் மூச்சு விடாமல் ஆண்பிள்ளைகள் பாடல்களைச் சொல்வார்கள். பாட்டின் கடைசியில் வரும் சொல்லைப் பன்முறை சொல்வார்கள். அந்தப் பாட்டுக்குப் பொருள் என்ன என்று பார்ப்பதனால் பயன் ஒன்றும் இல்லை.
பெண்கள் விளையாடுவது கல்லாங்காய் விளையாட்டு; கழங்காடல் என்றும் இதைச் சொல்வார்கள். பெதும்பைப் பருவத்துப் பெண்கள் கழங்கு விளையாடுவதாகவும் அப்போது ஒன்று முதல் ஏழு வரையில் எண்ணிக்கை வரும்படியான பாடல்களைப் பாடுவதாகவும் புலவர்கள் உலா என்னும் பிரபந்தத்தில் அமைத்திருக்கிறார்கள். [2]
கல்லாங்காய் விளையாட்டுப் பாட்டிலும் இந்த வரிசையைப் பார்க்கலாம். எப்படியாவது ஒன்று இரண்டு முதலிய எண்ணின் பெயர் தொனித்தால் போதும், இந்தப் பாட்டிலே.
------
[2] . இதன் விரிவை, குழந்தையுலகம் ( கி. வா. ஜ. ) 43-ஆம் பக்கம் முதலியவற்றில் காணலாம்.
-----
-
கொக்குச்சிக் கொக்கு
ரெட்டை சிலாக்கு
மூக்குச் சிலந்தி
நாக்குலா வரணம்
ஐயப்பன் சோலை
ஆறுமுக தாளம்
ஏழுக்குக் கூழு
எட்டுக்கு முட்டி
ஒன்பது கம்பளம்
பத்துப்பழம் சொட்டு! [1]
வினா விடைகளை ஐந்து விளையாட்டுப் பாடல்களில் காணலாம். இரண்டு குழந்தைகளில் ஒருவர் கேட்க மற்றொருவர் விடை கூற வளரும் பாட்டு இது. சொன்ன வார்த்தையின் முதல் பகுதியைக் கேள்வியாகக் கேட்க, அதற்கு விடை சொல்ல, அந்த விடையின் முற்பகுதியை மீட்டும் கேட்க, விடை சொல்ல, இந்த வினா விடை நீண்டுகொண்டே போகும்.
நிலாப் பாட்டு இன்சுவை ததும்பும் பாடல்களையுடைய பகுதி. குழந்தைக்கு விளையாட்டுக் காட்டத் தாயும் பிறரும் பாடுவார்கள்; குழந்தைகளும் பாடுவார்கள்.
-
எட்டி எட்டிப் பார்க்கும்
வட்ட வட்ட நிலாவே!
துள்ளித் துள்ளிச் சிரிக்கும்
தும்பைப்பூவு நிலாவே! [2]
‘சிறுவர் உலகம்’ என்ற பகுதியின் இறுதியில் வேடிக்கைப் பாட்டுக்கள் இருக்கின்றன.
---------
[1]. ப. 262 : 1.; [ ] 2. ப. 268 : 2.
-------------
பெண்கள் உணர்ச்சி வசப்பட்டுப் பாடும் பாடல்களில் இரண்டு வகை மனித வாழ்வின் தொடக்கத்திலும் இறுதியிலும் கேட்பதற்குரியன. பிறந்த குழந்தையைத் தாலாட்டும் தாலாட்டுப் பாடலும் இறந்தவர்களை எண்ணிப் புலம்பும் ஒப்பாரியும் ஆகிய அவற்றைப் பாடும் ஆற்றல் இந்த நாட்டுப் பெண் குலத்திற்கே உரியது. இந்த இரண்டு வகையிலும் உணர்ச்சி நிரம்பியிருக்கும். முன்னதில் வாத்ஸல்ய பாவமும், பின்னதில் அவலச் சுவையும் பொங்கிவரும்; கவிப் பண்பும் சிறந்து நிற்கும்.
பெண்கள் புலம்பும் ஒப்பாரியைப் பிலாக்கணம் என்றும் சொல்வார்கள். அது பிணக்கானம் என்பதன் திரிபு என்று அறிஞர் கூறுவர். இலக்கியங்களில் இத்தகைய பாடல்களைக் கையறு நிலை என்று சொல்வார்கள்.
இப்புத்தகத்தில் புலம்பல் என்ற பகுதியில் இந்த அவலச் சுவைப் பாடல்கள் தொகுக்கப்பெற்றிருக்கின்றன. அவற்றில் குறிப்பும் உருவகமும் விரவி நிற்கின்றன.
-
கட்டைப் புளியமரம்
கல்கண்டு காய்ச்சமரம்
கல்கண்டு தின்றோமம்மா
களைசோர்ந்து நிற்கிறோமே! [1]
----------
[1]. ப. 278 : 14.
-----------
கணவனை இழந்தவளைக் கண்டவர்கள். “அவள் தலை எழுத்து!” என்று இரங்குகிறார்கள். ‘தலையெழுத்தா! அதை என் தாய் அல்லவா முதலில் தெரிந்துகொண்டிருக்கவேண்டும்? என் தலையைப் பார்த்த அவள் அதனை அறியவில்லையே!’ என்று புலம்புகிறாள் அந்தப் பெண்.
-
தலையெல்லாம் நான்சீவித்
தாழம்பூ வச்சாலும்
தலையிலே போட்ட எழுத்துத்
தாய்கூட அறியலையே!
மண்டையெல்லாம் நான்வகிர்ந்து
மல்லிகைப்பூ வச்சாலும்
மண்டையிலே போட்டஎழுத்து
மாதாகூட அறியலையே! [1]
-
தாலிசெய்த தட்டான்கூடத்
தகடுவச்சுச் செய்தானே
தாலிக் கொடிக்குப் பதிலாய்
நூலைக்கோத்துக் கொடுத்தானே? [2]
-
குளத்தங் கரையோரம் - ஒரு
குயில்போலக் குந்தியிருந்தேன்
குயிலென்றும் பார்க்காமே - ஒரு
குண்டுபோட்டுச் சுட்டுட்டானே!
ஆற்றங் கரையோரம் - ஒரு
அன்னம்போலக் குந்தியிருந்தேன்
அன்னமென்றும் பார்க்காமே - ஒரு
அம்பை வச்சு எய்தானே! [3]
---------
[1]. ப. 279; 18-19.; [2]. ப. 279; 22.
[3]. ப. 281; 12, 13.
-----------
எல்லாச் சாதியாரும் பல சமயங்களில் ஆடிப்பாடி விளையாடும் ஆட்டம் கும்மி. அதற்கென்று தனியே பாட்டும், அதற்கு வரையறையான மெட்டும் இருக்கின்றன. இந்தப் பகுதியில் நாலு வேறு பிரிவுகளைக் காணலாம்.
முதல் பிரிவில் வரலாற்றோடு தொடர்புடைய சில செய்திகள் வருகின்றன.
-
கல்லு மலைமேலே கல்லுருட்டி-அந்தக்
கல்லுக்கும் கல்லுக்கும் அணைபோட்டு
மதுரைக் கோபுரம் தெரியக் கட்டி-நம்ம
மன்னவன் வாறதைப் பாருங்கடி [1]
-
ஊரான் ஊரான் தோட்டத்திலே-அங்கே
ஒருத்தன் போட்டது வெள்ளரிக்காய்
காசுக்கு ஒண்ணொண்ணு விற்கச்சொல்லி-அவன்
காயிதம் போட்டானாம் வேட்டைக்காரன் [2]
அடுத்த வரிசையில் ஒன்றுக்கொன்று தொடர்பில்லாத 20 பாட்டுக்கள் இருக்கின்றன. சரசுவதி வணக்கத்தோடு அது தொடங்குகிறது. [3]
---------
[1]. ப. 289 : 2.; [2]. ப. 290 : 11. [3]. ப. 291 : 1.
-------------
பெண்கள் தாம் உடுத்திருக்கும் சீலைகளின் வண்ணச் சிறப்பைப் பாடுகிறார்கள்.
-
தயிருக் கூடையைத் தலையிலே வைத்துத்
தங்கக் கக்கம் பிச்சீலைப் பட்டுடுப்போம்
தயிருக் கூடை தளும்பினா லும்எங்கள்
தங்கக்கம் பிச்சீலை மங்காது!
மோருக் கூடையைத் தலையிலே வைத்து
முத்துக்கம் பிச்சீலைப் பட்டுடுப்போம்
மோருக் கூடை தளும்பினா லும்எங்கள்
முத்துக்கம் பிச்சீலை மங்காது! [1]
-
அவலு பெருத்தது ஆர்க்காடு-நல்ல
வெல்லம் பெருத்தது வேலூரு
பணம்பெ ருத்த நீலகிரிக்கு-நீங்கள்
பரந்து பாவாடை போடுங்கடி [2]
-
கண்ணகி யைப்போலே கண்எழுதிக்
காம ரதிகழுத் தும்எழுதி
கால்கைஎல் லாத்தையும் சேர்த்தெழுதி-அதில்
கெண்டைமீன் தாமரைப் பூவெழுதி [3]
--------
[1]. ப. 292 : 2-3.: [2]. ப. 293 : 11.
[3]. ப. 298 : 34.
-------
கண்ணகியின் வரலாறு தெரிந்தவர்கள் இந்தப் பாட்டைப் பாடுகிறார்கள். கண்ணகியின் கண் மிக அழகு என்பது இதனால் தெரிய வருகிறது. கண்ணகை என்று நாடோடிப் பாடல்களில் அவள் பேர் வழங்குவதுண்டு. கண்ணிலே எப்போதும் ஒளியுடையவள் என்றும், கண்ணிலே சிரிக்கும் பாவம் எப்போதும்
ஒளிரும் என்றும் இருவகையில் பொருள்கொள்ளலாம். கண்+நகை என்பதற்குக் கண்ணில் ஒளியுடையாள் அல்லது சிரிப்புடையாள் என்று பொருள் கூறி, ஏழாம் வேற்றுமைத் தொகைப் புறத்துப் பிறந்த அன்மொழித் தொகையாகக் கொள்ளலாம். கண்ணகை என்பதே முதலில் உண்டான பெயரென்றும், அது பின்பு மாறிக் கண்ணகியென்று ஆயிற்றென்றும் ஊகிக்கலாம்.
-
“சிரித்த பங்கயம் ஒத்த செங்கண்
இராமனை” [1]
-
கண்ணகியைப் போலே கண்எழுதி
நாரதன் தான் எழுதிய படத்தைக் கந்தனிடம் கொண்டு போய்க் காட்ட அதைப் பார்த்து அப்பெருமான் வள்ளியின்மேல் காதல்கொண்டு, ‘பித்துப் பிடித்த மனிதனைப்போல்’ என்ன என்னவோ பேசுகிறான். எப்படியாவது அவளைத் தேடி மணக்க வேண்டும் என்று உறுதிகொள்கிறான்.
அவன் முதல் மனைவியாகிய தெய்வயானை இதனை அறிந்து நாரதனைப் பார்த்து, கண்டபடியாக குடை குடை‘கிறாள்.’ [2] அவ்விருவருக்கும் வாக்குவாதம் நிகழ்கிறது. பின்பு முருகன் தெய்வயானையிடம் சொல்லிவிட்டு நாரதன் வழிகாட்ட வேடராசன் போலக் கோலம் புனைந்து வள்ளியிருக்கும் தினைக் கொல்லைக்குப் போகிறான். போய் வள்ளியிடம் தன் காதலை உரைக்கிறான்.
வானம்பூ மிதண்ணீர் எல்லாவற் றுக்கும்நான்
வஞ்சிமார்த் தாண்டன்போல் ராசாவடி [3]
என்று தன் பெருமையைச் சொல்லிக்கொள்கிறான்.
---------
[1]. கம்ப கைகேசி சூழ்வினை. 50.; [2]. ப. 299 : 44.
[3]. ப. 302 : 62.
--------------
இந்தப் பாட்டைப் பாடியவன் திருவனந்தபுரம் அரசராகிய மார்த்தாண்டவர்மாவின் காலத்தில் இருந்தவனென்பதை இதனால் உய்த்துணரலாம்.
வள்ளி சினந்து பேசுகிறாள். ஓடிப்போகச் சொல்கிறாள்.
-
வம்புக்குச் சண்டை வளர்க்கமாட்டோம் - ஆனால்
வந்தசண் டையையும் விடமாட்டோம்
வம்புதும் புநீ செய்யப்பார்த் தாயானால்
அம்புவந் துன்னைத் துளைக்குமடா [1]
இப்படி இருக்கையில் அந்த ஆண்டிப் பண்டாரம் திடீரென்று களை வந்து மூடிச் சாய்கிறான். தொண்டை வறளுகிறதென்று கத்தி வைகிறான். அவள் தண்ணீர் கொடுக்க, “நீ மாவைக் கொடுத்ததனால் இப்படி ஆயிற்று. நீ கொடுக்கும் தண்ணீரை உண்ணமாட்டேன்” என்று அவன் சொல்ல, அவள் அவனைக் கேணிக்குக் கூட்டிக்கொண்டு போகிறாள். அவன் தண்ணீர் குடித்து அதில் விழுந்துவிடுகிறான்.
“கையைப் பிடித்து என்னைத் தூக்கடி பாவி” என்று கத்துகிறான் கிழவன். பின்பு மறுபடியும் வேடனாகி நிற்க, வள்ளி அவனைச் சினந்து பேசுகிறாள். மீட்டும் அண்ணன்மார் வரவே கந்தன் வேங்கைமர மாகிறான். அதைக் கண்டு அவர்கள் போய் விட, மீண்டும் முருகன் வேடனாக முன் நிற்கிறான்; கெஞ்சுகிறான்.
இதற்குமேல் பாடல்கள் இல்லை. கதை அரைகுறையாக நிற்கிறது.
கும்மி என்ற பகுதியில் இறுதியில் இருப்பது மாரியம்மன் கும்மி. இந்த நாட்டில் மாரியம்மனைப் பற்றி வழங்கும் பாடல்கள் பல. அவளே பகவதி, அவளே காளி, அவளே காமாட்சி, அவளே பார்வதி என்று இந்தக் கும்மி புகழ்கிறது. [2]
------------
[1]. ப. 302 : 64.: [2]. ப. 307 : 2.
-----------
பன்னிரண்டாவது பகுதி தெய்வங்களைப் பற்றிய பாடல்கள் அடங்கியது. முதலில் முத்துமாரி பாட்டு வருகிறது. பாரதியார் இந்தப் பாட்டின் மெட்டை அறிந்து அதே மெட்டில் தாம் தனியே முத்து மாரியின்மேல் ஒரு கவிதை பாடியிருக்கிறார்.
-
ஆதியிலே அமைந்த சக்தி
எங்கள் முத்து மாரி - அம்மா
ஆள்கிறாளாம் பூமியெல்லாம்
சிங்கத்தின்மேல் ஏறி [1]
-
ஆதிமக மாயி அவள்
இல்லாத இடம் உண்டா - இந்தப்
பூமி என்ன ரெண்டா?
அனுதினமும் துதிக்காதவர்
தலைஇரும்புத் துண்டா? [2]
அடுத்தபடி மற்றொரு மாரியம்மன் பாட்டு வருகிறது. கண்கண்ட தெய்வம் மாரியம்மன்; தாங்க முடியாத அம்மை பூட்டுவாள்; அது நீங்க வேப்பிலை விபூதி எல்லாம் தருவாள்; ஆயிரங்கண் மாரி இல்லாத இடம் இல்லை; அவளை வழிபடுகிறவர்கள் காவடி கட்டி வழிபடுவார்கள்; தீச்சட்டி எடுப்பார்கள் - என்ற செய்திகள் இதில் உள்ளன.
பூசாரிப் பாட்டுப் பின்பு இருக்கிறது. பூசாரி ஓம் என்றும் ஆம் என்றும் உச்சரிக்கிறான். மயான ருத்ரி முதலிய பல தெய்வங்களை அழைக்கிறான்.
பின்பு வரும் கரகப் பாட்டில் ஒன்று முதல் பத்துக் கரகங்களைச் சொல்லும் கண்ணிகள் உள்ளன.
-
பத்துஞ்சொல்லி முடிந்ததடி கன்னி - ஓகோ என்தாயே
பத்தினிஉன் வாசலிலே இப்போ [3]
இதன் பின் ஆதாம் ஏவாள் கதையையும் ஏசு சரிதையையும் சொல்லும் கும்மிகள் இருக்கின்றன.
-----------
[1]. ப. 311 : 1.; [2]. ப. 313 : 19.
[3]. ப. 318 : 11.
------------
ஆண்டவர் ஆதாம் ஏவாள் என்றவர்களைப் படைத்ததும், ஏதேன் தோட்டத்தில் வாழ்ந்ததும், அத்தோட்டத்தில் ஒரு வர்ணப் பழமரம் வளர்ந்திருந்ததும், பாவிப் பிசாசு வந்து தின்னத் தகாத அந்தப் பழத்தைத் தின்ன வழி சொல்லிக்கொடுத்ததும், ஏவாள் அதைப் பறித்துத் தான் பாதி தின்று ஆதாமுக்கும் பாதி கொடுத்ததும், அவர்கள் அப்படித் தின்றதனால் அவர்களுடைய சந்ததியார்கள் பாவிகளாகப் போனதுமாகிய வரலாறு ஆதாம் ஏவாள் கும்மியில் வருகிறது. பின்பு,
-
மார்கழி மாசம் இருபத்தஞ் சாந்தேதி
மாதா மாரியம்மாள் பெற்றெடுத்த
நீதிசேசு நம்மை நேர்வழி நடத்தப்
பாதி ராத்திரியிலே பிறந்தாரடி [1]
ஏசு சரிதையைச் சொல்லும் கும்மி பின்பு வருகிறது. ஏசு பிறந்தார். பல இடங்களுக்குப் போனார். பல அற்புதங்களைச் செய்தார். இந்தக் கும்மி பத்துக் கண்ணிகளோடு முடிகிறது. பிறகு வேறு சந்தத்தில் ஏசுவையே விளித்துப் பாடும் பாட்டு ஒன்று அப்பெருமான் சரிதையை விரிவாகச் சொல்கிறது. 108 கண்ணிகள் அடங்கியது இப் பாடல். ஏசு பிறந்து குழந்தைப் பருவத்துக்குரிய விளையாடல்களெல்லாம் விளையாடுகிறார். அன்னை கன்னி மரிக்குத் துணையாக இருக்கிறார். சூசை முனிக்கு அடங்கி நடக்கிறார். முப்பது வயசுக்குமேல் கப்பலேறிப் போகிறார். பல அற்புதங்களைச் செய்கிறார். பல அரிய உபதேசங்கள் செய்கிறார்.
கிறிஸ்துவர் பாடும் பாட்டு ஆனாலும் தமிழராக வாழ்பவர்கள் பாட்டு ஆதலினால் இந்த நாட்டுக்கே உரிய பழக்க வழக்கங்களை ஏசுவுக்கும் சார்த்திச்சொல்லியிருக்கிறான், இதைப் பாடிய நாடோடிப் பாவலன்.
சாஷ்டாங்கமாக விழுந்து வணக்கம்புரிவது இந்தநாட்டுமரபு.
-
ராசாநீ என்றெண்ணியே-சின்னப் பாலகா
சாஷ்டங்கமும் செய்தார்களே-சின்னப் பாலகா [2]
-----------
[1]. ப. 319 : 13.; [2]. ப. 325 : 18.
-----------
மும்மூர்த்தி என்ற வழக்கு, பாரத நாட்டுக்கு உரியது. இதை ஏசுநாதரோடு சார்த்தி,
-
மூணுபேர் உனக்கில்லையோ-சின்னப் பாலகா
மும்மூர்த்தியும் நீயல்லவோ-சின்னப்பாலகா [1]
தமிழ்நாட்டுக் குழந்தையைப் போல ஏசு வளர்கிறார். தமிழன் பாடும் ஏசு அப்படி வளர்ந்தால்தான் அவன் உள்ளமென்னும் சிங்காதனத்தில் வீற்றிருக்க முடியும்.
-
சட்டிபானை எல்லாம் வச்சுச்-சின்னப்பாலகா
கூட்டாஞ் சோறு ஆக்கினையா-சின்னப்பாலகா
ஏழுவய சாகலையோ-சின்னப்பாலகா
எழுத்தாணி பிடிக்கலையோ-சின்னப்பாலகா [2]
-
உலகராச்சி யத்தைப்பற்றிச்-சின்னப்பாலகா
உசத்தி ஒன்றும் பேசாமேநீ-சின்னப்பாலாக
வானராச்சி யத்தைப்பற்றிச்-சின்னப்பாலகா
வர்ணிச்சுநீ பேசலையோ-சின்னப்பாலகா [3]
---------
[1]. ப. 326:24, [2]. ப. 326:33. 327:35. [3]. ப. 332:107, 108.
---------
இந்த நாடோடிப் பாடல் தொகுதியில் கடைசிப் பகுதியில் மூன்று வெவ்வேறு பாட்டுக்கள் இருக்கின்றன. தாது வருஷத்தில் (1876) ஒரு பஞ்சம் உண்டாயிற்று. அப்போது தமிழ்நாட்டு மக்கள் மிகவும் துன்புற்றார்கள். அந்தப் பஞ்சத்தைப்பற்றி அக்காலத்தில் வேதநாயகம் பிள்ளை முதலிய பல புலவர்கள் பாடியிருக்கிறார்கள். [1]
அதைப்பற்றி ஒரு பாட்டு இதில் இருக்கிறது. தாய் வேறே, பிள்ளை வேறே என்று பிரிந்த அவலத்தையும், மாடுகள் பட்டினி கிடந்து இறந்த அலங்கோலத்தையும், வயிறு ஒட்டி ஆணும் பெண்ணும் அலறிய துயரத்தையும், கண்ட இடங்களிலெல்லாம் பிணம் கிடந்த கண்ணராவியையும் பாட்டு விரிக்கிறது.
------
[1]. என் சரித்திரம் ( டாக்டர் உ. வே. சாமிநாத ஐயர் ), ப. 569.
------------
அக்காலத்தில் இந்தியாவின் ஆட்சியுரிமை விக்டோரியா மகாராணியிடம் இருந்தது. அரசாங்கத்தார் கஞ்சித்தொட்டி வைத்து உதவி செய்ததும் இந்தப் பாட்டினால் தெளிவாகிறது.
-
மகாராணி புண்ணியத்திலே-ஓசாமியே
மார்கழிப் பஞ்சம் நின்றதே-ஓசாமியே
கஞ்சித் தொட்டி போட்டார்களே-ஓசாமியே
அன்புடனே சலுக்கார்தானே-ஓசாமியே [1]
தொதுவர் பாட்டு என்ற பாடலில், ஒருவன் நீலகிரிக்குச் சென்று தொதுவர்களைக் கண்டு, அவர்களிடம் எப்படிப் பழகுகிறதென்று தெரியாமல் அடிபட்ட கதை வருகிறது. அந்தத் தொதுவர்களின் நிலையை,
-
அவுங்க ளுக்கு ஆடையில்லை
அம்மா மார்க்குப் புடைவையில்லை
பிறந்த கோலத் தோடேயும்
பரந்த கோலத் தோடேயும்
வெட்கஞ் சிக்கி இல்லாமலே
வெளியே வந்து நின்னாங்களே [2]
இறுதியில் இருப்பது வெள்ளைக்காரன் பாட்டு. ஆங்கிலேயர்கள் இந்த நாட்டுக்கு வந்து பலவகையான நன்மைகளைச் செய்தார்கள் என்று அக்காலத்தில் பல புத்தகங்கள் வெளியாயின. சிலவற்றிற்குப் பரிசும் கிடைத்தது. பெரிய மனிதர்கள் பலர் ஆங்கிலத்தில் சொற்பொழிவாற்றினார்கள். அந்த முறையில் நாடோடி மக்களிடம் யாரோ ஒருவன் எழுதிப்பரப்பிய பாட்டு இது
-
இன்னம் என்ன செய்தானையா
இந்தவெள்ளைக் காரன்
இன்னம் என்ன செய்தானையா
எடுத்துச் சொல்லு கேட்பேன் [3]
¨
---------
[1]. ப. 335:14, 336:21.; [2]. 337:23-5. [3]. ப. 340:1.
-------------
-
வெள்ளெழுத்து மாறிருச்சே
இந்த வெள்ளைக் காரன்
நல்லெழுத்து வந்திருச்சே
இந்த வெள்ளைக் காரன் [1]
---------
[1]. ப. 344 : 40.
-------------
பொருள் உலகம்
வாழ்க்கையில் வழங்கும் பொருள்களும் சிந்திக்கும் எண்ணங்களும் பழக்கவழக்கங்களும் இலக்கியத்தில் வருகின்றன. வாழ்க்கையோடு நெருங்கிப் பிறந்து வளர்ந்த நாடோடி இலக்கியத்தில் பெரும்பாலும் உண்மைப் பொருள்களும், இயல்பான எண்ணங்களும், கண்ணாரக் காணும் காணும் செயல்களும் காட்சியளிக்கும். அவற்றைத் தொகுத்து வகைப்படுத்திப் பார்த்தால் பல உண்மைகள் புலனாகும். பின்னே வரும் ஆராய்ச்சிப் பகுதிகளில் அத்தகைய வகைகளை அகராதி வரிசையில் அமைத்துத் தந்திருக்கிறேன்.
சொல், பொருள் என்று இருவேறு உலகம் உண்டு. சப்தப் பிரபஞ்சம், அர்த்தப் பிரபஞ்சம் என்று அவற்றைக் கூறுவார்கள். பொருள் தோன்றி, அதைக் குறிக்கச் சொல் தோன்றுகிறது. ஆதலின் முதலின் பொருளுலகத்தைப் பார்ப்போம்.
இந்தப் பிரிவில் அணி, ஆடை, உணவு, பழம், புதுப் பொருள்கள், பூ, மாடு, மீன் என்பவற்றை வகை வகையாகப் பார்க்கலாம்.
1. அணிவகை
மனிதன் தன்னை அழகுபடுத்திக் கொள்ளவும் ஆபத்துக்கு உதவவும் அணிகளை அணிகிறான். அவை காலத்துக்கும், இடத்துக்கும், வாழ்க்கை நிலைக்கும், ஆண், பெண்பாலுக்கும், உறுப்புக்கும் ஏற்ப மாறுபடுகின்றன. பல அணிகள் மறைந்து போயின; பல புதிய அணிகள் வந்துவிட்டன.
அரைமூடி | காலாழி | ஈய மோதிரம் |
கைவளையல் | எட்டுக் கல் கம்மல் | கொண்டைத் திருகு |
ஒட்டியாணம் | கொப்பு - காதணி | ஓலை |
கொலுசு | கங்கணம் | சங்கு |
கணையாழி | சரடு | கம்மல் |
சரப்பளி | கருகுமணி | சலங்கை |
கனகமணி | சிலம்பு | காப்பு |
சுட்டி | கால்தண்டை | தங்கச் சங்கிலி |
தங்க நகை | பொன் தாலி | தண்டட்டி - காலணி |
மயிர்மாட்டி | தண்டை | மாணிக்கம் |
தாலிக் கயிறு | மாலை | தாலிக்கொடி |
மிஞ்சி - காலணி | நீல வளையல் | முத்து |
நெல்லிக்காய் முகப்பு | முத்துச்சரம் | பச்சை வளையல் |
முத்துமாலை | பதக்கம் | முருகு - காதணி |
பவளம் | மூக்குத்தி | பாகற்காய் மூக்கு |
மோதிரம் | பாதசரம் | ரத்தினக்கல் |
பின்னல் மோதிரம் | வளையல் | பீலி |
வைரக்கல் | பொட்டு | வைரமோதிரம் |
2. ஆடைவகை
‘அணியெல்லாம் ஆடையின்பின்’ என்று சொல்வார்கள். மானத்தைக் காக்க மனிதன் ஆடைகளை அணிந்தாலும் நாளடைவில் நாகரீக வளர்ச்சிக்கு ஏற்பப் பலவகை ஆடைகள் வந்துவிட்டன.
நாட்டுக்கும், சமுதாயத்துக்கும் ஏற்றபடி அமைந்த ஆடைகள் தனித் தனியே உண்டு.
ஈரோட்டுச் சாயச் சீலை | நீலக் கோட்டு | உடுப்பு |
பச்சைப் புடவை | கண்டாங்கிச் சீலை | பட்டுச் சட்டை |
காசிப் பட்டு | பட்டுத் துணி | கால் சட்டை |
பட்டுப் பாவாடை | கொங்காணி - தலையில் அணியும் | பட்டுப் புடைவை |
சரிகைச் சட்டை | பம்பாய்ச் சீட்டி | சரிகை வேட்டி |
பாவாடை | சாயச் சீலை | மஞ்சள் புடைவை |
சால்வை | மல்வேட்டி | சிற்றாடை |
மாராப்பு | சின்ன மடி | முக்காடு |
சீட்டி | முத்துக் கம்பிச் சீலை | சுங்கு |
முந்தாணித் துணி | சைனாப்பட்டு | ரவிக்கை |
சொக்காய் | ரோசாப்பூச் சேலை | தங்கக் கம்பிச் சீலை |
லேஞ்சுப்பட்டு | தாவணி | வர்ணச் சட்டை |
தாழம்பூ வேட்டி | வெள்ளைச் சீலை |
3. உணவு வகை
‘விலங்கும் மனிதனும் உணவு உண்டாலும் மனிதன் பசியைப் போக்க மாத்திரம் உணவு உண்பதில்லை; ருசிக்காகவும் அவன் உண்ணுகிறான். அதனால் அவன் சமைக்கும் உணவில் பலவகைகள் வளர்ந்து வருகின்றன.
அச்சு வெல்லம் | சேமியா | அவல் |
தாராக்கறி | ஆப்பம் | தேங்குழல் |
கஞ்சி | நெல்லஞ் சோறு | கட்டுச் சோறு |
பச்சரிசி | கடலை | பட்சணம் |
கடலைத் துவையல் | பணியாரம் | கம்பங் கஞ்சி |
பாயசம் | கருப்பட்டி | பால்கட்டி ( cheese ) |
கரும்பு | பிராந்தி ( brandy ) | கவாப்பு-ஊனுணவு |
பீப்பாய்த்தண்ணி (beer) | கற்கண்டு | பீருத்தண்ணி (beer) |
காணத் துவையல் - கொள்ளுத் துவையல் | புட்டு | கார வடை |
பூந்தி | கூட்டாஞ்சோறு-சிறு சோறு | மரிகின் மாவுப் புட்டு |
கைமா வடை | மிட்டாய் | கோழிக்கறி |
முறுக்கு | சம்பாச் சோறு | மொச்சைக் கொட்டை |
சர்க்கரை | ரொட்டி | சர்க்கரை மிட்டாய் |
ரோஸ்டுக்கறி | சர்க்கரை லட்டு | லட்டு |
சாக்கணா வடை | செங்கரும்பு | வெள்ளரிக்காய் |
சேட்டுக்கடை மிட்டாய் | ஜிலேபி |
4. பழவகை
இயற்கைத் தேவி வழங்கும் இனிய உணவு பழம். மனிதன் தோட்டம் போட்டுப் பழங்களை உண்டாக்கி உண்ணுகிறான். வேற்று நாட்டிலிருந்து பழமரங்களைக் கொண்டுவந்து பயிராக்கிக் கனிகளை உண்டாக்குகிறான்.
அத்திப் பழம் | பலாப் பழம் |
அன்னாசிப் பழம் | பேரீச்சம்பழம் |
கொய்யாப்பழம் | மாதுளம் பழம் |
சீதாப் பழம் | மாம்பழம் |
சீமை ஆப்பிள் | முந்திரிப் பழம் |
செவ்வாழைப் பழம் | வாழைப்பழம் |
5. புதுப் பொருள்கள்
இவை ஆங்கிலேய அரசாட்சியோடு வந்தவை
அஞ்சுமணி வண்டி | தோட்டா | ஆகாசக் கப்பல் |
பட்டாக் கத்தி | ஊசி ஏற்றுதல் | பட்டாளம் |
எலெக்ட்ரிக் விளக்கு | பட்டைச் சாராயம் | ஒட்டுப் பீடி |
பாரா பீரங்கி காந்த விளக்கு | பிச்சுவா | |
காபிக் கடை | பீடி | கிராப்பு |
பீப்பாய் | குண்டு மருந்து | புகைவண்டி |
கெடியாரம் | புஸ்தகம் | கொய்னா |
பேனா | சார்ட்டுவண்டி | போலீஸ்காரன் |
சீசா | மூக்குக் கண்ணாடி | சீமைக் கப்பல் |
மோட்டார் வண்டி | சுருட்டு | ரோட்டுப் பாதை |
சோட்டாத் தடி | ரஸகுண்டு | சோபா |
ரெயில் வண்டி | சவரன் | லாரி வண்டி |
தந்தி | வெடி குண்டு | தாணாக்காரர் |
வெள்ளி (ஒரு நாணயம்) | தார் ரோட்டு | வெள்ளைக்காரன் |
துப்பாக்கி ஜட்கா வண்டி | தேமேசை | ஜப்பான் பாய்< |
6. பூ வகை
தமிழ் நாட்டில் ‘மலரும் மணமும் போல’ என்று ஓர் உவமைப் பழமொழி வழங்குகிறது. இந்த நாட்டில் உள்ள மலர்கள் மணத்தால் சிறப்புடையவை. தமிழர் வாழ்வில் மலர்கள் பல துறையிலும் பயின்று பரவி இணைந்து மணக்கின்றன.
அரளிப் பூ | மருக்கொழுந்து | கண்வலிப் பூ-காந்தள் |
மல்லிகைப் பூ | செண்பகப் பூ மாதுளம் பூ | |
முருங்கைப் பூ-உணவுக்குரியது | செவ்வந்திப்பூ | ரோசாப் பூ |
தாழம்பூ | வாடா மல்லிகை | மஞ்சள்பூ |
வாழைப்பூ-உணவுக்குரியது | செந்தாமரை |
7. மாட்டு வகை
வேளாண்மையையே முக்கியத் தொழிலாகப் பெற்ற தமிழர் வாழ்வில் மாடுகள் இன்றியமையாதன. அவற்றைப் போற்றிப் பாதுகாக்கும் இயல்புள்ளவர் தமிழர். பலவகை மாடுகளை அவர்கள் அறிவார்கள்.
கருப்புக் காளை | நின்று குத்திக் காளை | காட்டு மாடு |
பில்லைக் காளை | காராம் பசு புள்ளி மாடு | |
குள்ளிமாடு | மயிலைக் காளை | கூடுகொம்புக் காளை |
மரைக் காளை | கொம்புக் காளை | விரிகொம்புக் காளை |
சிவத்த காளை | வெள்ளைக் காளை | செவலைக் காளை |
8. மீன் வகை
ஆற்றிலும், குளத்திலும், கடலிலும் பலவகை மீன்கள் வாழ்கின்றன. வலைஞர் பாடும் பாடல்களில் அவற்றின் பெயர்களைக் காணலாம்.
அயிரை மீன் | கெளுத்தி மீன | ஆரால் மீன் |
பரவை மீன் | குரவை மீன் | வழலை மீன் |
கெண்டை மீன் | வாளை மீன் |
9. பழக்க வழக்கங்கள்
இலக்கியங்களில் காணாத பல செய்திகள் நாடோடிப் பாடல்களில் வருகின்றன. வாழ்க்கையின் பல கோணங்களையும் நெருங்கிக் கண்ட நாடோடிக் கவிஞன் தான் கண்டதைக் கண்டபடி சொல்லுகிறான். அவன் பாட்டில் சமுதாயத்தில் உள்ள பல பழக்க வழக்கங்களைக் காணுகிறோம். இடத்திற்கும் வகுப்பிற்கும், காலத்திற்கும்ஏற்ப இவை வேறுவேறாக இருக்கும்.
கீழே வரும் அகராதியில் பழக்க வழக்கங்களோடு பல செயல்களும், சில விலங்கினங்களின் செய்கைகளும் காணப்படும். எண்கள், பக்க எண்களைக் குறிப்பவை.
----------
அக்காள் தங்கச்சி இல்லாதவருக்கு அன்னம் கொடுத்தல் 51
அட்டகாசம் செய்தல் 63
அட்டை கடித்தல் 220
அட்வான்ஸ் கொடுத்தல் 105
அடிபணிந்து நிற்றல் 189
அடிமேல் அடிவைத்து நடத்தல் 303
அடுப்பு மூட்டுதல் 225
அண்டாவில் சோறு ஆக்குதல் 25
அண்ணன் தம்பி கோடி போடுதல், 2791
அரவணைத்தல் அண்ணன் தம்பிமாரை 207
அத்தை குழந்தைக்குப் பேர்இடல் 263
அத்தை மகளிடம் உரிமை கொண்டாடுதல் 59
அந்தரடித்தல் 190
அந்நியப் பெண்மேல் ஆசை வைத்தல், 177
அந்நியரையும் அடுத்தவரையும் 123
ஆதரித்தல் 207
அம்பு வைத்து எய்தல 281
அம்மியை மடியில் கட்டிக்கொண்டு ஆழக்கிணற்றில் இறங்குதல் 292
அரசனுக்குச் சாமரம் வீசுதல 6
அரிசியை அரித்து உலைவைத்துச் சோறு வடித்தல், 11-கடன் வாங்கிச் சமைத்தல், 22
அரிவாள் சொல்லி அடித்தல் 21
அரிவாளை இடுப்பில் வைத்தல் 226
அரும்பெடுக்கும் நாளையில் அலைய விட்டுப் போதல் 281
அருமை குலைத்தல் 63
அலங்கன் ஆளைத் தேடுதல் 149
அழகுக்குக் கொண்டை போடுதல் 3
அழுத கண்ணைத் துடைத்தல் 235
அழுது புரளுதல் அறுப்பறுத்துக் கட்டுக்கட்டல் 164
-புரி முறுக்கல் 164
அன்னநடை நடத்தல் 143
ஆகாசத்தில் வீசுதல் 305
ஆகாசம் பூமியைச் சாட்சியாக வைத்தல் 300
ஆகாயக் கப்பலில் ஏறுதல் 73
ஆசை வைத்து மோசம் போதல் 177
ஆட்டம் நின்று ஓட்டமாதல் 335
ஆட்டுக் குட்டியின் கழுத்தைத்திருகுதல் 162
ஆட்டைப்போல் உரித்தல 297
ஆடவன் பெண்ணை ஏமாற்றிக் கொண்டு வருதல் 70
ஆடி அமாவாசையில் ஆண்ட வனைக் கும்பிடுதல் 205
ஆடிப்பாடிப் போதல் 220
ஆடிமாசம் அடிவைக்கக கூடாது் 161
ஆடு கருவேலங்காயைத் தின்னுதல் 17
ஆடைக்குக் கஞ்சி போடுதல் 16
ஆண்டவனைக் கும்பிடுதல் 206
ஆண்டி வேஷம் போடுதல் 306
ஆணம் காய்ச்சுதல் 225
ஆணுக்கும் பெண்ணுக்கும் பொன் கொடுத்தல் 52
ஆமை அருட்டப் பார்த்தல் 168
ஆரஞ்சித்தோல் பொறுக்குதல் 123
ஆராய்ச்சிமணி அடித்தல் 222
ஆலமரத்தின் அடியில் பிள்ளையை ஆட்டுதல் 142
ஆவாரம் பூவால் தாவாரம் இறக்குதல் 125
ஆளோசை கேட்டு வருதல் 286
ஆற்றில் சுரைக்குடுக்கை கொண்டு நீந்துதல் 239
ஆற்று மணலில் ஊற்றெடுத்தல் 290
ஆற்றோரத்தில் காத்திருந்து பெண்களைப் பார்த்தல் 198
-தோட்டம் வைத்தல் 244
ஆனைமேலே அம்பாரி வைத்தல் 51
ஆனையை அகழி வெட்டி அடக்குதல் 342
இஞ்சி முற்றித் தோப்பாதல் 280
இடுப்பை ஒடித்தல் 88
இணக்கமாப் போதல் 211
இரவில், காட்டில் புலி அலைதல் 74
- காந்த விளக்குப் போட்டு வேலை செய்தல் 247
இராச் சம்பளம் தருதல் 163
இரும்படித்தல் 29
இரும்பைக் காயவைத்துச் சம்மட்டியால் அடித்தல் 29
இலுப்பை மரத்தால் தொட்டில் செய்தல் 230
---------
1. இவை அருமையாகச் சமுதாயத்தில் காணுபவை.
--------
இலை போட்டுச் சோறு தின்னுதல் 244
இலையும் குழையும் தின்றல் 211
இழுத்துப்போட்டு உதைத்தல் 210
இழுத்துப்போர்த்துக் கொண்டு வருதல் 291
இளைத்தால் இளநீர் குடித்தல் 242
இறக்கிப் பேசுதல் 86
இறுமாப்புப் பேசுதல் 203
இஷ்டம்போல் உதை கொடுத்தல் 163
ஈ எறும்பு கடித்தல் 251
ஈக்கும் நாய்க்கும் இரையாதல் 300
உச்சந்தலை தொடங்கி உள்ளங்கால் மட்டும் அடித்தல் 339
உடம்பு நோவுக்கு ஒற்றடம் கொடுததல் 233
உதவி இல்லாதவருக்கு உப்புக் கொடுத்தல் 51
உதை கொடுத்தல் 162
உயர்த்திப் பேசுதல் 60
உயிரைத் தத்தம் செய்தல் 82
உருட்டி உருட்டி விழித்தல் 203
உலக்கையால் இடித்தல் 213
உலகமெல்லாம் சுற்றுதல் 255
உற்றார் பெற்றார் குழந்தையை மெச்சுதல் 328
ஊர் இரண்டாதல், -சிரித்தல், 286, 214
ஊர்க்குருவி உயரப் பறத்தல் 65
ஊர் நாடு அறியத் தாலிகட்டுதல் 118
எச்சில் துப்பிச் சேறு குழைத்தல் 330
எச்சிலைத் துப்பினால் செல்வம் தங்காது, 206
எட்டி உதைத்தல் 72
எட்டு வச்சுப் போதல், எடுத்தெறிந்து பேசுதல் 66, 207
எண்ணெய் தேய்த்துத் தலை முழுகுதல 289
எண்ணெயிலும் வெந்நீரிலும் ஒற்றடம் கொடுத்தல் 252
எமலோகம் சேர்தல் 87, 278
எரிந்த குலைகள் அமர ஈரக்குலைகள குளிர்தல் 185
எருமைமாடு மேய்த்தல் 200
எருவு தட்டுதல் 66
எலி கதிரைப் பொந்திலே சேர்த்தல் 149
எலும்பைத் தட்டுதல் 290
எறும்பு கதிரைப் புற்றில் சேர்த்தல் 149
ஏங்கி ஏங்கி முகம் பார்த்தல் 305
ஏணிமேல் ஏணி வைத்து ஏறுதல் 284
ஏரிக்குள்ளே படகு போதல் 289
ஏழு மாதத்தில் வீடு கட்டுதல் 248
ஏழைகளுக்குக் கஞ்சி தர்மம் கொடுத்தல் 182
ஐந்து வயசில் அரிச்சுவடி படித்தல் 252
ஒன்றுக்குப் பத்தாக அபராதம் செலுத்துதல் 102
ஒருவன் எட்டுப் பேரை எதிர்த்தல் 179
ஓடும் தண்ணீரைக் குறுக்காட்டுதல் 292
ஓடும் தண்ணீரை உத்தரத்தால,்கடத்தல் 238
ஓந்தி பதுங்கிப் பதுங்கிப் பயமுறுத்தல் 168
ஓலை முதலியவற்றை விற்றல் 243
கங்காணிக்குத் தலைக்காசு தருதல் 169
கங்காணி கணக்குப் பார்த்துக் காசு கொடுத்தல் 172
கச்சேரியில் கையெழுத்துப் போடுதல் 19
கஞ்சி ஊற்றுதல் 320
கஞ்சிக்குக் காணத் துவையலைக்கடித்துக் கொள்ளுதல் 336
கஞ்சி குடிக்கும்போது கடித்துக் கொள்ளுதல் 151
கட்டி மாரடித்தல் கட்டி முத்தம் கொடுத்தல் 234
கட்டிவைத்தடித்தல் 162
கட்டு அவிழ்த்தல் 331
கட்டுத் தாலி கட்டுதல் 92
கட்டைக் களம் சேர்த்தல் 164
தூக்கி விடுதல் 164
கட்டை வண்டியில் காட்டுவழி போதல் 179
கடவுள் ஊர்வலம் வருதல் -மிருகத்துக்கு நீச்சம் கற்றுக் கொடுத்தல் 223, 239
கடவுளுக்கு உகந்து நடத்தல்-கடலை அவல் நிவேதனம் பண்ணுதல் 208
-----------
கை எடுத்தல், சூடம், சாம்பிராணிபோடுதல் 223, 229, 206
கடித்துக் கொள்ளுதல் 336
கண் அடித்தல் 102, 178, 201
இரண்டும் சோர்தல் 52
- பஞ்சடைதல் 302
- குளிரப் பார்த்தல்,குளிர வளருதல் 295
கண்ட துண்டம் ஆக்குதல் 72
கண்டபடி பேசிப் பழித்தல் 296
கண்டவனுடன் பேசுதல் 205
கண்ணகியைப் போல் கண் எழுதுதல் 298
கண்ணீர் விட்டு அழுதல் 331
கண்ணுக்கு அப்பால் விரட்டுதல் 329
கண்ணைச் சிமிட்டிப் பார்த்தல் 299
தோண்டுதல் 208
கண்மணிபோல் காத்தல் 216
கணக்குப் பிள்ளை கம்பால் அடித்தல், , 169
- கம்பு வைத்திருத்தல் 168
கணவன் மனைவியை அடித்தல் 210
கத்திக்கு இரையாதல் 89
கத்தியை மினுக்கி வைத்தல் 176
கதவுநிலை வைக்கும்போது கடலை அவல் தேங்காய் பழம் கொடுத்தல், 248
கதிரறுத்தல் 226
கதிரைக் கட்டி வைத்தல் 227
- கொட்டிக் காலால் மிதித்தல் 36
கப்பல் ஏறிக் கடலைத் தாண்டுதல், கதை பேசுதல் 299
82 - ஏறிச் சீமை பார்க்கப் போதல், 40-வந்து கரைசேருதல், 125
கப்பலில் ஆடு மாடு போல ஆணையும் பெண்ணையும் அடைத்தல் 161
கம்பங் கஞ்சியும் கடலைத் துவையலும் உண்ணுதல் 151, 171
கம்பு விளைந்தால் கிளி வருதல் 6
கயிற்றை முறுக்கித் தொட்டில் செய்தல் 294
கரகம் எடுத்தல் 317
கரடி காட்டில் வழி மறித்தல் 167
கருநாய் காடுசுற்றி வருதல் 254
கரு மருந்தைத் துளையில் கெட்டித்தல், 247
கருவைக்கரைக்க மருந்த உண்ணல், 8
கல் பொறுக்கி அடுப்புக் கூட்டுதல், 49
- கோபுரம் கட்டுதல், 53
கல்மேல் கல் அடுக்கி ஏறுதல் 284
கல்யாணத்தில் அத்தைமார் ஆலத்தி எடுத்தல் 96
- ஊர்வலம் போதல் 92
- ஊர் வெற்றிலை வைத்தல் 94
எல்லோருக்கும் சந்தனமும் குங்குமமும் கொடுத்தல் 95
- ஏழைகளுக்குச் சோறு போடுதல் 93
- சகோதர சகோதரிகளுக்குத் துணி வாங்குதல் 93
- சம்பந்திகளுக்குப் பழம் பாக்கு வைத்தல் 94
- தாம்பாளத்தில் பூவும் தாலிக் கயிறும் வைத்தல் 95
- தாலிகட்டுதல் 92
- தேங்காய் பழம் தாம்பூலம் தம்பதிக்குக் கொடுத்தல் 95
- பந்தலில் சனங்கள் உட்காருதல 197
- புரோகிதர் க்ஷேம லாப நேரத்தைச் சொல்லுதல் 94
- பொய்ப் பந்தல் போடுதல் 95
- மணமக்கள் சம்மணங்கால் போட்டு உட்காருதல் 96
- மணமக்கள் நமஸ்காரம் செய்தல் 96
- மணமக்களுக்கும் பூசாரிக்கும் நடுவே திரைகட்டுதல் 96
- மணமக்களின்மேல் சிறு பிள்ளைகள் பூவை இறைத்தல் 96
- மணமகன் கொழுந்திமாருக்குக் கறுத்த கோழிக் காலைக் காண்பித்தல் 98
- மண மகனுக்குச்சாதிக்கோழி அடித்துப்போடுதல் 98
- மந்திரங்களை உச்சரித்தல் 95
-மாமன்மார் மச்சான்மாருக்கு மாலை போடுதல் 93
- மைத்துனன்மார் மஞ்சள் தண்ணீர் ஊறறுதல் 97
- மைத்துனன்மார் மணமகன் மேல் சாணியைக் கரைத்து ஊற்றுதல 97
-மைத்துனன்மார் மணமகனைப் பரிகாசம் செய்தல் 67
-வரிசைக்குப் பதில் வரிசை கொடுத்தல் 93
-விருந்து வைத்தல் 93
-கல்யாணத்துக்கு நாகசுரக்காரனை அழைத்தல் 94
- நாள் நட்சத்திரம் பார்த்தல 94
- முன்முகூர்த்தக்கால் ஊன்றுதல் 94
கல்யாணப் பாட்டுப் பாடுதல் 96
-----------
கல்லால் அடித்தல் 290
கல்லுக்கும் கல்லுக்கும் அணை போடுதல் 389
கல்லை உருட்டித் திரட்டி அடித்தல் 160
- எறிந்து உறங்குபவனை எழுபபுதல் 124
கலசத்தில் பால்குடித்தல் 237
கவண் எறிந்து காக்கை குருவியைத் துரத்துதல் 295
கழுதைப்புலி வழிமறைத்தல் 167
கழுதைபோல் அலைதல் 305
கள்ளன் ஆளைவிட்டு உளவறிதல் 181
- கள்ளுக்குடித்தல் 175
- கன்னக்கோலை எடுத்தல் 192
- கொத்தவால்காலைவெட்டுதல் 187
- கோட்டைகொத்தளம் ஏறுதல் 187
- சமயத்தில் கதவை உடைத்துப்புகுதல் 29
- சாமத்தில் சாககைக்கொண்டுவருதல் 148
- சுவர் ஏறித் தாண்டுதல் 178
- தானதர்மம் பண்ணுதல் 181
- துப்பாக்கியைக் காட்டிப் பணம் வாங்குதல் 180
- நகைகளைக் கழறஞற்றிக் கொள்ளுதல் 179
- பணத்தைப் பறித்தல் 180
- முள்வேலியைத் தாண்டுதல் 183
கள்ளுக்கடைக்குப் போய்க்களை ஆற்றுதல் 162
களிமண்ணால் வீடுகட்டுதல் 269
களைத்தால் கள் குடித்தல் 243
களைப்புத் தீரத் தண்ணீர் குடித்தல் 139
களைபறித்தால் காசு பெறுதல் 106
களையாளுக்குக் கங்காணிகளைக் கொட்டுக் கொடுத்தல் 168
களைவந்து மூடிச் சாய்தல் 304
கறுப்புத்தூள் பறத்தல் 127
கறுப்புப் பொட்டு வைத்துக் கண்ணடித்தல் 212
கன்றுக் குட்டியைத் தேடிக் கயிறெடுத்து வருதல் 124
கன்று போகும் வழியில் கல் கிணறு கட்டி வைத்தல் 254
கன்னத்தில் அடித்தல் 209
- மஞ்சள் தேய்த்தல் 209
கன்னத்தைத் திருகுதல் 210
காசி தீர்த்தம் ஆடுதல் 253
காட்டுக்காரன் காக்கை கத்தும் நேரத்தில் கம்மாய்க்குப் போதல் 147
காட்டுக்கு எரு ஆகுதல் 85
காட்டைக் காத்தல் 35
காடும் வனமும் கண்டபடி அலைதல் 255
காடு மலையைப் பிடித்தல் 341
காடு மேட்டை அழித்துப் பங்களாக்கட்டுதல் 342
காடு விதைத்துப் பயிர் ஆக்குதல் 295
- வெட்டிக்கம்புசோளம் தினை விதைத்தல் 35
- வெட்டிக் கல் பொறுக்குதல் 35
காணாத தேசத்தைக் கண்டு பிடித்தல் 340
காணிக்கை தருதல் 293
காத்தவராயன் பலிகொள்ளுதல் 317
காதலி மடியின்மேல் காதலன் உறங்குதல் 21
காதில் ஊசிபோட்டுக் குத்தல் 42
- கையை வைத்தல் 305
காதுகளைப் பிணைத்துப் பூட்டுதல் 179
காதைக் கடித்தல் 210
காயை எறிந்து கடுங்காவல் பெறுதல் 24
கார்த்திகை தீபாவளியில் கடவுளைப் பாடுதல் 206
கால்பிடிக்க ஆள் வைத்தல் 13
கால்வாய்த் தண்ணீரைக் கம்பால் அடித்தல் 238
காலுக்குக் காலாழி மாட்டுதல் 295
காலுக்கு மிஞ்சி போடுதல் 51
காலையில் எழுந்து கைகாலைச் சுத்தம பண்ணுதல் 175, 245
- பெண்கள வாசலுக்குச் சாணி போடுதல் 205
- கடவுளைக் கும்பிடுதல் 245
காலையிலும் மாலையிலும் துணி மாற்றல் 250
காவல்காரன் பயிரைக்காத்தல் 148
காளைக்குச் சாயம் பூசுதல் 53
- சூடு போடுதல் 5
காளைகள் சூடடித்தல் 139, 227
கிழவன் மீசையைக் கோதுதல் 25
கிழவி நெல்லைக் கூட்டிப் பொறுக்கிக் கொண்டு போதல் 154
-------------------
கிழிந்து போன கந்தலைத் தைத்தல் 206
கிளியை விரட்டுதல் 36
கிளி வளர்த்தல் 39
குடல் தட்டுதல் 233
குடிகெடுத்தல் 300
குடிசையைக் கிடுகுபோட்டு மேய்தல் 242
குடுவையிலேகள் வைத்தல் 339
குடை பிடித்தல் 224
குண்டுபோட்டுச் சுடுதல் 281
குண்டை உருட்டுதல் 200
குதிரைக்குக் கண்ணி வைத்தல் 26
- லாடம் அடித்தல் 170, 285
குதிரை குதித்து ஓடுதல் 128
குந்திக் கணக்கு எழுதுதல் 231
கும்மாளம் போடுதல் 251
கும்மி அடித்தல் 251
கும்மிப்பாட்டுப் பாடுதல் 137
குமரிப்பிள்ளை கொழுந்து வெற்றிலை போடுதல் 141
குரலோசை கேட்டு வருதல் 286
குருவி ஆளைக் கண்டு கத்துதல் 10
- மின்மினியை விளக்காக வைத்தல் 274
குலுக்கி நடத்தல் 70
குலையை அறுத்தல் 211
குலை எரிந்துபோதல் 256
குழந்தை அடுத்த வீட்டுப் பிள்ளைகளை அடித்து விளையாடுதல் 326
- எட்டு வயசில் பட்டுச் சட்டை போடுதல் 328
- ஏழு வயசில் எழுத்தாணி பிடித்தல் 327
- ஏழு வயசில பள்ளிக்கூடம் போதல் 327
குழந்தைக்கு எழுத்தாணியும் ஓலையும் தருதல் 236
- கவி சொல்லிக் கொடுத்தல் 237
- காதுகுத்திப் பஞ்சுத் தக்கை வைத்தல் 295
கையும் காலும் அமுக்குதல் 281
- கொத்துக் கொத்தாக நகை போடுதல் 294
- சட்டைபோடுதல் 250
- சிரிப்புக் காட்டுதல் 251
- தண்ணீர் ஊற்றுதல் 251
- தாதி மார் பலர் வைத்தல் 250
- பல் முளைத்தல் 326
குழந்தை கூட்டாஞ்சோறு ஆக்குதல் 326
- கொஞ்சி விளையாடுதல் 326
- திண்ணையின் கீழ்த் தவழ்ந்து விளையாடுதல் 258
- தொட்டிலில் தூங்குதல் 233
- நாலு வயசில் நன்றாக நடத்தல் 326
- பசியால் அழுதல் 325
- பால் குடிமறத்தல் 326
- மிட்டாய் வாங்கித் தின்னுதல் 260
- மூன்று வயசில் முகம் பார்த்துச் சிரித்தல் 326
குழந்தையில் அறுத்தல் 277
குழந்தையை இரவில் காவல் காத்தல் 250
- கொஞ்சி முத்தமிடுதல் 294
- தாலாட்டுதல் 237
குழி வெட்டுதல் 162
குளத்தில் குளித்தல் 330
குளவி கொட்டுதல் 69
குற்றாலத்தில் நீராடுதல் 253
குறச்சாதி சொல் தவறாமை 296
குறும்பு செய்தல் 203
குஸ்தி போடுபவர் தொடக்கத்தில் தொடையில் அடித்தல் 46
கூட்டாஞ்சோறு ஆக்குதல் 49
கூடத்தைக் கட்டிக்குயில் எழுதுதல் 281
கூடாரம் கட்டுதல் 11
கூடுவிட்டுக் கூடு பாய்தல் 49
கூடையில் பழமெடுத்தல் 169
கூந்தலை விரித்துப் போடுதல் 187
கூப்பாடு போட்டழுதல் 199
கூலிக்கு உழுதல் 26
- கல் உடைத்தல் 162
- பேர் கொடுத்தல் 105
கூழ்காய்ச்சி மூடிவைத்தல் 25
கூழ் குடித்துவிட்டு வேலைக்குப் போதல் 168
கேட்டில் காசு கொடுத்தல் 21
கேட்டுவாய் கேட்டு அறிதல் 286
கை அலைத்துக் கூப்பிடுதல் 184, 201
கை எடுத்த பேருக்குக் கைநிறையப் பணம் கொடுத்தல் 181
கை எடுத்துக் கும்பிடுதல் 24
கை கட்டிக் கையெடுத்தல் 170
கைகால் சுத்தம் செய்துகொண்டு கடவுளைக் கும்பிடுதல் 207
கைகால் சுளுக்குதல் 251
- பதைத்தல் 210
- பிசகுதல் 251
கைகால் வீக்கத்துக்குக் கணையெண் ணெயைக் கொடுத்தல் 233
-------------
கைச்சரசம் பண்ணுதல் 306
கை தூக்குதல் 329
கை நடுங்கக் கால் நடுங்குதல் 170
கை மருந்து கூட்டுதல் 15, 30
கையில் சங்குவளை அணிதல் 10
கையும் காலும் குலையும் உதறுதல் 306
கையை ஊன்றிக் கரணம் போடுதல் 41
- பிடித்துத் தூக்குதல் 305
- பிளந்து கொள்ளல் 159
கையையும் வாயையும் அடக்குதல் 211
கை வீசிப் போதல் 226
கொங்கணியைக் குடைபோலக் கொள்ளுதல் 168
கொசுக் கடித்தல் 220
கொசுவத்தைத் திருப்பி வைத்துக்கட்டுதல் 290
கொஞ்சிக் கேட்டல் 236
கொடி ஏற்றுதல் 341
கொடியை சுற்றிப் பழம் இருத்தல் 168
கொண்டவன் உயிராய் இருத்தல் 205
கொண்டவனுக்கு இரண்டகம் செயயாமை 205
கொண்டையை அறுத்தல் 214
கொய்யாப் பழத்தைக் குருவிகுடைதல் 141, 272
கொழுந்தியாள் மணமகனைப் பரி காசம் பண்ணுதல் 197
கோட்டையில் கொடி பறத்தல் 236
- மணி அடித்தல் 267
கோட்டையைப் பிடித்தல் 341
கோடாரி தெறித்துப் போதல் 121
- வாய் போதல், 121
கோபத்தால் கண் சிவத்தல் 3
கோயிலில் ஆணும் பெண்ணும் ஆடுதல் 223
- ஆணையிட்டுக் கொடுத்தல் 73
- கற்பூரத்தை அணைத்துச் சத்தியம் செய்தல் 72
- சங்கு முழங்குதல் 250
- சத்தம் போட்டுப் பாடுதல் 328
- சின்னம் முழங்குதல் 256
- தாசிகள் ஆடுதல் 223
- தேர் இழுத்தல் 222
- மேளதாளம் முழங்குதல் 223
- வேட்டி போட்டுத் தாண்டி சசத்தியம் செய்தல் 12, 18
- கோழி குப்பையிலே மேய்ந்து வருதல் 254
- கும்பு கும்பா மேய்தல் 103
- பொரித்தல் 316
கோள் குண்டுமணி சொல்லுதல்சங்கிலியில் கட்டி வைத்தல் 179
சட்டி பானை செய்ய மண் எடுத்தல் 268
சட்டி பானையில் சமையல் செய்தல் 49
- பணியாரம் சுடுதல் 123
சட்டினி செய்தல், சட்டைமேல் சட்டை போடுதல் 224
சண்டன் அண்ட மெல்லாம் அடுக்குதல் 316
சத்திரத்திலே படுத்தல் 17
சதி நினைத்துப் பேசுதல் 254
சதிராடுதல் 251
சதையை வகிர்தல் 210
சந்தனத்தேவன் கொழுத்த ஆட்டைத் திருடுதல் 159
- ஊற்றுத் தண்ணீரைக் குடித்தல -கொழுந்து வெற்றிலைப் போடுதல் 156
- சந்தனக் கட்டிலில் படுத்தல் 157
- சம்பாச் சோறு தின்றல் 155
- சரிகை வேட்டி கட்டுதல் 155
- சாப்புத் தண்ணீர் குடித்தல் 157
சிவந்த பெண்ணைக் கட்டுதல் 156
- செம்பகப் பூவை அணிதல் 157
- பட்டாக் கத்தியால் வெட்டுதல் 156
- பட்டுச் சட்டை அணிதல் 155
- மச்சு வீட்டில் இருத்தல் 155
- வாட்சண்டை போடுதல் 158
- வாழையிலையில் சாப்பிடுதல் 157
- வெள்ளி மிஞ்சி போடுதல் 156
- வைர மோதிரம் அணிதல் 158
- ஜட்கா வண்டியில் ஏறுதல் 156
- ஜப்பான் பாயில் படுத்தல் 157
- ஜெயில்கூடத்தில் படித்தல் 158
சந்து சந்தாகக் கிழித்தல் 68
சந்தையிலே நகை வாங்குதல் 109
- பூ வாங்குதல் 108
சந்நிதியில் ஆணையிடுதல், சந்நியாசி வேஷம் போடுதல் 9
சம்இன்ஸ்பெக்டர் பீட்நோட்டில் கையெழுத்துப் போடுதல் 183
சமுத்திரம் பாடுதல் 325
சர்க்கார் சாலையில் மரம் வைத்தல் 35
-----------
சரசக்காரன் சாந்துப் பொட்டு வைத்தல் 160
சரசம் பண்ணுதல் 84
சாகாத வரம் பெறுதல் 91
சாணியால் வீடு மெழுகுதல் 269
சாணி வாருதல் 66
சாந்தோடு கருப்பட்டியும் முட்டையும் கலத்தல் 247
சாமானம் வாங்குதல் 171
சாமை குத்திச் சாறு காய்ச்சுதல் 171
சாய்ந்த கொண்டை போடுதல் 165
சாய்ந்து கணக்கு எழுதுதல் 231
சாயம் காய்ச்சுதல் 20
சாராயத்தால் தொண்டை வலி தீர்தல் 289
சாராயம் படைத்தல் 317
சாலை மரத்தில் தூக்குப் போடுதல் 35
சாலையில் மண் எடுத்துப் போடுதல் 170
சாஷ்டாங்கமாகப் பணிதல் 77, 328
சிங்கக் கொடி நாட்டுதல் 193
சித்திர வேலை செய்தல் 329
சில்லரை மாற்றுதல் 136, 270
சில்வண்டிச் செலவு வாங்கச் சின்னக் கடைக்குப் போதல் 327
சிலுவையைத் தோளில் வைத்தல் 293
சிலையிலே பேர் எழுதுதல் 23
சிவப்புத் தூள் பறத்தல் 127
சிவலோகம் போதல் 279
சிவனாண்டி செங்கல் தருதல் 245, 247
சின்ன ஆற்றைச் சின்ன மரப பாலத்தால் கடத்தல் 239
சீட்டெழுதி விடுதல் 286
சீர்வரிசை வாங்குதல் 228
சீலை மங்காமை 292
சீலையில் சிவப்புக் குறிபோடுதல் 20
சீலை வரிந்து கட்டல்
சுண்ணாம்பு ஜாடைசொல்லுதல் 23
சுப முகூர்த்தத்தில் மாலையிடுதல், சுருக்குப் பையைச் செருகிக் கொள்ளுதல் 226
சுற்றத்தார் மாரடித்தல் 285
சுற்றி நின்று மாரடித்தல் 285
சூலம் பார்த்தல் 143
செட்டியார் கஞ்சா விற்றல் 25
செடிக்கு ஒருபூக்கொடுத்தல் 246
செந்தொட்டி சொறிய வைத்தல் 167
செம்பிலே சிலை எழுதுதல் 3
செருப்படி கொடுத்தல் 64
செல்லம் கொஞ்சுதல் 251
செல்லாத காசையும் செல்வமாக நினைத்து வைத்தல் 206
செவி கொடுத்துக் கேட்டல் 336
சேர்வைக்காரரிடம் சிற்றாளைப்பற்றிப் பேசுதல் 245
சேவகர்கள் இரவில் ரோந்து சுற்றுதல் 184
சைகையிலே பேசுதல் 184
சொல்லழகில் தோற்க வைத்தல் 204
சோட்டடி கொடுத்தல் 329
சோட்டாத் தடியையும் பிச்சுவாவையும் மாறி மாறி வீசுதல் 178
சோறு பொங்குதல் 164
ஞானஸ்நானம் பெறுதல் 324
டாக்டர் ஊசி ஏற்றுதல் 161
- சோதித்தல் 161
டிராம் வண்டி நின்று நின்று போதல் 343
தகப்பன் சொல் தவறாமை 235
தச்சுவேலை செய்தல் 320
தட்டான் நகை செய்தல் 28
தட்டுமுட்டுச் சாமான்களைத் தோலள் மேல் சுமந்து போதல் 162
தண்டனிட்டுப் பணிதல் 296
தண்ணீர் உயிர்எடுத்தல் 241
- உயிர கொடுத்தல் 241
- சண்டைக்குக் காரணமாதல் 240
- நெளி நெளியா ஓடுதல் 238
- மின்னுதல் 240
- மூன்றுபிழை பொறுத்தல் 78, 91
தண்ணீர்க் குடம் தலைமேல் வைத்தல் 264
தண்ணீரைத் தொழுதல் 240
தப்புத் திப்பென்று அடித்தல் 338
தலயாத்திரை செய்தல் 253
தலை எழுத்தை ஆராலும் அறிய முடியாது 279
-------------
தலை குனிந்து நடத்தல் 41
- சவரம் பண்ணித் தலைப்பாகை வைத்தல் 225
- சாய்ந்து படுத்தல் 278
- சீவித் தாழம்பூ வைத்தல் 279
- நடுங்கக் குலை நடுங்குதல் 170
- பார்த்தல் 22
தலைமேல் கையை வைத்து ஆசீர்வாதம் பண்ணுதல் 255
தலையைச் சுற்றிப் பணம் எறிதல் 293
தலைவலியினால் கண் சிவத்தல் 15
தவம் செய்து குழந்தையைப் பெறுதல் 81
தவமுனி காலில் விழுதல் 255
தழுவி முத்தமிடுதல் 301
தற்குறி கீறல் போடுதல் 344
தாங்கித் தாங்கி நடத்தல் 250
தாதி கால் கழுவுதல் 48
- மேல் தேய்த்தல், 48
தாய் குழந்தையை மடியில் வைததல் 325
தாய் சொல்லைத் தட்டாமை 235
தாய் தகப்பன் இல்லாதவருக்குத் தர்மம் கொடுத்தல் 51
தாய்பிள்ளை அழுது வருதல் 186
தாய்போலப் பாதுகாத்தல் 102
தார்ரோட்டில் தண்ணீர் நில்லாமை 343
தாலிக்கொடி செய்தல் 279
தாலியைப் பறி கொடுத்தல் 122
- விடியற்காலம் கழற்றுதல் 284
தாழைமுள் குத்துதல் 283
தாளித்த சட்டியை வழித்துநக்குதல் 293
தாறுமாறாகப் பேசுதல் 297
திகைத்துப்போய் நிற்றல் 337
திருநீறும் பன்னீரும் தெளித்தல் 255
தில்லைக் காளி பிள்ளை வரம் தருதல் 312
தினை கதிரைக் கொய்தல் 307
தினை கதிர் வாங்கி மணிபிடித்தல் 295
தினைமா திரித்தல் 307
தினை மாவும் தேனும் உண்ணுதல் 295
தினை மாவைத் திரித்துப் பிள்ளையார்க்குக் கொடுத்தல் 253
தினைவயல் காத்தல் 295
தினை விதைக்க நிலம் பார்த்தல் 295
தீச்சட்டி எடுத்தல் 315
தீர்த்தமாடல் 253
தீர்த்தயாத்திரை செய்தல் 253
தீனி தின்னுதல் 210
துப்பாக்கியால் வேட்டை ஆடுதல் 342
துரை உதை கொடுத்தல் 163
- கங்காணிமாருக்குக் காசு கொடுத்தல் 170
- கங்காணிமாரைக் கைக்குள்ளே போட்டுக் கொள்ளுதல் 163
- கண்டகண்ட பெண்ணைக்கையைப் பிடித்து இழுத்தல் 163
- கண்ணைச் சிமிட்டுதல் 163
- கம்பளி கொடுத்தல் 170
- காசை இறைத்தல் 163
- காய்ச்சல்காரருக்குக்கொய்னாத் தருதல் 170
- கால் சட்டைப் போட்டுக் கையை உள்ளேவிடுதல 163
- கின்னாரம்வாசித்தல் 39
- குதிரைமேல் ஏறி வருதல் 170
- கையலைத்துக் கூப்பிடுதல் 170
- கையைப்பிடித்துக்குலுக்குதல் 130
- சம்பளம் தருதல் 39
- சாராயம்குடித்தல் 131
சின்னப் பெண்ணைக் கண்டு சேட்டை பண்ணுதல் 163
- சுடுதல் 31
- சுருட்டுக் குடித்தல் 131
- தேக்கிலையில் தீனி தின்னுதல் 291
- நோயாளிகளுக்குச் சீமைச்சாராயம் தருதல் 170
- பழங்களைக் கொடுத்தல் 131
புகையிலைப் பொடி குடித்தல் 130
துரைக்குத் தீனி தயார் செய்தல் 129
- தேமேசை போடுதல் 128
வெந்நீர் தயார் செய்தல் 128
தூணிலே கட்டிப் போடுதல் 213
தூரியில் உறங்குதல் 232
தெள்ளுப் பூச்சி கடித்தல் 210
தென்னம்பிள்ளைக்குக்களை யெடுத்தல் 243
- தினந்தோறும் தண்ணீர் ஊற்றுதல் 243
தேங்காயைக் கம்மால் எறிதல் 330
தேச வரி கொடுத்தல் 382
தேம்பித் தேம்பி அழுதல் 211
தேயிலைக் கொழுந்து எடுத்தல் 105
---------------
தேயிலை பறிப்பவள் கம்பளி பெறுதல் 106
- மகாராசா காசு பெறுதல் 107
- வழிச் செலவு பெறுதல் 106
ஒன்று வாங்குதல் 105
தேயிலை பறிப்பவளுக்கு அரிசிகிடைத்தல் 105
- சீலை இனாம் கிடைத்தல் 106
தேனும் பாலும் அருந்துதல் 303
தேனும் மாவும் பிசைதல் 37
தைலம் தேய்த்தல் 252
தொங்கு கொண்டை போடுதல் 165
தொட்டிலில் பூவிரித்தல் 220
தொடை வலிக்கு வெந்நீர் ஊற்றுதல் 289
தொப்பை வாடுதல் 282
தொதுவர் ஆடையின்றி நிற்றல் 337
தொழில் செய்வார் பாட்டுப்பாடுதல் 247
தொழிலாளர்களுக்குக் காபி கொடுத்தல் 247
தோட்டத்துக் கணக்குப் பிள்ளைகளையாள் கொடுத்தல் 168
தோட்டத்துக்கு நாயக்கன்மாரைக் காவல் வைத்தல் 244
தோற்றுப் போனவன் ஓடுதல் 47
நகை செய்யத் தட்டானிடம் பொனனைக் கொடுத்தல் 28்
நங்கு பண்ணுதல் 213
நண்டு வங்குமண் எடுத்து நாகபடம ்உண்டு பண்ணுதல் 166
நந்தவனத்தில் சூதாடுதல் 248
- பந்தாடுதல் 249
நம்பி மோசம் போதல் 322
நரி ஊளையிடுதல் 168
- வழி மறித்தல் 168
நல்லதனம் பண்ணிப் பணம் தட்டுதல் 292
நல்ல நாள் பார்த்து முகூர்த்தம் வைத்தல் 118
நாக்கை அறுத்தல் 61
நாகரிகக்காரர் ஆற்றில் போட் விடுதல் 239
நாட்டியக் குதிரைபோல் ஆடுதல் 214
நாடு இரண்டாதல் 286
நாதியற்ற பிள்ளைகளை ஆதரித்தல் 344
நாய் சோற்றை இழுத்தல் 27
நாயைப்போல ஊளையிடுதல் 81
- குலைத்தல், 213-திரிதல் 73
- வாரத்துக்கு ரூபாய் நாரை மீனைக் கொத்துதல் 240
நாள் நட்சத்திரம் பார்த்து அஸ்தி வாரம் போடுதல் 247
நாற்று நடுதல் 99, 166
நாற்றைக் குவித்து வைத்தல் 227
நான்று கொண்டு சாதல் 13
நிலம் விளைய நெய் விளக்கு ஏற்றுதல் 253
நிலா வெளிச்சத்தில் காற்றோட்டமாகப் படுத்தல் 107
நெஞ்சுச் சளிபிடித்தல் 232
நெய்விளக்கு ஏற்றி வைத்தல் 253
நெருங்கி நின்று பேசுதல் 202
நெல் கொடுத்துக் கடலை அவல் வாங்குதல் 138
- பண்டங்களை வாங்குதல் 138
நெல்லும் புல்லும் அறுத்துக் கட்டுக் கட்டுதல் 122
நெல் வண்டியில் வருதல் 154
- விளைந்து சாய்தல் 292
நெற்றியில் சாந்துப் பொட்டு வைத்தல் 166
நெற்றி வேர்வை நிலத்தில் விழுதல் 145
நேர்த்திக்கடன் செலுத்துதல் 233
பக்குவமாகப் பிழைத்தல் 213
பச்சைக் கிளியும் வெட்டுக்கிளியும் கதிரைத் தின்னுதல் பச்சைப்பிள்ளை பாலுக்கு அழுதல் 168
பசிக்களை ஆறுதல் 303
பசியினால் காது அடைத்தல் 8
பசுமாடு புல் தின்னுதல் 225
பசு வாங்கி விடுதல் 254
பஞ்சத்தில் எங்கும் பிணம் கிடத்தல் 335
- கஞ்சித்தொட்டி போடுதல் 336
- கஞ்சி யில்லாமல் மக்கள் மாளுதல் 336
- தயிர் கிடைக்காமை 335
- தாகத்தால் மக்கள் இறத்தல் 336
- தாய் வேறு பிள்ளை வேறு போதல் 335
மாடுகள் பட்டினி கிடத்தல் 335
பஞ்சம் பிழைக்க ரங்கூன் போதல் 159, 163
பஞ்சைக் கொட்டுதல் 302
--------------
பட்சபாதம் இல்லாமல் ஆகாரம் பகிர்ந்து கொடுத்தல் 207
பட்டபாட்டை விட்டுச் சொல்லுதல் 163
பட்ட மட்டையைப் பறித்தல் 243
பட்டாளம் கூடாரத்தில் இறங்குதல் 293
பண்டிகை கொண்டாடும்போது செம்மறிக் குட்டியைப் பலிகொடுத்தல் 323
பணத்தால் கொழுப்பு உண்டாதல் 211
பணத்தை இறைத்தல் 181, 246
பத்தாம்மாதம் பாலன பிறத்தல் 321
பந்து விளையாடுதல் 328
பத்து வயசில் பக்தி உருவாதல் 328
பத்து வயசுக்குள் படிப்பெல்லாம் முடித்தல் 252
பதினொரு வயசில் பாதி மனிதனாதல் 328
பயிரிட்டு வேலி கட்டுதல் 295
பயில்வான்கள் பாய்ச்சல் காட்டுதல் 46
பரலோகம் சேர்தல் 278
பருத்தி இலையும் பச்சரிசி மையும் சேர்த்துப் பொட்டு வைத்தல் 166
பல் கிட்டுதல் 302
பல்லக்கு ஏறிய பவனிபோதல் 51
பல்லைத் தட்டுதல் 67, 208
பலிஞ்சடுகுடு அடித்தல் 261
பவுன் வாங்கிக் காப்பு அடித்தல் 277
பழத்தைச் சாக்கிலே போடுதல் 32
பழமை பேசிப் போதல் 179
பழனிமலை போதல் 253
பழி இழுத்துப் போடுதல் 204
பழிவாங்குதல் 76
பள்ளிக்கூடம் போகாமல் பிரம்படி வாங்குதல் 327
பன்றி மேய்த்தல் 192
பன்னிரண்டு வயசில், பருவமாதல் 252
- வாழ்க்கைப்படுதல் 252
பஜார் ரோட்டில் ஒட்டுப்பீடி பொறுக்குதல் 269
பாக்குத் துவர்த்தல் 27
பாக்குப்பட்டையில் சோறாக்குதல் 291
பாக்குமுற்றித் தோப்பாதல் 280
பாக்கு வைத்தல், பாசாங்கு பண்ணுதல் 214
பாட்டி பால் ஊற்றுதல் 219
பாட்டுக்கு எதிர்பாட்டு பாடுதல் 9
பாட்டுப் பாடி நாற்று நடுதல் 146
பாத்தி கட்டி நாற்று நடுதல் 227
பாதக்குறடு போட்டுக்கொள்ளுதல் 224
பாம்பை அடித்து வழியில் போடுதல் 249
பால்துணி கசக்குதல் 250
பாவநாசம் போதல் 253
பாவைக் கூத்து ஆடுதல் 19
பாறையை வெடிவைத்துப் பிளத்தல் 246
- ஜம்பர் கம்பியால் துளைத்தல் 246
பிச்சை படசமாகக் கொடுத்தல் 207
பிடரியிலே கூடையை மாட்டிக் கொள்ளுதல் 169
பித்தம் தலைக்கு ஏறுதல் 299
பித்துப் பிடித்தவன்போல் ஓடுதல் 305
பிரம்பால் அடிபடுதல் 293
பிரியைக் கட்டி இழுத்தல் 87
பிள்ளை அண்டாச்சோற்றை அள்ளித்தின்னுதல் 253
- கூட்டி வைத்த வீட்டில் குப்பை போடுதல் 253
- கொள்ளி வைத்தல் 253
செத்தால் வெள்ளி தருதல் 163
- துள்ளி விளையாடுதல் 269
நிறைகுடத்தைக் குறைத்து வைத்தல் 253
- மெழுகி வைத்த வீட்டில் விளையாடுதல் 253
பிள்ளைக்காகத் தவத்துக்கு போதல் 289
பிள்ளைக்குப் பேர் வைத்தல் 292
மீசை முளைத்தல் 292
பிள்ளைகள் குஸ்தி போடுதல் 46
நொண்டி அடித்தல் 45
- பட்டம விடுதல் 46
பிள்ளைகளுக்குச் செல்லம் கொடுத்தல் 52
பிள்ளைப் பேற்றுக்காகத் தான தர்மம் செய்தல் 253
- தீர்த்தம் பல ஆடுதல் 253
-------------
பிள்ளை பிறந்தபின் நிந்தனை மாறுதல் 255
பிள்ளை பெற்றவளுக்குக் காயம் கருப்பட்டி கொடுத்தல் 321
- வெந்நீர் ஊற்றுதல் 321
பிள்ளை பெற்றாள் ரூபாய் பெறுதல் 106
- வெள்ளி பெறுதல் 163
பிள்ளையைக் கொஞ்சுதல் 253
பிள்ளை வேண்டுமென்று நேர்த்திக ்கடன் நிறைவேற்றுதல் 253
பிறந்த கோலத்தோடு நிற்றல் 337
புரட்டுக் களத்தில் பேர் கொடுத்தல் 169
புரி முறுக்குதல் 137, 164
புருசனிடம் பேசுதல் 274
புருவத்தில் மையிடுதல் 202, 224
புல்லை அறுத்தல் 12
- அறுத்துப் புரிமுறுக்குதல் 164
புலியைக் குத்திப் புலி வாங்குதல் 291
புலி வேட்டை ஆடுதல் 226
புறங்காலைப் பாலேறுதல் 251
புறாக்கள் கதிரைத் தின்னுதல் 149
புறாவைக் கூப்பிட்டுத் தீனி போடுதல் 38
பூங்கரகம் எடுத்து ஆடுதல் 317
பூச்சி கடித்தல் 220
பூசாரி ஓமென்று உச்சரித்தல் 315
நிலம் விளைய நெய் விளக்கு ஏற்றி வைத்தல் 223
- மழை பெய்யப் பூ இறைத்தல் 223
பூமாதேவியைச் சாட்சி வைத்தல் 136
பூமியில் பல்லாங்குழி ஆடுதல் 280
பூமியை நம்புதல் 282
- பிளத்தல் 85
பூவைப் பறித்துப் பெட்டியில் வைத்தல் 265
பெண்கள் ஏலேலங்கிடிப் பாட்டுப் பாடுதல் 147
- கதிர் அறுத்தல் 137
- கணவனைக் கடவுளென்று பணிதல் 212
- காலையில் எழுந்து வாசலுக்குச் சாணி போடுதல் 205
- காலையில் பாத்திரங்களை விளக்கி வைத்தல் 205
- கொண்டவனை அடித்தல் 289
- சீலையை வரிந்து கட்டிக்கொண்டு சேற்றுக்குள்ளே இறங்குதல் 144
- தலையில் கதிர்க் கட்டும் இடுப்பில் ஒரு கையும் வைத்து நடத்தல் 144
நாற்று நடுதல் 145
- நாற்றுப்பிடுங்கும ்போது நண்டையும் பிடித்தல் 144
- புல் அறுக்கப் போதல் 100
- மாமனார் மாமியாரை மேன்மையாக நடத்துதல் 206
- மைத்துனன்மார் கொழுந்தன்மாருக்கு மரியாதை கொடுத்தல் 207
விறகு ஒடித்து விற்றல் 152
வெள்ளியிலும் செவ்வாயிலும் வீடு முழுதும் மெழுகுதல் 205
பெண்களால் ராசாதி ராசர் நாசமாய்ப் போதல் 185
பெண்களின் நகையைப் பறித்தல் 179
பெண்களைச் சிறையெடுத்தல் 116
- பரிகாசம் செய்தல் 198
பெரிய பேச்சுப் பேசுதல் 306
பெருந்தீனி தின்னுதல் 212
பேயைப் போல் ஆட்டுதல் 215
பேயை விரட்டுதல் 330
பேர் பறத்தல், 214-விளங்குதல் 269
பேறு காலத்துக்குப் போதல் 229
பைகளில் பணத்தை நிரப்புதல் 181
பொடி எடுத்து உறிஞ்சுதல் 200
பொத்திப் பொத்தி வளர்த்தல் 250
பொதுமகள் பணம் பறித்தல் 78
பொய்க்கால் குதிரை ஆடுதல் 107
பொல்லாப்புச் சொல்லுதல் 165
பொழுதோடே வீடு சேர்தல் 85
பொன்மணிபோல் போற்றுதல் 216
போகவிட்டுப் புறஞ் சொல்லுதல் 256
போயன்மார் பாறையைப் பிளத்தல் 246
போலீஸ்காரன் தடிபிடித்து நிற்றல் 242
- பாரா நிற்றல் 183
மகளிர் கம்பங்காட்டைக் காத்தல்களை எடுத்தல் 27
- மண்ணைத் தூக்குதல் 27
மகளிருக்கு இடுப்புச் சிறுத்தல் 24
மங்கள வாக்குக் கொடுத்தல் 330
மஞ்சள் குளித்துக் கொண்டையில் பூ வைத்தல் 207
மஞ்சள் தேய்த்துக் குளித்தல் 51
--------------
மஞ்சள் மிளகாயை அம்மியிலே அரைத்தல் 49
மண்டையிடிக்கு ஏலமும் இஞ்சிச்சாறும் கொடுத்தல் 233
- மருந்து உரைத்துப் போடுதல் 232
மண்டை வகிர்ந்து மல்லிகைப்பூ வைத்தல் 279
மண்ணைக் கவ்வ வைத்தல் 85
மண்ணை நிரவி விடுதல் 165
மணலில் விளையாடுதல் 249
மணற்சோறு ஆக்கி விளையாடுதல் 249
மணப்பெண் பாலும் பழமும் உண்ணுதல் 197
மத்தியான்ன வேளையில், கட்டுச் சோற்றை உண்ணுதல் 139
தோப்புக்கு மதிப்பு உண்டாதல் 243
மதயானை அதம் பண்ணுதல் 167
மந்தி மரத்தில் மறைந்திருத்தல் 167
மந்திரம் உச்சரித்து மாங்கனி தருதல் 255
மந்திரவாள் சுற்றுதல் 226
மயிர் சுருண்டு நீண்டு வளர்தல் 203
மயிரை அறுத்தல் 211
- ஆற்றுதல் 7
- வளைத்து அடித்தல் 67
மரத்தடியில் அயர்ந்து படுத்து உறஙகுதல் 339
மரத்தில் கட்டி அடித்தல் 68
மரத்துக்கு ஒரு பூக் கொடுத்தல் 277
மருக்கொழுந்து கிள்ளுதல் 165
நாற்று நடுதல் 165
மருந்து அரைத்தல் 252
உரைத்துப் போடுதல், கூட்டல் மருமகள் வீட்டுவேலை செய்தல் 209
மலை ஓரம் பிழைத்திருக்கப் போதல் 234
மலைப் பாம்பு மாலையில் மரப்பொந்தில் மறைந்திருத்தல் 167
மலையின்மேல் கோட்டை கட்டுதல் 341
- மாடு மேய்த்தல் 277
மழையில் ஆட்டுக்காரன் கம்பளிக்குள் இருத்தல் 21
- களை எடுத்தல் 108
மழை பெய்து வழுக்குதல் 167
மழை பெய்யப் பூ இறைத்தல் 223
மழையை நம்பி மண் இருத்தல் 215
மனப்பால் குடித்தல் 89
மனம் புண்ணாதல் 302
மா இடித்தல், 213-கொழித்துக் கோலம் இடுதல் 230
மாங்காய் இறங்காத சோற்றையும் இறங்கச் செய்தல் 244
- கனிந்து விழுதல் 290
மாங்காயைக் கம்பால் எறிதல் 230
மாட்டின் கொம்பில் பட்டைச் சுற்றுதல் 54
மாட்டுக்குச் சல்லி கட்டுதல் 53
- சலங்கை கட்டுதல் 224
மாட்டைத் தாற்றால் குத்துதல் 23
மாடத்தைக் கட்டி மயில் இரண்டைஎழுதுதல் 281
மாடுகள் கதிரை மிதித்தல் 152
மாடுகளைக் குளிப்பாட்டுதல் 239
மடக்குதல் 225
மாடுகன்று மந்தையில் படுத்து உறங்குதல் 254
மாடு கொம்பாலே குத்திக் கொல்லுதல் 75
- மலடிகைத் தருமமென்று தண்ணீர் குடிக்காமை 254
- வெருண்டு ஓடுதல் 225
மாடு போகும் வழியில் வைக்கோல் போட்டுவைத்தல் 254
மாடு மேய்த்தல் 66, 198
மாதின்மேல் மையல் கொள்ளுதல் 306
மாந்திரிகனைப்போல் மாறுவேஷம் போடுதல் 307
மாமரத்தில் ஊஞ்சல் கட்டுதல் 9
மாமன் வீடு போதல் 228
மார்கழி மாதம் சேசுவின் பிறப்பு 163
மாரியம்மன் அம்மை பூட்டுதல் 315
- ஆயுசுவரம் கொடுத்தல் 314
எல்லையைக் காத்தல் 308
காலன் அணுகாமல் காப்பாற்றுதல் 308
- கொலு விருத்தல் 312
- சிங்கத்தில் ஏறி வருதல் 311
சொர்க்கம் தருதல் 314
- தீராப் பிணி தீர்த்தல் 311
- தேசத்தைக் காத்தல் 312
- நினைத்த இடத்துக்குத் துணையாய் வருதல் 315
வறுமை தீர்த்தல் 315
- வீரரைக் கொல்லுதல் 311
-----------
- வேப்பிலை விபூதி தருதல் 315
மாரியம்மனால் வாந்திபேதி வருதல் 313
மாரியம்மனுக்கு ஆயிரம் கண் இருத்தல் 308, 315
- காணிக்கை தருதல் 308
- பாலும் இளநீரும் அபிஷேகம் செய்தல் 315
- மா விளக்குச் சட்டி எடுத்தல் 314
- வேப்பிலைக் காவடி எடுத்தல் 308
மாரியம்மனை ஆவணி மாசம் கடைசி ஞாயிற்றுக்கிழமையில் தரிசித்தல் 315
- தீச்சட்டிகளைத் தலைமேல் வைத்து வழிபடுதல் 315
மாரியாத்தாள் அருளால் மழை பெயதல் 295
மாலையிடுதல்
மாற்றால் அடித்தல் 67
மானம் கெட்டுப்போதல் 86, 256
மானைக் கயிற்றால் பிடித்துக்கட்டுதல் 219
மானைப் போலத் துள்ளுதல் 178
மிருக வேட்டையாடுதல் 342
மீசையை முறுக்கி விடுதல் 176
- வளர்த்தல் 272
மீன் பிடித்தல் 221
- விற்றல் 221
மீனுக்குத் தூண்டில் போடுதல் 231
முகக்களை மங்குதல் 147
முகத்திலே துப்புதல் 82
- விழித்தல் 339
முட்டியில் ஆணம் காய்ச்சுதல் 231
- கூழ் காய்ச்சுதல் 25
முட்டியோடு முட்டி ஒட்டுதல் 147
முடி எடுத்தல் 233
முடிச்சை முழங்காலில் மோதி அடித்தல் 144
முத்திடித்து மாக் கொழித்தல் 230
முத்துமாரி ஆதிசத்தியாதல் 311
முதுகிலே இழுத்தல் 161
- போடுதல் 269
முப்பதில் முழு மனிதனாதல் 324
முழங்கால் தண்ணீரில் முங்கிக் குளித்தல் 48
முறைப்புப் பண்ணுதல் முன்றானையால் முகம் துடைத்தல் 38
மூங்கில் வெட்டி, கூடாரம் போடுதல் 230
- சாளை இறக்குதல் 125
மூஞ்சி வீங்கிப் போதல் 67
மூட்டைப் பூச்சி கடித்தல் 220
மூட்டை முடிச்சுக் கட்டுதல் 71
மூலையிலே உட்கார்ந்து முக்காட்டைப் போட்டுக் கொள்ளுதல் 213
மூலை வருவுதல் 160
மெத்தையில் படித்தல் 278
மேட்டுமேல் மண் எடுத்தல் 12
மேஸ்திரி கணக்குக் குறைந்தால் அடித்தல் 162
மொச்சைக் கொட்டை கொரித்தல் ரப்பர் தோட்டத்துக்கு ஆள் போதல் 167
ரப்பர் பால் எடுக்கச் சாலும் கோலும் கொண்டு போதல் 162
ராச்சியங்களைப் பிடித்தல் 341
ராசா மகள் குளிக்கக் கட்டிடம் கட்டுதல் 241
ராசா மகள் வெண்சாமரை வீசுதல் 241
ராமேசுவரம் போதல் 253
ரெங்கூனுக்கு ஓடிப்போதல் 18, 71
ரோட்டில், அயர்ந்து தூங்குதல் 161
- சண்டை போடுதல் 203
வட்டப் பொட்டு வைத்தல் 165
வண்டிக் காளைக்குச் சூடு போடுதல் 254
வண்ணான் கல்லில் அடித்துக் கசக்குதல் 29
வம்பிலே தாலி கட்டுதல் 23
வம்புக்குச் சண்டை வளர்த்தல் 302
வயசிலே அறுத்தல் 277
வயிற்று வலிக்கு வெற்றிலையும் உப்பும் தின்னுதல் 233
வயிறு ஒட்டிப் போதல் 335
வருணித்துப் பேசுதல் 332
வருஷ வேலை செய்து கை நிறையக் லி வாங்குதல் 105
வலப்பக்கம் சுற்றுதல் 315
வலம்புரி இடம்புரி சுற்றிவருதல் 255
வழிமறித்துப் பேசுதல் 202
வழியில் போகிறவளைக் கூப்பிட்டுப் பேசுதல் 204
--------
வழியைப் பார்த்துப் பிழைத்தல் 67
வற்புறுத்திச் சொல்லுதல் 331
வாங்கிக் குடித்துப் பிழைத்தல் 67
வாசல் கதவு முதல் வாகனம் வரையில் செய்தல் 329
வாணவேடிக்கை காட்டுதல் 247
வாணாளை வீணாக்குதல் 60
வாய் எச்சில் ஒழுகுதல் 302
வாய்க்கரிசி போடுதல் 280
வாய்ச்சாலம் பண்ணுதல் 75
வாயாடுதல் 213
வார்த்தைக் கடன் வைத்தல் 165
வாழாத பெண்களுக்கு மை, பொட்டு, மஞ்சள் குளிப்பு இல்லாமை 38
வாழைப்பழத்தைத் தோல் உரித்துத் தொண்டைக்குள் அடைத்தல், வாழையிலையில் பொங்கல் வைத்தல் 289
வானத்தை நம்புதல் 282
வானமும் பூமியும் பார்த்து நிற்றல் 298
வியாழக்கிழமையில் வெற்றிலை மடித்துக் கொடுத்தல் 216
விரட்டி விரட்டி அடித்தல் 179
வில்லில் கொட்டைகளை வைத்து அடித்தல் 388
வில்லும் ஈட்டியும் கொண்டு வேடடைக்குப் போதல் 226
விலங்கு போடுதல் 235
விழிக்கு மை எழுதுதல் 7
வீட்டுக்கு மூலைக்கல் அடித்தல் 160
வீடு மெழுகுதல் 205
வீணைக்குச் சுருதி ஏற்றுதல் 229
வீறாப்புப் பேசுதல் 203
வெட்டி வேலை செய்தல் 272
வெயில் அடிக்கும் நேரத்தில் மீன் வெளிவருதல் 240
வெயிலில் வேதல் 171
வெலவெலத்துப் போதல் 306
வெள்ளம் இருகரையும் புரண்டு ஓடுதல் 241
வெள்ளாடு வேலிப் பக்கம் மேய்தல் 255
வெள்ளிக்கிழமை குளித்தல் 216
- விளக்கு ஏற்றுதல் 229
வெள்ளிச்சுங்கம் கட்டி வீசுதல் 290
வெள்ளி விடிந்து விடியற்காலம் ஆகுதல் 165
வெள்ளெழுத்து மாறி நல்லெழுத்து வருதல் 344
வெற்றிலை மடித்துக் கொடுத்தல் 187
வேங்கைப் புலி விரட்டுதல் 167
வேட்டைக்காரன் காயிதம் போடுதல் 290
வேட்டி போட்டுத் தாண்டுதல் வேடர்கள் காடு செய்தல 295
வேடிக்கை காட்டுதல் வேப்பம்பூ விடியற்காலையில் மலர்தல் 166
வேப்பிலைக் காவடி எடுத்தல் வேலி கட்டுதல் 244
வேலைக்காரருக்கு வேட்டி வழங்குதல் 248
வேலைச் சமயத்தில் வேசியுடன் பேசுதல் 166
வைத்தெடுத்து வாரிக் கொள்ளுதல் 260
ஜம்புலிங்கம் அயல் பெண்ணிடம் மோசம் போதல் 177
- இங்கிலீஷ் பேசுதல் 176
- இன்ஸ்பெக்டர் உடையைப் போட்டுக் கொள்ளுதல் 183
- ஏழைகளுக்கு உதவி செய்தல் 180
- ஏழைப் பெண்களுக்கு நகைபூட்டுதல் 180
குதிரைமேல் ஏறி வருதல் 183
பணக்காரரிடம் கொள்ளையடித்தல் 179
- மலையாளமும் தமிழும் பேசுதல் 176
ஜாடைப் பேச்சுப் பேசுதல் 202
ஜாடையாலே பார்த்தல் 40
ஜோட்டியில் மாட்டல் வைத்தல் 202
ஜோட்டியில் மாட்டல் வைத்தல் 202
-------
10. கடவுளர்
தமிழ்நாட்டில் தெய்வம் பல பல உருவங்களில் கோயில் கொண்டிருக்கிறது. கிராம மக்கள் வணங்கும் கடவுளர் பலர்.
---------------
அம்மன் | ஆண்டவர் | ஆண்டிப் பண்டாரம் |
ஆதிசிவன் | ஆயிமகமாயி | ஆயிரங்கண் மாரி |
ஆறுமுகன் | இந்திரன் | இருசன் |
இருசி | இருளியாதேவி | ஈச்வரி |
உத்தண்டகுறளி | எல்லக்கா | எல்லைமாரி |
ஏமன் | ஐயப்பன் | ஐயனார் |
ஒட்டிக்கறுப்பன் | ஒண்டிமுனி | ஓரி |
கண்ணன் | கந்தசாமி | கறுத்தசாமி |
கறுப்பன் | கன்னியாகுமரி | காட்டேரி |
காத்தவராயன் | காமன் | காலபைரவர் |
காளி | குட்டிச்சாத்தான் | குடியாயி |
குறளி | கூளி | சக்தி |
சங்கரர் | சங்கரதேவி | சண்டன் |
சண்டைவீரன் | சந்திரன் | சரவணவேலன் |
சரஸ்வதி | சனிபகவான் | சாமுண்டி |
சித்ரபுத்திரன் | சிவகிரிவேலன் | சுப்பிரமணியர் |
சடையாண்டி | சண்டப்பிரசண்டன் | சூரி |
சூரியர் | சொக்கநாதர் | தில்லைக்காளி |
துர்க்கி | தெய்வயானை | நாகேந்திரன் |
நாராயணன் | நீலகண்டி | பகவதி |
பகவான் | பத்தினி | பத்ரகாளி |
பரமசிவன் | பழனி ஆண்டவன் | பார்வதி |
பிடாரி | பிரம்மன் | பிள்ளையார் |
பூமாதேவி | பூலோகரம்பை | பேச்சி |
பைரவி | பொம்மக்கா | பொம்மி |
மகமாயி | மங்களதேவி | மதன் |
மதனன் | மதுரைமீனாட்சி | மயானருத்ரி |
மல்லக்கா | மலையாளபகவதி | மனோன்மணி |
மாயகிருஷ்ணன் | மாயன் | மாரி |
மாரிமுத்து | மாரியம்மன் | மீனாட்சி |
முத்துமாரி | மும்மூர்த்தி | முனியாண்டி |
ரகுபதி | ரங்கநாதன் | ரதி |
ராக்கச்சி | ராசகோபாலன் | ராம் |
லிங்கம் | வடபத்ரகாளி | வள்ளி |
ஜம்மக்கர் | வீரம்மன் | வீரி |
வேதாள பைரவன் | வேல்முருகன் | வேலவர் |
ஜகசண்டி | ஸ்ரீராமர் |
11. பழம் பெயர்கள்
புராணங்களிலும் காவியங்களிலும் வரும் பாத்திரங்களில் பலருடைய பெயர்கள் தமிழ்நாட்டின் மூலை முடுக்குகளிலும் வழங்குகின்றன. அப்படியே வரலாற்றில் வரும் சிலருடைய பேர்களும் கிராம மக்களுக்கும் தெரிந்தவைகளாக உள்ளன.
அநுமந்தன் | அர்ச்சுனன் | அல்லி அரசாணி |
கண்டி ராசா[1] | கண்ணகி | காசி ராஜா |
சீதை | செல்லத் துரை பாண்டியன் | தமயந்தி |
தருமராஜா | திருவாழத்தான் | நாரதமுனி |
பாண்டியன் | மகாராணி | ராவணன் |
வஞ்சி மார்த்தாண்டன் | விக்கிரமாதித்தன் | வீமன் |
1. இவர்கள் வரலாற்றில் வருகிறவர்கள். .
----------
12. ஆண் பெண் பெயர்கள்
தமிழ்நாட்டில் மக்களுக்குத் தெய்வங்களின் பெயர்களையே பெரும்பாலும் வைப்பார்கள். சிறுபான்மை வேறு பெயர்களும் வைப்பதுண்டு. பெயர் வைப்பதைப் பெரிய விழாவாகக் கொண்டாடுவோர் உண்டு. பெயர் வைக்கும் உரிமை சிலருக்கே உண்டென்ற வரையறை சில வகுப்பில் இருக்கிறது.
அப்பராணி செட்டியார் | அருணாசலம் | அலர்மேல் செட்டி |
அளகேசன் | அன்னம்மாள் | ஆராயி |
ஆறுமுகம் | ஆராயம்மா | ஏகாம்பரம் |
ஐயாசாமி | கண்ணப்பன் | காசிநாடார் |
காட்டய்யா | காமாட்சி | காளியம்மாள் |
குப்பம்மாள் | குப்பி | குமரன் |
கேசவல் | கோபாலன் | கோவிந்தன் |
சந்தனத் தேவன் | சின்னத்தம்பி | சீதாலட்சுமி |
சுப்பம்மாள் | சுப்ரமணி | டங்கன் துரை |
தம்புசெட்டி | நாகராசன் | பரமசிவன் |
பழனி | பொன்னம்மாள் | மருதமுத்து |
மாயாண்டி | முருகன் | ரத்னவல்லி |
ராமக்கா | ராமலிங்கம் | லோகன்துரை |
வீராயி | வெண்ணீட் துரை | ஜம்புலிங்கம் |
13. ஊர்களும் இடங்களும்
இப்புத்தகத்தில் பல ஊர்களின் பெயர்கள் அங்கங்கே வந்துள்ளன; மலைகள், காடுகள் சொல்லப் பெறுகின்றன. பெரும்பாலும் தமிழ்நாட்டில் உள்ளனவே இவை; சிற்றூரும் பேரூருமாக இருப்பவை.
அங்குலக்குறிச்சி | அத்திபுரம் | அந்தமான்[1] |
அயலூர் | ஆக்கூர் | ஆடலூர் |
ஆண்டிமடம் | ஆர்க்காடு | ஆரப்பாளையம் |
ஆவடி | ஆனைக்கட்டு | ஆனைக்கடவு |
ஆனைமலை | இங்கிலாந்து | இஞ்சிக்காடு |
இந்தியா | ஈரோடு | உத்தரமல்லூர் |
உப்பிலிபாளையம் | ஊசிமலை | எட்டையாபுரம் |
எண்டப்புளி | எமலோகம் | ஏர்க்காடு |
ஏலமலை | ஏழுமலை | ஐயர்பாடி |
ஒலவக்கோடு | ஒழுகமங்கலம் | ஒற்றைப்பாறை |
கடலூர் | கண்டி | கணியாக்குறிச்சி |
கயிலைமலை | கரடிக்குழி | கருங்குளம் |
கருமலை | கரையூர் | கல்வாரிமலை |
கன்னபுரம் | கஜமுடி | காசி |
காயங்குளம் | காரமடை | காரைக்கால் |
காரைக்குடி | கீரந்தகுடி | கீரனூர் |
குண்டக்கல் | குத்தாலம் | குப்பம் |
கும்பகோணம் | குமிழி | குருவிமலை |
குற்றாலம் | குறவனூற்று | கூடலூர் |
கொச்சி | கொளும்பு | கோடை |
கோம்பை | கோயம்புத்தூர் | கோழிக்கானம் |
கோலார் | சக்குவெள்ளைத்தோட்டம் | சத்திரப்பட்டி |
சதுரகிரி | சமயபுரம் | சமுத்தூர் |
சிங்கப்பூர் | சிட்டம்பாறை | சிட்டிவரை |
சிதம்பரம் | சிவகிரி | சிவலோகம் |
சிவன்மலை | சின்னமலை | சுருளிமலை |
செட்டிகுளம் | செண்டுவரை | செந்தூர் |
செவ்வாய்ப்பேட்டை | சென்னபட்டணம் | சேக்கல்குடி |
சொர்க்கலோகம் | சோழவந்தான் | தங்கமலை |
தஞ்சாவூர் | தருமபுரி | தலையாறு |
தாடிப்பத்திரி | தாயமுடி | தாராபுரம் |
திண்டுக்கல் | திருச்சிராப்பள்ளி | திருநெல்வேலி |
தில்லைநகர் | தேவலோகம் | தேவிகுளம் |
தொட்டியம் | நடையாறு | நத்தம் |
நல்லகறுப்பன்பட்டி | நாகபட்டினம் | நாகமலை |
நாகலாபுரம் | நார்த்தாமலை | நீலகிரி |
நெய்யூர் | நெல்லிக்குப்பம் | நெல்லூர் |
பச்சைமலை | பட்டணம் | பட்டுக்கோட்டை |
பட்டுமலை | பண்ணைப்புரம் | பம்பாய் |
பல்லாவரம் | பழனிமலை | பறங்கிமலை |
பாம்பனாறு | பாலாறு | பாவநாசம் |
பாளையங்கோட்டை | பில்லானூர் | பீலிமேடு |
புத்தூர் | புதுக்கோட்டை | புரட்டுக்களம் |
புன்னைநல்லூர் | பூலத்தூர் | பெங்களூர் |
பெரியகுளம் | பெரியவரை | பெரியாறு |
பெருமாள்கோயில் | மஞ்சக்குப்பம் | மஞ்சிமலை |
மண்டபம் | மதுரை | மயிலாடி |
மானாமதுரை | மூக்குப்பேரி | மூணூரு |
மெட்ராஸ் | யமுனைக்கரை | ரங்கூன் |
ராமேசுவரம் | வங்காளம் | வடமதுரை |
வண்ணாரப்பேட்டை | வந்தவாசி | வாணியம்பாடி |
வாழையடி | வீராம் பட்டினம் | வேலூர் |
வேளாங்கண்ணி | வைகையாறு |
[1]. தமிழ்நாட்டில் இல்லாதவை.
------------
இனிச் சொல் உலக வழக்காறுகளைப் பார்ப்போம். அருஞ்சொற்கள், ஆங்கிலச் சொற்கள், பிறமொழிச் சொற்கள் ஆகியவை இப் பாடல்களில் அங்கங்கே வந்துள்ளன.
---------
14. அருஞ்சொற்கள்
இலக்கியங்களில் காணப் பெறாத பல சொற்களை நாடோடிப் பாடல்களிலே காணுகிறோம்.
அத்தாசமா - அநாயாசமாக | அதைப்பு - கர்வம் | |
அந்தா - அதோ | அப்புதல் - பற்றிக் கொள்ளுதல் | |
அம்மணி - அம்மா | அரிசித்தரி - அரிச்சுவடி | |
அருப்பம் -மீசை | அலங்கன் - தொழிலாளர் தலைவன் | |
அலங்கி- தொழிலாளர் தலைவி | அலசடிபடுதல் - அலுத்துப்போதல் | |
அலமலத்தல் - கலங்குதல் | அலாக்காய் - தனியே | |
அலுப்ப -இளைப்பு | ஆணம்--குழம்ப | |
இடும்பு-குறும்பு | இனாம் - பரிசு | |
ஈங்குசம் - இழிவு | உலுப்புதல் - அசைத்தல் | |
எட்டாள தேசம - எட்டுத் திசையிலும் உள்ள நாடுகள் | எசலுப்பு - (? | |
ஒத்தாசை - உதவி | ஒய்யாரம் - மகிழ்ச்சி | |
கம்மால் - ஏமாற்றுதல | கமலை - கயிலை | |
கரும்புதல் - கறித்தல் | கில்லேடி - குற்றம் செய்தவன் | |
குத்தகை-கும்பல் - கூட்டம் | கும்மாங்குத்து - கும்மாளம் | |
பெருமகழ்ச்சி --குலுமை | கோளாறு - தந்திரம் | |
சக்காந்தம் - பரிகாசம் | சவட்டுதல்-- வாட்டுதல் | |
சன்னுதல் - சிம்பி | சில்வண்டிச் செலவு - சில்லறைச் செலவு | |
சூட்டிக்கை -- சுறுசுறுப்பு | செந்தலைப் புலி-- போலீஸ்காரன் | |
செந்தலையன --போலீஸ்காரன் | தடிப்பம் - பருமை | |
தாராளம்---அளவுக்கு மிஞ்சியது | துவக்கம்---தொடக்கம் | |
தோது---வழி | நங்கு---பரிகாசம் | |
நடை---இடைகழி | நயனம்---நயம் | |
நீராகாரம்---சோற்றுத் தண்ணீர் | பசந்து---இனிமை | |
பதனம்---பாதுகாப்பு | பம்முதல்---ஒளித்தல் | |
பயில்வான்- - பொட்டணம் | பொடி வெயிற் சூடு | |
பொல்லாப்பு - பழி | போக்கிரித்தனம்- | |
போதைத் தண்ணீர்---கள் | மதியம்---நண்பகல் | |
மம்மாரியா---மிகுதியாக | மன்னித்தல்---பொறுத்தல் | |
மிச்சம்---அதிகம் | மின்னிட்டாம்பூச்சி---மின்மினி | |
மினுக்கட்டாம்பூச்சி---மின்மினி | முங்குதல்---முழுகுதல் | |
முட்டி---முழங்கால் | மூஞ்சி---முகம் | |
மோடி பண்ணுதல்---ஊடுதல் | ராங்கி---கர்வம் | |
ராத்தல்---எடையளவு | லாடம்---குதிரைக்காலில் சேர்ப்பது | |
வள்ளல்---இயல்பு | வாடிக்கை---வழக்கம் | |
வேடிக்கை---விநோதம் |
15. ஆங்கிலச் சொற்கள்
ஆங்கில அரசாட்சி இந்த நாட்டுக்கு வந்தது முதல் ஆங்கில மொழியும் இங்கே வந்துவிட்டது. மேல் நாட்டிலிருந்து வந்த பண்டங்களுக்குரிய ஆங்கிலப் பெயர்கள் தமிழ்ப் பெயர்களைப் போலவே இணைந்துவிட்டன. வேறு ஆங்கிலச் சொற்களும் பேச்சிலும் நாடோடிப் பாடல்களிலும் புகுந்துகொண்டன.
அட்வான்ஸு (Advance) | அல்லோ [1] (Hullo) |
ஆர்பர் (Harbour) | ஆரஞ்சு (Orange) |
ஆல் (Hall) | ஆஸ்பத்திரி (Hospital) |
இங்கிலீஷ் (English) | இன்ஸ்பெக்டர் (Inspector) |
உசுல் (Whisle) | உஸ்கி (Whisky) |
ஏட்டு (Head) | கலர் (Colour) |
கார் (Car) | கிளாசு (Glass) |
கேட் (Gate) | கேடி (K. D.) |
கோட்டு (Coat) | கோப்பை (Cup) |
கோர்ட் (Court) | சப் இன்ஸ்பெக்ட்டர் (sub Inspector) |
சப் மாஜிஸ்டிரேட் கோர்ட் (Sub Magistrate court) | சீக்கு (Sick) |
செக்கு (Cheque) | சேர்மன் (Chairman) |
சைக்கிள் (Cycle) | சைட் (Sight) |
சைஸ் (Size) | சோடா (Soda) |
டாக்டர் (Doctor) | டிராம் (Tram) |
டெலிபோன் (Telephone) | டேசன் (Station) |
நம்பர் (Number) | நைட் (Night) |
நோட் (Note) | பப்பர மிட்டாய் (Peppermint) |
பப்ளிக் ரோடு (Public Road) | பம்பாய்ச் சோப்பு (Bombay Soap) |
பம்புக் குழாய் (Pump) | பயாஸ்கோப்பு (Bioscope) |
பவுன் (Pound) | பஜார் ரோட் (Bazaar Road) |
பிக்காசு (Pickaxe) | பிராந்திசாப் (Brandy Shop) |
பிளாஸ்திரி (Plaster) | பிளேட் (Plate) |
பீட்டு (Beat) | பீட் நோட்டு (Beat Note) |
பீஸ் (Piece) | பென்ஸில் (Pencil) |
போட் (Boat) | போலீஸ் (Police) |
மார்க்கட் (Market) | மிசிமிசி (Missie) |
மெடல் (Medal) | மெயில் (Mail) |
மேஸ்திரி (Maistry) | மோட்டார் (Motor) |
ரப்பர் (Rubber) | ரிக்ஷா (Riksha) |
ரெயில் (Rail) | ரைட்டர் (Writer) |
ரோடு (Road) | ரோதை (Road) |
ரோந்து (Round) | ரோஸ்ட் (Roast) |
ரௌடி (Rowdy) | லாரி (Lorry) |
லீவு (Leave) | லேடி (Lady) |
லைட் (Light) | ஜம்பர் (Jumper) |
ஜின்னு (Jin) | ஜெயில் (Jail) |
[1]. இவை உருவு திரிந்தவை.
----------
16. பிறமொழிச் சொற்கள்
அமல் | அமுல் |
ஆஜர் | உருமால் |
உஸ்தாதி | கச்சேரி |
குசால் | குஸ்திக்காரன் |
கொத்தவால் | சர்க்கார் |
சிப்பாய் | சட்கா |
பந்தோபஸ்து | முஸ்தீப்பு |
ஜம்பம் | ஜல்தி |
ஜவுளி | ஜாகை |
ஜிலுப்பா | ஜோக்கு |
ஜோட்டி | ஜோடி |
ஜோப்பு | ஜோபி |
ஜோர் |
17. இணைந்து வரும் சொற்கள்
சில வகையான சொற்கள் இரண்டிரண்டாகச் சேர்ந்து வருவதைப் பேச்சு வழக்கிலே பார்க்கிறோம். அப்படி வரும் இரட்டைகளில் (1) அக்காள் தங்கச்சி, அடிதடி என்பவைபோல இரண்டு சொற்களுக்கும் வெவ்வேறு பொருள் இருப்பன ஒருவகை. (2) கண்டதுண்டம் தப்புத்தவறு என்பனபோல ஒரே பொருளில் வருவன
ஒருவகை. (3)ஆசாரம் பாசாரம், கிழடு கட்டை என்பன போல முதல் சொல்லுக்கு மாத்திரம் பொருள் இருப்பன ஒருவகை. (4) அக்கம் பக்கம், எக்குத் தப்பு, கன்னங் கறேல் என்பனபோல இரண்டாவது சொல்லுக்கு மட்டும் பொருள் இருப்பன ஒருவகை.
அக்கம் பக்கம் | அக்காள் தங்கச்சி | |
அடாபுடா | அடிதடி | |
அண்ணன் தம்பி | அரிசி பருப்பு | |
அவல் கடலை | ஆசாரம் பாசாரம் | |
ஆசாரி பூசாரி | ஆட்டம் பாட்டம் | |
ஆடு மாடு | ஆண் பெண் | |
ஆறு குளம் | இட்டலி தோசை | |
ஈ எறும்பு | உற்றார் உறமுறையார் | |
உற்றார் பெற்றார் | ஊர் உலகம் | |
ஊர் பேர் | எக்குத் தப்பு | |
எடுப்பு முறுக்கு | ஏடு எழுத்து | |
ஏழை பரதேசி | ஏழை பாழை | |
கண்டதுண்டம் | கம்மான் செம்மான் | |
கரடி புலி | கள்ளங் கபடம் | |
கன்னங் கறேல் | கன்னாரே பின்னாரே | |
காக்கை குருவி | காசு பணம் | |
காடு கரை | காடு மலை | |
காடு மேடு | காமா சோமா | |
காய் கறி | காய்ச்சல் குளிர் | |
காலை மாலை | கிழடு கட்டை | |
கிளி புளி | கூடை முறம் | |
கூன் குருடு | கை கால் | |
கொட்டு முழக்கம் | கொட்டு மேளம் | |
கொத்து கெத்து | கொள்வினை கொடுப்பினை | |
கோட்டை கொத்தளம் | கோயில் குளம் | |
கோள் குண்டுணி | சட்டி பானை | |
சண்டைசாடி | சந்தனம் குங்குமம் | |
சந்து பொந்து | சளுக்குப் புளுக்கென்று | |
சாதி சனம் | சாப்பாடு கூப்பாடு | |
சின்ன பின்னம் | சுற்று முற்றும் | |
சுதி மதி | சூடம் சாம்பிராணி | |
சேமலாபம் | சொத்து சுகம் | |
தட்டு முட்டு | தண்டு முண்டு | |
தப்புத் தவறு | தப்புத் துப்பு | |
தாசி வேசி | தாடி மீசை | |
தாய் தகப்பன் | தாய் பிள்ளை | |
தான தருமம் | திட்ட வட்டம் | |
திண்டு முண்டு | துணி மணி | |
தேங்காய் பழம் | நாய் நரி | |
நாள் கிழமை | நாள் நட்சத்திரம் | |
நெல் புல் | நொண்டி சண்டி | |
பால் பழம் | பிழைப்பு தழைப்பு | |
மந்திரம் தந்திரம் | மாங்காய் தேங்காய் | |
மாமன் மச்சான் | மானம் மரியாதை | |
முந்தி பிந்தி | முன் பின் | |
மூஞ்சி முகம் | மூட்டை முடிச்சு | |
மூலை முக்கு | மேள தாளம் | |
லொட்டு லொசுக்கு | வம்பு தும்பு | |
வற்றல் தொற்றல் | வாது வம்பு | |
வீடு வாசல் | வெட்கம் சிக்கு | |
வெட்டி விடாய் | வெள்ளி செவ்வாய் | |
வெற்றிலை பாக்கு | வேலை வெட்டி | |
ஜப தபம் |
18. ஒருவகை வழக்கு
எந்த வார்த்தை சொன்னாலும் அதோடு கிகரத்தில் தொடங்கும் பொருளற்ற சொல் ஒன்றையும் சேர்த்துச் சொல்லும் ஒருவகை வழக்கு இந்நாட்டில் வழங்குகிறது. அது நாடோடிப் பாடல்களிலும் ஏறியிருக்கிறது.
கடன் கிடன் | கண்டி கிண்டி |
கண்ணு கிண்ணு | கள்ளன் கிள்ளன் |
சண்டை கிண்டை | பன்றி கின்றி |
பிச்சுவாளும் கிச்சுவாளும் | வேலுக் கம்பும் கீலுக் கம்பும் |
------------
19. குறிப்புத் தொடர்
ஒலியையும் நிறத்தையும் வேகத்தையும் பிறவற்றையும் குறிக்கும் சில தொடர்கள் பலகாலமாக வழங்கி வருகின்றன. கம கம என்று சொன்னாலே மணத்தைப் பற்றிய பேச்சு வருகிறது என்று தெரிந்துவிடும்.
கடகட[1] | கப்சுப் | கருகரு |
கலகல | கிடுகிடு | குசுகுசு |
குடுகுடு | குமுகுமு | சட சட |
சர சர | சலசல | தடதட |
தாம் தாம் | தீம் தீம் | பக்கென்று |
படபட | பரபர | பலே பலே |
பளபள | புடுபுடு | மடமட |
மினுமினு | முணுமுணு | மொரமொர |
வேகுவேகு |
[1]. இவற்றிலிருந்து வினைச் சொற்கள் பிறப்பதுண்டு; உ-ம். கடகடத்தல.
-----------
20. முன்னிலைகள்
நீதி நூல்களில் புலவர்கள் தாம் கூறும் நீதிகளை யாரேனும் பெண்ணையோ ஆடவனையோ முன்னிலைப்படுத்திச் சொல்லுதல் ஒரு வழக்கம். அவற்றை முறையே மகடூஉ முன்னிலை, ஆடூஉ முன்னிலை என்பார்கள். நாடோடிப் பாடல்களில் அப்படி இருபாலார்களையும் முன்னிலைப்படுத்திப் பேசும் வழக்கம் பெருக வழங்குகிறது. இத் தொகுதியில் வரும் முன்னிலைகளையெல்லாம் கீழே அகராதி வரிசையிற் காணலாம்.
அடி | அடி பொன்னம்மா | |
அடே | அடே பொன்னையா | |
அப்பா | அப்பாடா | |
அம்மணி | அம்மா | |
அன்னமே பொன்னம்மா | அன்னே நன்னே நானே நன்னே மீனாம்போ | |
ஆசைக்கண்ணாட்டி | எங்குலக மச்சானே | |
என் அத்தானே | என் திலக மச்சானே | |
என்னைப் பெற்ற அம்மா | ஏலங்கிடி லேலோ | |
ஏலேலக் குயிலே லல்லோ | ஏலேலோ | |
ஐயா | ஐலசா | |
ஓ சாமியே | கட்டித் தங்கமே | |
கண்ணாட்டி | கண்ணுப் பொன்மணி | |
கண்ணுப் பொன்னம்மா | கண்ணே | |
கண்மணி | கண்மணியே | |
கன்னி | குட்டி | |
குயிலே | சாமி | |
சின்னப் பாலகா | சுண்டெலிப் பெண்ணே | |
தங்கம் தையலாளே | தங்க மாமா | |
தங்க மாமாவே | தங்க ரத்தினமே | |
தந்தானக் குயிலே | தாயே | |
நல்ல பொன்னையா | நானே நன்னே | |
நேசக் கண்ணாட்டி | பெண்ணே | |
பையா | பொன் அத்தானே | |
பொன்னுக் கண்மணி | பொன்னுக் குயிலாளே | |
பொன்னு மச்சானே | பொன்னு மாமா | |
பொன்னு மாமாவே | பொன்னு ரத்தினமே | |
பொன்னே | மச்சான் | |
மயிலே | மாமா | |
மீனாம்போ | ராசாத்தி |
21. வசவுகள்
வாழ்த்து வகைகளை இலக்கியங்களில் மிகுதியாகக் காணலாம். வையும் இடங்களில் அந்த வசவு குறிப்பாகவும் நாகரிகமாகவும் அமைந்திருக்கும். ஆனால் வாழ்க்கையில் வசவுகள் சொல்லம்புகளாக வீசப்படுகின்றன. வாழ்க்கைநிலை தாழத் தாழ வசவுகள் மிகுதியாகின்றன; இழிந்த தரம் பெறுகின்றன.
பின்னே வரும் வசவுகளில் உவமையாகு பெயராக உள்ளவை சில; இயல்பையே குறித்து வைவன சில; ஒழுக்கக் கேட்டைக் குறிப்பவை சில; உறுப்புக் குறையைக் குறிப்பவை சில; சாதி குறிப்பவை சில; அடையால் இழிவைப் புலப்படுத்துவன சில. ஒரு சொல்லாக உள்ளன சில; பல சொற்களாக உள்ளன சில.
பழங்குடி மக்களின் மொழிகளையும், வழக்குகளையும் ஆராயும் அறிஞர்கள் அவர்களிடையே வழங்கும் வசவுகளிலிருந்து அவர்களுடைய இயல்புகளையும், கொள்கைகளையும், ஒழுக்க முறைகளையும் தெளியலாம் என்பார்கள்.
அனாதிப்பயல் காடு[1] | இல்லிக்கண்ணா |
எருமை மாட்டுப் பயலே | கடை பொறுக்கி |
கருங் கழுதை | கழுதை |
கள்ளி | காவாலி |
கிழச் சிறுக்கி | கிழடி |
குட்டிக் கழுதை | குரங்கே |
குறப் பயல் | கூனற் கிழவி முண்டை |
கேடு கெட்ட சாதி நாய் | சக்கிலிச்சி |
சனியன் பிடித்த பையா | சண்டாளச் சிறுக்கி |
சண்டாளி | சண்டாளி மகனே |
சாதி கெட்ட சக்கிலியா | சாதி கெட்ட பறைப் பயலே |
சிறுக்கி | சோம்பேறி நாயே |
தட்டுவாணி | தடிச் சிறுக்கி |
தலை நரைத்த பெருச்சாளி | தறுதலைச் சிறுக்கி |
தாசி | தில்லுமாறி |
தேவடியாள் | தொட்டியப் பிசாசே |
தொள்ளைக்காதா | நாடோடிக் கழுதை |
நாதாரி | நாய்க்குட்டி |
நாயே | நீலிப் பெண்ணே |
பட்டிபொறுக்கி | படுபாவி |
பயலே | பழிகாரி |
பறைப்பயல் | பாதகி |
பாவிப் பயல் பழுப்பு நாற்று | பாவிப்பயல் மாயக் கள்ளன் |
பாவிபாட்டி | பாவி மகன் |
பாழாய் போனவளே | பாழும் ஏவாள் |
பாழும் பயல் வயிறு | பிச்சைக்காரா |
பேடிப் பையா | பேமானிப் பயல் |
பேய்ப் பயலே | பேயே |
பொடிக் கொசுகு | மட்டி |
மட்டிப் பயலே | மடப் பயலே |
மடையா | மண்டை வறண்டவன் |
மண்வெட்டிப் பல்லன் | மானங்கெட்ட மாட்டுக்காரா |
மானங்கெட்ட மாயக்கள்ளன் | முண்டைச்சி பெற்ற மகள் |
மூஞ்சி வீங்கிப்போன பையா | மூதேவி |
மூளி | லண்டி முண்டை |
வாயாடி மகளே | வீம்புக்காரப் பயலே |
வெட்கம் கெட்ட மூளி |
[1]. மக்கள் அல்லாதவற்றையும் வையும் வசவுகள்
---------
22. குறிப்பு வழக்குகள்
சில வகையான வழக்குகளுக்குச் சொற்களின் பொருளைக்கொண்டு கருத்தை உணர இயலாது. அவற்றினூடே ஒரு குறிப்புப் பொருள் இருக்கும். அத்தகைய வழக்கைப் பழகு தமிழிலேதான் பார்க்கலாம். ‘கம்பி நீட்டினான்’ என்பதில் உள்ள சொல்லின்வழியே பொருள் செய்தால் பொற்கொல்லன் செயலாகத் தோன்றும். அதற்கு ஏமாற்றி ஓடிவிட்டான் என்பது பொருள். இந்தக் குறிப்பு, வழக்கறிந்தவர்களுக்கே தெரியவரும். இவற்றை மரபுத் தொடர்கள் என்றேனும் குறிப்பு வழக்குத் தொடர்கள் என்றேனும் சொல்லலாம்.
அகலக் கால் வைத்தல் | அறியாப் பருவம் |
ஆசார போசன் | உயிரைக் கையிலே பிடித்துக் கொண்டு ஓடுதல் |
கடவுள் செய்த புண்ணியம் | கம்பி நீட்டுதல் |
காக்காய் கத்தும் நேரம் | கோழி கூப்பிடும் நேரம் |
செக்குச் செல்லாது | தம்பிரான் புண்ணியம் |
தலைகீழாய் விழுதல் | திசை தப்பிப் போனவள் |
நரிக் கொம்பு | நாட்டுப்புறம் |
பட்டிக்காடு | பஞ்சாய்ப் பறத்தல் |
பாவப்பட்டவர்கள் | பிரியைக் கட்டி இழுத்தல் |
பேர் வழங்குதல் | பேரைக் காப்பாற்றுதல் |
பேரைக் கெடுத்தல் | பேரைச் சொல்லி பிழைத்தல் |
மண்ணைக் கவ்வுதல் | மல்லுக் கட்டுதல் |
மனப்பால் குடித்தல் | மாய்ந்து மாய்ந்து வேலை செய்தல் |
மெத்தப் படித்தவன் | ராக்காச்சி பெண்கள் |
வட்டம் போட வைத்தல் | வெட்டிப் பேச்சு |
வேகாத வெயில் |
[1]. இவை பொதுப் பெயர்கள்
------------
23. கிறிஸ்தவர் வழக்கு
ஆதாம் | ஆயா[1 | |
ஏதேன் தோட்டம் | ஏரோது ராசா | |
ஏவாள் | கல்லறை | |
கன்னிமரி | கானா ஊரு | குருஸ் (Cross) |
கொல்கதா | சம்மனசு | சிலுவை |
சூசை முனி | சேசு | தாவீது |
தேவமாதா | நாசரேத் | பாதிரி |
பெத்தலேகம் | மாரியம்மாள் | மேய்ப்பர் |
லாசரு | வான ராஜ்யம் |
[1]. இவை பொதுப் பெயர்கள்
------------
----------
24. வழக்கில் சிதைவு - இலக்கணம்
உலக வழக்கில் சிதைந்து வழங்கும் சொற்கள் பல. அவற்றில் சில இலக்கியங்களிலும் வழங்குகின்றன. அவற்றை மரூஉ மொழிகள் என்பார்கள். சொற்களில் நிகழும் சிதைவை ஆராய்வது மிகவும் சுவையான ஆராய்ச்சி. மொழி நூலறிஞர்களுக்கு இந்தச் சிதைவு நெறி பல உண்மைகளை விளக்குகிறது. சொல்லின் உருவம் எப்படியெல்லாம் மாறிவரும் என்பதை இந்தச் சிதைவுகளை வகைப்படுத்திப்பார்த்து உணர்ந்துகொள்ளலாம். கொச்சைத் தமிழ், கொச்சை மொழி என்று நாம் இவற்றை வழங்குகிறோம்.
பகுபதம் பகாப்பதமாகிய ஒருமொழிகள் சிதைவதும், இருமொழித்தொடர் சிதைந்து ஒருமொழிபோல வழங்குவதும், பன்மொழித்தொடர் சிதைந்து ஒரு மொழிபோல வழங்குவதும் பேச்சு வழக்கில் இயல்பாக உள்ளன.
முதல், இடை, கடை என்ற மூன்று இடங்களிலும் தோன்றல் திரிதல் கெடுதல் என்னும் மூன்று வகையான விகாரங்களும் பெற்றுச் சொற்களும் சொற்றொடர்களும் சிதைகின்றன.
ஒரே சொல்லுக்கும், சொற்றொடர்க்கும் வெவ்வேறு விதமாகச் சிதைந்த உருவங்கள் வேறு வேறு இடங்களில் வழங்கும். இந்த வேறுபாடு இடம், வகுப்பு முதலியவற்றிற்கு ஏற்ப அமையும். நின்று என்ற ஒரு சொல்லே வழக்கில் நின்னு என்றும், நிண்ணு என்றும், நிண்டு என்றும், நிந்து என்றும் பலவகையாகச் சிதைந்து வழங்குவதைக் காண்க. அவர்கள் என்ற சொல்லே அவங்க,
-------------
அவுங்க, அவுக, அவாள், அவா என்று பலவாறு சிதைந்து வழங்குகிறது.
இந்தச் சிதைவுகளைப் பேச்சு வழக்கில் பெருகக் காணலாம். நாடோடிப் பாடல்களிலும் மிகுதியாக இவை வழங்குகின்றன. இந்தப் புத்தகத்தில் வரும் சிதைந்தசொற்களைத் தொகுத்து வகைப்படுத்தி, அவற்றினூடே சில பொது இயல்புகளை ஆராய்ந்து பின்னே வரிசையாகக் கொடுத்திருக்கிறேன்.
இத்துறையில் செய்ய வேண்டிய வேலை கடல்போல இருக்கிறது. தமிழ்நாட்டில் வழங்கும் மொழிச்சிதைவுகளை எல்லாம் தொகுத்து ஆராய்ந்தால் அந்தச் சிதைவுகளிலும் ஒரு நெறி இருப்பதை உணரலாம். இந்தப் புத்தகத்தில் சொற் சிதைவு உருவங்கள் யாவும் வந்துள்ளன என்று சொல்வதற்கில்லை. ஆயினும் கிடைப்பவற்றைப் பாகுபடுத்தி ஆராய்ந்திருக்கிறேன்.
சிதைவுச் சொற்களைத் தொகுத்துப் பின்னே அகராதி வரிசையில் கொடுத்திருக்கிறேன்.
அ | 1. முதலில் கெடுதல் : (அ)டா, (அ)டி, சொல்லுங்கம்மா[1] 2. முதலில் திரிதல் : i எ-செரி, தெரிசிப்பேன் ii ஒ-பொம்பரம், ரொப்பி [2] 3. இடையில் கெடுதல்: சொல்லாதே(அ)டா, சொல்லாதே அ(டி) 4. இடையில் திரிதல்: i ஆ-என்னாங்கடி, என்னான்னா, ii இ-எதினால், கம்பிளி iii உ-அடக்குடி, இழுத்துது 5. ஈற்றில் தோன்றுதல் : நம்ம அக்கால் ‘ஆக்க’ ஆதல்: மிஞ்சினாக்க அல்லவோ ‘அல்லோ’ ஆதல் ----- [1]. இது தொடர்மொழியில் வருமொழி முதல் கெட்டது. [2]. விகாரத்தின்மேல் விகாரம். ----- |
ஆ | 1. இடையில் திரிதல் : அ : இருக்கிறயே இ : பேசிறியா[3] ஐ - அடக்கிறையே, கண்டையா, போனையே ஆய் ஈற்றில் திரிதல்: i ஏ-போவே, போனே ii ஐ-கூப்பிட்டையே -------- [1]. பேசுகிறாயா என்பதில் உண்டான விகாரங்களில் றா, றி ஆயிற்று. ------- |
இ | 1. முதலில் கெடுதல் : ரெண்டு[1] 2. முதலில் திரிதல்: i. ஈ-கீச்சுப்புட்டேன் ii உ-துறப்பு, புடி, புண்ணாக்கு, புள்ளை, முட்டாயி iii எ-கெடக்குது, செறிசு, பெரட்டாசி, வெறகு iv. ஒ-பொடனி, பொழை, மொளகாய் 3. இடையில் கெடுதல்: கூடருக்கு 4. இடையில் திரிதல்: i அ-ஆம்பளை, ஆக்கறது, இருக்கறயே ii உ-அதுலே, குண்டுமணி, பகுந்து, மிதிக்குது, உருகுச்சு iii ஏ-பார்த்திருக்கேன் இல்லை: 1. முதல் பகுதி கெடுதல் : அடங்கலை, வரலை 2. முதல் கெட்டு ஈறுதிரிதல்: பேசலே, வரலே |
1. விகாரத்தின்மேல் விகாரம்.
-----------
ஈ | இடையில் திரிதல் : இ-தண்ணி |
உ | 1. முதலில் திரிதல்: i இ-பில், பில்லாக்கு ii ஊ-பூந்து iii எ-பெரட்டாசி, பெரண்டு, பெறப்பட iv ஒ-ஒதை, ஒலக்கை, தொரை 2. இடையில் திரிதல் : i அ-அரண்டு, கழுவற, கொஞ்சற ii இ-எழுந்திரிச்சு 3. இடையில் தோன்றல்: சொல்லுறது 4. ஈற்றில் தோன்றல்: i முற்றுகரம்-கெடுவு, தெருவு ii ஊவுக்குப்பின்-பூவு iii ண்-கண்ணு iv ர்-அடிக்கிறாரு, ஊரு, பேரு v ல்-கல்லு vi ழ்-கூழு vii ள்-தாளு viii ன்-நானு |
ஊ | 1. இடையில் திரிதல்: ஓ - ரங்கோன் 2. ஈற்றில் உகரம் பெறுதல் பூவு |
எ | 1. முதலில் திரிதல்: அ - அல்லாத்துக்கும் இ-இன்னால் ஏ-ஏது, சேதி ஒ- சொம்பு, சொருகி, பொட்டி, பொட்டை, பொண்ணு, மொள்ள 2. இடையில் திரிதல்: i அ - காலம்பர ii உ - கப்பலுண்ணா, காடுண்ணு திடீருண்ணு என்று திரிதல் : i உண்ணு - குரங்குண்ணு ii எண்ணு - குரங்கெண்ணு iii என்னு iv ண்ணு - ஆதரிண்ணாள் என்ன திரிதல்: ங்க - கிடுகிடுங்க, பளபளங்க |
ஏ | 1. முதலில் திரிதல் : i ஆ - வாணாம் ii எ - வெள்ளாமை iii ஓ - மோளம் 2. ஈற்றில் திரிதல் : எ - தவறாமெத்தான் |
ஐ | 1. முதலில் திரிதல்: அ - வச்ச, அம்பது 2. இடையில் திரிதல்: அ - பொழப்பு, மடப்பள்ளி 3. ஈற்றில் திரிதல்: இ - அம்மாசி, தலைகாணி உ - குடிசு 4. ஈற்றில் தோன்றுதல்: இ - மையி |
ஒ | 1. முதலில் திரிதல்: உ - குடு 2. இடையில் திரிதல்: ஓ - கேட்டுக்கோ |
ஓ | இடையில் திரிதல்: அ - அப்ப ஆ - காணாம உ - ஏச்சுப்புட்டேன் 1. ஈறுபோதல்: அடியுங்க 2. கோ ஆதல்: செய்யுங்கோ |
கிற்று | திரிதல்: குச்சு - உருகுச்சு |
கிறது |
திரிதல்:
i உது - சாயுது
ii கு - இருக்கு, கிடக்கு
iii குது - அடிக்குது, ஆகுது, இருக்குது, கிடக்குது iv குறது - ஏசுகுறது v து - ஆறுது, கத்துது |
கிறாய் | திரிதல்: i. கிறி - இருக்கிறியே ii கிறை - உதைக்கிறையே iii கே - இருக்கே iv றி - அலப்புறியே |
கிறார் | திரிதல்: i றா - எழுதுறா ii றார் - ஆடுறார் |
கிறாள் | திரிதல்: காள் - இருக்காள் |
கிறான் | திரிதல்: i கான் - இருக்கான் ii றான் - ஊதுறான் |
கிறேன் | திரிதல்: கேன் - இருக்கேன் |
கிறோம் | திரிதல்: கோம் - இருக்கோம் |
கு | இடையில் கெடுதல்: இறங்கையில், உறங்கையில் தூக்கையில், தூங்கையில் |
கை |
1. கெடுதல்:
க் கெடுதல்-ஏறையில், ஏற்றையில், கழற்றையில் 2. ஈற்றில் கெடுதல்: கார்த்தி |
கொண்டு | திரிதல்: கிட்டு - அடிச்சிக்கிட்டு |
கொள் | ளகரம் கெட்டுக் கொகரம் திரிதல்: i க - குடிச்சுக்க ii கோ-கேட்டுக்கோ, வச்சுக்கோ |
கொள்ள | திரிதல்: கிட - கட்டிக்கிட |
ட் |
இடையில் திரிதல்:
க் - உக்காந்து, கேக்கட்டுமா, வெக்கம் |
ட | இடையில் திரிதல்: ர - போயிரடா |
ண் | 1. இடையில் திரிதல்: i. ங் - கங்காணி ii ம் - ஆம்பளை, பொம்பள 2. இடையில் கெடுதல்: அரமனை, வெள்ளாமை 3. ஈற்றில் உகரம் பெறுதல்: கண்ணு, சாணு, பொண்ணு, மண்ணு |
ண்ட | திரிதல் : ண - வேணாம், வேணும் |
த்த | திரிதல் ச்ச - அடிச்ச, நீச்சு |
த | திரிதல்: ச - புதிசு, பெரிசு |
து | 1. இடையில் திரிதல்: சி - அடிச்சிக்கிட்டு 2. ஈற்றில் கெடுதல்: அப்போ, இப்போ, எப்போ |
ந்த | திரிதல்: i ஞ்ச - அசைஞ்சு, அமைஞ்சு ii ச்ச - எழுந்திருச்சு |
நி | முதலில் கெடுதல்: ரொப்பி, ரொம்ப |
ப | இடையில் திரிதல்: வ - இருவது, கோவம், யாவாரம், லாவம் |
பு | ஈற்றில் கெடுதல்: மார் போ திரிதல்: கெடுதல்: பு - வாங்கிப்புட்டேன் பி - வாங்கிப்புட்டேன் |
போலே | திரிதல்: பலே - போகிறாப்பலே |
ம் |
1. இடையில் திரிதல்:
ண் - செய்ததாண்டி, நேரண்ட
2. இடையில் தோன்றுதல்
அம்மாவாசி
3. ஈற்றில் கெடுதல்:
ஆமா 4. ஈற்றில் அ பெறுதல்: நம்ம |
ம்ச | திரிதல்: ங்க - வங்கிசம் |
ம | இடையில் திரிதல்: பு - அம்புட்டு, எம்புட்டு |
ய் | 1. இடையில் கெடுதல்: ஏச்சு, காச்சி 2. இடையில் தோன்றுதல்: வெய்யில் 3. ஈற்றில் இகரம் பெறுதல்: ஆயி, தாயி, நோயி 4. ஈற்றில் கெடுதல்: செவ்வா |
ய்து | திரிதல்: ஞ்சு - செஞ்சு |
ய | 1. முதலில் திரிதல்: எ - எமன் ஏ - ஏமன் 2. இடையில் திரிதல்: ச - அசந்து, உசந்த, உசிர் |
யிற்று | திரிதல்: i ச்சு - ஆச்சு, போச்சு ii ச்சுது - போச்சுது |
ர் | 1. இடையில் அசந்து, அவுக, உக்காந்து, ஒசந்த, சமத்து, சாணாசனம், சேத்து, பகுந்து, பாத்து, வளக்க, வளத்தி, வளந்தவன் 2. இடையில் திரிதல்: i ங் - அவுங்க, தொழுதாங்க ii ல் - சலுக்காரு 3. ஈற்றில் கெடுதல்: தண்ணி, நாத்தனா, மாமியா 4. ஈற்றில் உகரம் பெறுதல்: அண்ணன்மாரு, ஆரு, ஊரு, கெட்டிக்காரரு, மயிரு |
ர | திரிதல்: ல - குலை, கோடாலி ன - பொடனி |
ல் | 1. ஈற்றில் உகரம் பெறுதல்: கடலு, கம்மலு, காலு, சொல்லு, தேங்குழலு 2. ஈற்றில் கெடுதல்: எச்சி, கப்பலுண்ணா, கோண, தொட்டி, முக்கா, பய, வதங்க, விட்டி ல்வ - திரிதல்: ல்ல - செல்லம் |
ல | திரிதல்: ள - மெள்ள |
வ | திரிதல் : i ச - விரைசா ii ம - என்னமோ, குமிச்சிட்டா திரிதல் : லும் |
வர | திரிதல்: ஆர - ஓடியாரலை |
வி | முதலில் திரிதல் : மு - முழி, முழங்கு விட்டால் திரிதல் : i கட்டி - முடிக்காக் கட்டி ii ட்டி இல்லாட்டி, கேக்காட்டி, மறக்காட்டி |
விடு | கெடுதல் : i வ் கெடுதல் - இழுத்திடுவேன் ii வி கெடுதல் - அறுத்துடுவேன், சொல்லிடுவேன் |
வேண்டும் | திரிதல்: i வேணும் ii ணும் - அறுக்கணும் |
ழ | இடையில் திரிதல் : ள - அளுகாதே, கல்லளுத்தி, கொளுந்து |
ள் | ஈற்றில் உகரம் பெறுதல்: ஆளு, தாளு, தூளு, நாளு ஈற்றில் கெடுதல்: அக்கா, அவ, ஆத்தா, இருப்பா, ஏறினா, மருமக, தொழுதாங்க |
ற் | திரிதல் : க் - விடியக்காலம், விக்கலையா திரிதல்: |
ற்ற | திரிதல் : i ட்ட - கழட்டி ii த்த - ஆத்தில், ஊத்து, ஏத்தவள், குத்தம், வத்தல் |
ற்று | 1. திரிதல்: ச்சு - ஓடிச்சு |
ன் | i ங் - எங்கிட்டே ii ண் - அடக்குறேண்டா, ஏங்குறாண்டி, மகண்டி 2. ஈற்றில் உகரம் பெறுதல்: கூனு, நானு, பொன்னு |
ன்ற |
திரிதல் : i. ண்ட - குண்டுமணி ii ண்ண - அண்ணைக்கு, கண்ணு, நிண்ணு iii ண - ஊணு, தோணுது, மூணு iv ந்த - முந்தாணி v ல்ல - நல்லா vi ன்ன - கொன்னு, நின்னாங்களே |
ன்ன | திரிதல்: i ண்ண - உண்ணம் ii ண்ணா - கிண்ணாரம் iii ன்னா - கின்னாரம் |
னை | திரிதல்: ணி - முந்தாணி |
ஜ | முதல் திரிதல்: i ச - சனம் ii செ - செகம் |
ஷ் | இடையில் திரிதல்: i க் - கக்கம் ii ட் - வேட்டி iii ஸ் - சாஸ்டாங்கம் iv ச - சந்தோசம் |
ஹா | முதலில் திரிதல் ஆ - ஆர்பரு க்ஷ்ம ச்ச - சூச்சம் |
க்ஷ | திரிதல் : i க்க - சாக்கி ii ச்சு - லெச்சுமி iii ச - சணம், சவரம், சேமம். |
25. வழக்கில் சிதைவு - இலக்கியம்
[முதலில் இயல்பான சொற்களும், அவற்றின் பின்பு சிதைந்த உருவங்களும் கொடுக்கப்பட்டுள்ளன. ]
அக்காள் - அக்கா
அகப்பட்டது - அம்புட்டுச்சு
அங்கு - அங்கிட்டு
அசைந்து - அசைஞ்சு
அடக்கடி - அடக்குடி
அடக்குகிறேனடா - அடக்குறேண்டா
அடங்கவில்லை - அடங்கலை
அடா - டா
அடபுடாவென்று - அடாபுடாண்ணு
அடி - டி
அடிப்பவில்லை - அடிக்கலை
அடிக்கிறது - அடிக்குது
அடிக்கிறாயே - அடிக்கிறையே
அடிக்கிறார் - அடிக்கிறாரு
அடித்த அரிவாள் - அடிச்சரிவாள்
அடித்தது - அடிச்சது
அடித்தவன் - அடிச்சவன்
அடித்தார் - அடிச்சார்
அடித்தார்களா - அடிச்சாங்களா
அடித்தால் - அடிச்சால்
அடித்தான் - அடிச்சான்
அடித்து - அடிச்சு
அடித்துக்கொண்டு - அடிச்சிக்கிட்டு
அடிப்பார்கள் - அடிப்பாங்க
அடியடியென்று - அடியடிண்ணு
அடியுங்களடி - அடியுங்கடி
அடுக்கிக்கொண்டு - அடிக்கிக்கிட்டு
அடைந்த - அடைஞ்ச
அண்ணன்மார் - அண்ணன்மாரு
அணைத்திடுவேன் - அணைச்சிடுவேன்
அத்தைமார் - அத்தைமாரு
அதிலே - அதுலே
அப்புகிறது - அப்புது
அப்போது - அப்ப, அப்போ
அப்போதென்றால் - அப்பண்ணா
அம்மட்டு - அம்புட்டு
அமாவாசை - அம்மாவாசி
அமைந்ததே - அமைஞ்சுச்சே
அமைந்துவிட்டது - அமைஞ்சிருச்சு
அயர்ந்து - அசந்து
அயலூர் - அயலூரு
அரண்மனை - அரமனை
அரவணைத்து - அரவணைச்சு
அரிந்து - அரிஞ்சு
அரிந்துவிடுவேன் - அரிஞ்சிடுவேன்
அல்லவடா - அல்லடா
அருண்டு - அரண்டு
அல்லவோ - அல்லோ
அலப்புகிறாயே - அலப்புறியே
அலைகிறது - அலையுது
அலைந்தவர் - அலைஞ்சவர்
அவர்கள் - அவங்க, அவுக, அவுங்க, அவுங்கள்
அவள் - அவ
அழ - அழுக
அழவில்லை - அழுகலை
அழாதே - அழுகாதே, அளுகாதே
அழித்து - அழிச்சு
அழித்துவிட்டது - அழிச்சிடுத்து
அழுகிறாய் - அழுகிறே
அழுதுவிட்டது - அழுதிருச்சு
அறியவில்லை - அறியலை
அறுக்கிறானடி - அறுக்கிறாண்டி
அறுக்க வேண்டுமடா - அறுக்கணும்டா
அறுத்துவிடுவேன் - அறுத்துடுவேன்
அறைத்து - அறைச்சு
அன்றைக்கு - அண்ணைக்கு
அனுப்பிவிடுவார் - அனுப்பிடுவார்
ஆகவில்லை - ஆகலை
ஆகிறது - ஆகுது
ஆட்டிக்கொண்டு - ஆட்டிக்கிட்டு
ஆடம் - ஆதாம்[1]
ஆடவில்லை - ஆடலை
-----------
[1]. இலக்கியத்திலும் வரும் சொற்கள்
-----------
ஆடவேணும்--- ஆடனும்
ஆடுகிறார்கள்--- ஆடுறாங்க
ஆண்--- ஆணு
ஆண்டவர்--- ஆண்டவரு
ஆண் பிள்ளை--- ஆம்பளை
ஆத்தாள்--- ஆத்தா
ஆதரியென்றாள்--- ஆதரின்னாள்
ஆதரிக்க வேண்டுமடி--- ஆதரிக்க ணுண்டி
ஆதரித்து --- ஆதரிச்சு
ஆமாம்--- ஆமா
ஆய்-- -ஆயி
ஆயிற்று--- ஆச்சு
ஆர் --- ஆரு
ஆள் --- ஆளு
ஆற்றில் --- ஆத்தில்
ஆற்றிற்று --- ஆத்துச்சு
ஆற்றுக்கு--- ஆத்துக்கு
ஆற்றுகிறாள் --- ஆத்துறாள்
ஆற்றோரம்--- ஆத்தோரம்
ஆறுகிறது--- ஆறுது
ஆனையென்றால்--- ஆனைண்ணா
இங்கு--- இங்கிட்டு
இடித்து --- இடிச்சு
இடிப்பேனடி --- இடிப்பேண்டி
இப்போது--- இப்போ, இப்ப
இரங்கவில்லை--- இரங்கலை
இரட்டு --- ரெட்டு
இரண்டகம்--- ரெண்டகம்
இரண்டு--- ரெண்டு
இரா --- ரா, ராவு
இருக்கவில்லை--- இருக்கலை
இருக்கிற --- இருக்க
இருக்கிறது--- இருக்கு, இருக்குது
இருக்கிறதென்றால்--- இருக்குதுண்ணால்
இருக்கிறாய்--- இருக்கே
இருக்கிறாயே--- இருக்கிறியே
இருக்கிறார்கள் --- இருக்கிறாங்க
இருக்கிறாள் --- இருக்காள்
இருக்கிறான் --- இருக்கான்
இருக்கிறேன் --- இருக்கேன்
இருக்கிறேனென்று--- இருக்கிறேண்ணு
இருக்கிறோம்--- இருக்கோம்
இருந்தது--- இருந்திச்சு, இருந்துச்சு, இருந்தது
இருந்தார்கள் --- இருந்தாங்கள்
இருந்தீர்கள்--- இருந்தீங்கள்
இருப்பாள்--- இருப்பா
இருப்பாளென்று--- இருப்பாண்ணு
இருபது--- இருவது
இல்லாவிட்டால--- இல்லாட்டி
இல்லையடி--- இல்லைடி
இல்லையென்று--- இல்லேண்ணு
இல்லையென்னுவார்--- இல்லேண்ணு வார்
இல்லையாவென்று--- இல்லையாண்ணு
இவர்கள்--- இவுங்க
இழுத்தது--- இழுத்து
இழுத்துக்கொண்டு--- இழுத்துக்கிட்டு
இழுத்துவிடுவேன்--- இழுத்திடுவேன்
இளிக்கிறானடி--- இளிக்கிறாண்டி
இறக்கினேனடி--- இறக்கினேண்டி
இறங்குகிறது--- இறங்குது
இறங்குகிறார்கள்--- இறங்குறாங்க
இறங்குகையில்--- இறங்கையில்
இறக்குங்கள்--- இறக்குங்க
இறங்குங்களடி--- இறங்குங்கடி
இறைத்து--- இறைச்சு
இன்னம்--- உண்ணம்
இனிக்கிறது--- இனிக்குது
ஈவ்--- ஏவாள்
உங்கள்--- உங்க
உங்களப்பன்--- உங்கப்பன்
உங்களம்மா--- உங்கம்மா
உங்களாத்தாள்--- உங்காத்தாள்
உங்களாயா--- உங்காயா
உச்சரிக்க வேண்டும்--- உச்சரிக்கணும்
உட்காரடி--- உட்காருடி
உட்கார்ந்து--- உக்கார்ந்து, உக்காந்து
உடைக்கிறானடி--- உடைக்கிறாண்டி
உடைத்திட்டால்--- உடைச்சுட்டால்
உடைத்து விட்டேன்--- உடைத்துட்டேன்
உடைத்து விடுவார்--- உடைச்சிடுவார்
உதவாதது--- உதவாது
உதை--- ஒதை
உதையென்று- -- உதைண்ணு
உதைக்கிறாயோ- -- உதைக்கிறையோ
உதைப்பேனடி--- உதைப்பேண்டி
உயர்த்தி--- உசத்தி, ஒசத்தி
உயர்ந்த- -- உசந்த, ஒசந்த
உயர- -- உசக்க
உயிர்--- உசிர்
-----------
உரல்--- உரலு
உராய்ந்தது--- உராஞ்சுது
உரித்து--- உரிச்சு
உருகிற்று--- உருகுச்சு
உலக்கை--- ஒலக்கை
உலுக்குகிறானடி--- உலுக்குறாண்டி
உழாத--- உழுகாத
உறங்குகிறேனென்றாள்--- உறங்கிறேண்ணாள்
உறங்குகையில்--- உறங்கையில்
உறவின் முறையார்--- உறமுறையார்
ஊதுகிறான்--- ஊதுறான்
ஊர்--- ஊரு
ஊர்ந்துகொண்டு--- ஊர்ந்துக்கிட்டு
ஊற்றி--- ஊத்தி
ஊற்று --- ஊத்து
ஊற்றுகையில் --- ஊத்தையில்
ஊன்றி--- ஊணி
ஊன்று --- ஊணு
எங்கள் --- எங்க
எங்கேயென்று --- எங்கேண்ணு
எச்சில் --- எச்சி
எட்டவில்லை --- எட்டலை
எடுக்க வேண்டும்--- எடுக்கணும்
எடுக்கிறது--- எடுக்குது
எடுத்துக்கொண்டு --- எடுத்துக்கிட்டு
எடுப்பார்கள்--- எடுப்பாங்கள்
எதனால்--- எதினால்
எது --- ஏதுஎப்போதும் --- எப்பவும்
எப்போதென்று--- எப்பன்னு
எம்மட்டு--- எம்புட்டு
எரிந்து--- எரிஞ்சு
எல்லார் --- எல்லாரு
எல்லாவற்றுக்கும்--- எல்லாத்துக்கும்
எழுதவில்லை--- எழுதலை
எழுதுகிறார்--- எழுதுறார்
எழுந்திருந்து --- எந்திரிச்சு, எளுந்தி ரிச்சு,
எழுந்திருச்சுஎள் --- எள்ளு
எறிந்து--- எறிஞ்சு
என்கிட்டே--- எங்கிட்டே
என்கிறானடி--- என்கிறாண்டி
என்பாள்--- என்னுவாள்
என்றால்--- இண்ணா, இண்ணால், இன்னா, உண்ணா,
உண்ணால்என்றாள் --- இன்னாள்
என்று--- இண்ணு, இன்னு, உண்ணு, உன்னு, எண்ணு,
என்னுஎன்னவடி--- என்னாங்கடி
என்னவும்--- என்னமும்
என்னவென்றால்--- என்னான்னா
என்னவோ--- என்னமோ
ஏசினார்கள்--- ஏசினாங்க
ஏசுகிறதால்--- ஏசுகுறதால்
ஏடன்--- ஏதேன்
ஏமாற்றிக்கொண்டு--- ஏமாற்றிக்கிட்டு
ஏய்த்து--- ஏய்ச்சு
ஏய்த்துப் போட்டேன்--- ஏச்சுப் புட்டேன்
ஏற்ற--- ஏத்த
ஏற்றவள்--- ஏத்தவள்
ஏற்றாற்போல--- ஏத்தாற்போல்
ஏற்று--- ஏத்து
ஏற்றுகையில்--- ஏற்றையில்
ஏற்றும்--- ஏத்தும்
ஏறிக்கொண்டு--- ஏறிக்கிட்டு
ஏறினாள்--- ஏறினா
ஏறுகிறதென்பார்--- ஏறுதுண்ணுவார்
ஏறுகையில்--- ஏறையில்
ஏறுங்களடி--- ஏறையில்
ஏறுங்களடி--- ஏறுங்கடி
ஏனடா--- ஏண்டா
ஏனடி--- ஏண்டி
ஐந்து--- அஞ்சு
ஒடித்துக் கொண்டேன்--- ஒடிச்சுக்கிட்டேன்
ஒடிந்துவிட்ட தென்று--- ஒடிஞ்சிச் சின்னு
ஒடித்து விடுவேன்--- ஒடிச்சிடுவேன்
ஒத்தவர்களை--- ஒத்தவங்களை
ஒழிந்தீர்களா--- ஒழிஞ்சீங்களா
ஒளியாதேயடி--- ஒளியாதேடி
ஒற்றை--- ஒத்தை
ஒற்றைத் தலை--- ஒத்தத் தலை
ஒன்று--- ஒண்ணு, ஒன்னு
ஓடவேண்டும்--- ஓடணும்
ஓடிவரவில்லை--- ஓடியாரலை
ஓடிவிட்டான்--- ஓடிட்டான்
ஓடி விடுவேன்--- ஓடிடுவேன்
ஓடிற்று-- ஓடிச்சு
ஓடுகிற-- ஓடுற
ஓடுகிறது-- ஓடுது
ஓடுகிறான்-- ஓடுறான்
ஓடுகிறானடி-- ஓடுறாண்டி
-------------
உரைக்ராஸ்-- குருஸ்
கசக்கிறது-- கசக்குது
கட்ட வேண்டும-- கட்டணும்
கட்ட வேண்டுமடா-- கட்டணுண்டா
கட்ட வேண்டுமென்று--- கட்டணுண்ணு
கட்டிக்கொண்டு--- கட்டிக்கிட்டு
கட்டிக்கொள்ள--- கட்டிக்கிட1
கட்டுகிற --- கட்டுற
கட்டுங்களென்றால்--- கட்டுங்கன்னா
கடக்க வேண்டுமென்றால்--- கடக்கணுன்னா
கடகடவென்று --- கடகடண்ணு
கடல் --- கடலு
கடிக்கிறது--- கடிக்குது
கடித்திடுவேன்--- கடிச்சிடுவேன்
கடித்துக் கொள்கிற --- கடிச்சிக்கிற
கடித்து விட்டதோ--- கடிச்சிருச்சோ
கடித்து விடாமே --- கடிச்சிடாமே
கண்--- கண்ணு
கண்காணி--- கங்காணி
கண்டக்கால் --- கண்டாக்க
கண்டாயா --- கண்டையா
கண்டாயா அடி--- கண்டாயாடி
கண்டுகொண்டான் --- கண்டுக் கிட்டான்
கண்டுவிட்டால் --- கண்டுட்டால்
கண்ணீர் --- கண்ணீரு
கண்ணே யென்றும்- - கண்ணேன்னும்
கண்மணி யென்றும் --- கண்மனின்னும்
கத்தவில்லை --- கத்தலை
கத்திக்கொண்டு --- கத்திக்கிட்டு
கத்துகிறது --- கத்துது
கதறுகையில் --- கதறையில்
கதிர் --- கதிரு
கப்பலென்றால் --- கப்பலுண்ணா
கபிலை--- கமலை
கம்பளி--- கம்பிளி
கம்மல்- - கம்மலு
கருகருவென்று --- கருகருன்னு
கரைத்து --- கரைச்சு
கல் --- கல்லு
கல்லழுத்தி--- கல்லளுத்தி
கலகலவென்று--- கலகலெண்ணு
கலங்கிக் கொண்டிருந்தீர்கள்--- கலங்கிக்கிட்டிருந்தீங்க
கலங்குகிறான்--- கலங்குறான்
கலங்குகிறேனடி--- கலங்குறேண்டி
கலந்தார்களாம்--- கலந்தாங்களாம்
கலந்துகொண்டு--- கலந்துக்கிட்டு
கலந்தேனென்று--- கலந்தேண்ணு
கவனிக்க வேண்டும்--- கவனிக்கணும்
கழலுகிறது--- கழலுது
கழற்றி--- கழட்டி
கழற்றுகிறார்கள்--- கழற்றுறார்கள்
கழற்றுகையில்--- கழற்றையில்
கழிக்கவில்லை--- கழிக்கலை
கழித்தவன்--- கழிச்சவன்
கழுதையே--- கழுதே
கழுவுகிற-- கழுவுற
கள்- கள்ளு
கற்கண்டு-- கல்லுக்கண்டு
கறுத்துவிட்டது- கருத்திருச்சு
கன்று- கண்ணு
கன்றே- கண்ணே
கன்னிமார்- கன்னிமாரு
கனிந்த- கனிஞ்ச
கனைத்துக்கொண்டு- கனைத்துக்கிட்டு
கஷ்கம்- கக்கம்
காக்குமடி---காக்குண்டி
காட்டவேணும்---காட்டணும்
காட்டிக்கொண்டு---காட்டிக்கிட்டு
காட்டினார்---காட்டினாரு
காட்டினேனடி---காட்டினேண்டி
காட்டுகிறார்---காட்டுறார்
காட்டுகிறானடி---காட்டுறாண்டி
காடென்று---காடுண்ணு
காண்பிக்க வேண்டும்---காண்பிக்கணும்
காணவில்லை---காணலை
காணோம்---காணாம்
காணோமென்று---காணாமின்னு
காப்பாற்றுவேன்---காப்பாத்துவேன்
காய்க்கிறது---காய்க்குது
காய்கிறது---காயுது
காய்ச்சி---காச்சி
காய்ந்த---காஞ்ச
கார்---காரு
கார்த்திகை---கார்த்தி
காரைக்கால்---காரைக்காலு
கால்---காலு
---------
1. தென் பாண்டி நாட்டு வழக்கு.
-------------
காலத்தாலே---கார்த்தாலே
காலம்பெற---காலம்பர
கிழமையிலிருந்து---கிழமெருந்து
கிழித்தார்---கிழிச்சார்
கிழித்துப்போட்டேன்---கீச்சுப்புட்டேன்
கிழித்துவிடுவேன்---கிழிச்சிடுவேன்
கிழிந்து---கிழிஞ்சு
கிழிப்பார்களடா---கிழிப்பாங்கடா
கிளியேயென்றும்---கிளியேன்னும்
கின்னரம்---கிண்ணாரம், கின்னாரம்
கிடக்கிறது---கிடக்கு, கிடக்குது, கெடக்குது
கிடுகிடுவென்று- --கிடுகிடுண்ணு
கிடுகிடென்று---கிடுகிடெண்ணு
கிடுகிடுவென்ன---கிடுகிடுங்க
கிடைத்து ---கிடைச்சு
குசுகுசென்று---குசுகுசுண்ணு
குடல்---குடலு
குடிக்கவில்லை- -குடிக்கலை
குடிக்கிறானடி ---குடிக்கிறாண்டி
குடிசை---குடிசு
குடித்த ---குடிச்ச
குடித்தவன் ---குடிச்சவன்
குடித்து ---குடிச்சு
குடித்துக்கொள்ளம்மா ---குடிச்சுக்கம்மா
குடித்துவிட்டு---குடிச்சிட்டு
குடிப்பார்கள்---குடிப்பாங்கள்
குடியுங்கள் ---குடிங்க
குடுகுடுவென்று---குடுகுடுன்னு
குத்தவில்லை ---குத்தலை
குத்திக்கொண்டு---குத்திக்கிட்டு
குத்துகிற ---குத்துற
குத்துகிறது ---குத்துறது
குதித்து ---குதிச்சு
குதித்துக்கொண்டு---குதிச்சுக்கிட்டு
குந்திக்கொண்டு---குந்திக்கிட்டு
கும்பிட்டுவிட்டு---கும்பிட்டுட்டு
கும்பிடவேண்டும்---கும்பிடணும்
கும்பிடுகிறேன்---கும்பிடுறேன்
கும்பிடுமடி ---கும்பிடுண்டி
குயில் ---குயிலு
குரங்கென்று---குரங்குண்ணு
குரை ---குலை
குவித்திட்டாலும்---குமிச்சிட்டாலும்
குழைக்கவில்லை---குழைக்கலை
குளித்து---குளிச்சு
குற்றம்---குத்தம்
குறித்து---குறிச்சு
குறுகிக்கொண்டு---குறுகிக்கிட்டு
குறைந்தது---குறைஞ்சது
குறையவில்லை---குறையலை
குன்றிமணி---குண்டுமணி
குனிந்து---குனிஞ்சு
கூப்பிட்டாயே---கூப்பிட்டையே
கூப்பிட்டுக்கொண்டு---கூப்பிட்டுக்கிட்டு
கூப்பிடுகிறேன்---கூப்பிடுறேன்
கூட்டவில்லை---கூட்டலை
கூட்டிக்கொண்டு---கூட்டிக்கிட்டு
கூட்டுகிறாள்---கூட்டுறாள்
கூடஇருக்கிறது---கூடருக்கு
கூடவில்லை---கூடலை
கூடிக்கொண்டு---கூடிக்கிட்டு
கூவுகிறது---கூவுது
கூவுகிறதென்று---கூவுதுண்ணு
கூன்---கூனு
கெட்டிக்காரர்---கெட்டிக்காரரு
கெடு---கெடுவு
கேட்கட்டுமா---கேக்கட்டுமா
கேட்கவில்லை---கேட்கலை, கேக்கலே
கேட்காவிட்டால்---கேக்காட்டி
கேட்கிறேனடி---கேட்கிறேண்டி
கேட்டாரென்றால்---கேட்டாருண்ணா
கேட்டார்கள்---கேட்டாங்கள்
கேட்டுக்கொள்---கேட்டுக்கோ
கேட்டுவிட்டது---கேட்டுருச்சு
கேள்---கேளு
கேளுங்களம்மா---கேளுங்கம்மா
கொஞ்சவேண்டும்---கொஞ்சணும்
கொஞ்சுகிறதற்கு---கொஞ்சறதுக்கு
கொட்டிவிட்டது---கொட்டிருச்சு
கொட்டுகிறது---கொட்டுது
கொடு---குடு
கொடுக்கவில்லை---கொடுக்கலை
கொடுக்கவேண்டும்---கொடுக்கணும்
கொடுக்கவேண்டுமடி---கொடுக்கணுண்டி
கொடுக்கவேண்டுமென்றால்---கொடுக்கணும்னா
கொடுக்கிறார்கள்---கொடுக்கிறாங்க
கொடுக்கிறானடி---கொடிக்கிறாண்டி
கொடுக்கிறேனடி---கொடுக்கிறேண்டி
கொடுத்தவர்---கொடுத்தவரு
--------------
கொடுத்தார்களே---கொடுத்தாங்களே
கொடுத்திடுங்கள்---கொடுத்திடுங்க
கொடுத்துவிட்டது---குடுத்திடுச்சு
கொடுப்பேனடி---கொடுப்பேண்டி
கொண்டவனென்று---கொண்டவன்னு
கொண்டுவந்த---கொண்டாந்த
கொண்டுவந்தாலும்---கொண்டாந்தாலும்
கொண்டுவர---கொண்டார
கொண்டுவருகிறார்கள்---கொண்டாறாங்க
கொண்டுவருகிறாள்---கொண்டாறாள்
கொண்டுவா---கொண்டா
கொண்டுவாருங்கள்---கொண்டாருங்கள்
கொய்சகம்---கொசுவம்
கொரித்துக்கொள்---கொரிச்சுக்கோ
கொல்லன்மார்---கொல்லன்மாரு
கொள்ளவில்லை---கொள்ளலை
கொன்றுவிடுவேன்---கொன்னுடுவேன்
கோடரி---கோடாலி
கோடானுகோடி---கோடாகோடி
கோணல்---கோண
கோதுகிறான்---கோதுறான்
கோபம்---கோவம்
கோபி---கோவி
கோபித்துக்கொண்டு---கோவிச்சுக்கிட்டு
கோலார்---கோலாரு
சட்டென்று---சட்டுன்னு
சடசடவென்று---சடசடண்ணு
சந்தித்துவிட்டு---சந்திச்சிட்டு
சந்தோஷம்---சந்தோசம்
சந்தோஷமடி---சந்தோசண்டி
சந்யாசி---சந்நாசி
சப்மாஜிஸ்ட்ரேட்---சம்மாஸ்திரிட்
சமயமென்று---சமயம்னு
சமர்த்து---சமத்து
சமிக்ஞை---சயிக்கினை
சமைந்த---சமைஞ்ச
சர்க்கார்---சர்க்காரு, சருக்கார், சலுக்காரு
சரசரவென்று---சரசரன்னு
சரி---செரி
சல சலவென்ன---சலசலங்க
சவட்டுகிறார்---சவட்டுறார்
சறுக்கிற்று---சறுக்கிச்சு
சாடுகிறார்கள்---சாடுறாங்க
சாடுகிறானடி---சாடுறாண்டி
சாண்---சாணு
சாணார்சனம்---சாணாசனம்
சாப்பிடவில்லை---சாப்பிடலை
சாப்பிடுகிற---சாப்பிடுற
சாமானம் என்று---சாமானம்ணு
சாமியார்---சாமியாரு
சாமியென்று---சாமிண்ணு
சாய்கிறது---சாயுது
சாய்ந்து---சாஞ்சு
சாஷ்டாங்கம்---சாஸ்டாங்கம்
சாக்ஷி---சாக்கி
சிட்டான் என்று---சிட்டாண்ணு
சிரிக்கவில்லை---சிரிக்கலை
சிரிக்கிறது---சிரிக்குது
சிரித்து---சிரிச்சு
சிவக்கவில்லை---சிவக்கலை
சிவக்கிறது---சிவக்குது
சிவத்த---செவத்த
சிற்றாடை---சித்தாடை
சிறிது---செறிசு
சின்ன அண்ணன்---சின்னண்ணன்
சிஷ்யர்---சீசர்
சுட்டுவிட்டான்---சுட்டுட்டான்
சுண்டுகிறாள்---சுண்டுறாள்
சுப்பிரமணியன்---சுப்ரமணி
சும்மாவிருக்கிறேன்---சும்மாருக்கேன்
சுரித்த---சுரிச்ச
சுருதி---சுதி
சுருள்---சுருளு
சுவர்---சுவரு
சுற்ற---சுத்த
சுற்றி---சுத்தி
சுற்றுகிறது---சுத்துது
சுற்றுகிறான்---சுத்துறான்
சூக்ஷ்மம்---சூச்சம்
செம்பு---சொம்பு
செய்கிறதற்கு---செய்றதுக்கு
செய்கிறானடி---செய்கிறாண்டி
செய்ததாமடி---செய்ததாண்டி
செய்தாயிற்றா---செஞ்சாச்சா
செய்தா யென்றால்---செஞ்சியின்னா
செய்தாயென்று---செஞ்சேண்ணு
செய்தால்---செஞ்சால்
-------------
செய்தி---சேதி
செய்து---செஞ்சு
செய்துகொண்டு---செஞ்சுக்கிட்டு
செய்துவிடுமா---செஞ்சிடுமா
செய்யவில்லை---செய்யலை
செய்யவேண்டும்---செய்யணும்
செய்யுங்களடி---செய்யுங்கடி
செய்வேனடா---செய்வேண்டா
செருகி---சொருகி
செல்வம்---செல்லம்
செவ்வாய்---செவ்வா
சேர்---சேரு
சேர்க்கிறது---சேர்க்குது
சேர்த்து---சேத்து
சேர்ந்துவிட்டார்---சேர்ந்துட்டார்
சேரவில்லை---சேரலை
சேவகர்---சேவகரு
சொத்துக்காரனடி---சொத்துக்காரண்டி
சொல்---சொல்லு
சொல்கிறது---சொல்றது, சொல்லுறது
சொல்கிறேன்---சொல்றேன்
சொல்லவில்லை---சொல்லலை
சொல்லவேண்டும்---சொல்லணும்
சொல்லாதேயடா---சொல்லாதேடா
சொல்லாதேயடி---சொல்லாதேடி
சொல்லாதேயம்மா---சொல்லாதேம்மா
சொல்லிவிடு---சொல்லிடு
சொல்லுகிறேன்---சொல்லுறேன்
சொல்லுங்கள்---சொல்லுங்க, சொல்லுங்கோ
சொல்லுங்களம்மா---சொல்லுங்கம்மா
சொன்னாயென்றால்---சொன்னியின்னால்
சொன்னாயே---சொன்னையே
சொன்னேனடி---சொன்னேண்டி
சோவென்று---சோண்ணு
சோதிக்கவில்லை---சோதிக்கலை
சோதித்து---சோதிச்சு
சோருகிறது---சோருது
சோற்றை---சோத்தை
டமாரென்று---டமாருண்ணு
தங்கவேண்டுமென்றால்---தங்கணுண்ணா
தங்காதேயடா---தங்காதேடா
தஞ்சாவூர்---தஞ்சாவூரு
தச்சன்மார்---தச்சன்மாரு
தட்டுகிறான்---தட்டுறான்
தட்டுங்களடி---தட்டுங்கடி
தட்டுவேனடி---தட்டுவேண்டி
தடதடவென்று---தடதடண்ணு
தண்ணீர்---தண்ணி
தண்ணீரென்றால்---தண்ணின்னா
தந்திடுங்கள்---தந்திடுங்க
தப்பிக்கொள்ள---தப்பிக்க
தப்பித்து---தப்பிச்சு
தப்புகிற---தப்புற
தயங்குகிறாய்---தயங்குறே
தரிசிப்பேன்---தெரிசிப்பேன்
தருகிறேன்---தாறேன்
தருகிறேனடி---தாரேண்டி
தலையணை---தலைகாணி
தவறாமேதான்---தவறாமெத்தான்
தறிப்பார்களாம்---தறிப்பாங்களாம்
தாண்டிக்கொண்டு---தாண்டிக்கிட்டு
தாய்---தாயி
தாயார்---தாயாரு
தாருங்கள்---தாங்க
தாள்---தாளு
தானடி---தாண்டி
திகைத்து---திகைச்சு
திட்டாதேயடா---திட்டாதேடா
திட்டிக்கொண்டு---திட்டிக்கிட்டு
திடீரென்று---திடீருண்ணு
திணறிக்கொண்டு---திணறிக்கிட்டு
திரித்து---திரிச்சு
திரும்புகையில்---திரும்பையில்
திறக்கிறானடி---திறக்கிறாண்டி
திறப்பு---துறப்பு
தின்றவள்---தின்னவள்
தின்று---தின்னு
தின்றுகொண்டு---தின்னுக்கிட்டு
தின்றுகொள்---தின்னுக்கோ
தின்றுபோட்டு---தின்னுப்பிட்டு
தின்றுவிடு---தின்னுடு
தின்னவில்லை---தின்னலை
தினம்---நிதம்
தீட்டுகையில்---தீட்டையில்
தீய்ந்துவிடும்---தீஞ்சிடும்
தீர்க்க வேண்டும்---தீர்க்கணும்
தீரவில்லை---தீரலை
துப்பாதேயடி---துப்பாதடி
துப்பினார்கள்---துப்பினாங்க
-----------
துப்பென்று---துப்புண்ணு
துரைமார்---தொரைமாரு
துவக்கவில்லை---துவக்கலை
துவர்க்கிறது---துவர்க்குது
துள்ளாதேயடா---துள்ளாதடா
துள்ளுகிற---துள்ளுற
துளைத்துவிட்டது---தொளைச்சுருச்சு
தூக்கவில்லை---தூக்கலை
தூக்குகையில்---தூக்கையில்
தூங்கிக்கொண்டு---தூங்கிக்கிட்டு
தூங்குகிறான்---தூங்குறான்
தூங்குகையில்---தூங்கையில்
தூள்---தூளு
தெரிந்து---தெரிஞ்சு
தெரியவில்லை---தெரியலை
தெரு---தெருவு
தெறித்த---தெறிச்ச
தேங்குழல்---தேங்குழலு
தேம்புகிறாய்---தேம்புறாய்
தேய்த்து---தேச்சு
தேர்---தேரு
தேவடியாள்---தேவடியா
தேன்---தேனு
தைக்கவேண்டுமடி---தைக்கணுண்டி
தொட்டில்---தொட்டி
தொத்தல் பயல்---தொத்தப் பயல்
தொழுதார்கள்---தொழுதாங்க
தோய்த்து---தோய்ச்சு
தோற்று---தோத்து
தோன்றுகிறது---தோணுது
தோஷம்---தோசம்
நஞ்சடாவப்பா---நஞ்சுடாப்பா
நட்டவர்கள்---நட்டவங்க
நடக்க வேண்டும்---நடக்கணும்
நடக்கிறது---நடக்குது
நடத்த வேண்டுமடி---நடத்தணுண்டி
நடத்துகிறாள்---நடத்துறாள்
நடத்துகையில்---நடத்தையில்
நடந்துகொண்டு---நடந்துக்கிட்டு
நடுங்குகிறது---நடுங்குது
நம்---நம்ம
நம்மை---நம்மளை
நன்றாகவில்லை---நல்லால்லை
நன்றாய்---நல்லா
நனையவில்லை---நனையலை
நாங்கள்---நாங்க
நாடார்---நாடாரு
நாடுவார்கள்---நாடுவாங்க
நாத்தனார்---நாத்தனா
நாம்---நம்ம, நம்மள்
நாள்---நாளு
நான்---நானு
நானடி---நாண்டி
நிமிர்ந்துகொண்டு---நிமிந்துக்கிட்டு
நிமிஷம்---நிமிசம்
நிரப்பி---ரொப்பி
நிரம்ப---ரொம்ப
நியாயம்---ஞாயம், நாயம்
நின்றார்களே---நின்னாங்களே
நின்றால்---நிண்ணா
நின்று---நிண்ணு
நின்றுகொண்டு---நின்னுக்கிட்டு
நிற்கவில்லை---நிற்கலை
நிற்காவிட்டாலும்---நிற்காட்டியும்
நிற்கிறது---நிக்குது, நிற்குது
நிற்கிறானடி---நிற்கிறாண்டி
நிற்கிறீர்கள்---நிற்கிறீங்க
நிறைக்கிறது---நிறைக்குது
நினைத்தாயாவடி---நினைச்சியாடி
நினைத்தால்---நினைச்சால்
நினைத்து---நினைச்சு
நினைத்துக்கொண்டிருக்கிறாய்---நினைச்சிக்கிட்டிருக்கிறே
நீங்கள்---நீங்க
நீட்டிவிடுவோம்---நீட்டிடுவோம்
நீத்து---நீச்சு
நெல்---நெல்லு
நெற்றி---நெத்தி
நேர்---நேரு
நேர்த்தி---நேத்தி
நேரமடி---நேரண்டி
நேற்று---நேத்து
நோய்---நோயி
பகட்டுகிறதடி---பகட்டுதடி
பட்டுக்கொண்டாள்---பட்டுக்கிட்டாள்
பட்டுவிட்டது---பட்டுடுத்து
படபடவென்று---படபடண்ணு
படாரென்று- -- படாருண்ணு
படிக்கவில்லை- -- படிக்கலை
படிக்கவேண்டும்- -- படிக்கணும்
படித்தாய்- -- படிச்சை
படியுங்களடி- -- படியுங்கடி
படுக்க வேண்டும்- -- படுக்கணும்
படுக்க வேண்டுமென்றால்- -- படுக்கணுண்ணா
படுத்துகிறாள்- -- படுத்துறா
------------
பண்ணவில்லை- -- பண்ணலை
பண்ணாதேயடி- -- பண்ணாதடி, பண்ணாதேடி
பண்ணிக்கொண்டு- -- பண்ணிக்கிட்டு
பண்ணிவிட்டதே- -- பண்ணிருச்சே
பண்ணுகிறது- -- பண்ணுது
பண்ணுகிறான்- -- பண்ணுறான்
பண்ணுவார்கள்- -- பண்ணுவாங்க
பணிகிறேனடி- -- பணிகிறேண்டி
பதித்த- -- பதிச்ச
பதிந்தது- -- பதிஞ்சுச்சு
பதைக்கிறது- -- பதைக்குது
பம்பரம்- -- பொம்பரம்
பம்மினார்- -- பம்மினாரு
பயந்துகொண்டாய்- -- பயந்துகிட்டே
பயமடி- -- பயம்டி
பயிர்- -- பயிரு
பரபரவென்று- -- பரபரண்ணு
பரிஹாசம்- -- பரியாசம்
பல்- -- பல்லு
பலிக்கவில்லை- -- பலிக்கல்லே, பலிக்கலை
பலேயென்று- -- பலேண்ணு
பளபளவென்று- -- பளபளங்க
பற்றவில்லை யென்று- -- பத்தலேண்ணு
பற்றுகிறது- -- பத்துது
பறக்கிறது- -- பறக்குது
பறக்கிறார்கள்- -- பறக்கிறாங்க
பறந்தாயென்றால்- -- பறந்தீண்ணா
பறந்துகொண்டு- -- பறந்துக்கிட்டு
பறந்துவிட்டான்- -- பறந்துட்டான்
பறைச்சி- -- பறச்சி
பன்னிரண்டு- -- பன்னெண்டு
பஸ்மம்- -- பஸ்பம்
பாடிற்றாமடி- -- பாடிச்சாண்டி
பாடுகிறார்கள்- -- பாடுறாங்க
பாடுகிறேனடி- -- பாடுறேண்டி
பாடுகையில்- -- பாடையில்
பாய்- -- பாயி
பாய்கிறது- -- பாயுது
பாயசம்- -- பாயாசம்
பார்- -- பாரு
பார்க்கட்டுமா- -- பார்க்கட்டா
பார்க்கவில்லை- -- பார்க்கலை
பார்க்க வேண்டும்- -- பார்க்கணும்
பார்க்க வேண்டுமடி- -- பார்க்கணுண்டி
பார்க்கிறதற்கு- -- பார்க்கறதுக்கு
பார்க்கிறது - -- பாக்றது, பார்க்குது
பார்க்கிறாய்- -- பார்க்கிறே
பார்க்கிறார்- -- பார்க்கிறாரு
பார்க்கிறார்கள்- -- பாக்குறாங்க
பார்க்கிறானடி- -- பார்க்கிறாண்டி
பார்க்கிறேனடி- -- பார்க்கிறேண்டி
பார்க்கையில்- -- பாக்கையில்
பார்த்தவர்கள்- -- பார்த்தவங்க
பார்த்தாயா- -- பார்த்தையா
பார்த்தாள்- -- பாத்தாள்
பார்த்து- -- பாத்து
பார்த்துக்கொண்டு- -- பார்த்துக்கிட்டு
பார்த்துக்கொள்- -- பார்த்துக்கோ
பார்த்துக்கொள்ளடி- -- பாத்துக்கடி
பார்த்துவிட்டாயே- -- பாத்துட்டையே
பார்த்துவிட்டு- -- பாத்திட்டு
பார்ப்பார்கள்- -- பார்ப்பாங்க
பார்ப்பார்களாம்- -- பார்ப்பாங்களாம்
பார்ப்பான்- -- பாப்பான்
பாரடா- -- பாருடா
பாருங்களடி- -- பாருங்கடி
பாருங்களம்மா- -- பாருங்கம்மா
பால்- -- பாலு
பாஷாணம்- -- பாசாணம்
பாஷை- -- பாசை
பிடரி- -- பொடனி
பிடிக்கலாமடி- -- பிடிக்கலாண்டி
பிடிக்கவில்லை- -- பிடிக்கலை
பிடிக்கிறது- -- பிடிக்குது
பிடிக்கிறார்கள்- -- பிடிக்கறாங்க
பிடித்த- -- பிடிச்ச, புடிச்ச
பிடித்தவள்- -- பிடிச்சவள்
பிடித்துக்கொண்டு- -- பிடிச்சுக்கிட்டு
பிடித்தேன்- -- பிடிச்சேன்
பிடுங்குகிறது- -- பிடுங்குது
பிடுங்குகிறான்- -- புடுங்குறான்
பிண்ணாக்கு- -- புண்ணாக்கு
பிய்த்து- -- பிச்சு
பிரிக்கவில்லை- -- பிரிக்கலை
பிழைத்தது- -- பொழைச்சுது
பிழைத்துக்கொள்- -- பிழைச்சுக்கோ
பிழைத்துக்கொள்ளென்று- -- பிழைச்சுக்கண்ணு
பிழைத்துக் கொள்வாய்- -- பொழைச்சுக்குவே
பிழைப்பு- -- பொழப்பு, பொழைப்பு
பிள்ளை- -- புள்ளே, புள்ளை
பிள்ளையார்- -- புள்ளையார்
-------------
பிளக்கிறது- -- பிளக்குது
பிளந்தார்கள்- -- பொளந்தாங்கள
பிளந்தால்- -- பொளந்தால்
பிறந்தார்கள்- -- பிறந்தாங்கோ
பின்னல்- -- பின்னலு
பின்னாரேயென்று- -- பின்னாரெண்ணு
புகுந்துகொண்டு- -- புகுந்துக்கிட்டு
புகுந்துகொள்- -- புகுந்துக்கோ
புடுபுடென்று- -- புடுபுடுண்ணு
புதிது- -- புதுசு
புதுபுதென்று- -- புதுபுதுன்னு
புரட்டாசி- -- பெரட்டாசி
புரட்டு- -- பெரட்டு
புரண்டு- -- பெரண்டு
புருஷன்- -- புருசன்
புல்- -- பில், பில்லு, புல்லு
புல்லாக்கு- -- பில்லாக்கு
புலம்புகிறது- -- புலம்புறது
புலம்புகிறேன்- -- புலம்புறேன்
புளியேயென்றும்- -- புளியேன்னும்
புளுக்கென்று- -- புளுக்கின்னு
புறப்படவேண்டும்- -- பெறப்படணும்
புறப்படு- -- பெறப்புடு
புறப்படுவான்- -- பெறப்படுவான்
பூ- -- பூவு
பெட்டு- -- பொட்டி
பெட்டை- -- பொட்டை
பெண்- -- பொண்ணு
பெண்கள்- -- பொண்ணுங்க
பெண்சாதி- -- பொண்சாதி
பெண்டாட்டி- -- பொண்டாட்டி
பெண் பிள்ளை- -- பொம்பளை
பெய்கிறது- -- பெய்யுது
பெய்யவில்லை- -- பெய்யலை
பெரிது- -- பெரிசு
பெற்றவனடா- -- பெற்றவண்டா
பெற்று - -- பெத்து
பெற்றேன் - -- பெத்தேன்
பெறவேண்டும் - -- பெறணும்
பேசவில்லை - -- பேசலே, பேசலை
பேசாதீர்கள் - -- பேசாதீங்க
பேசாதேயடி- -- பேசாதடி
பேசாதேயம்மா- -- பேசாதேம்மா
பேசிக்கொண்டார்கள்- -- பேசிக்கிட்டாங்கோ
பேசிக்கொள்- -- பேசிக்கோ
பேசினக்கால் - -- பேசினாக்க
பேசினார்கள் - -- பேசினாங்க
பேசினாள்- -- பேசினா
பேசுகிற- -- பேசுற
பேசுகிறது- -- பேசுது
பேசுகிறாய்- -- பேசுறாய்
பேசுகிறாயே- -- பேசுறையே
பேசுகிறாயோ- -- பேசுறியோ
பேசுகிறேன்- -- பேசுறேன்
பேசுகையில்- -- பேசையில்
பேசுங்கள்- -- பேசுங்கோ
பேர்- -- பேரு
பொக்கிஷம்- -- பொக்கிசம்
பொங்கல்- -- பொங்கலு
பொசுக்கவில்லை- -- பொசுக்கலை
பொல்லாதவர்கள்- -- பொல்லாதவங்க
பொழிந்து- -- பொழிஞ்சு
பொறுக்கவில்லை- -- பொறுக்கலை
பொறுக்கிறது- -- பொறுக்குது
பொறுத்தவனடி- -- பொறுத்தவண்டி
பொறுத்துக்கொள்- -- பொறுத்துக்கோ
பொன்- -- பொன்னு
பொன்னென்றாலும்- -- பொன்னுண்ணாலும்
போகலாமடா- -- போகலாம்டா
போகவில்லை- -- போகலை
போக வேண்டுமடி- -- போகணுண்டி
போக வேண்டுமென்றால்- -- போகணுண்ணா
போகிற- -- போற
போகிறதற்கு- -- போறத்துக்கு, போறதுக்கு
போகிறது- -- போகுது, போறது
போகிறவன்- -- போறவன்
போகிறாப்போலே- -- போறாப்பலே
போகிறாய்- -- போறாய், போறே
போகிறாயா- -- போறியா, போறையா
போகிறார்- -- போறா, போறாரு
போகிறார்கள்- -- போகிறாங்க, போறாங்கள்
போகிறாங்களடி- -- போறாங்கடி
போகிறான்- -- போறான்
போகிறானடி- -- போறாண்டி, போறானடி
போகிறேனடி- -- போறேண்டி
போகுமென்று- -- போகுமுன்னு
போங்கள்- -- போங்க, போங்கோ
போட்டவர்கள்- -- போட்டவங்கள்
போட்டார்- -- போட்டாரு
போட்டார்கள்- -- போட்டாங்கள்
-----------
போட்டுக்கொண்டு- -- போட்டுக்கிட்டு
போட்டுக்கொள்- -- போட்டுக்கோ
போட்டுக்கொள்ள வேண்டும்- -- போட்டுக்கிடணும்
போட்டுவிட்டால்- -- போட்டுட்டால்
போட வேண்டும்- -- போடணும்
போடாவென்று- -- போடான்னு
போடுகிறது- -- போடுது
போடுகிறார்- -- போடுறார்
போடுகிறானடி- -- போடுறாண்டி
போடுங்களடி- -- போடுங்கடி
போடுவேனடி- -- போடுவேண்டி
போய் - -- போயி
போய்விட்டது- -- போயிடுச்சு
போய்விட்டார்- -- போயிட்டார்
போய்விட்டாலும்- -- போயிட்டாலும்
போய்விட்டேன்- -- போயிட்டேன்
போய்விடடா- -- போயிரடா
போய்விடு- -- போயிடு
போய் விடுவாய்- -- போயிடுவே
போய் விடுவோம்- -- போயிடுவோம்
போயன்மார் - -- போயன்மாரு
போயிற்று - -- போச்சு, போச்சுது
போர்த்து- -- போத்து
போர்த்துக்கொண்டு- -- போர்த்திக்கிட்டு
போவாய் - -- போவே
போவார்கள் - -- போவாங்க, போவாஙகள்
போவேன் என்றால்- -- போவேண்ணா
போனாய் - -- போனே
போனாயோ - -- போனையோ
மகளென்று - -- மகள்னு, மகளுன்னு
மகனடி - -- மகண்டி
மங்குகிறது- -- மங்குது
மஞ்சள்கண் - -- மஞ்சக்கண்ணு
மடக்கினார் - -- மடக்கினாரு
மடக்குங்களடி - -- மடக்குங்கடி
மடமடவென்று- -- மடமடன்னு
மண் - -- மண்ணு
மண்வெட்டி - -- மம்முட்டி
மணக்கிறது- -- மணக்குது
மணல் - -- மணலு
மதிப்பார்கள் - -- மதிப்பாங்கள்
மந்த்ரம் - -- மந்தரம்
மயக்காதேயடி- -- மயக்காதேடி
மயக்குகிறது- -- மயக்குது
மயங்கவில்லை- -- மயங்கலை
மயங்கினார்கள் -- மயங்கினாங்க
மயங்குகிறது -- மயங்குது
மயங்குகிறேன் -- மயங்குறேன்
மயிர் -- மயிரு
மருக்கொழுந்து -- மருக்கொளுந்து
மருமகள் -- மருமக
மல் -- மல்லு
மற்றவர்கள் -- மத்தவங்க
மறக்கவடித்தாள் -- மறக்கடிச்சாள்
மறக்கவில்லை -- மறக்கலை
மறக்காவிட்டால் -- மறக்காட்டி
மறந்தீர்களென்றால் -- மறந்தீங்கன்னா
மறந்துவிட்டாய் -- மறந்திட்டை
மறந்துவிட்டாயா -- மறந்துட்டியா
மறந்துவிட்டார் -- மறந்துட்டார்
மறித்து
-- மறிச்சு மறைத்த -- மறைச்ச
மறைந்து -- மறைஞ்சு
மறைந்துவிட்டான் -- மறைஞ்சிட்டான்
மறையவில்லை -- மறையலை
மன்னிக்கவேண்டும் -- மன்னிக்கணும்
மன்னித்துவிட்டால் -- மன்னிச்சிட்டால்
மனிதர் -- மனிசர்
மா -- மாவு
மாட்டிக்கொண்டு -- மாட்டிக்கிட்டு
மாட்டேனென்னுவார் -- மாட்டேன்ணுவார்
மாதாவென்று -- மாதாண்ணு
மாமாவென்று -- மாமாண்ணு
மாமியார் -- மாமியா
மாய்ந்து -- மாஞ்சு
மார்பு -- மார்
மாள வேண்டுமென்று -- மாளணு முண்ணு
மாற்றி -- மாத்தி
மாற்றினாள் -- மாத்தினாள், மாத்துனா
மாற்று -- மாத்து
மாறிவிட்டது -- மாறிருச்சு
மிஞ்சினக்கால் -- மிஞ்சினாக்க
மிஞ்சுகிறது -- மிஞ்சுது
மிட்டாய் -- முட்டாயி
மிதிக்கிறது -- மிதிக்குது
மிதித்தால் -- மிதிச்சால்
மிளகாய் -- முளகாய், மொளகாய்
மின்னுகிறது -- மின்னுது
மினுமினுவென்ன -- மினுமினுங்க
-------------
மினுமினுக்கிறது- - மினுமினுக்குது
மீன்- - மீனு
முக்கால்- - முக்கா
முக்கியமடா- - முக்கியண்டா
முடிக்காவிட்டால்- - முடிக்காக்கட்டி
முடித்தார்- - முடிச்சார்
முடித்துவிடுவேன்- - முடிச்சிடுவேன்
முடித்தேன்- - முடிச்சேன்
முடிந்த- - முடிஞ்ச
முடிந்திருப்பான்- - முடிஞ்சிருப்பான்
முடிந்துகொண்டு- - முடிச்சுக்கிட்டு
முடிந்துகொள்- - முடிஞ்சுக்கோ
முடியவில்லை- - முடியலை
முணுமுணுவென்று- - முணுமுணுன்னு
முதலியார்- - முதலியாரு
முழங்குகிறது- - முழங்குது
முள் - - முள்ளு
முளைக்கவில்லை- - முளைக்கலை
முளைத்தவன் - - முளைச்சவன்
முளைத்து - - முளைச்சு
முன்றானை - - முந்தாணி
மூடடி - - மூடுடி
மூத்த அண்ணன்- - மூத்தண்ணன்
மூன்று - - மூணு
மெடல் - - மெடலு
மெயில் - - மெயிலு
மெல்ல - - மெள்ள, மொள்ள
மெல்லிது - - மெல்லிசு
மெழுகவேண்டுமடி- - மெழுகணுண்டி
மேடென்று - - மேடுண்ணு
மேய்கிறது - - மேயுது
மேய்த்தவன் - - மேய்ச்சவன்
மேய்த்து - - மேச்சு
மேய்ந்த- - மேய்ஞ்ச
மேரி- - மரி
மேல் - - மேலு
மேளம்- - மோளம்
மை - - மையி
மைத்துனன் - - மச்சான், மச்சினன்
மைத்துனன்மார்- - மச்சான்மாரு
மொரமொரவென்று - - மொரமொரண்ணு
மோட்டார் - - மோட்டாரு
மோதுகிறாய் - மோதுறாய்
மோர் - மோரு
யமன் - எமன், ஏமன்
யார்- -- யாரு
யாரென்று- -- யாருண்ணு
ரங்கூன்- -- ரங்கோன்
ரப்பர்- -- ரப்பரு
ரிக்ஷா- -- ரிக்சா
ரூபாய்- -- ரூபா, ரூபாயி, ரூவா, ரூவாய்
ரெயில்- -- ரெயிலு
ரைட்டர்- -- ரைட்டன்
ரோட்- -- ரோதை
லக்ஷ்மி- -- லச்சுமி, லெச்சுமி
லக்ஷம்- -- லட்சம்
லாபம்- -- லாவம்
லாஸரஸ்- -- லாசரு
வகிர்ந்துவிடுவேன்- -- வகுந்திடுவேன்
வண்மாரி- -- மம்மாரி
வணக்குவேனடி- -- வணக்குவேண்டி
வதங்கல்- -- வதங்க
வதைக்கிறேனடி- -- வதைக்கிறேண்டி
வந்தவர்கள்- -- வந்தவங்கள்
வந்தவனடி- -- வந்தவண்டி
வந்தார்கள்- -- வந்தாங்கள்
வந்தாயாவாடா- -- வந்தாயாடா
வந்தாயென்றால்- -- வந்தியின்னா, வந்தின்னா
வந்தாயா- -- வந்தியா
வந்தீர்களோ- -- வந்தியளோ
வந்தேனடி- -- வந்தேண்டி
வந்தேனென்றால்- -- வந்தேண்ணா
வந்துகொண்டு- -- வந்துக்கிட்டு
வந்துவிட்டதா- -- வந்திருச்சா
வந்துவிட்டது- -- வந்திடுச்சு, வந்திருச்சு
வந்துவிட்டானடி- -- வந்துட்டாண்டி
வந்துவிடுங்கள்- -- வந்திடுங்கள்
வம்சம்- -- வங்கிசம்
வர்ணித்து- -- வர்ணிச்சு
வரவில்லை- -- வரலே, வரலை
வரவேண்டும்- -- வரணும்
வரிந்துகொண்டு- -- வரிஞ்சுக்கிட்டு
வருகிற- -- வர, வாற
வருகிறது- -- வருகுது, வருது, வாறது
வருகிறதை- -- வாறதை
வருகிறவள்- -- வாறவள்
வருகிறாய்- -- வாறே
வருகிறாயா- -- வாறியா
வருகிறார்- -- வாறார், வாறாரு
வருகிறார்கள்- -- வர்றாங்க, வராங்க, வாறாங்க, வாறாங்கள்
-------------
வருகிறாள்- -- வாறாள்
வருகிறானடி- -- வாறாண்டி
வருகிறேன்- -- வாறேன்
வருகிறேனடி- -- வாறேண்டி
வருவார்- -- வருவாரு
வருஷம்- -- வருசம்
வரைந்து- -- வரைஞ்சு
வலிக்கிறது- -- வலிக்குது
வலித்துவிட்டதோ- -- வலிச்சிருச்சோ
வழங்கவேண்டும்- -- வழங்கணும்
வளர்க்க- -- வளக்க
வளர்த்தார்கள்- -- வளத்தாங்க
வளர்த்தி- -- வளத்தி
வளர்ந்தவன்- -- வளந்தவன்
வளர்ப்பார்கள்- -- வளர்ப்பாங்கள்
வளருகிறது- -- வளருது
வளைத்து- -- வளைச்சு
வளைந்து- -- வளைஞ்சு
வற்றல்- -- வத்தல்
வாங்கலாமடி- -- வாங்கலாண்டி
வாங்கவில்லை- -- வாங்கலை
வாங்கிப் போட்டேன்- -- வாங்கிப்புட்டேன்
வாங்கினேனடா- -- வாங்கினேண்டா
வாங்குகிறது- -- வாங்குது
வாங்குகிறாள்- -- வாங்குறாள்
வாங்குகையில்- -- வாங்கையில்
வாங்குங்களடி- -- வாங்குங்கடி
வாடவில்லை- -- வாடலை
வாடிவிட்டதே- -- வாடிருச்சே
வாடுகிறது- -- வாடுது
வாய்- -- வாயி
வாருகிறாள்- -- வாருறாள்
வாருங்கள்- -- வாங்க
வாருங்களடி- -- வாங்கடி
வால்- -- வாலு
வாழலாமடி- -- வாழலாண்டி
வாழவில்லை- -- வாழலை
வாழவேண்டுமேயடி- -- வாழணுமேடி
வாள்- -- வாளு
விட்டில் - -- விட்டி
விடவில்லை - -- விடலை
விடாய்- -- வெடாயி
விடியற்காலம்- -- விடியக்காலம்
வியாபாரம்- -- வியாவாரம்
விரட்டவில்லை- -- விரட்டலை
விரைவா - -- விரைசா
வில்- -- வில்லு
விலகிடுமம்மா- -- விலகிடும்மா
விழாதே- -- விழுகாதே
விழாதேயடி- -- விழுகாதடி
விழி- -- முழி
விழிப்பார்- -- முழிப்பார்
விழுகிறது- -- விழுகுது
விழுங்கினேன்- -- முழுங்கினேன்
விழும்- -- விழுகும்
விளங்குகிறது- -- விளங்குது
விளைந்து- -- விளைஞ்சு
விளைந்துவிட்டது- -- விளைஞ்சிருச்சு
விளையாடவில்லை- -- விளையாடலை
விளையாடுகையில்- -- விளையாடையில்
விற்கவில்லையா- -- விற்கலையா
விற்கிறது- -- விக்குது
விற்றதென்றால்- -- வித்துச்சுண்ணா
விற்றுவிட்டாலும்- -- வித்துட்டாலும்
விறகு- -- வெறகு
வீசாதேயடி- -- வீசாதடி
வீசிக்கொண்டு- -- வீசிக்கிட்டு
வீசிடுமடா- -- வீசிடுண்டா
வீசுகிறது- -- வீசுது
வீசுகிறாய்- -- வீசுறாய்
வீசுகையில்- -- வீசையில்
வீசுங்களம்மா- -- வீசுங்கம்மா
வீடென்று- -- வீடுண்ணு
வெட்கம்- -- வெக்கம்
வெட்டிவிடுவேன்- -- வெட்டிடுவேன்
வெட்டுகையில்- -- வெட்டையில்
வெடித்துவிட்டது- வெடிச்சிருச்சு
வெந்நீர்- வெந்நீரு
வெயில்- வெய்யில்
வெருண்டு- மிரண்டு
வேகிறத - வேகுது
வேண்டாம் - வாணாம், வேணாம்
வேண்டாமென்று - வேணாமிண்ணு
வேண்டா மென்னுவார் - வோணா முன்னுவார்
வேண்டும - வேணும்
வேண்டுமா வென்றால்- வேணுமாண்ணா
வேண்டுமென்றால்- வேணுமுன்னா
வேண்டுமென்று- வேணுண்ணு, வேணும்னு, வேணுமின்னு
வேர- வேரு
வேலையென்று- வேலையென்னு
வேளாண்மை- வெள்ளாமை
-----------
வேஷ்டி- வேட்டி
வேஷம- வேசம்
வைக்கவேண்டும்- வைக்கணும்
வைக்காதேயடி- வைக்காதேடி
வைக்கிறானடி- வைக்கிறாண்டி
வைத்த- வச்ச
வைத்தார்கள்- வச்சான்கள்
வைத்தார்களா- வச்சாங்களா
வைத்தால்- வைச்சா
வைத்தான்- வச்சான்
வைத்து- வச்சு, வைச்சு
வைத்துக்கொண்டு- வச்சுக்கிட்டு
வைத்துக்கொள்- வச்சுக்கோ
வைத்தேனடா- வச்சேண்டா
ஜ்வலிக்கிறது- ஜொலிக்குது
ஜகம்- செகம்
ஜனம்- சனம்
ஜன்மம்- சென்மம்
ஜீஸஸ் - சேசு
ஜெயில்- ஜெயிலு
ஷாப்- சாப்பு
ஸ்டேஷன்- டேசன்
ஹார்பர்- ஆர்பரு
ஹாஜர்- ஆஜர்
ஹெட்- ஏட்டு
க்ஷணம்- சணம்
க்ஷவரம- சவரம்
க்ஷேமம் - சேமம்
----------
26. உவமைகள்
இலக்கியங்களில் உவமைகள் பல பல வரும்.
நாடோடி இலக்கியங்களில் சில அரிய உவமைகள் வரும்.
ஆற்றுக்கு அல்லிமுடி 237
- காளி முடி 237
தலை முடி 237
- பாம்பு 103
வீமன் முடி 2371
கட்டிடத்துக்கு இரும்பு 30
கண்ணழகுக்குக் கண்ணகி 298
கணவனுக்கு உயிர் 205
கத்திரிப் பூவுக்குக் காசு 283
கழுத்தழகுக்கு ரதி 298
காதலனுக்குத் தோள் 92
- மருக்கொழுந்து 70
- முத்துச்சரம் 16
- வாழையிளங்குருத்து 70
காதலிக்கு அன்னம் 64
- ஏலம் 17
கண் 61
- கண்மணி 52
- கிராம்பு 17
- கிளி 19
- குயில் 27
- சந்தனம் 17
- சர்க்கரை 69
- செங்கரும்பு 69
- திரவியம் 64
- தேன் 64
- நாவற் பழம் 17
- மயில் 18
- மரகதம் 64
- மாங்கனி 82
- மான் 64
- மின்மினி 21
- ரத்தினம் 37
- வண்டு 9
கிழவனுக்குச் சுக்கான்கல் சரளை 25
- பழம் 303
குழந்தைக்கு ஆவாரம்பூ 259
- குயில் 224
- வண்டு 224
கூந்தல் முடிச்சுக்குத் தூக்கணங் குருவிக்கூடு 27
கூந்தலுக்கு ஆலம்விழுது 7, 27, 222
- வாழை 12
கொங்காணிக்குக் குரங்கு 168
சாலைக்கு ஆலம் விழுது 23
தண்ணீருக்குத் தெய்வம் 240
- முத்து 5
துயரத்துக்கு ஆறு 280
தென்னம்பிள்ளைக்குப் பிள்ளை 243
நடைக்கு அன்னம் 143
பசு 51
- மயில் 242
நரை மயிருக்குப் பஞ்சு 302
நல்ல ஊருக்குச் சிவலோகம் 100
தேவலோகம் 100
நல்ல பெண்ணுக்குக் காராம்பசு 208
நெஞ்சுக்குப் பகல் 166
பல்லுக் காவிக்கு வயிரம் 12
பாதைக்கு ஆலமரம் 23
பாலத்துக்குத் தொட்டில் 239
மரத்துக்கு மலை 9
மனத்துக்குக் கல் 78
- பாம்பு 9
மூக்குக்கு ஊசி 100
மோட்டார் வண்டிக்குக் கடவுள் 26
--------
1. இலக்கியங்களிற் காணப் பெறாதவை.
-----------
வாடிய நிறத்துக்குக் குருவியின் நிறம் 6
வாய்க்கு ஏலம்பூ 256
விழிக்குக் கிளி 166
--------------
27. பழமொழிகள்
அவல் பெருத்தது ஆர்க்காடு[1]
அழுதழுது புரண்டாலும் அவள் தான் பிள்ளை பெற வேணும்
அளவுக்கு மிஞ்சினால் அமுதமும் நஞ்சாம்
ஆகாசம் பூமி பாதாளம் சாட்சி
ஆசை உறவாகுமோ, ஆதரவு சோறாகுமோ
ஆசைக்காரனுக்கு ரோசம் இல்லை
ஆடி மாசம் அடி வைக்கக் கூடாது
ஆலாய்ப் பறக்கிறான்
ஆறிலும் சாவு, நூறிலும் சவு
இஞ்சி தின்ற குரங்குபோல
---------
[1]. அருமையாக வழங்குவன.
------
இத்தனையும் செய்து, கத்தரி நட்டவன் இல்லை என்று சொன்னான்
உண்ட வீட்டுக்கு இரண்டகம் செய்யக் கூடாது
ஊரார் பிள்ளையை ஊட்டி வளர்த்தால் தன் பிள்ளை தானே வளரும்
எட்டாத தேனுக்கு ஏறாத நொண்டி கொட்டாவி விட்டதுபோல
எட்டாத பழத்துக்குக் கொட்டாவி விடுதல்
எள்ளுக்குள் எண்ணெய்போல்
ஏட்டுச் சுரைக்காய் கறிக்கு உதவுமா
ஏணி வைத்தாலும் எட்டாது
ஒருத்திக்கு ஒரு மகன்
கண்ணாலேயும் பார்த்ததில்லை, காதாலேயும் கேட்டதில்லை
கருமம் தொலையாது
கல் என்றாலும் கணவன், புல் என்றாலும் புருசன்
கல்யாணம்பண்ணுமுன்பு கன்னி குளி குளிப்பாளா?
காத்திருந்தவன் பெண்டாட்டியை நேற்று வந்தவன் கொண்டு போனான்
காரியம் ஆகுமட்டும் காலைப்பிடி
கோடி சனம் கையெடுக்கும்
செட்டி சிதம்பரம்
தப்பிப் பிழைத்தது தம்பிரான் புண்ணியம்
தருமம் தலைகாக்கும்
தாய்க்குத் தலைப்பிள்ளை
துள்ளுகிற மாடு பொதி சுமக்கும்
தொட்டிலை ஆட்டித் தொடையையும் அறுத்தான்
தொண்டை வலிக்குச் சாராயம் தொடை வலிக்கு வெந்நீர்
தோட்டி முதல் தொண்டமான்வரை
நெற்றி வேர்வை நிலத்தில் விழ
பணம் பெருத்தது நீலகிரி
பள்ளுப்பறை பதினெட்டுச் சாதி
பனங்காட்டு நரி சலசலப்புக்கு அஞ்சாது
பொந்திலே அகப்பட்ட மந்தியைப் போல
மலை ஏறிப் போனாலும் மச்சான் தயவு வேணும்
மலைபோல் வந்தது பனிபோல் விலகியது
மாமியார் உடைத்தால் மண் சட்டி, மருமகள் உடைத்தால் பொன் சட்டி
வம்புச் சண்டையை வளர்க்க மாட்டோம், வந்த சண்டையையும் விடமாட்டோம்.
விதி வசம்போல் ஆகும்
விருந்தும் மருந்தும் மூன்று நாள்
வெல்லம் பெருத்தது வேலூர்.
This file was last updated on 20 April 2017.
.